“உங்க மேலையும், என் மேலையும் விஷயத்தை தெரிஞ்சும் சொல்லாம மறைச்ச காரணத்துக்காக மட்டும் தான் அவரோட கோபம். அதுவும் அவர் மரியாதை சம்பந்தப்பட்டது. உங்களுக்கும் மரியாதை சம்பந்தப்பட்டது தானே? அதுக்காக தான் அவ்வளோ பேசினார். இப்பவும் அந்த விஷயத்தால தான் ஒதுங்கி இருக்கார்….”
“ஒரு மனுஷனுக்கு அந்தளவுக்கு கூடவா ரோஷமும், தன்மானமும் இருக்க கூடாதுன்னு சொல்றீங்க? என்ன நடந்தாலும் சரின்னு போகனுமா? ஏன் போகனும்? என்ன அவசியம்? அப்பாவும் தான் ஒருவருஷம் அக்காவோட பேசாம இருந்தார். நீங்க சேர்ந்துட்டா நாங்களும் அப்படியே போயிடனுமா?…”
“அன்னைக்கு எனக்கு பிடிச்சிருக்கா, சம்மதமா, கல்யாணத்துக்கு அப்ப நான் தயாரான்னு ஏதாவது கேட்டிருப்பீங்களா? உங்க கௌரவத்தை காப்பாத்த நான் வேணும். சொல்லாம போன அக்கா உங்களுக்கு எப்படி சரியா தெரியறா? அப்போ அன்னைக்கு நடந்த அவமானம் எல்லாம் என் புருஷனுக்கு மட்டும் தானா?…”
“என்னை நீங்க என் புருஷனுக்கு கட்டி வைக்கும் போது மட்டும் நல்லவரா தெரிஞ்சார். திரும்ப உங்க பெரிய பொண்ணு வரவும் ஒதுங்கி போற இவர் உங்களுக்கு கெட்டவரா போய்ட்டாரா? எங்க யாரை மதிக்கனும்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும்…” என்றவள் குரல் உடைந்தது இப்போது.
“அவரோட இத்தனை வருஷம் வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படி ஒரு எண்ணமும், சந்தேகமும் எனக்கு இப்ப வரைக்கும் ஒரு செகெண்ட் கூட வந்ததில்லை தெரியுமா? எப்படி சொல்லிட்டீங்க நீங்க?…” என்றவள் நிதானமெல்லாம் வடிந்து அழுகை வெடித்துவிட்டது.
“நீங்க இப்படி நினைச்சிருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லைம்மா. இனிமே நீங்க சாதாரணமா என் புருஷனை பார்த்தா கூட இதை நினைச்சு தான் பார்க்கறீங்களோன்னு எனக்கு தோணிரும். இந்த பேச்சை விட்டுடுங்க…” என சொல்லிய நிஷா,
“எனக்கு நீங்க பண்ணினதுலையே மிகப்பெரிய நல்லது எது தெரியுமா? இவரை கல்யாணம் செஞ்சு வச்சது தான். உங்க பார்வைக்காக எல்லாம் வெளிப்படையா எங்க சந்தோஷத்தை காமிக்க முடியாது. எங்க வாழ்க்கை எப்படி இருக்குன்னு எனக்கு தெரியும்….”
“இனிமே எதுவும் பேச வேண்டாம். என் கூட பேசவே வேண்டாம். ரொம்ப பெரிய சந்தோஷத்தை இன்னைக்கு எனக்கு குடுத்துட்டீங்க. போதும் இதுவே. இதை வேற யார்க்கிட்டயும் சொல்லி அசிங்கப்படுத்தாம இருந்தா போதும்…” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அப்படி ஒரு அழுகை. கதவை அடைத்துக்கொண்டு ஓவென கத்தி அழுதவளால் தாள முடியவில்லை.
இது என்ன இப்படி எண்ணம்? என நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் எரிந்தது.
தங்களின் வாழ்க்கையின் ஆரம்பம் வேண்டுமென்றால் கட்டாயத்தின் பெயரில் இருக்கலாம்.
ஆனால் ஒருநாளும் ஆதித்தன் அவளையன்றிய ஒரு எண்ணம் கொண்டவன் என அவளுக்கு தோன்றியதே இல்லை.
அவளுக்கானவன் என அதற்குமே அலுத்துக்கொள்பவள் தான். தன்னிடம் அவன் சாதித்துக்கொண்டதன் பெயரில் இன்னுமே வருத்தமும், கோபமும் உள்ளது தான்.
அதற்கென இப்படி என்றுமே யோசித்ததில்லை. தோன்றியதும் இல்லை. கணவனின் பார்வையும், பேச்சும் என்றைக்கும் அவளுக்கானதாக மட்டுமே இருந்திருக்கின்றது.
அனுராதா உடனே மகளுக்கு அழைக்க எதையும் அவள் ஏற்கவில்லை. அடுத்ததாய் சுரேஷ் அழைத்தார்.
அதையுமே அவள் எடுக்கவில்லை. அவ்வளவு ஆதங்கம். அத்தனை ஆவேசம். இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
அடுத்தவர்கள் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தன்னை பெற்றவரே சொல்லுகையில்?
ஆதித்தனை எப்படி ஒரு எண்ணத்துடன் பார்த்துவிட்டனர் என்பது அவனின் மனைவியாய் அவளால் தாள முடியவில்லை.
திருமணத்தின் முந்தைய நாள் தன்னிடம் அவன் பேசியதை எண்ணி பார்த்தவளுக்கு இன்னும் அழுகையில் உதடு பிதுங்கியது.
திருமணம் செய்ய போகிறவளின் தங்கையாக இருக்கும் பொழுதே விளையாட்டு பேச்சை கூட பொறுத்துக்கொள்ளாதவன் மேல் என்ன விதமான பார்வை இது?
அனுராதா மீண்டும் அழைக்க அதனை துடித்துவிட்டு ஆதித்தனுக்கு அழைத்தாள் நிஷா.
இரண்டாம் அழைப்பிலேயே ஆதித்தன் எடுத்துவிட்டான். காற்றின் சத்தம் அதிகமாய் அலைபாய்ந்தது அவன் குரல் கேட்காமல்.
“எங்க இருக்கீங்க?…” என்றவள் அழுகை குரலே அவனை அடைய,
“நிஷா என்ன சொல்ற? இரு…” என காரின் கண்ணாடியை ஏற்றிவிட்டு பேசினான்.
“இப்ப சொல்லு. என்ன இந்த நேரம் கால் பண்ணியிருக்க?…” என இலகுவாய் கேட்க பதில் சொல்வதற்கு முன் அழுகை தான் அவனை சென்றடைந்தது.
“நிஷா, நிஷா என்னாச்சு? உடம்பு முடியலயா?…” என பதறியவன்,
“அழாம பேசு, கால் மணிநேரத்துல வீட்டுக்கு வந்திருவேன். மதுரை போற வேலையாகல. தென்காசிலருந்து வந்துட்டிருக்கேன். இப்ப வந்திருவேன். என்ன பண்ணுது நிஷா? அம்மா எங்க?…” என கேட்க,
“நிஷா, என்னடி? எதுவானாலும் வாயை திறந்து சொல்லு. சண்டை போடு. இப்படி பண்ணாத? பக்குன்னு இருக்கு…” என பாவமாய் கேட்டும் அவளுக்கு சொல்ல முடியவில்லை.
இந்த விஷயம் தெரிந்தால் மொத்தமாய் முறித்துக்கொள்வான். இல்லை தெரிந்தும் தனக்காக அதனை சகித்து உள்ளுக்குள் மருகுவான்.
அதை நிஷா விரும்பவில்லை. அப்படியே தனக்குள்ளேயே அடைந்துவிடட்டும் என நினைத்தவளுக்கு அந்த நிமிட மனநிலையை மாற்ற முடியவில்லை.
ஆதித்தனை நிமிர்ந்து பார்த்தவள் விழிகளின் பரிதவிப்பில் அவன் தான் பெரிதும் தவித்தும் போனான்.
“என்ன நிஷா?…” என்றவனிடம்,
“என்ன வேணும்ன்னு கேளுங்க…” என்றாள் தொண்டை கட்டிவிட்ட குரலுடன்.
“என்ன?…” என விழிகள் தெறிக்க ஆதித்தன் பார்க்க,
“என்ன என்ன? கேளுங்க. நான் பதில் சொல்லனும்…” என்றாள் அதட்டலாக.
“என்னடி பதில் சொல்லுவ? வயித்துல நாலு மாச குழந்தை இருக்கு. விளையாடாத. டாக்டர் பேசுவாங்க…” என்றவன் தடுமாற்றத்திலும், முகம் போன போக்கிலும் சட்டென நிஷாவின் முகத்தில் மெல்லிய புன்னகை அருங்கியது.
“என் போன்…” என கேட்டு அவனிடமிருந்து வாங்கினாள்.
எப்போதும் அவன் செய்வதை இன்று அவள் செய்தாள். தான் பேசி அவன் அனுப்பும் அவளின் குரலை அவனுக்கு நிஷா அனுப்ப,
“நீ ஒரு மார்க்கமா தான் இருக்க. அழற, இப்ப ஏடாகூடமா பேசற. இதை அனுப்பற. என்னடி உன் கணக்கு?…” என அவளின் கன்னத்தை பிடித்து வருடினான் சிரிப்புடன்.
“இதுக்கு மேல என்ன சொல்ல? என்ன வேணும்ன்னு கேட்கமாட்டேன்னு இருக்கீங்க?…” என்று மூக்கு விடைக்க அவள் கேட்கவும் தன்னிலிருந்து பிரித்து அவளை அமர வைத்தவன் தானும் சம்மணமிட்டு அவள் முன் அமர்ந்தான்.
“சரி கேட்டு தொலைக்கறேன். என்னடி வேணும்? சொல்லேன்…” என அவளின் பிடிவாதத்தில் பல்லை கடித்துக்கொண்டு கேட்க,
“நீங்க தான்…” என்றாள் நிஷா அன்று முதல்முதலில் அவன் கேட்டதை போலவே.
“வா…” என தன் மீது சாய்த்துக்கொண்டவன் அரவணைப்பில் அவன் மார்பில் முகம் பதித்தவளிடம் அதற்கு மேல் கேட்க தோன்றவில்லை.
சொல்ல வேண்டுமென்றால் அவளே சொல்லட்டும் என நினைத்தவன் அவளுக்காக மென்மையாய் அணைத்துக்கொண்டான்.
நிஷாவின் கைகள் அவனை அங்குமிங்கும் நகர விடவில்லை. அவனின் அணைப்பிலேயே தான் சுருண்டுக்கிடந்தாள்.
மெல்ல அவனின் கைகளுக்குள் கண்ணயர்ந்தவளை விலக்கிவிட்டு கூட எழும்பாமல் இருந்தவன் விழிகள் சத்தமில்லாமல் அழைப்பை தாங்கி வந்த நிஷாவின் கைபேசி முகப்பில் பதிந்தது.