அதுவும் நிஷாவிடம் கூட சொல்லவில்லை அவள். ‘அவ வாய்க்கு அவளுக்கு கூட அடுத்த பிள்ளை பார்த்தியா?’ என பேசியதெல்லாம் நெஞ்சில் நெருப்பை வாரி வீசி இருந்தது.
கொஞ்சநஞ்சமிருந்த பயமும், பரிதாபமும் கூட துடைத்துவிட்டதை போல எங்கோ சென்றிருந்தது கவிக்கு.
அதனை சொன்னால் வீட்டில் சங்கடப்படுவார்கள் என்று சொல்லாமல் விட்டவளுக்கு மாமியாரை எதிர்த்து பேசுவதற்கும் தைரியம் இல்லை.
இவருக்காக போய் தங்கள் குடும்பத்திடம் ஆதங்கப்பட்டுவிட்டோமே என தன்னையே நொந்துகொண்டாள்.
இப்போது தான் சொன்னால் கூட சிவநேயன் தங்களை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிடுவான்.
வயதான காலத்தில் அவர்களை தனியே தவிக்கவிட்டோம் என்னும் அவப்பெயர் எதற்கு என கவி பொறுத்துக்கொண்டாள்.
வெளியாட்களின் பார்வைக்கு கடைசி காலத்தில் அவர்களின் வயது மட்டுமே கருத்தில் படுகிறதே தவிர உள்ளுக்குள் என்ன நடந்திருக்கும் என்பதெல்லாம் யாருக்கு தெரிகிறது என நினைத்தாள்.
இப்போதும் தம்பி மனைவி தனக்காய் யோசித்து பேசுவதில் உள்ளுக்குள் நெகிழ்ந்து தான் இருந்தாள்.
“சொல்லு நிஷா என்னன்னு?…” என சசிகலாவும் கேட்க,
“பேசாம நீங்களும் அண்ணாவோட கடைக்கு கிளம்பி போங்க. சமைக்கிற நேரம் போக வீட்டுல மத்ததுக்கு வேலை ஆள் தானே? வரவங்களை காலையிலையே வந்து வேலையை முடிக்க சொல்லிட்டு தன்ஷியை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு நீங்களும் அண்ணாவோட கடைக்கு கிளம்புங்க….”
இலகுவாய் ஒரு தீர்வை சொல்லிவிட்டாள் நிஷாந்தினி. கவிப்ரியாவும், சசிகலாவும் மகிழ்ந்துவிட்டனர்.
“இதை யோசிக்கவே இல்லயே நான்…” கவி புருவம் உயர்த்த,
“என் மாமியார் தான், எனக்கு மட்டும் தான்னு பாடிட்டிருந்தா இதை எங்க கவனிக்க? இனி நீங்களாச்சு உங்க மாமியாராச்சு…” என்றவள்,
“பேசாம உங்க மாமனாருக்கு ஒரு ஜோடிப்புறாவை பார்த்து விடுங்க. அங்க பஞ்சாயத்து பேசவே சரியா போகும்…” என்று சொல்லி நிஷா சிரிக்க மருமகளின் கலாட்டாவில் சசிகலா முகத்திலும் அவ்வளவு புன்னகை.
“அடிங், பேச்சை பாரு…” என வந்து நிஷாவின் காதை பிடித்துவிட்டான் ஆதித்தன்.
கவியும் நிஷா சொல்லியபடி சிவநேயனுடன் கடைக்கு கிளம்பி செல்ல ஆரம்பித்திருந்தாள்.
கமலாவை நேரடியாக முறைக்க முடியவில்லை என்றாலும் தவிர்க்க ஆரம்பித்திருந்தாள்.
நிஷாவுக்கு நான்காம் மாதம் ஆரம்பித்திருந்தது. அதிகமாய் உடல் நோவு இல்லை என்றாலும் அயர்ச்சியின் காரணமாக அவளுக்கு ஓய்வு தேவை என்றிருந்தார் மருத்துவர்.
அதன்பொருட்டு பணிக்கு செல்வதிலிருந்து தற்காலிகமாக நின்றுகொண்டாள் நிஷாந்தினி.
வீட்டிலேயே இருக்க அவளுக்கு தேவையான எல்லாம் ஆதித்தனின் நேரடி பார்வையில் தான்.
முதல் பிரசவத்தில் தவறவிட்டதெல்லாம் இதில் ஈடுகட்ட நினைத்தது ஆதித்தன், நிஷா மட்டுமல்ல, சசிகலா, சங்கரலிங்கமும் கூட தான்.
அவளின் ஒவ்வொரு அசைவிற்கும், அமர்விற்கும் காரணம் கேட்டே அவளை ஒருவழி செய்தான் ஆதித்தன்.
“எனக்கு பிரஷர் அதிகம்ன்னு டாக்டர் சொன்னா அதுக்கு முதல் காரணம் நீங்க தான். எவ்வளோ டென்ஷன் பன்றீங்க? உங்களுக்கு பதில் சொல்றதுக்கு பதில் நான் எங்கம்மா வீட்டுக்கே போய்டலாம் போல…” என புலம்பி தீர்த்துவிடுவாள்.
“ஓஹ், இந்த மாதிரி நேரத்துல மூட் ஸ்விங் இருக்கும். அதான் உனக்கும். நான் சாதாரணமா பேசறதும் டென்ஷன் பண்ணுது…” என அசால்ட்டாக முடித்துக்கொள்வான் ஆதித்தன்.
இத்தனை கலவரங்களுக்கும், கவனிப்புகளுக்கும் இடையில் வந்து சேர்ந்திருந்தான் சமர்ஜித், சம்ருத்தாவுடன்.
அன்று விடுமுறை நாள். ஆதித்தன் வீட்டில் இல்லை. பெண்கள் மட்டுமே இருக்க அபியுடன் அமர்ந்து வீட்டுப்பாடங்களை செய்ய வைத்துக்கொண்டிருந்தாள் மாடியில்.
சமர்ஜித் வந்து கதவை தட்டவும் யார் என வெளியே எட்டி பார்த்த சசிகலாவிற்கு தலை சுற்றாத குறை தான்.
நிரஞ்சனி போனில் நிஷாவுடன் பேசும் பொழுது எப்போதாவது பேசுவதுண்டு. சில குடும்ப விழாக்களில் சமரை பார்த்ததுண்டு.
ஆனால் ஒரு முறை கூட வீட்டிற்கு அழைக்கவில்லை. இப்போது அவனாக வந்திருக்கவும் அதிர்ந்து போனார் சசிகலா.
மகனை எண்ணி ஒருபக்கம் பயம் என்றாலும் வீடு தேடி வந்தவர்களை வாசலில் எப்படி நிற்க வைக்க?
“உள்ள வாப்பா, வா சம்ரு குட்டி…” என புன்னகையுடன் அழைத்துவிட்டார் அவர்.
“எப்படிம்மா இருக்கீங்க?…” என்ற சமர் மகளுடன் உள்ளே நுழைந்தான்.
“இதுதான் நிஷா சித்தி வீடா?…” சம்ருதா உள்ளே நுழைந்ததும் சுற்றி பார்க்க,
“உட்காருப்பா. நான் நிஷாவை வர சொல்றேன்…” என்று சொல்லி கீழிருந்தே நிஷாவை அழைத்தார்.
“நிரஞ்சனியை கூட்டிட்டு வரலையா?…” என்ற சசிகலா சமர்ஜித்தை பார்க்க அவன் முகத்தில் சாந்தமாய் ஒரு புன்னகை மட்டுமே.
இதற்குள் கீழே இறங்கி வந்த நிஷாவை பார்த்ததும் சம்ருதா ஓடி சென்று சித்தி என அணைத்துக்கொள்ள நம்பவியலா பார்வையுடன் சமர்ஜித்தை பார்த்தாள் அவள்.
வந்தவர்களை வரவேற்கவேண்டும் என்ற எண்ணம் கூட எழவில்லை நிஷாவிற்கு.
எப்படி வந்தார்கள்? நிரஞ்சனி கூட முதல்நாள் பேசிய பொழுது எதுவும் சொல்லவில்லையே? என நினைத்திருக்க சமர் அமைதியாய் புன்னகைத்தான்.
“எப்படி இருக்க நிஷா?…” என அவனே அவள் பேசும் முன் பேசிவிட,
“ஹ்ம்ம் மாமா…” என்றவளுக்கு கண்கள் கலங்கி போனது.
வந்தவர்களை இருந்து அமர சொல்லி உபசரிக்க முடியாத திராணியற்றவளாக கண்களை கரித்தது.
“நிரஞ்சனி உன்னை பார்க்கனும்ன்னு சொன்னா நிஷா. சம்ருவும் குட்டிப்பாப்பா எப்படி இருக்குன்னு பார்க்க ஆசைப்பட்டா. நீ சென்னை வரமாட்ட இல்லையா? அதான் நாங்க இங்க வந்தோம். சம்ருவுக்கு உன்னை உடனே பார்க்கனும்ன்னு அடம். அதான் கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப கிளம்பிருவோம்…” என்றதும் கண்ணீர் பொங்கிவிட்டது நிஷாவிற்கு.
“மாமா…” என்றவள் கலங்கி போய் நிற்க,
“எனக்கு புரியும் நிஷா. நீ வருத்தப்படாத. அதுவும் இந்த மாதிரி நேரத்துல. ப்ரோ வரவும் உன்னை கோவிலுக்கு அழைச்சுட்டு வர சொல்லி கேட்டுட்டு கிளம்பிருவேன்…” என்றான் சமர்ஜித்.
சசிகலாவிற்கு மனதே விண்டு போனது அவர்களை எண்ணி. உள்ளுக்குள் அவ்வளவு மருகல்.
அதுவும் மருமகளின் நிலையை கண்டவருக்கு தாள முடியவில்லை. பரிதாபமாய் பார்த்தார்.
மேலும் பேசும்முன் ஆதித்தனின் பைக் சத்தம் கேட்க உயிரெல்லாம் பதறி போனது நிஷாவிற்கு.
சட்டென எதுவும் பேசிவிடமாட்டான் தான். ஆனால் பேசாமலே சென்றுவிட்டாலும் அது காலத்திற்கும் காயங்கள் தானே?
முதன்முதலில் வீடு தேடி வந்திருக்கும் பொழுது, அதுவும் சமரின் பேச்சுக்களும் அவளை தளர செய்திருந்தது.
ஒருவித படபடப்பும், பதட்டமுமாகவே தான் அவனின் வருகையை எதிர்நோக்கினாள் நிஷாந்தினி.
ஆதித்தன் உள்ளே வந்ததுமே சமர்ஜித்தை பார்த்துவிட்டான். அடுத்ததாக நிஷாவின் இடையை கட்டிக்கொண்டிருந்த சம்ருதாவை.
மூச்சை உள்ளடக்கியபடி தொண்டையில் நீர் வற்ற கணவனை பார்த்து நின்றவள் கோலம் ஆதித்தனை வெகுவாய் அசைத்தது.
எத்தனை பரிதவிப்பு? யாசகம் தாங்கிய பார்வையை அவனிடம் அவள் தந்திருக்க அது என்னவென புரியாதவனல்லவே.
‘என்னடி இப்படி பார்த்து வைக்கிற?’ என உள்ளுக்குள் அவளை கடிந்த நொடி சமர்ஜித்தை பார்த்து,
“வாங்க சமர்…” என்றான் ஆதித்தன்.
“எப்படி இருக்கீங்க ஆதித்ய… ஷ்,,, ஆதித்தன்…” என்று புன்னகைத்தபடி இருக்கையில் அமர்ந்தான் சமர்ஜித்.
ஆதித்தனின் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் அவனின் வரவேற்பு ஆசுவாசத்தை தந்துவிட்டது நிஷாந்தினிக்கு.
“சம்ரு…” என மகளை அழைத்த சமர் மகள் வரவும் தன்னருகே அமர வைக்க,