EPISODE 7
அஜய்யின் பிளாட்பார காத்திருப்பு அடுத்து வந்த நாட்களில் ஜரூராய் நடந்தது. இருவருக்கும் பொதுவாய் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன.
அஜய் மாதங்கவதனாவின் எதிரே இருக்கும் வரை அவள் அதரங்கள் ஓய்வின்றி சிரித்தவண்ணமே இருக்கும். அவள் சிரிப்பதை பார்க்க வேண்டுமென்றே நிறைய மெனக்கேட்டான்.
அவளுக்கும் அவனோடு கழிக்கும் அந்த முப்பது நிமிடங்கள் வெகு விருப்பமாய் மாறியிருந்தது. அவனிடம் பேச எந்த தயக்கமும் இருப்பதில்லை அவளுக்கு.
பார்த்து ஒரு மாதமே ஆகிறது என்ற நினைப்பை அவளுக்கு துளியும் இல்லாது செய்திருந்தான் அஜய்.
அவன் மனதில் ‘காதல்’ என்ற ஒன்றிருக்க, அவள் மனது எந்த ஒரு தலைப்புக்கு கீழும் அடங்காமல் தனியாய் தான் நின்றது.
அது அஜய்க்கும் புரியவே செய்தது.
‘விளம்பரங்களை எப்படி எடுப்பீர்கள் என்று பார்க்க ஆசை’ என ஒருநாள் அவள் சொல்ல,
‘ஒருநாள் ப்ரீ ஆகிட்டு வாங்க… நேர்ல பாக்கலாம்!’ என்றிருந்தான் அவன்.
அந்த ‘ஓர்நாள்’ இன்றுதான் வந்திருந்தது.
‘கேப்’பில் இருந்து அஜய் கம்பெனி வாசலில் இறங்கினாள் மாதங்கவதனா.
அன்று போல அவளை வரவேற்க ரிசெப்ஷனிஸ்ட் இல்லை. மாறாக, கம்பெனி முதலாளியே வாசலுக்கு ஓடிவந்தான்.
“வாங்க… வாங்க… வெல்கம் மாது!” என்றவன், ஒருமுறை அவளை தலை முதல் கால் வரை பார்க்க,
“என்ன?” என்றாள் அவள்.
“பர்ஸ்ட் டைம் சுடி’ல பாக்குறேன்! யூ லுக் சோ யங்!”
என்று சொல்ல,
“ஹலோ மிஸ்டர்… உங்கக்கூட பழகுறதால நான் ஒன்னும் ‘ஏஜ்ட்’ இல்லை… ஐ’யம் ஜஸ்ட் டுவண்டி செவன்!” என்றாள் இடுப்பில் கைவைத்து முறைத்துக்கொண்டு.
‘சரண்டர்’ என கரங்களை தூக்கிய அஜய், “காம்ப்ளிமென்ட்’ன்னு நினைச்சு சொல்லிட்டேன்!” என்றிட,
“தட்ஸ் ஓகே… பை தி வே, இது ‘சுடி’ இல்ல… ‘ஷராரா!'” என்றவள், “ஒரு ‘ஆட்’ மேக்கர்க்கு இதுக்கூட தெரியலையே!” என்று வாற,
“ஹலோ, அது ரீனா டிபார்ட்மென்ட்! அதுல நான் மூக்கை நுழைக்க மாட்டேன், அதான் தெரியல!” என்றான்.
“ரீனா யாரு?”
“என் பிரிண்ட்ஸ் நாலு பேர் சொல்லிருக்கேன்ல? அதுல ஒருத்தி! கம் இன்சைட், அவங்களை மீட் பண்ணலாம்…” என்றதும் அவனுடன் உள்ளே நுழைந்தாள் மாதங்கவதனா.
ரிசெப்ஷனிஸ்ட் எழுந்து நின்று வணக்கம் சொன்னாள்.
அங்கிருந்த பணியாட்கள் எல்லாம் ‘வணக்கம்’ வைக்க சங்கோஜமாய் இருந்தது அவளுக்கு.
அவளை முன்னே போக செய்து, ஓரடி பின்னே பக்கவாட்டில் வந்தான் அஜய்.
அது ஏனோ அவளை ‘தலைவி’ போல உணர வைத்தது.
அவள் கரத்தை இறுக்கமாய் பற்றிக்கொண்டு அழைத்து செல்லத்தான் அவனுக்கு ஆசை. ஆனால், உண்மையில் தொட்டு பேச எல்லாம் அவனுக்கு தைரியம் கிடையாது.
அங்கே கீழ்த்தளத்தில் போடப்பட்டுக்கொண்டிருந்த செட்டை காட்டி, “இதென்ன கிட்சன் செட் அப்?” என்றாள்.
“ஒரு காஃபி ஆட்.. அதான் ஹோம் செட் அப்” என்றான்.
“காஃபி விளம்பரன்னாலே கிட்சன் தானா?”
“காஃபி அங்க தானே போடுவாங்க?”
“அங்க மட்டும் தான் போடுவாங்களா?” வேண்டுமென்றே அவள் வம்பிழுக்க அதை உணர்ந்து அவன் பேசாமல் சிரிக்க, லேசாக உதட்டை சுழித்துவிட்டு பின்னே திரும்பியவள் கீழிருந்த ‘ஒயர்’ தடுக்கி தடுமாறினாள்.
தடுமாறியவளின் கரங்கள் தன்னியல்பாய் அருகே நின்றவனின் கரம் பற்ற, அழுத்தமாய் பிடித்தவன் அவள் சுதாரித்து நின்ற பிறகும் கூட விடவே இல்லை.
முதலில் நாசூக்காய் விலக்கிக்கொள்ள பார்த்தவளும் அவனது உடும்பு பிடியில் இருந்து வெளிவர முடியாது விட்டுவிட்டாள்.
அவன் தொடுகை அவளுக்கு சின்ன அசௌகர்யத்தை கொடுத்திருந்தாலும் கூட முகத்துக்கு நேரே சொல்லியிருப்பாள். அப்படி எதுவும் இல்லாமல், அவன் ஸ்பரிசம் அவளுக்கு ஒரு நம்பிக்கையை, பாதுகாப்பை, தைரியத்தை விதைப்பதாய் இருக்க, அவன் போக்கில் அவளும் வளைந்தாள்.
லிப்டுக்குள் நுழைந்ததும், “மொத்தம் மூணு ப்ளோர்!” என்றான்.
அவள் பதில் சொல்லும்முன்னே முதல் தளம் வந்திருக்க, அழைத்து சென்றவன், “இங்க பாதி ஏரியா செட் போட விட்டுருக்கோம்! மீதி முழுக்க எடிட்டிங் ரூம்!” என்று கருநிற கண்ணாடிகளால் அடைக்கப்பட்டிருந்த இடத்தை காட்டினான் அஜய்.
“எடிட்டிங்’க்கு மட்டும் இவ்ளோ பெரிய ஸ்பேஸ்’ஸா?”
“அப்கோர்ஸ்… எடிட்டிங் தானே முக்கியமான விஷயம்! அதுக்கு மட்டுமே பத்து பேர் இருக்காங்க! குரு தான் ஹெட்!” என்றவன், “கான்செப்ட் ஓரியன்டட் ஆட்’ மட்டும் என் கண் பார்வைல நேரா நடக்கும்… மத்ததெல்லாம் பைனல் ரிசல்ட் மட்டும் தான் பாப்பேன்!” என்றான்.
அடுத்து இரண்டாம் தளத்தில் கொஞ்சம் ஆட்கள் இருக்க, இவர்கள் சென்றதும் ‘வணக்கம்’ வைத்தனர்.
“இங்க ‘போட்டோஷூட்! நடக்கும்! மோஸ்ட்லி செலிப்ரிட்டி போட்டோஷூட் தான் இருக்கும்!” என்றான்.
“இப்போ யாரும் வராங்களா?” வேலை செய்துக்கொண்டிருப்பவர்களை பார்த்து அவள் கேட்க, “இல்ல மாது, இன்னைக்கு ஒரு க்யூஸீன்[cuisine] ஆட்’ இருக்கு… அதுக்கு ரெடி பண்ணிட்டு இருக்காங்க!” என்றவன்,
அங்கிருந்தவரிடம், “கைஸ்! டேக் ஒன் அவர் ப்ரேக், அண்ட் ரெஸ்யூம்!” என்றுவிட, ஆட்கள் சந்தோஷமாய் லிப்ட்’க்குள் நுழைந்தனர்.
“எங்க போறாங்க?”
“டெர்ரேஸ்’ல புட் கோர்ட் இருக்கு… அங்க போறாங்க!” என்றவன், “ஷால் வீ கோ பை ஸ்டெயர்ஸ்[stairs]?” என்றான் அவளிடம்.
சரி என்றதும் மூன்றாம் தளத்தை ‘படி’ வழி அடைந்தவர்கள், வெகு விசாலமான அவ்விடத்தை அவள் சுற்றிப்பார்ப்பதை கண்டு, “இங்க டிஸ்கஷன் ரூம், மீட்டிங் ஹால், எக்யுப்மென்ட்ஸ் ரூம், டிரெஸ்ஸிங் ரூம், டினி ஸ்பா, மேக்கப் ரூம், ரெண்டு ரெஸ்ட்டிங் ஹால் அதோட என் பெரிய ரூம்!” என்றவன், அவளை இழுத்துக்கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்தான்.
மேலும் கீழும் சுற்றி பார்த்தவள், “இது ரூமா? இல்ல வீடா?” என்றாள்.
உண்மையில் அவ்விடம் அப்படிதான் இருந்தது.
ஒற்றை படுக்கை இரண்டு, பெரிய சோபா, ஆன்டிராய்ட் டிவி, மினி கிட்சேன், அட்டாச்ட் பாத்ரூம்!
பார்த்துக்கொண்டே நின்றவள் கரத்தில் ஜில்லென்ற மில்க் ஷேக்கை வைத்தான் அஜய்.
‘எப்படி?’ என அவள் பார்க்க, கையெட்டும் தூரத்தில் இருந்த குட்டி பிரிட்ஜை பார்த்தான் அவன்.
இன்னுமும் சுற்றிலும் பார்த்துக்கொண்டே கொஞ்சகொஞ்சமாய் அவள் ‘பால்குலுக்கி’யை [மில்க் ஷேக்] பருக, கோர்த்திருந்த அவர்கள் கரத்தை ஆசையாய் பார்த்துக்கொண்டு நின்றான் அஜய்.
“இங்கேயே இவ்ளோ வசதி இருக்கும்போது எதுக்காக தினம் ரெப்ரெஷ் பண்ண வீட்டுக்கு போறேங்க?” என்றாள்.
திடுக்கென்றானது அவனுக்கு.
‘ஐயையோ மாட்டிக்கிட்டோமே!’ என்று தோன்ற, வாயில் வருவதை சொல்லி சமாளிக்கலாம் என்று எதுவுமே அவன் கண்ணில் படவில்லை.
‘பேசாம, தண்டவாளத்தை பார்க்க தான் வரேன்னு சொல்லிட்டா?’ என நினைக்கும்போதே மனசாட்சி, ‘க்ர்ர்ர்ர்…’ என சத்தம் கொடுக்க, அவசரமாய் மறுத்துவிட்டு வேறு யோசிக்க,
“சொல்லுங்க அஜய்!?” என்றாள் அவள்.
“அது… இங்க…. அங்க… இல்ல ட்ரைன்….”
‘கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்…’ கதவு சடாரென திறந்தது.
‘யப்பா தெய்வங்களா… வாங்கடா!’ முதல்முறையாய் இந்த பாடல் அறுவையை நிம்மதியாய் வரவேற்றான் அஜய்.
‘பத்துப்பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்…’
மாதங்கவதனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.
‘அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய் காட்டும் ஆணழகன்…’
‘பெண்கள் பின்னே சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்’
ஒவ்வொருவராய் உள்ளே நுழைந்த நால்வரும் இப்போது ஒரே குரலில் கோரஸாய்,
“எவனோ…ஓஓஓ…. அவனே ‘காதல் மன்னன்!’… அஜய் ஒரு காதல் மன்னன்”
என்று எப்போதும் போல காட்டுக்கத்தல் கத்த, கதவடைக்கப்பட்ட அந்த அறைக்குள் அவர்கள் குரல் பல டெசிபலில் எக்கோ அடிக்க, தனித்திருந்த ஒரு கையாளும் அஜய்யை புஜத்தை கெட்டியாய் பிடித்துக்கொண்டாள் மாதங்கவதனா.
அவள் பயந்துவிட்டாள் என்று உணர்ந்த அஜய், “ரிலேக்ஸ் மாது… நான் சொன்ன வானரப்படை இதுங்கதான்!” என்றவன், முறையே, “குரு, அவன் வைஃப் ரீனா, விவேக் அண்ட் சுவாதி” என்று அறிமுகப்படுத்த, ‘ஹாய்’ என்றாள் பொதுவாய்.
“கைஸ், இவங்க மாது!” என்றிட,
“என்னது மாடா?” என்றான் குரு வேண்டுமென்றே…
கடுகடுவென முறைத்த அஜய், “மிஸ். மாதங்கவதனா!” என்று சொல்ல, ‘ஓ!’ என்ற நக்கல் தொனி எதிரே இருந்து.
நால்வரின் கண்களும் அஜய்யின் கரத்தை இரு கைகளாலும் கோர்த்து பிடித்து நின்றிருந்த மாதங்கவதனாவின் கரத்தின் மீதே படிய, அவர்கள் பார்வை சென்ற திக்கை உணர்ந்தவள், சட்டென இரு கைகளையும் அவனிடம் இருந்து எடுத்துக்கொண்டாள்.
அஜய் ‘உர்ர்’ரென நால்வரையும் முறைக்க, நமட்டு சிரிப்பு சிரித்தவர்கள் ஜம்பமாய் வந்து சோபா’வில் அமர்ந்துக்கொண்டு நின்றுக்கொண்டிருந்த இருவரையும் உபசரித்தனர்.
அஜய் கடுப்புடன் முறைத்துக்கொண்டே அமர்ந்தான். அவன் அருகே அமர போனவளை பிடித்து தன்னுடன் இருத்திக்கொண்டாள் ரீனா.
கடுப்பின் எல்லைக்கோட்டை கொஞ்சகொஞ்சமாய் எட்டிக்கொண்டிருந்தான் அஜய்.
“எங்களைப்பத்தி என்ன என்ன சொல்லிருக்கான் சொல்லுங்க!” என்று ரீனா கேட்க முதலில் தயங்கி தான் என்றாலும் சிறிது நேரத்திலேயே நால்வரிடமும் சகஜமாய் இயல்பாய் பேச வந்தது அவளுக்கு.
பேசிக்கொண்டே இருந்தவளை இமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான் அஜய்.
ஒரு கட்டத்தில் பேச்சு சொந்த வாழ்க்கைக்கு தாவியிருக்க, ஒருவரும் அவளது சொந்த விஷயத்தை பேசவில்லை. மாறாக அவர்களை பற்றி சொல்ல ஆரம்பித்திருந்தனர்.
“என் வைஃப் செகன்ட் டெலிவரி’க்காக அம்மா வீட்டுல இருக்காங்க! இப்போ ஏய்த் மந்த்” என்றான் விவேக்.
குரு, “காலேஜ்’ல இருந்து லவ்வு… சீக்கிரமே கல்யாணம் ஆகிடுச்சு! ரெண்டு பசங்க! ரீனா அம்மா வீட்டுல இருக்காங்க இப்போ வெக்கேஷன்’க்காக!” என்றான்.
“என் ஹஸ்பன்ட் டாக்டர்… வீட்டுல மாமியார் இருக்காங்க… பையனை அவங்க பாத்துப்பாங்க!” என்றாள் சுவாதி.
எல்லாம் கேட்டவள், “உங்க ஹஸ்பென்ட் எப்படி? ஜாலியா இருப்பாங்களா உங்களை மாதிரியே!” என்றாள்.
“அவ்ளோ ஜாலி டைப்ன்னு சொல்ல முடியாது… அதுக்காக ‘மூடி’யும் இல்ல” என்று சொல்ல,
“இவளுக்கு கல்யாணம் ஆகுறப்போ தான் நாங்க ரொம்ப பயந்துட்டு இருந்தோம்! வர மாப்பிள்ளை பிரென்ஷிப்’க்கு ‘தடா’ போடுற ஆளா இருந்தா என்ன பண்றதுன்னு! பட் பிரபு அண்ணா இஸ் சூப்பர் கூல்!” பிரபுவை ரீனா புகழ,
“ஒரு பொண்ணுக்கு லைஃப் பார்ட்னர் சரியா அமைஞ்சுட்டா மட்டும் போதும் ரீனா. வாழ்க்கைல எல்லாமே சரியா நடக்கும்!” என்றாள் அவள்.
அவள் கதையறிந்த நால்வரும் என்ன சொல்வதென தெரியாமல் அமையாகியிருக்க, அஜய் அவளை குறுஞ்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
மனமோ, ‘நான் இருப்பேன் அப்படி!’ என்று அவளிடம் சொன்னது.
மாதங்கவதனாவே, “எல்லாரும் ஒரே இடத்துல தான் ஸ்டே பண்ணிருக்கீங்களா?” என்றாள்.
இவர்களின் நட்பும் நெருக்கமும் அப்படி கேட்க வைத்தது.
உடனே சோகமான ரீனா, “இல்ல மாது, நாங்க எல்லாரும் வேற வேற ஏரியா… அஞ்சு வருஷம் முன்னாடி இந்த ஆபிஸ் கன்ஸ்ட்ரக்ஷன்’க்காக ப்ளான் போட்டுட்டு இருந்தோம்… சோ, வீடு வாங்கலை! இப்போ வீடு வாங்க ரெடியா இருக்கோம்! ஒண்ணா கிடைக்க மாட்டேங்குது!” என்றாள்.
“எப்படி எதிர்ப்பார்க்குறீங்க?”
சுவாதி, “த்ரீ பி.எச்.கே வேணும்! பக்கம் பக்கமா இருந்தா போதும்… மொத்தம் நாலு வீடு!”
“அபார்ட்மென்ட் சரிவராதா?” என்றாள்.
குரு, “அப்படி எல்லாம் இல்ல மாது… மனசுக்கு பிடிச்சுடுசுன்னா ஓகே தான்!” என்றுவிட,
“அப்போ என் பில்டிங்’ல மூணு வீடு இருக்கு… ஓகே’ன்னா வந்து பாருங்களேன்!” என்றாள்.
‘மூணு தானா?’ என்று நால்வரும் ஒரு கணம் தயங்க, “நாலு வேணுமே!” என்றாள் சுவாதி.
“ஓ!” என்று மாது சுணங்க, “நாளைக்கு நீங்க ப்ரீ’ன்னா சொல்லுங்க, நாங்க நேர்ல வந்து பாக்குறோம்!” என்றான் அஜய்.
விவேக், “ஆனா, மூணு தானே டா இருக்குன்னு சொல்றாங்க!” என்றிட, “அதே போதும்” என்றான் அஜய் விஷம சிரிப்புடன்.
ரீனா, “அதெப்படி?” என துவங்க, மனைவியை அடக்கிய குரு, “அவன் வேற வழில மூணு வீடே போதுங்குறான்!” என்று சொல்ல, சில நொடிகளில் அவர்களுக்கு ‘பல்ப்’ எரிய,
‘ஓ…ஓஹோ…!’ என்று கலாய்க்க ஆரம்பித்ததும், ‘இதுக்கு மேல இங்க இருக்கிறது டேஞ்சர்’ என்றுணர்ந்து, அவளை இழுத்துக்கொண்டு இரண்டாம் தளம் வந்தான் அஜய்.
அங்கே ஷூட்டிங் நடக்க எல்லாம் தயாராய் இருந்தது.
உணவு பதார்த்தங்களை விதவிதமாய், கண்ணைப்பறிக்கும் வகையில் ‘மோஷன் பிக்ஷறாய்’ எடுக்க வேண்டும்.
முதலில் சுத்தம் செய்யப்பட்ட முழு கோழியை அலங்கரித்து வைத்து, ‘க்ளு’ கொண்டு அதன் கால்களை அழகாய் உடலோடு ஒட்டினர்.
பின்னே, ‘கேஸ் டார்ச்’ கொண்டு ஆங்காங்கே கருக்கி, ‘ஷூ போலிஷ்’ஷால் அதன் மீது கோட்டிங் கொடுக்க, தந்தூரி சிக்கன் சில நிமிடங்களில் தயாரானது.
அதை பார்த்து திகைத்தவள், “என்னதிது?” என்று வினவ,
“இதெல்லாம் மார்கெட்டிங் டெக்னிக்ஸ்! ஒரிஜினலா சமைச்சு கொண்டு வந்து வச்சு எடுத்தா, கேமரா’ல அவ்ளோ அட்ராக்டிவா தெரியாது!
கண்ணுக்கு குளிர்ச்சியா, கவர்ச்சியா… மக்களை டெம்ப்ட்’ பண்ற மாதிரி இருந்தா தானே போனி ஆகும்!” என்றான் அஜய்.
அமைதியாய் கேட்டுக்கொண்டவள், அடுத்தடுத்து நடப்பதை கவனிக்கலானாள்.
பர்கரரில் பன்னீருக்கு பதில் ரப்பரும், பீர்’ கிளாசில் நுரை ததும்பி நிற்க டிஷ்வாஷ் லிக்விடும், பீட்சாவில் நூல்நூலாய் வர மொசரிலா’வுடன் பெவிகாலும்… இப்படி பல தில்லுமுல்லுகள்.
பார்த்துக்கொண்டே இருந்தவள் சலித்துப்போய் ஓரமாய் சென்று அமர்ந்துவிட்டாள்.
அங்கிருந்தவர்களிடம் சில செய்முறைகளை விவரித்து பேசிக்கொண்டிருந்தவன், மாது ஒதுங்கி அமர்ந்து விட்டது தெரிந்ததும் சுருக்கமாய் பேசிவிட்டு அவளிடம் விரைந்தான்.
“ஷூட்டிங் பாக்கணும்ன்னு சொன்னீங்க! அதுக்குள்ள போர் அடிச்சு போச்சா என்ன?” என்றான்.
“ம்ம்? போர் அடிக்கல! என்னவோ பாக்கணும்ன்னு தோணல!” என்றாள்.
“என்னாச்சு?”
“யோசிச்சு பார்த்தா எல்லாமே ‘பொய்’ தான்… இல்லையா அஜய்? சாதாரண விளம்பரத்துலேயே இத்தனை பொய்! அப்போ மனுஷங்கக்கிட்ட?” என்று வினவியவள்,
“நீங்க சொன்னீங்களே, கண்ணுக்கு குளிர்ச்சியா கவர்ச்சியா தெரிஞ்சா தான் போனி ஆகும்ன்னு… ஹவ் ட்ரூ!” என்றாள் வியப்பாய்.
“இங்க மனுஷங்க கூட தன்னோட பொய்யை, போலியை மறைக்க, தன்னை கவர்ச்சியா விளம்பரப்படுத்திக்குறாங்க!
அதை உண்மைன்னு நம்பி ஏமாந்து போய் நிக்குறவங்க தான் ஜாஸ்தி… இல்ல?” என்றாள்.
அவள் தன் சொந்த வாழ்க்கையை பற்றி தான் பூடகமாய் சொல்கிறாள் என்பது விளங்கியது அவனுக்கு.
“மாது, இங்க ‘பொய்’க்கு தான் விளம்பரம் தேவைப்படுது… உண்மை’க்கு இல்லை! உண்மைக்கு அதோட தரமே போதும்! தரமில்லாதத மட்டும் தான் கவர்ச்சியா விளம்பரப்படுத்தி போனி பண்ண வைக்குறோம்!” என்றான் இவனும் பூடகமாகவே.
“அப்படி ஒரு நிஜமான, தரமான பொருள் இருக்கா என்ன? என் கண்ணுக்கு தெரியல!”
லேசாக சிரித்தவன் ஓரடி அவளை நெருங்கி, “நிஜம் உங்க கண்ணு முன்னாடியே தான் இருக்கு! ஆனாலும் உங்களுக்கு தெரியாது! தெரிஞ்சுக்கனும்ன்னு நீங்க நினைக்கல!” என்றான்.
“என்ன சொல்றீங்கன்னு புரியலையே?” என்றாள்.
“புரியுறமாதிரி நான் சொல்லல!” என்றவன் நமட்டு சிரிப்பு சிரிக்க, விளங்காத பாவனையில் பார்த்தவள், “அப்போ புரியுற மாதிரி சொல்லுங்க…” என்றாள்.
இன்னும் புன்னகை விரிய, “சொல்லுவேன்… கண்டிப்பா சொல்லுவேன்… ஆனா, இப்போ இல்லை! சீக்கிரமே!!!” என்றான் அவள் கண்களை பார்த்து.
அவன் சொல்வது கிஞ்சித்தும் விளங்காவிடியும், அவன் முகத்தில் இருந்து தன் அஞ்சனங்களை பிரிக்க முடியாது போராடினாள் மாதங்கவதனா.