சிரஞ்சீவி கிளம்பியதும் ஒரு அமைதி அவ்விடத்தில். யமுனா குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். யாரிடம் என்ன கேட்பது, பேசுவது என்று புரியாத நிலை. உதயமூர்த்தி வயலைப் பார்க்க போய்விட்டார்.
அங்கை இரவு உணவு செய்ய வேண்டி சமையலறைக்குள் புகுந்து கொண்டார், கூடவே அஞ்சனாவும். மனோகரன் மட்டும் ஊருக்குக் கிளம்பி சென்றுவிட்டான்.
கல்கி டீவி பார்த்துக் கொண்டிருக்க, சூர்யா மனைவியைக் கண்பார்வையில் வைத்தபடி அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். சற்குணப்பாண்டியன் மீண்டும் உறங்கிப்போக, தையல் நாயகிதான் புலம்பிக்கொண்டிருந்தார்.
“இந்த சின்னக்குட்டிப் பேசாம இருந்திருந்தா, பேரன் இன்னும் இரண்டு நாள் இருந்திருப்பானே, இவளுக்கு வாய் அதிகம்” என்று கல்கியைத் திட்டிக்கொண்டிருக்க கல்கி கடுப்பாகிவிட்டாள்.
டீவியின் முன் இருந்த மர சோஃபாவில் உட்கார்ந்திருந்தவள், வேகமாய் எழுந்து தையல் நாயகியின் முன் நின்றாள்.
“என்ன சும்மா பேரன் போய்ட்டான்னு பாட்டு பாடுற, இத்தனை வருஷம் நீ இருக்கியா செத்தியான்னு கூட உன் பேரனுக்குத் தெரியாது கிழவி” என்றாள் கல்கி.
அவள் பேச்சில் இருப்பது முழுக்க முழுக்க நியாயம் மட்டும்தானே? யமுனாவால் பதில் பேசமுடியவில்லை. ஒதுங்கியே இருந்தது எத்தனை பெரிய குற்றம் என்று இப்போது விளங்கியது.
“ம்மா, மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கம்மா” அஞ்சனா சின்ன சிரிப்புடன் சமையல்கட்டில் இருந்து எட்டிப்பார்த்தபடி சொல்ல
“விடு, நம்ம குறுக்கப் போனா நம்மை பேசுவாங்க. உங்க அப்பத்தாவுக்கு வாய் அதிகம், கல்கிப் பேசினாதான் அடங்குவாங்க. அந்த பையன் வேறு கல்கி என்னமோ தப்பா பேசினா மாதிரி மன்னிப்புக் கேளுன்றான், எனக்கு சுத்தமா பிடிக்கல அஞ்சு” என்றார் அங்கையற்கண்ணி.
“ம்மா, அவருக்கு அவங்க அம்மாவைப் பேசினதும் கோவம் வந்துருக்கும். நம்மைப் பத்தி அவங்களுக்கு ஒன்னும் தெரியாதுலம்மா” என்று அவன் பக்கமும் யோசித்துப் பேசினாள் அஞ்சனா.
கல்கிப் பேசியதும்
“அதெல்லாம் உன் தாத்தாவோட தப்பு, என் பொண்ணை அவர்தானே தள்ளி வைச்சார், இல்லைன்னா என் பேரனுக்கு என்னைத் தெரியாம போயிருக்குமா?” என்று தையல் நாயகிப் பேச,
இவர்கள் பேசியது அத்தனையும் அங்கையும் அஞ்சனாவும் கேட்டிருந்தனர். யமுனா உள்ளே வந்தவர் அங்கையின் அருகே நின்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு
“என்னால நீங்க நிறையக் கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு இப்போ தெரியுது அண்ணி, என்னை மன்னிச்சிடுங்க” என்று கண்ணீருடன் சொல்ல அங்கை பதறிவிட்டார்.
என்னதான் தங்கை மீது வருத்தம் இருந்தாலும் உதயமூர்த்தியின் முன் தங்கையை ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாது. ‘உங்க தங்கச்சி’ என்று தொடங்கினாலே போதும் உதயமூர்த்தி உக்கிரமூர்த்தியாகிவிடுவார்.
அப்படியிருக்க தங்கை அழுதாள் என்று தெரிந்தால் அவ்வளவுதான் என புரிந்த அங்கை
“அச்சோ நீ ஏன் யமுனா அழற? விடு” என்று கையை விடுவித்துக் கொண்டார்.
அஞ்சனாவுக்கு அத்தையைப் பார்க்க பாவமாய் இருந்தது. எல்லாம் முடிந்த பின் இன்னும் அவரைப் பேசி என்னவாகப்போகிறது என்பதே அவளின் எண்ணம்.
“அத்தை, இப்போ நீங்க ஏன் மன்னிப்புக் கேட்கிறீங்க? அப்படியே கேட்டாலும் அது அம்மா கிட்ட இல்லை, அப்பா கிட்ட கேட்கணும்” என்றாள் அழுத்தமாக.
“ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்கீங்க, இன்னும் ஏன் பழசை நினைச்சு அழறீங்க. விட்டுத்தள்ளுங்க” என்று ஆறுதலாய்ப் புன்னகை செய்தாள்.
“இல்லை, அப்பா அப்பவே ரொம்ப கண்டிப்பா இருப்பார். அந்த பயம்தான் என்னை யார்கிட்டவும் சொல்லாம போக வைச்சது, நான் போன பின்னாடி இன்னும் அதிகமாயிருக்கும் தானே? கல்கி வேற படிக்கல சொன்னா, நீயும் படிக்கலன்னு சொன்னா, எல்லாம் என்னாலதானே?” என்றார் அழுகையுடன்.
“அவனுக்கு எதுவும் தெரியாதும்மா, ரொம்ப செல்லம். என்னைப் பேசினதால பேசிட்டான், மத்தபடி நல்ல பையன்” என்றார் அவசரமாய்.
“எனக்கு எதுவுமே தெரியல, நான் தெரிஞ்சுக்காம போய்ட்டேன் அஞ்சனா. உண்மையை சொல்லனும்னா அப்பா மேல அப்படியொரு பயம், அப்போ எல்லாம் இங்க லவ் மேரேஜ்லாம் ஈசியா நடக்காது. ஜாதி, மதம் கௌரவம்னு அத்தனை. அதுவும் உங்க மாமா வேற ஸ்டேட், என்னால அவரை மறக்கணும்னு கூட நினைக்க முடியல. நான் வாழ்க்கையில உறுதியா எடுத்த முடிவு அதுதான். இன்னிக்கு வரைக்கும் அந்த முடிவால எனக்கு எந்த கஷ்டமும் இல்லைம்மா. ஆனா உங்க படிப்பெல்லாம் என்னால போச்சுன்னு நினைக்கறப்ப எனக்கு வேதனையா இருக்கு” என்றார் தேம்பலுடன்.
“அழாத யமுனா! இந்த தண்ணீயைக் குடி. நீ அழுதா உன் மகன் கேட்கிறானோ இல்லையோ, உங்க அண்ணன் எங்களை உண்டில்லைன்னு ஆக்கிடுவார்” என்று சொல்லியே தண்ணீரை நீட்டினார் அங்கை.
“அத்த, எங்க படிப்பு போச்சுன்னு யார் சொன்னா? நான் பிஎஸி கம்யூட்டர் சயின்ஸ் படிச்சிருக்கேன் அத்தை” என்றதும் யமுனா யோசனையாய் அஞ்சனாவைப் பார்த்தவர்
“கல்கி உனக்கு அண்ணா யுனிவர்சிட்டியில சீட் கிடைச்சதுன்னு சொன்னா” என்றார்.
“உன்னைத் திட்டுற அன்னைக்கெல்லாம் சேர்த்து அவருக்கும்தான் திட்டு விழும் யமுனா, நான் சொல்லியும் கேட்காம பொம்பள புள்ளையை படிக்க பட்டணம் அனுப்பினான். இவனால என்னோட கௌரவத போச்சுன்னு எப்பவும் பேச்சுதான், இப்பவும் இவளுங்களும் அதையேதான் செய்வாங்கன்னு அப்படி பேசுவாங்க”
“ம்ம், ஆமா அத்த. அப்பா திட்டு வாங்க வேண்டாம்னுதான் நான் இங்க இருக்க காலேஜ்ல படிச்சிட்டேன். அதுக்குமே ஆயிரம் பேர் படிக்கிற காலேஜுக்குப் போடுற ரூல்ஸை வீட்ல எனக்கும் கல்கிக்கும் மட்டும் போடுவாங்க. காலேஜ் விட்டு வர லேட் ஆனா அவ்வளவுதான், இல்லை வெளியே கடைக்குப் போய் இரண்டு நிமிஷம் வழியில யாராச்சும் பார்த்து இரண்டு வார்த்தைப் பேசினா அதுக்கும் பேச்சு. கல்கிக்குக் கொஞ்சம் அதிகமா பேசுவான்னு அவளைக் கடைக்குக் கூட அனுப்ப மாட்டாங்க”
“புள்ளைங்களுக்கு ரொம்ப கஷ்டம் யமுனா. கல்கி பேசுறான்னு நினைக்காத, அவ ஆசைப்பட்ட படிப்பு இங்க இல்லை. சென்னையில படிச்சாதான் அதுக்கு மதிப்புன்னு சொல்றா. உங்கப்பா, உங்கண்ணன் யாரும் ஒத்துக்கல, அதனால இந்த ஒரு வருஷமா வீட்லயே இருக்கா என் பொண்ணு. அவளும் நல்லப்பொண்ணுதான், உங்கம்மா அவ பையனா பொறக்கலன்னு அடிக்கடி அவளைப் பேசி அவளுக்கும் பொசுக்குனு கோவம் வந்துடுது” என்றார் மகளை விட்டுக்கொடுக்காதவராய்.
பின்னே யமுனா மட்டும் மகனை விட்டுக்கொடுத்தரா என்ன?
எல்லாம் கேட்டிருந்த யமுனாவிற்குத் தன்னால் உருவான இக்கட்டினை தான் தான் சரி செய்ய வேண்டும் என்று புரிந்தது. குனிந்த தலை நிமிரக்கூடாது என்று வளர்க்கப்பட்டாரே அப்போதே, தன் செயலுக்குப் பின் இந்த சின்னப்பிள்ளைகளை என்ன என்ன கட்டுப்பாடுகள் போட்டு கட்டுப்படுத்தியிருப்பார்கள் என்று சொல்லாமல் புரிந்தது.
“அஞ்சு, கல்கி என்ன படிக்கனும்னு நினைக்கிறா?” என்று கேட்க
“மாஸ் மீடியா, ஜர்னலிஸம், எல்க்ட்ரானிக் மீடியா இப்படி எதாவது அத்தை” என்றதும்
“நீ அவளை அப்ளை செய்ய சொல்லு, நான் பேசி பெர்மிஷன் வாங்கித் தரேன்” என்றார் யமுனா.
“நிஜமாவா யமுனா? அதை மட்டும் செஞ்சுக் கொடுத்துடு யமுனா. என் பொண்ணு ரொம்ப சந்தோஷப்படுவா” என்றார் அங்கையும் ஆர்வமாக.
“என்னை மன்னிச்சிடுடா, என்னாலதானே உன்னால படிக்க முடியல” என்று சொல்ல
“அத்தை, அதெல்லாம் இப்போ நான் நினைக்கறதே இல்லை. என் வீட்டுக்காரர் என்னை நல்லா பார்த்துக்கிறார், அழகான குடும்பம் இருக்கு. எனக்கு நடந்த எல்லாம் நல்லவிதமாதான் நடந்திருக்கு. நீங்க வீணா வருத்தப்படாதீங்க” என்ற அஞ்சனாவை யமுனாவிற்குப் பிடித்துப் போனது.
“இன்னொன்னு சொல்லவா அத்தை?” என்று கேட்டவள் குரலைத் தாழ்த்திக்கொண்டு
“நீங்க மட்டும் வீட்டை விட்டுப் போகல கண்டிப்பா தாத்தா உங்களை இங்க யாருக்காச்சும் கல்யாணம் செஞ்சு வைச்சிருப்பார். நீங்க தலைக்கீழா நின்னாலும், ஏன் விஷமே குடிச்சிருந்தா கூட சாகட்டும்னு விட்டிருப்பார் தவிர தாத்தா, உங்களை மாமாவுக்குக் கல்யாணம் செஞ்சு வைச்சிருக்க மாட்டார். எங்க வருத்தமெல்லாம் அப்பா கிட்ட சொல்லாம, அவரை ஏமாத்திட்டீங்கன்னுதானே ஒழிய வேற இல்லை” என்றாள் தாத்தாவை உணர்ந்தவளாக.
இரவு உணவு முடிந்த பின் யமுனா கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லி வருத்தப்பட
“நான் தான் அப்பவே வீட்ல பேசுறேன் சொன்னேனே ப்ரியத்தம்மா, நீ கேட்டியா?” என்றார் அவர். மனைவியைத் தோளோடு அணைத்து
“அந்த சின்னப்பொண்ணைப் படிக்க வைக்க சொல்லி உங்கண்ணா கிட்ட நானே பேசுறேன் யமுனா, யூ டோண்ட் ஃபீல்” என்றார்.
“ஆனாலும் அஞ்சனாவோட மார்க் ரொம்ப அதிகம்ங்க, அவ ரொம்ப பெருந்தன்மையாய்ப் பேசிட்டா, ஆனா எனக்குத்தான் கஷ்டமா இருக்கு. அப்பாவும் அம்மாவும் அவ்வளவு ஸ்டிரிக்ட், எப்படா இங்க இருந்து போவோம்னு நானே நினைச்சிருக்கேன். அப்பவே அப்படி” என்று பெருமூச்சு விட்டவர்
“இந்த காலத்துப் பசங்க இவங்க, படிக்கிறதுக்குக் கூட என்ன பாடு பட வேண்டி இருக்குது பாருங்க” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.
“விடு யமுனா” என்ற சூர்யாவின் சமாதானங்கள் எடுபடவில்லை.
“அந்த பிள்ளை அவ வருத்தத்தை சொல்றா, இவன் அவகிட்ட கை நீட்டுறான். மாமா, மாமா பிள்ளைங்கன்னு ஒரு ஆசையா பேசுறானா பார்த்தீங்களா?” என்று மகனையும் திட்டினார்.
“அவனுக்கு இன்னும் பழகல இல்லை ப்ரியத்தம்மா” என்று சமாளிக்க
“பாசம் காட்ட பழகல சரி, அடிக்க மட்டும் கை நீட்டுறான்” என்றார் கோபமாக.
அடுத்த நாள் அண்ணனிடம் இதனைப் பற்றி பேசலாம் என்று நினைத்திருக்க, அன்று சற்குணப்பாண்டியனுக்கு உடல் நிலை நலிவடையத் தொடங்கியது. உறவுகள் வந்தவண்ணம் இருந்தனர்.
நேரம் செல்ல செல்ல, அவரின் நினைவுகள் மங்கிக் கொண்டே போனது. இரவுப்பொழுதில் உயிரும் அடங்கியது. உடனே சீரஞ்சீவியும் சென்னையிலிருந்து கிளம்பினான்.
சற்குணப்பாண்டியனுக்கு எல்லா சடங்குகளும் செய்யப்பட, பேரனாய் செய்ய வேண்டியதை பிறர் சொல்லவும் மறுக்காமல் செய்தான் சிரஞ்சீவி. சற்குணப்பாண்டியன் இறந்து மூன்று நாள் முடியவும், சூர்யா முக்கியமான கேஸ் விஷயமாக விஜயவாடா புறப்பட்டுவிட்டார்.
போகும் முன்னே மகனிடம் “அம்மாவை தனியா விடாத சீரு” என்றதும்
சிரஞ்சீவியோ “நான் போன பின்னாடி அம்மாவை அந்த பிள்ள பேசினாளா நானா?” என்றான் சந்தேகமாய்.
“சீரு, அந்த பொண்ணு அம்மாவைப் பேசுவான்னு உன்னைப் பார்க்க சொல்லல, தள்ளி இருந்தாலும் இறந்தது உங்கம்மாவோட நானா சீரு, அம்மாவுக்கு கஷ்டமா இருக்கும்ல. ஸோ டேக் கேர்” என்றவர் பின் மகனின் முகத்தை நேராய்ப் பார்த்து அழுத்தமான குரலில்
“அந்த குழந்தை தெரியாம பேசினாலும் நீ கோவப்படக் கூடாது சீரு” என்றதும்
“அவ குழந்தையா?” என்றான் கோபத்துடன்.
“காலேஜ் ஃப்ரஸ்ட் இயர் படிக்க வேண்டிய பொண்ணு, அப்போ சின்ன பிள்ளதானே பாபு பங்காரம். உங்கம்மா எல்லாம் உங்கிட்ட சொல்லுவா, ஸோ அவங்க கிட்ட நல்லவிதமா நடந்துக்கோ. அம்மாவுக்கு அதுதான் சந்தோஷம்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அன்றிரவு உறங்கும் நேரத்தில் யமுனா மகனிடம் தன்னால் அந்த பிள்ளைகளின் படிப்பு கெட்டது எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். சிரஞ்சீவியோ
“ம்மா, இதுல நீங்க என்ன செஞ்சீங்க? லவ் பண்ணினா இவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் இவங்க கிட்ட சொல்ல முடியுமா? மாமாகாரு அவர் பசங்களை அவர்தானே படிக்க வைச்சிருக்கனும், அப்பா பேச்சைக் கேட்டு அவர் படிக்க வைக்காததுக்கு நீங்க என்னம்மா செய்வீங்க?” என்று அம்மாவுக்காகவே பேசினான்.
“உனக்குப் புரியவே இல்லை ப்ரசாத், உனக்கு ஒரு சிஸ்டர் இருந்தா தெரிஞ்சிருக்கும்” என்றவர்
“அதையெல்லாம் விடு, அன்னிக்குக் கல்கியை அடிக்க போன இல்ல, நீ அவ கிட்ட ஸாரி கேட்கனும்” என்றதும்
“ஏமிரா இதி?” என்று அம்மாவை அதிர்ச்சியாகப் பார்த்தான் சிரஞ்சீவி.
என்னதான் அம்மா சொன்னது புரிந்தாலும், அந்த வயதுக்கு அந்த பெண்ணின் பேச்சு அதிகபடியாகவே அவனுக்குப் பட்டது, அதனையும் விட அம்மாவை அழவிட்டாள் என்பது நெஞ்சில் ஆழப்பதிய மன்னிப்புக் கேட்க மனம் ஒப்பவில்லை.
அவனின் ஈகோ அதற்கு இடம்கொடுக்கவில்லை.
அடுத்த நாள் காலைப்பொழுதில் பின்பக்கம் வாசலைக் கூட்டுப்பெருக்கிக் கொண்டிருந்தாள் கல்கி. யமுனா சிரஞ்சீவியை கல்கியிடம் மன்னிப்புக் கேட்க அழைத்து வந்தவர்
“கல்கி!” என்று அவளை அழைக்க அவள் நிமிர்ந்து பார்க்க
“அஞ்சு எங்கிட்ட எல்லாம் சொன்னாம்மா, முன்னாடியே பேசனும்னு நினைச்சேன். தாத்தா தவறிட்டார், அதனால பேச முடியல, அன்னிக்கு இவன் செஞ்சது தப்பு, ஸாரிம்மா” என்றவர் மகனைப் பார்க்க கல்கியின் பார்வையும் அவன் மீதுதான்.
“ப்ரசாத் பேசு” என்று யமுனா அவனைப் பேச சொல்ல, ம்ஹூம் அவனின் ஈகோ தலைத் தூக்கியது. இந்த சிறுபெண்ணிடம் நான் மன்னிப்புக் கேட்பதா? அத்தனை பேர் என்னைப் பார்க்கவும் பேசவும் நடுங்க எத்தனை தைரியமாய் திமிராய் என்னை எதிர்த்து நின்றாள்? இவளிடம் இறங்கிப் போவதா? என்று அவன் எண்ணம் போனது.
இறங்கி என்ன கிறங்கியும் போகப்போகிறோம் என்று அப்போது அவன் அறியவில்லை.
அவன் யோசித்தபடி அமைதியாய் நிற்க, யமுனாவின் பின் பார்த்த கல்கி
“தள்ளுங்க பாம்பு” என்றதும் பதறி அம்மாவை சிரஞ்சீவி அவன் பக்கம் இழுக்க, பாம்பு ஒன்று சருகுகளின் இடையே ஓட அதன் பின்னே ஓடினாள் கல்கி கையில் ஒரு தடியுடன்.
“ஏய் பார்த்து” என்று சிரஞ்சீவியும் சொல்ல, கல்கியோ அவன் பேச்சை காதில் வாங்காது பாம்பின் பின் போனவள் அதனை அடித்த பின்தான் மூச்சு வாங்க நின்றாள்.
பாம்பென்றால் படையும் நடுங்க, பாவையிடம் பயம் என்பதே இல்லை. அவள் என்னமோ ஈ எறும்பை அடித்தவள் போல்,
“அம்மா, வம்பட்டி(மண்வெட்டி) எங்க வைச்ச?” என்று குரல் கொடுத்தாள்.
அங்கையற்கண்ணி வீட்டுக்குள் இருந்தவர்
“மாட்டுக்கொட்டகை மேல பாரு டி” என்று சொல்ல, அதனை எடுத்து ஒரு குழியைத் தோண்டியவள் பாம்பைக் குச்சியில் எடுத்து அதனுள் போட்டு மூடிக்கொண்டிருந்தாள்.
சிரஞ்சீவி அம்மாவின் கையை இறுகப்பற்றினான், நெஞ்சம் பதறியது. அந்த பாம்பு அம்மாவைத் தீண்டியிருந்தால் நினைக்கவே திக்கென்றது. அவர்கள் அந்த பதட்டத்தில் நிற்க, அஞ்சனா மகனைப் பல் துலக்க தூக்கி வந்தாள். அவளிடம் கல்கியின் செயலை யமுனா சொல்ல அஞ்சனா புன்னகையுடன்
“அய்யோ அத்தை, ஒரு நாள் அவ தூங்கிட்டு இருக்கும்போது ஹால்ல அவ பாய்க்குக் கீழ ஒரு பாம்பு குட்டி கிடந்துச்சு, இவ தூக்கத்துல நசுக்கியே அதைக் கொன்னுட்டா”
“இப்ப கொஞ்ச நாள் முன்னாடி பின்வாசல் கதவு கிட்ட நிக்கும்போது கதவுல இருந்து பாம்பு தொங்கி அவ தோள்ல விழுந்திடுச்சு, அவ பாட்டுக்குத் தள்ளி விட்டுப் போய்ட்டா, அவளுக்கு எதுக்கும் பயமில்லை” என்றாள் தங்கையைப் பற்றி பெருமிதமாக.
சிரஞ்சீவியோ யமுனாவிடம்
“ம்மா, உன் அண்ணன் பொண்ணு பாம்பை அடிச்சு அட்டாப்ஸீயே பண்ணிட்டா” என்றான் ஆச்சர்யமாய்.
அம்மாவின் கரத்தை மகன் இறுகப்பற்றியிருக்க, அது கல்கியின் பார்வையில் விழ, அதில் அவர்களின் உணர்வுகளைப் படித்தவள்
“அது விஷமில்லாத பாம்புதான் அத்த, இங்க சுத்தம் பண்ணிட்டா பெருசா இருக்காது. பயப்படாதீங்க” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டிற்குப் போக, கல்கியை இப்போது ஆச்சர்யமாய் முற்றுகையிட்டன சிரஞ்சீவியின் விழிகள்.