“மாப்பிள்ளை…” என்றதும் இருவரும் அமைதியாக வர்ஷினி பயங்கர பவ்யமாய் அமர்ந்துகொண்டதும் விஷ்வாவின் கிண்டல் பார்வை இன்னும் கூடியது.
“இரு, இரு உன்னை வச்சுக்கறேன்…” என விரல் நீட்டி எச்சரிக்க இதழ் குவித்து முத்தத்தை காற்றில் விட அதன் சத்தத்தில் பதறி போனாள் வர்ஷினி.
“விஷ்வா…” என்று பல்லை கடிக்க சிரிப்புடன் அவளை பார்த்து கண்சிமிட்டியவன்,
“சொல்லுங்க மாமா…” என்றான் அதே புன்னகையுடன்.
திலகன் அவனின் நலனில் இருந்து, வர்ஷினியை, வேலையை என்று எல்லாம் விசாரித்து முடித்தவர்,
“வேற ஒன்னுமில்லை மாப்பிள்ளை. நம்ம கிஷோருக்கு கல்யாணம் பேசலாமேன்னு தான் கூப்பிட்டேன்…”
“கல்யாணம் பேச பொண்ணு வீட்டுல பேசனும். நீங்க என்கிட்டே பேசறீங்களே?…” என்று சிரித்துவிட்டான்.
“மாப்பிள்ளை, அது விஷயமா கல்யாணத்தை பத்தி பேசனும்னு சொல்ல வந்தேன்…” திலகன் மறுபடியும் சரியாய் சொல்ல,
“ஓஹ், நல்ல விஷயம் தானே? செய்யலாமே? பொண்ணு பார்த்தாச்சா?…” என்றான்.
“எல்லாம் நம்ம சொந்தம் தான். கஸ்தூரி. உங்க கல்யாணத்துல கூட பார்த்திருப்பீங்களே?…”
“உங்க தங்கச்சி பொண்ணுன்னு சொல்லுங்க மாமா. முதல்ல அதை தானே சொல்லனும் நீங்க? அதுக்கப்பறம் தானே மத்ததெல்லாம்…” என வழக்கம் போல அவன் திருத்தி சொல்லி தர ஆரம்பிக்க வர்ஷினிக்கு பகீர் என்றது.
“விஷ்வா…” என்று அவனின் கையை பற்ற அவன் சாலையை பார்த்துக்கொண்டே பேசினான்.
“நேத்து வர லேட்டாகிருச்சு, அதோட கொஞ்சம் வேலை இருந்தது மாமா. அதான் எடுக்கலை. இப்ப சொல்லுங்க…” என்றான்.
இதில் வர்ஷினியிடம் இன்னும் திலகன் பேசவில்லை. விஷ்வாவிடமே பேசியபடி இருந்தார்.
“நல்லதுங்க மாப்பிள்ளை. அதான் கல்யாண பேச்சு பேசனும். முதல்ல வீட்டு மருமகன், உங்ககிட்டயும் கலந்துக்கனும் இல்லையா?…”
“அதெல்லாம் அவசியமில்லை மாமா? எந்த காலத்துல இருக்கீங்க? பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பிடிச்சதா? ரெண்டு குடும்பங்களுக்கு ஒத்துப்போகுதா அது போதுமே?…”
“அப்படி சொல்ல வரலைங்க மாப்பிள்ளை…” திலகனுக்கு இப்போது இதை எப்படி எடுத்து செல்வது என்று தெரியவில்லை.
அருணாவை முறைத்துக்கொண்டே பேசினார் திலகன். அலுவலகம் செல்லும் பொழுது பேசினால் பரபரப்பாய் போய்விடும்.
அதனால் நிதானமாக இருக்கும் போது பேசலாம் என்றால் அத்தனைபேரும் நெருக்கினார்கள் திலகனை.
“மாமா, கிஷோருக்கு ஓகே தானே? நீங்க அவர் அப்பா. அவருக்கு என்ன செய்யனும்னு உங்களுக்கு தெரியாததா எனக்கு தெரிஞ்சிற போகுது? உங்க பொண்ணோட மாப்பிள்ளையா இருந்தாலும் நான் இதுல என்ன செய்ய போறேன்?…”
“எனக்கு புரியுதுங்க மாப்பிள்ளை. ஆனாலும் முறைன்னு ஒன்னு இருக்கே?…”
“அதை தான் நானும் சொல்றேன் மாமா, முறைக்கு சொன்னா போதாதுங்களா? மிஞ்சிமிஞ்சி போனா நான் மாப்பிள்ளைன்னு கெத்து காமிக்கலாம். ஆனா எனக்கு அது செட்டாகாது. என்னோட பார்ட் என்னவோ கரெக்ட்டா செய்வேன்…”
“என்னதுங்க மாப்பிள்ளை…”
“அதான், மேரேஜ்க்கு வரது, எங்களோட முறை செய்யறது. கல்யாண வேலைகள் பார்க்கறது. இவ்வளோ தான் எங்க பார்ட். இது பொண்ணும், மாப்பிள்ளையும் சம்பந்தப்பட்டது. நீங்க கிஷோர் அன்ட் கஸ்தூரிக்கு இம்பார்ட்டென்ட் குடுங்க…” என்றான்.
திலகனுக்கு தலைசுற்றியது. இப்படி சொல்பவனிடம் என்ன பேசவென்று திகைப்பாய் இருந்தார்.
ஆனாலும் ஒரு பெருமிதம், என்னை கேட்டுத்தான் அத்தனையும் அசைய வேண்டும் மாமனார் வீட்டில் என்றிருக்கும் மாப்பிள்ளைகள் மத்தியில் விஷ்வா வித்தியாசமாக தெரிந்தான்.
வர்ஷினிக்கு தான் தன் தந்தையை நினைத்து பாவமாக போனது. இப்படி இவனிடம் மாட்டிக்கொன்டாரே என்று.
“யோசிங்க மாமா நான் சொல்றது உங்களுக்கு சரியாப்படும்…” என்றான்.
‘ம்க்கும், சரியா தோணுதான்னு இதுக்கெல்லாம் கேள்வி வராதே? சரியான ஜட்ஜ் மைண்டட்’ என வர்ஷினி அவனை தாளித்துக்கொண்டிருந்தாள் மனதிற்குள்.
திலகன் சுதாரித்துவிட்டான் விஷ்வா பேசியதில் இருந்து. அவன் சொல்வதும் சரி என்றவர் அவன் போக்கிலேயே பேச ஆரம்பித்தார்.
“இதுக்குமேல அப்பா தாங்கமாட்டாங்க…” என்று மெல்லிய குரலில் அவள் சொல்ல விஷ்வா அவளை கண்டுகொண்டால் தானே?
“சரிங்க மாப்பிள்ளை யோசிக்கறேன்…” என்ற திலகன்,
“இப்ப உங்களுக்கு வர சவுகரியப்படும்ன்னா ரெண்டுநாள் லீவ் போட்டு வர முடியும்ங்களா?…”
“இப்பவா?…”
“ஆமாங்க மாப்பிள்ளை. தங்கச்சி கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சா நல்லாருக்கும்ன்னு பிரியப்படுது. அதோட ரெண்டுபேர் ஜாதகமும் கூட நேரம் இப்ப நல்லா இருக்கு. இந்த சூழ்நிலையில முடிச்சா சிறப்பா இருக்கும்ன்னு சொல்றாங்க…”
“ஓஹ்…” என்றவன் வர்ஷினியை பார்க்க அவளின் விழிகளிலும் ஆசை மின்னல்.
திருமணம் முடிந்து கோவைக்கு வந்த பின்னர் மீண்டும் இன்னும் ஊருக்கு செல்லவில்லை.
அங்கே சென்று அனைவரையும் பார்க்க என கொள்ளை ஆசை இருந்தது வர்ஷினிக்கு.
அதே நேரம் அங்கே இவன் என்னென்ன அழிச்சாட்டியம் பண்ணுவானோ என்ற பீதியும் உள்ளுக்குள் எழும்ப அவள் முகமே காட்டிக்கொடுத்துவிட்டது.
“என்ன?…” என்று புருவம் உயர்த்தியவனுக்கு மனைவியின் இந்த முகம் அவனிதழ்களில் புன்னகையை தூவியது.
“ஏன் மாப்பிள்ளை, லீவ் போடறதுல சிரமமோ?…” என்றவர்,
“பரவாயில்லைங்க. அதுக்கடுத்த வாரம் லீவ் இருக்கும் போது வாங்க. அடுத்த வாரம் கூட வச்சுப்போம்…” என்றார் உடனே.
“இல்ல மாமா, வரோம். கண்டிப்பா. நீங்க ஏற்பாடு பண்ணுங்க…” என்று சொல்லிவிட வர்ஷினியின் முகத்தில் மத்தாப்பூக்கள்.
“ஆனா மாமா, இப்படி என்னை நீங்க எதிர்பார்த்து கிஷோர் கல்யாணத்தை டிஸைட் பண்ண வேண்டாம். நடக்கறத யாருக்காகவும் தள்ளிவைக்க கூடாது. இந்த மாப்பிள்ளை, மருமகன், முக்கியத்துவம் இதை எல்லாம் தூக்கி போடுங்க. மரியாதை செய்யறேன்னு தள்ளி வைக்காம இருங்க…”
“ஆத்தீ…” என்று பார்த்தாள் விஷ்வாவை.
“சரிங்க சரிங்க மாப்பிள்ளை. நீங்க சொன்னா…” என்று சொல்ல வந்து அப்படியே விழுங்கிக்கொள்ள விஷ்வாவிற்கு அவரின் முயற்சியில் அடக்கமாட்டாத சிரிப்பு.
“சரிங்க மாமா, நான் லீவ் எடுத்துட்டு கிளம்பும் போது சொல்றேன்…” என்றதும்,
“சரிங்க மாப்பிள்ளை…” என்று அவரும் அழைப்பை துண்டிக்க மீண்டும் அவனே அழைத்தான் திலகனுக்கு.
“திரும்ப ஏன் அப்பாவுக்கு கூப்பிடறீங்க?…” வர்ஷினி கேட்க திலகன் எடுத்துவிட்டார்.
“மாமா…”
“சொல்லுங்க மாப்பிள்ளை, என்ன விஷயம்? ஏதாவது சொல்ல மறந்துட்டீங்களா?…”
“பரவாயில்லைப்பா, சந்தோஷம். நான் கிஷோர் அண்ணாட்ட பேசறேன்…”
“சரிப்பா, உங்களை இங்க வர சொல்லியிருக்கேன். கிளம்பும் போது சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு திலகன் வைத்துவிடவும் விஷ்வாவை பார்த்தாள்.
“உன்கிட்ட பேசாம கட் பண்ணிட்டாங்கன்னா மூஞ்சியை தூக்கி வச்சுப்பியா? உடனே போன் போட்டு என்கிட்டே ஏன் பேசலைன்னு சண்டை போட வேண்டியதுதானே?…” என்று அவளுக்கு முன்பாகவே எகிறிவிட்டான்.
வர்ஷினி தான் திலகனிடம் அவன் பேசியமுறைமைக்கு சத்தம் போடலாம் என்று நினைத்திருக்க இப்போது விஷ்வா முந்திக்கொண்டு திட்டவும் அதை மறந்துவிட்டாள்.
“உங்கம்மா மட்டும் எத்தனை திட்டினாங்க? நீயும் திரும்ப கேட்க வேண்டியது தானே? அததுக்கு அப்பப்பவே பதில் குடுத்துடனும். புரியுதா?…” என்றான் விஷ்வா.
இதனை வெறும் பேச்சிற்கு மட்டும் என்று சொல்லாமல் செயலிலும் அதனை காண்பித்திருந்தான்.
அன்றே விடுமுறைக்கு இருவருக்கும் ஏற்பாடு செய்துவிட்டு அன்று மாலையே ராஜேஷை மருத்துவமனைக்கு அனுப்பியவன் மதுரை நோக்கி கிளம்பிவிட்டான் வர்ஷினியுடன்.