“ஹாய்…” என அமர்த்தலாக சொல்லியவன் இதழ்களுக்குள் சிறு புன்னகை.
சட்டென மனைவியை திரும்பி பார்க்க இன்னும் அதே இடத்தில் தான் நின்றிருந்தாள் நிஷாந்தினி.
“இங்க வா நிஷா. நீ பேசிட்டிரு. இப்ப வரேன்…” என எழுந்து உள்ளே சென்றுவிட்டான் ஆதித்தன்.
சமர்ஜித் முதல்நாள் இரவில் ஆதித்தனுடைய விடுதியை தான் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தான்.
அதனை ஆதித்தன் அன்று காலையில் தான் கவனித்தான். அவன் தான் என பெயரை கொண்டே கண்டுகொண்டவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
பணியில் இருப்பவர்களிடம் அவர்களை இன்னும் நன்றாக கவனித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அடுத்த கிளைக்கு சென்றுவிட்டான்.
ஆனால் சமர்ஜித் தன் வீட்டிற்கே வருவான் என்பதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ஆதித்தன்.
தான் அழைக்காமலே வந்து நின்று புன்னகைத்தவனை தவிர்க்க முடியாமல், அவர்களுக்காக தன்னிடம் இப்போதும் எதுவும் பேசாத மனைவியின் தவிப்பை காணமாட்டாமல் வந்துவிட்டான்.
“என்ன ஆதி இங்க வந்துட்ட?…” என சசிகலாவும் உள்ளே வந்தார் மகனை தேடி.
“சும்மா தான்…” என சொல்லியவன் மௌனமாய் ஜன்னல் பக்கம் நின்றிருந்தான்.
“விட்டுடலாம் ஆதி. அதையே நினைச்சு உறவுகளை ஏன் தள்ளி வைக்கனும்?…” என கேட்க,
“நான் யாரையும் தள்ளி வைக்கலை. விலகி நிக்கறேன். அவ்வளோ தான்…” என இறுக்கமாகவே பதில் கூற,
“அவங்க அவங்களோட முடிவை வாழ்க்கையை தேடிக்கிட்டாங்க. தாராளமா செய்யட்டும். அதுக்கு பின்னால அந்த குடும்பம் என்னவாகும்? அந்த குடும்பத்து மனுஷங்க என்னவாவாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சாங்களா? சம்பந்தமே இல்லாம நாம அசிங்கப்பட்டோம் தானே?…”
“இப்பவரை நிஷாவை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்குள்ள ஒரு ஓரம் இருந்துட்டே தான் இருக்கு. நாங்க சரியா வாழப்போய் அதை விடுன்னு சொல்றீங்க. அந்த வாழ்க்கை சரியா அமையாமலே போயிருந்தா?…”
“ஊரை கூட்டி அத்தனை பேரோட நாம போய் நின்னோமே? இன்னைக்கு வரை எனக்கு முன்னாடி பல்லை காட்டி பேசறவன் எனக்கு பின்னாடி இவனுக்கு நிச்சயம் பண்ணினவ வேண்டாம்ன்னு ஓடிட்டா, அதான் வேற வழியில்லாம தங்கச்சியை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்னு பேசறாங்க….”
“எல்லாம் எனக்கு தெரியாம இல்லை. ஆனாலும் அமைதியா போக தானே செய்யறோம். ஒரு விஷயம் நடக்கறதுக்கு முன்னாடி யாருமே யோசிக்கிறதில்லை. நடந்த பின்னாடி சரி ஆனது ஆச்சுன்னு சொல்லிடறீங்க….” என என்றுமில்லாமல் அன்று தாயிடம் தகித்தான் ஆதித்தன்.
“ஆதி சமர் வெளில இருக்கார். என்ன பேசற நீ?…” என அவனுக்கு கேட்டுவிடுமோ என பயந்தார் சசிகலா.
“என்னால இப்பவும் அதை ஏத்துக்க முடியாது. இதை ஏமாற்றத்தால சொல்லலை. எனக்குன்றதுக்காகவும் நான் பேசலை. இதை மரியாதை சம்பந்தப்பட்டதா நான் பார்க்கறேன். ஈஸியா சொல்லிருவாங்க இன்னைக்கு என்ன? நல்லாத்தான இருக்கீங்க? என்ன குறைன்னு…”
“நான் நிஷாவை கல்யாணம் செய்யாம வேற என்ன நடந்திருந்தாலும் இந்த வார்த்தைகள் அவளையும், அவ குடும்பத்தையும் தொடரும். எவ்வளவு தான் சிறப்பா வாழ்ந்தாலும் அந்த பெயரை மறையவே விடமாட்டாங்க சுத்தி இருக்கறவங்க….” என்றவன் பேச்சில் சசிகலா மௌனமாகி போனார்.
“இப்ப எதுக்காக தேவையில்லாம இதை ஆரம்பிச்சீங்க? அதான் சமர் வந்துட்டார். வாங்கன்னு கேட்டுட்டேன்….” என அவரிடம் கேட்க,
“இல்ல ஆதி, நிஷாவுக்காகவாச்சும் நிரஞ்சனியை வர சொல்லலாம்….” என்றவருக்கு மனது கேட்கவில்லை.
“புள்ளத்தாச்சி பொண்ணு. உனக்காக அவ இப்பவரை அவங்களை வாங்கன்னு இங்க அழைக்கலை. அவளுக்காக நீ யோசிக்கனும். நிஷாவுக்கும் மனசுக்குள்ள நிறைய ஆசை இருக்கும். ஆனா உன்னை புரிஞ்சு உனக்கு அவங்களை புடிக்கலைன்னு அவளும் தள்ளி நிக்கிறா…”
சசிகலா சொல்லவும் ஆதித்தனுக்கும் புரியத்தான் செய்தது. தாங்கள் அழைக்கவில்லை என்றாலும் நிஷாவை பார்க்க வந்திருக்கின்றனர்.
பெருமூச்சுடன் அவரை பார்த்தவன் அமைதியாக வெளியே வர சமர் நிரஞ்சனியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“ஓகேடா நான் கூப்பிடறேன், நீ சாப்பிடு….” என சொல்லி வைத்தவன் ஆதியை பார்த்து புன்னகைக்க ஆதித்தனுக்கும் சங்கடம்.
சட்டென அவனால் இலகுவாய் பேசிவிடமுடியவில்லை சமரிடம். அதுவும் நிரஞ்சனியை அழைத்துவர சொல்லி எப்படி சொல்ல என யோசித்து அமர்ந்திருந்தான்.
“அப்பறம் ஒரு விஷயம், அப்ளிகேஷன்னு கூட எடுத்துக்கலாம். ஈவ்னிங் நிஷாவை கோவிலுக்கு கூட்டிட்டு வர முடியுமா? இல்லைன்னா இப்ப நாங்க தங்கி இருக்கற உங்க லாட்ஜ்க்கு கூட கூட்டிட்டு வாங்க. உங்க ரூமையே வச்சு பார்த்துட்டு போறோம்….” என்ற சமர்ஜித்,
“நிரஞ்சனி நிஷாவை பார்க்கனும்ன்னு ரொம்ப பிரியப்படறா. நிஷா சென்னை வந்திருந்தா அங்கயே கூட பார்த்திருப்பா. உங்களுக்கு இவ்வளோ தூரம் வந்து சிரமம் குடுத்திருக்கமாட்டோம்…” என சொல்லி முடிக்க ஆதித்தனுக்குமே கஷ்டமாகி போனது.
நிஷாவும் வந்துவிட்டாள் பிள்ளைகளுடன். முகமெல்லாம் அவ்வளவு சந்தோஷம் பூத்திருந்தது.
தங்களிடம் வந்துகொண்டிருப்பவளையே கண் எடுக்காது பார்த்தவன் பார்வை அந்த புன்னகையில் உறைந்துவிட்டது.
“ப்ளே ரூம் ஆஸம் டாடி…” என்றாள் சம்ருதா.
“ஓஹ், வாவ். அப்போ அதை நீ சித்தப்பாக்கிட்ட சொல்லு…” என சொல்ல,
“ஆனா ரூம் டிஸைன் பண்ணினது நிஷா சித்தியாம். நான் சொல்லிட்டேன் சித்திட்ட….” என்ற சம்ருவை பார்த்து லேசாய் முறைத்தான் ஆதித்தன்.
“என்ன சித்தப்பா?…” என அவனின் பார்வையை கண்டு நேரடியாக சம்ரு கேட்க,
“ஐடியா என்னோடது…” என சொல்லி அவளிடம் மல்லுக்கு நிற்பவனை கண்டு நிஷா மட்டுமல்ல சசிகலாவும், சமருமே சிரித்துவிட்டனர்.
“குட் ஐடியா சித்தப்பா…” என பெரிய பெண் போல சம்ருதா சொல்ல,
“ஹ்ம்ம்…” என மெல்லிய சிரிப்பை உதிர்த்தவன் சிலையாய் நின்றிருந்த நிஷாவிடம் வந்தான்.
“உன் அக்காவுக்கு கால் பண்ணி வீட்டுக்கு கூப்பிடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…” என்றவன்,
“சமர் இங்க இருங்க…” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான் வேகமாக.
இதற்கு மேல் எல்லாம் அவனால் நின்று பேசி சிரிக்க சுத்தமாக முடியாது. இதை சொல்வதற்குள் அவன் படாதபாடுபட்டு போனான்.
“மாமா…” என்ற நிஷாவின் கண்களில் அவ்வளவு சந்தோஷம்.
“நான் போய் நிரஞ்சனியை அழைச்சிட்டு வரேன். சொல்லாம கூட்டிட்டு வரேன். சர்ப்ரைஸ்…” என புன்னகையுடன் சொல்லி கிளம்பினான் சமர்.
பிள்ளைகள் இருவரும் மீண்டும் விளையாட செல்ல சசிகலா அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்க செல்ல நிஷா மாடிக்கு சென்றாள்.
ஆதித்தன் போட்டிருந்த சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டி வேறொன்றை எடுத்து பிரிக்க அவனை பின்னோடு அணைத்துக்கொண்டாள் நிஷாந்தினி.
“ப்ச், வெளில கிளம்பனும். வேலை இருக்கு நிஷா. அந்த ஷர்ட்ல டஸ்ட்…” என அவளை விலக்கினான்.
“கிளம்புங்க. நான் ஒன்னும் இருக்க சொல்லலை…” என அவனை போலவே அவளும் சொல்ல,
“எதுக்குடி அழுத? பேசாம போயிரு. செம்ம காண்டுல இருக்கேன்…” என சொல்லியவன் பேச்சிற்கு எதிராக அவனின் கைகள் மனைவியை தன் முன் கொண்டுவந்து அணைத்துக்கொண்டது.
“இப்பவும் கூட அழ தோணுது. சந்தோஷமா. மனசுல பாரமே இல்லாம. நிம்மதியா…” என சொல்லியவள் தானும் கைகளால் தன் அணைப்பை வலிமையாக்க,
“நிஷா என்னடி பன்ற? விடு. நான் கிளம்பறேன்…”
“கண்டிப்பா இருக்க சொல்ல மாட்டேன். எப்போ உங்களுக்கு தோணுதோ அப்போ பேசுங்க. அப்போ சேர்ந்து இருங்க….” என்றாள் கண்ணில் நீர் நிறைய, இதழ்களில் புன்னகை நிறைய, முகம் மகிழ்ச்சியில் நிறைய.
நிஷாந்தினியின் முகத்தை கையில் தாங்கிய ஆதித்தன் மனதும் நிறைந்து தான் இருந்தது.
“இதெல்லாம் உனக்காக ஒன்னும் இல்லை…” என சிரிப்போடு அவன் சொல்ல,
“தேவையும் இல்லை. எனக்காகன்னு உங்களை யார் எதுவும் செய்ய சொன்னா?…” என்று கண் சிமிட்டினாள் நிஷா.
“இதெல்லாம் தானா தோணனும். உங்களுக்கா தோணனும். சொல்லியா வரனும்?…” என்றும் கேட்க,
“நீ சொல்லிட்டாலும்…” ஆதித்தன் இழுக்க,
“கழுதையில…” என சொல்லி நிஷா சிரித்துவிட அதனை மொத்தமாய் தன்னிதழுக்குள் அள்ளிக்கொண்டான் ஆதித்தன்.