மருத்துவமனையில் அமர்ந்திருந்தனர் நிஷாவும் ஆதித்தனும். நிஷாவின் முகத்தில் ஏகத்திற்கும் கலவரம்.
முதல் குழந்தையை சுமக்கையில் அவளின் உடல்நிலை எப்படி இருந்ததென்ற பயமே இப்போது அவளை பதட்டத்தில் வைத்திருந்தது.
அந்த நேரத்தில் நிற்கவும், அமரவும் கூட அவ்வளவு கவனம் தேவையிருந்தது. அதிகமாய் படுத்தோ இல்லை சாய்ந்தோ மட்டுமே இருந்திருக்கிறாள்.
அந்நினைவில் உழன்றவளை ஆதித்தன் தான் அப்படி இருக்காது என தேற்றியபடி அமர்ந்திருந்தான்.
ஆதித்தனின் கரம் நிஷாவின் வலதுகையை பற்றி இருக்க மெல்லிய நடுக்கத்தை அவனுமே உணர்ந்தான்.
“எதுக்குடி இப்படி பயப்படற?…” என கேட்டவனுக்கும் கூட அந்த பயம் இருந்தது.
வெளியில் காட்டிவிட்டால் என்னாவது என விரைப்பாய் அமர்ந்திருந்தாலும் அந்த கண்ணை கண்டுகொண்டாள் அவள்.
“நீங்க ரொம்ப தைரியசாலி தான்….” என்று மெல்லிய குரலில் சொல்ல,
“அதான் டெஸ்ட் ரிசல்ட் இப்ப வந்திருமே. வெய்ட் பண்ணு…” என அவளின் கையை தட்டிக்கொடுக்க அமைதியாய் அவனின் விரல்களை கோர்த்துக்கொண்டாள்.
அருவிக்கு போய்விட்டு வந்து ஒருவாரம் கடந்திருக்க நிஷாந்தினியின் மூளைக்குள் அப்போது தான் நாள் கணக்கு பளிச்சிட்டது.
‘எப்படி இதனை யோசிக்காமல் போனோம்?’ என எண்ணியபடி பரிசோதிக்க அவளின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது அந்த மருத்துவ அட்டை.
கொஞ்சமும் தாமதிக்காமல் ஆதித்தனை அழைத்துக்கொண்டு இதோ மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தாள் நிஷாந்தினி.
மனதிற்குள் அத்தனை பயம். அருவிக்கு சென்றது, அதன் பின்னான ஆதித்தனின் அதீதமான நெருக்கங்கள் என்று அவளுக்குள் அச்சத்தை உணர வைத்தது.
இந்த முறையும் எதுவும் பிரச்சனை இருந்துவிட்டால்? நினைக்கவே மனது வலித்தது.
கொஞ்சமும் முழுதாய் மகிழ முடியவில்லை. இந்த முறையாவது முழுமையான மகிழ்ச்சியை அவள் அனுபவிக்க எண்ணினாள்.
ஆனால் மருத்துவ அறிக்கை வரும் வரை ஒரு நிம்மதி இல்லை. அவளின் இதயம் வெகுவாய் பலவீனப்பட்டிருந்தது.
“எல்லாம் நார்மலா இருக்கும் நிஷா…” என்ற ஆதித்தனை கடித்து குதறிவிடுவதை போல தான் பார்த்தாள்.
“எதுக்குடி முறைக்கிற?…” என பதிலுக்கு அவன் கேட்க,
“முறைக்காம. பேசாம வீட்டுக்குள்ள இருந்திருந்தா கூட பிரச்சனை இல்லை. கோவிலுக்கு போவோம்ன்னு மலையேறவிட்டு, கூட்டிட்டு வந்து, இந்த ஒருவாரமும். ப்ச், நான் ரொம்ப கேர்லெஸ்ஸா இருந்திருக்கேன்…” என்றவள்,
“எப்படி நானும் டேட் கவனிக்காம இருந்தேன்?…” என்று புலம்பினாள்.
“வாயை மூடு நிஷா. எப்ப பாரு புலம்பிட்டு. ஏன் நெகட்டிவா நினைக்கிற? பாஸிட்டிவா நினை…” என்றவன் சமாதானம் கூட எடுபடவில்லை.
“நீங்க மட்டும் எப்படி நினைக்கறீங்க?…” என்றவளை எப்படி சமாதானம் செய்வது என்னும் வழி தெரியாமல் விழி பிதுங்கினான் ஆதித்தன்.
“உங்களால தான் நான் யோசிக்கலை. எதையும் நினைக்கலை. நினைக்க விட்டீங்களா நீங்க?…” என்று அங்கேயே ஒரு சண்டைக்கு அடி போட,
“வீட்டுக்கு போய் பேசிப்போம். மூச்…” என்றான் ஆதித்தன்.
இன்னும் வீட்டில் கூட சொல்லியிருக்கவில்லை. அப்படியே கிளம்பி வந்திருந்தனர் இருவரும்.
சசிகலா வேறு கேட்டிருந்தார் மதியத்திற்கு ஏன் இன்னும் வரவில்லை என்று. ஒருவகையாக சொல்லி சமாளித்துவிட்டான்.
அவரும் மகனுக்கு தான் பார்க்க இருவருமாக சென்றிருக்கிறார்கள் என்று நினைத்திருந்தார்.
இதோ மருத்துவ அறிக்கையும் வந்து இருவரையும் மருத்துவர் உள்ளே அழைத்துவிட்டார்.
“கங்க்ராட்ஸ் ஆதி, நிஷா…” என புன்னகையுடன் மகப்பேறு மருத்துவர் சொல்ல அதை தாண்டி நிஷாவுக்கு அவர் எதுவும் பிரச்சனை இல்லை என சொல்லும் வரை உயிரில்லை.
“எல்லாமே பர்பெக்ட். எந்த பிரச்சனையும் இல்லை. நான் குடுக்கற மாத்திரைகளை மட்டும் சரியா எடுத்துட்டு வந்தா போதும்…” என மருந்துகளை எழுத,
“டாக்டர்…” என அழைத்துவிட்டாள் நிஷா.
“சொல்லும்மா…” என்றவரிடம்,
“இல்ல என்னோட பர்ஸ்ட் டெலிவரி…” எனும் பொழுதே,
“முதல் பிரசவம் அப்படி இருந்ததால ரெண்டாவதும் அதே மாதிரி இருக்கும்ன்னு சொல்ல முடியாது நிஷா. இப்ப உன்னோட உடல்நிலை ரொம்ப சரியா இருக்கு. அதனால அதை மனசுல ஏத்திக்காம சந்தோஷமா இரு…” என்றார் அவர்.
“அப்பறம் ஆதி இந்த முறையும் நிஷா சென்னையா?…” என சிரித்துக்கொண்டே கேட்க,
“இல்லை…” என்றான் அவன் உடனே.
“ஓஹ் நைஸ். நீ என்ன சொல்ற நிஷா?…” என அவளிடம் கேட்க,
“அதே தான்…” என்றாள் நிஷா இப்போது சந்தோஷமாய்.
இருவரின் முடிவை கேட்ட நிஷாவின் பெற்றோர் அவளை பார்க்கவென்று கிளம்பி வந்திருந்தனர்.
“போன முறை இங்க சூழ்நிலை சரி இல்லை. அதனால அப்போதைக்கு அனுப்பி வச்சேன். அங்க வேற மாதிரி நடந்திருச்சு. அதனால இந்த பிரசவம் இங்க தான் நிஷாவுக்கு…” என்றவன்,
“இந்த தடவைன்னு இல்லை அடுத்ததுனாலும் இங்க தான்…” என்றதும் அனைவருமே வாயில் கை வைக்காத குறையாக ஆதித்தனை பார்த்தனர்.
“என்ன பேசறீங்க?…” என்ற மனைவியின் பேச்செல்லாம் எங்கே அவனுக்கு தெரிந்தது?
“தலைபிரசவம் தாய் வீடுன்னு சொல்லுவாங்க. அது தான் முடிஞ்சதே. அதுவும் ஒருவருஷம் நிஷாவை அங்க வச்சிருந்தாச்சு. அப்பறம் என்ன?…” என கேட்டும் அனுராதா முகத்தில் ஆதித்தன் சொல்லியதை ஏற்றுக்கொள்ளாத பாவனை.
“இல்ல நிஷாவுக்கு அங்க ஏற்கனவே பார்த்த டாக்டர். நாங்களும் அவளை பக்கத்துல வச்சு பார்த்துப்போம்…” என மருமகனிடம் சொல்லிவிட,
“நானும் இங்க பக்கத்துல தான வச்சு பார்த்துக்க போறேன். இல்ல என்னால முடியாதுன்னு சொல்றீங்களா?…” என்ற கேள்விக்கு பின் எங்கே வார்த்தைகள் எழும்ப?
அதட்டி அமிழ்த்திவிட்டதை போல அலட்டிக்கொள்ளாமல் அழுத்தமாய் பேசியே அவர்களை வாயடைக்க செய்துவிட்டான்.
சொல்லியதை போல அவனின் கவனிப்புகள் பலமடங்கு தான். நிஷா தான் தவித்து போனாள்.
ஆதித்தனை சமாளிக்கவே முடியவில்லை. லேசாய் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாலும்,
“இதுக்கு தான் சொன்னேன், ரொம்ப பேசாதன்னு…” என ஆரம்பித்து அவள் எதையெல்லாம் செய்தாளோ அதை சொல்லி சொல்லி பேசி மருத்துவருக்கும் அழைத்து காரணம் கேட்டு என அனைவரையும் குச்சியை வைத்து விரட்டாத குறையாய் விரட்டினான்.
கவிப்ரியாவும், சிவநேயனும் நிஷாவை வந்து பார்க்க வந்திருந்தனர் விஷயம் கேள்விப்பட்டு.
“தன்ஷிக்கா நமக்கு பாப்பா வருது. குட்டி பாப்பா…” என அபி தன்ஷிகாவிடம் ஆசையாய் சொல்ல,
“உனக்கு தான் பாப்பா. உன்னோட பாப்பா…” என்றாள் தன்ஷிகா.
“நம்ம பாப்பா க்கா…” என அபி அழகாய் திருத்த,
“நிஜமாவா? ஆமாவா ப்பா…” என அவளும் சிவநேயனிடம் கேட்க புன்னகைத்தான் அவன்.
தன்ஷியிடம் இப்போது கொஞ்சம் மாற்றமும் வந்திருந்தது. கவியிடம் அதிகம் இருப்பதாலும், பாட்டியிடம் பேசுவதில்லை என்பதாலும் தாயிடம் ஒட்டுதல் கூடி இருந்தது.
எதிர்த்து பேசுவது எல்லாம் குறைய ஆரம்பித்திருந்தது சிவநேயனின் கண்காணிப்பினாலும், கவனிப்பினாலும்.
ஆனாலும் சில நேரங்களில் கமலாவின் பேச்சுக்கள் அவளிடமும் சட்டென வரத்தான் செய்தது.
போக போக குறையும் என்றான் சிவநேயன் மனைவியிடம். இப்போது வரை தாய், தந்தையரிடம் எட்டியே தான் நிற்கிறான்.
சிவநேயன் வீட்டில் இருக்கும் பொழுதில் எதுவும் பேசவில்லை என்றாலும், அவனில்லா பொழுதில் நடுவீட்டில் இருந்துகொண்டு அவ்வளவு பேச்சு பேசினார் கமலா.
கவியும் பொறுத்து பார்த்து எதுவும் முடியாமல் சிலநேரம் அவனிடம் புலம்புவதும் உண்டு.
இப்போதும் நிஷா தாயாகவிருக்கும் செய்தியை கேட்டவருக்கு அவ்வளவு புகைச்சல்.
“என் புள்ளைக்கும் தான் ஒருத்தியை கட்டி வச்சேனே? ஒத்தையா என் பேத்திய நிப்பாட்டிட்டாளே? அவன் மட்டும் ம்ம்ன்னு சொல்லட்டும்…” என சிவநேயனுக்கு இன்னொரு திருமணம் வரை பேசி கவியை அதிகமாகவே நோகடித்துவிட்டார் கமலா.
“இப்ப எனக்கே அந்த வீட்டை விட்டு தனியா போய்ட்டா என்னன்னு தோணுதும்மா. யார் என்ன சொன்னா என்னன்னு…” என வந்த இடத்தில் சசிகலாவிடம் முறையிட,
“நீங்க பேசினா பேசட்டும்ன்னு போக போய் தான் இவ்வளோ பேச்சும் பேசறாங்க….” என்றாள் நிஷா.
“என்ன பேசறது நிஷா? எனக்கு வெறுத்து போச்சு. அதுவும் நான் பேசினேன்னு தெரிஞ்சா உங்கண்ணன் என்னை தாளிச்சிடுவார்…”
“அப்போ அண்ணன் இல்லைன்னா பேசிடுவீங்க போல?…” என கிண்டல் பேசிய நிஷா,
“உங்கத்தை என்ன அண்ணா இருக்கும் போதா பேசறாங்க? நீங்க ஏன் அவங்களுக்கு பதில் சொல்ல போறீங்க? அவங்க டெக்னிக்கை கூட யூஸ் பண்ணலாம். சுவத்தை பார்த்து பேசுங்க…” என சொல்லியவள்,
“என்ன த்தை இந்த ட்ரெய்னிங் போதுமா?…” என மாமியாரிடம் கண்ணடித்தாள்.
“என்ன ட்ரெயின் பண்ணி என்ன? அவ பேசமாட்டா…” என சசிகலா சலித்துக்கொள்ள,
“பெட்டர் ஆப்ஷன் சொல்லுவேன். ஆனா அதையும் அண்ணி கன்ஸிடர் பண்ணலைன்னா நான் அடுத்து எதுவும் சொல்லமாட்டேன். அதுக்கு மேல அவங்க இஷ்டம்…” என நிஷா கண்டீஷனாய் சொல்ல,
“சொல்லு நிஷா. எனக்கு அந்தம்மா கண்ணுல படாம இருந்தா போதும்…” என்றாள் கவி.