விஷ்வா லேப்டாப்பில் தனது வேலையில் இருக்க வர்ஷினி எழுந்துகொள்ள காத்திருந்தான்.
நேரம் ஆகிவிட்ட போதும் இன்னும் அவள் அப்படி ஒரு உறக்கத்தில் இருக்க எழுப்பவும் மனம் வரவில்லை.
வர்ஷினியின் முகம் நிர்மலமாக இருக்க ‘கொஞ்ச நேரத்தில் என்ன பேச்சு எல்லாம் பேசிவிட்டாள்?’ என்பதை போல பார்த்துக்கொண்டு இருந்தான்.
அதைவிட அதிசயமாய் தான் உணர்ந்தது தன்னை நினைத்து. எத்தனை கோபம் வந்தாலும் நொடியில் அவளிடம் காணாமல் போய்விடும் விந்தை தான் வியப்பாக இருந்தது.
அதனை நினைக்கையில் மிதமான இளமுறுவல் அவனிதழ்களை அலங்கரித்தது. மீசையை நீவியபடி சுழல் நாற்காலியில் சுற்றிக்கொண்டே பார்த்தான்.
ஓவியமாய் ஒயிலாய் உறங்குபவளை நெருங்கும் ஆசை ஏராளம் இருக்க அவளின் நிலையை கருத்தில் கொண்டு எட்டியே இருந்தான்.
அப்போதைக்கு எழுந்துகொள்ளமாட்டாள் என நினைத்தவன் பசியெடுக்க கிட்சனுக்கு சென்றான்.
மதியம் ஆகும் முன்பே சமைத்ததும், சண்டையுடன் உண்டது தான். அதனால் பசி வயிற்றை கிள்ளியது.
சாதம், குழம்பு மிச்சமிருக்க சூடு செய்து மூடி வைத்தவனுக்கு அதை சாப்பிடவும் பிடிக்கவில்லை.
செய்ய விருப்பமில்லாமல் ஹோட்டலில் ஆடர் செய்துவிட்டு வந்தவன் ஹாலில் டிவியை போட்டுவிட்டு அமர்ந்தான்.
ஏனோதானோவென்று திரையில் ஓடிக்கொண்டிருந்தவற்றை பார்த்திருந்தவன் எண்ணிற்கு வர்ஷினியின் சித்தி போன் செய்யவும் தனக்கெதற்கு அழைக்கிறார் என்ற சிந்தனையுடன் எடுத்தான்.
“அதுக்கென்ன பன்றது அத்தை. வேலை இருக்கே?… என்றான் பட்டும் படாமலும்.
இப்படியான பேச்சுக்களை அவன் விரும்பியதில்லை. வரமுடியவில்லை என்றால் அவர்களின் சூழ்நிலையை புரிந்துகொள்ளவேண்டும்.
தனக்கும் பெரியவர்களுக்கு இதை கூடவா எடுத்து சொல்வார்கள் என்று நினைப்பான்.
இப்போது அவர் அப்படி சொல்லவும் அவரின் பேச்சிலேயே என்னவோ ‘நீ வராதது எனக்கு பிடிக்கவில்லை, நான் அதில் வருத்தம்கொள்கிறேன்’ என்று பேசியதை போன்ற தொனி தென்பட்டுவிட பேசிவிட்டான்.
“இருந்தாலும் இந்த மாதிரி விசேஷங்களும் முக்கியம் தானே? எல்லாரும் உங்களை கேட்டாங்க…” என்றார்.
அன்று அதிரப்பள்ளியிலிருந்து அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்க நன்று கலகலப்பாய் பேசியவனிடம் எப்போதும் அப்படி இருப்பான் என நினைத்து பேசிவிட மாட்டிக்கொண்டார்.
“புரியுது அத்தை. ஆனா நான் பூஜைக்கு வந்திருந்தா என் வேலைக்கு பூஜை போட்டிருப்பாங்க. நல்ல குடும்பம்ன்னு மட்டுமா பொண்ணை குடுத்தீங்க? நல்ல வேலையில இருக்கேன்னும் தானே?…”
“தம்பி…”
“இருங்கத்தை, இந்த வேலையில ஏகப்பட்ட டென்ஷன் இருக்கும். அதுவும் நான் இருக்கற பொஷிஷனுக்கு சின்னப்பிள்ளை மாதிரி ஓயாம லீவ் போட்டா என்னோட ரெபுடேஷன் என்னாகறது? நான் முதல்ல என் வேலைக்கு தானே சரியா இருக்கணும். விசேஷம் எப்போ வேணாலும் கலந்துக்கலாம்….”
“அதோட வர்ஷி வந்தா நான் வந்த மாதிரின்னு நினைச்சேன். ஆனா நீங்க அப்படி நினைக்கலை போல?…”
“அதில்லைங்க தம்பி, ஒரு ஆதங்கத்துல…”
“ஆதங்கம் தானே? எல்லாருக்கும் இருக்கும். அதுக்காக நம்ம ஆதங்கத்துக்கு மத்தவங்க ஆடனும்னு நினைக்கலாமா? நான் நினைக்கமாட்டேன். வர முடியலைன்னா ஏதாவது ரீசன் இருக்கும்ன்னு சொல்லாமலே நீங்க புரிஞ்சிருக்கனும்…” என்று சொல்ல அவருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
“விஷ்வா…” என வர்ஷினி வந்துவிட்டாள்.
அவளை பார்த்ததும் புன்னகைத்தவன் வா என்று கையை நீட்டினான். அவனின் கையை பிடித்துக்கொண்டு வந்தமர்ந்தவள் யாரிடம் பேசுகிறான் என்று தெரியாமல் அமைதியாக இருக்க,
“என்னத்தை சைலன்ட் ஆகிட்டீங்க? நான் சொன்னது கரெக்ட் தானே?…”
“ஹ்ம்ம், ரொம்ப சரி தம்பி…” என்றவர்,
“பொண்ணு வந்துட்டாளா?…” என்றார்.
“இப்பதான். இருங்க தரேன்…” என்று வர்ஷினியிடம் நீட்டினான்.
“உன் சித்தி தான், பேசு…” என்றவன் டிவி சத்தத்தை குறைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.
“சொல்லுங்க சித்தி, என் நம்பருக்கு கூப்பிட்டிருக்கலாமே?…” என வர்ஷினி பேச,
“அங்க தான் தப்பு பண்ணிட்டேன். எல்லாம் உன் சித்தப்பாவால…” கடுப்புடன் பேசினார் அவர்.
“என்னவாம்? என்ன பேசினார்?…” என்று கேட்க விஷ்வா புருவம் உயர்த்தினான்.
“எல்லாம் எல்லாரும் சொல்றதை தான் நானும் சொன்னேன். அதுக்கு யப்பா….”
“சித்தி, என்னு சொல்லுங்க. நான் கேட்கறேன்…”
“என்னது கேட்கிறியா? திருப்பி அதுக்கும் என்னை பேசவா? அதுவும் உங்கப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளோ தான். உன் சித்தப்பா கேட்கவே வேண்டாம். என்னை தூக்கி தண்ணித்தொட்டிக்குள்ள ஒரே அமுக்கு….”
அத்தனை அயர்ந்துபோனதை போல அவளின் சித்தி பேச இங்கே வர்ஷினி விஷ்வாவிடம் ‘என்ன பேசினீங்க?’ என வாயசைத்தாள் என்னவென்று கேட்டு.
“ஒண்ணுமில்லையே…” என்றான் அவனும் தோளை குலுக்கி.
அவனை நம்பாத பார்வை பார்த்துக்கொண்டே இங்கே போனிலும் கவனமாக இருந்தாள் வர்ஷினி. நிச்சயம் என்னவோ பேசியிருக்கிறான் என புரிந்தது.
“இங்க பாருடி, நேத்து ஏன் பூஜைக்கு வரலைன்னு மட்டும் தான் கேட்டேன்…”
“என்னது?…”
“எல்லாரும் உன் வீட்டுக்காரரை இங்க கேட்டாங்கல்ல, அதை சொல்லி விசேஷமும் முக்கியம் தானேன்னு தாண்டி சொன்னேன்…”
“ஹா ஹா சித்தி, நீங்க ஏன் அதை அப்படி கேட்டீங்க?…”
“ஓஹ் அப்போ வேற எப்படி கேட்கிறதாம்?…”
“சரி விடுங்க, இதை கேட்க தான் போன் பண்ணுனீங்களா?…” என்றாள்.
“அத மறந்துட்டேன் பாரு உன் வீட்டுக்காரர் பேச்சில. உன் சித்தப்பா தான் போன் பண்ணி விருந்துக்கு கூப்பிட சொன்னாங்க. இந்த சண்டே ப்ரீயான்னு…”
“சரி, கேட்டு சொல்றேன்…”
“இல்லை இல்லை. நீ கேட்காத. அதுவும் மரியாதை குறைச்சலா இருக்கும். நானே உன் சித்தப்பாவை விட்டு அழைக்க சொல்றேன்….”
“எதுக்கு சித்தி இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்?…”
“ஏன் பேச மாட்ட? எனக்கு வாய்ச்சிருக்கற மாமியாரும் அப்படி, புருஷனும் அப்படி…”
“என்னவாம் பாட்டி கால் பண்ணினாங்களா?…”
“ஆமா, நேத்து நீ வந்துட்டு கிளம்பவும் இங்க நைட்டெல்லாம் ஒரே கரைச்சல். என் பேத்தி அங்க கட்டிக்குடுத்து அத்தன பேர் அங்க இருந்தும் இன்னும் ஒருத்தர்க்கும் விருந்தாக்கி போடனும்னு எண்ணமிருக்கான்னு கேட்டு மதுரைல இருந்து போன்ல ஆட்டமா ஆடிருச்சு…”
“சித்தப்பா சும்மாவா இருந்தாங்க…”
“நல்லா இருந்தாரே உன் சித்தப்பா? அவருக்கு இளைச்சவ நாந்தான? என் தலையை பிடிச்சு உருட்டிட்டாரு. நீ ஏன் சொல்லலைன்னு கேட்டு…”
“சரி சரி, கோவப்படாதீங்க. நான் கேட்டு சொல்றேன்…”
“வேணாம்டியம்மா. அவரே பேசுவார். நீ கொஞ்சம் பொறுமையா எடுத்து சொல்லி தம்பியை கூட்டிட்டு வா. நான் கேட்டதுக்கு கொவிச்சுக்கிட்டாரோ என்னவோ? எனக்கு புத்தி சொல்ற மாதிரி பேசிட்டார்…”
“சித்தி ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல?…” வர்ஷினிக்கு அவரின் பேச்சில் மனது வருத்தமாகிவிட்டது.
“டென்ஷன் இல்லடா. ஆனா மனசு ஒருமாதிரி ஆகிருச்சு. நேத்துல இருந்து இங்கயும் பேசிட்டே இருந்தாங்களா? நானும் ஆத்தமாட்டாம என்னவோ சொல்ல அவங்க என்னவோ புரிஞ்சு. ப்ச். அதை விடு. நீ போனை வை…”
“ஓகே சித்தி…”
“நீ அம்மாட்ட எதுவும் சொல்லிக்காத…”
“சித்தி…”
“நீ சொல்லமாட்ட, இருந்தாலும்….”
“நான் பார்த்துக்கறேன் சித்தி. இந்த பாட்டிக்கு இருக்கு வேடிக்கை…”
“அடியேய், குடியே முழுகுச்சு போ. அதெல்லாம் நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டேன். காலையிலையே உன் சித்தப்பா கூப்பிடனும்ன்னாங்க. நான் தான் ஆபீஸ் போயிருப்பன்னு வேண்டாம்ன்னு சொல்லி இப்ப அழைச்சேன்…”என்றவர்,
“எங்க மேலையும் தப்பு தானே? ஒரு மாசம் ஆக போகுது. நாங்க தான் முதல்ல கூப்பிட்டிருக்கனும். அதனால சரின்னு விட்டாச்சு. நீ ஒன்னும் நினைக்காத…” என்று அவளை சமாதானம் செய்து போனை வைத்துவிட்டார்.
“பேசியாச்சா? வா சாப்பிடுவோம்…” என்றான் விஷ்வா.
“சப்பாத்தியா? செஞ்சீங்களா?…” என வர்ஷினி டேபிளில் வந்து அமர,