“அதெப்படி விட முடியும்? இவ சொல்லியிருந்தா இது தேவையா? எனக்கு தானா கண்ணு போகுது? எனக்கும் கஷ்டம். இவள பாருங்க கொஞ்சமும் அலட்டிக்காம இருக்கறதை…”
மிருணாவின் பேச்சில் இதயா முகம் லேசாய் மாறியது. இதை கவனிக்காமல் நளினி மிருணாவை சமாதானம் செய்துகொண்டே இருந்தாள்.
“அவ என்ன வேணும்னா சொல்லாம இருந்தா? ஏதோ சூழ்நிலை? இதை எல்லாம நாம தான் புரிஞ்சுக்கனும். சொல்லலை சொல்லலைன்னு அதையே பிடிச்சுட்டு நின்னா…”
“போங்க நளினிக்கா, எனக்கு கஷ்டமா இருக்குதுல. அதை பார்க்கலையே நீங்க?…”
“அச்சோ மிருணா, நீ இதை நினைச்சுட்டே இருந்தா தான் கஷ்டம். இனி பூவி புருஷனா அவரை பாரு. அவ்வளோ தான? சும்மா சும்மா இதையே சொல்லி நடந்ததை போய் மாத்தவா முடியும்? இனி பூவி ஹஸ்பண்ட் அவ்வளோ தான்…”
“போங்க நளினிக்கா. ஆனாலும்…”
“இந்த ஆனாலும் விடேன். இதை நினைச்சா உன்னால பூவிட்ட எப்பவும் போல பேச முடியுமா?….”
“ஏன் பேசாம? இந்தா பேசறேன்ல…”
“அதுசரி இப்படியே சண்டை போட்டுட்டு? அதான் சாரே அன்னைக்கு சொன்னாரே என்ன காரணம்ன்னு. இதையெலாம் ஒருத்தர் சொல்லி சொல்லியா புரிஞ்சுக்க முடியும்?…”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம், அவக்கிட்ட சண்டைக்கு நிக்காத இனி. இங்க வரவும் தானே கலெக்ட்டரை தெரியும்? அதுக்கு முன்னாடில இருந்தே பூவியை நமக்கு தெரியும்ல…”
“ஆமா, ஆமா…”
“அப்ப அதை விட்டுடு. நாம நம்ம வேலையை பார்ப்போம்…”
இப்படி நளினியும், மிருணாவுமாக பேசிக்கொண்டு இருக்க இதயாவின் ம்னாதிலோ அந்த இடத்தில் தன்னை ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சரியே சரியாகவும் தவறாகவும் தோன்ற வெகுவாய் குழம்பிய மனோபாவம் அவளிடத்தில்.
“பூவி, சிசி…” என மிருணா இதயாவை தட்ட,
“ஹான்…” என்று நிமிர்ந்து பார்த்தாள்.
“உங்களை இல்லம்மா, இந்த பொண்ணை தான் பார்க்க வந்தேன்….” என்று மிருணாவிடம் திரும்பியவர் வந்த விஷயத்தை கேட்க மிருணா சலிப்புடன் அவருக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
வழக்கமாக நடப்பவை தான் என்றாலும் அகிலனின் அந்த மரியாதையும், மிருணாவிடம் எப்போதும் போல பேசிய அந்த அதிகார தோரணையுமே இதயாவை பாதித்தது.
இத்தனை நாள் வரை இப்படித்தானே தன்னையும் ‘அது என்ன? இது எங்கே? இன்னுமா வேலை ஆகவில்லை? எதற்கு இங்கே வந்தீர்கள்?’ என்றெல்லாம் பேசி சென்றார் இவர் என நினைத்து பார்த்தாள்.
மிருணாவிடம் அகிலன் பேசி செல்லவுமே ஒரு தோள் குலுக்கலுடன் அதை அலட்சியம் செய்த மிருணா,
“வேற வேலை இல்லை. பத்துதடவை சொன்னலும் திரும்ப திரும்ப வந்து கேட்கிறது…” என்று வழக்கம் போலவே தோழிகளிடம் சொல்ல,
“பார்த்தியா மிருணா, நம்ம பூவிட்ட பம்மிட்டு போனதை. அம்மாவாம்…” என்று நளினியும் கேலி பேச,
“பூவிக்கென்ன? இனி இங்க ராஜபோக உபசரிப்பு தான். மேடம் கலெட்டரம்மா இப்போ…” என்று மிருணாவும் கிண்டலாக அதில் கலகலக்க இதயாவின் மனதோ கண்ணன் முதன் முதலில் ‘கலெக்ட்டரம்மா’ என தன்னை அழைத்தது ஞாபகம் வந்தது.
அன்றைய நாள் என்னவோ இதயாவை இயல்பாக இருக்கவே விடவில்லை. ஒன்று மாற்றி ஒன்று என ஏதேதோ ஞாபகங்கள், ஏக்கங்கள், வருத்தங்கள் என பலவித உணர்வின் கலவையென அவள் அமர்ந்திருந்தாள்.
அத்தனையிலும் புரிந்த ஒன்று, இனி இந்த அலுவலகத்தில் முன்னை போல தன்னால் சகஜமாக இருக்க முடியாது என்பது தான்.
தோழிகள் கூட விளையாட்டிற்கு என்றாலும் அந்த பாராபட்சத்தை சிரிப்போடு சுட்டிக்காட்ட அங்கிருக்கவும், வேலை செய்யவுமே பிடிக்கவில்லை இதயாவிற்கு.
அன்று தான் விடுமுறை முடிந்து வந்திருப்பதால் உடனே பர்மிஷன் போட்டு கிளம்பவும் முடியாமல் போக தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் அவள்.
“தலை வலிக்குதா பூவி?…” என கேட்கும் பொழுதே பியூன் ஓடி வந்து,
“மேடம் காபியா? டீயா?…” என வந்து நின்றான் உடனே.
அத்தனை வருடத்தில் அவனிடம் கேண்டீனில் டீ வாங்கி வர சொல்லும் போது அசால்ட்டாகவும், அத்தனை தாமதமாகவும் சென்று வருபவன் இன்று கேட்காமலே வந்து நிற்க அத்தனைபேரையும் கத்தவேண்டும் போல இருந்தது.
“உன்னை கேட்டேனா?…” என ப்யூனை முறைக்க,
“இல்ல, தலையை பிடிச்சுட்டு…”
“உன் வேலைய பாரு. போ…” என்று அதட்டி அனுப்பிவிட அத்தனைபேரும் அவளையே திரும்பி பார்க்க படபடவென ஆனது.
“பூவி, என்னாச்சு?…” என நளினி கேட்க,
“ஒண்ணுமில்லை நளினிக்கா…”என்றாள் மெல்லிய குரலில்.
“பூவி…” என மிருணாவும் அழைக்க,
“மிருணா, ஒன்னும் பேசவேண்டாம். அவ ஏதோ டென்ஷன்ல இருக்கா போல?….” என நளினி சொல்ல,
“நான் சாரை பார்த்ததுக்கே டென்ஷன் ஆகலை. இதுக்கா ஆக போறா? பாருங்க முகம் வாடி இருக்கு புள்ளைக்கு. ஒருவாரம் லீவ்ல ஜாலியா சாரோட இருந்துட்டு இப்போ ஆபீஸ் வரவும் மேடம்க்கு வெறுப்பா இருக்கு போல?…” என்று கிண்டல் வேறு பேச இதயா மௌனமாக இருந்தாள்.
“சரி விடு, அவ வேலையை பார்க்கட்டும் திரும்பி சிசி, வந்த நம்மளைத்தான் பேசுவார்…” என்று சொல்ல இன்னுமே குத்துவதை போல இருந்தது.
லேசாய் தலை சாய்த்தபடி ஒரு பைலை எடுத்து பார்த்துக்கொண்டு அவள் இருக்க மொபைல் சத்தம் எழுப்பியது. வாட்ஸ் ஆப் மெசேஜ். அனுப்பியிருந்தது கண்ணனே தான்.
“ஹேய் ஹார்ட்பீட், என்ன பன்ற?…” என கேட்டிருந்தான் அவன்.
“பார்த்தா எப்படி தெரியுது?…” என்று சூடாய் இவள் திருப்பி பதில் கொடுக்க,
“இங்க இருந்து பார்த்தா நீ தெரியலை. அதான் மெசேஜ் பன்றேன்….” என கிண்டலாய் கண்களில் இதயம் சுமந்த ஸ்மைலியை அனுப்பி வைக்க இன்னும் கடுப்பாகி போனாள்.
“ஆக மொத்தம் இங்க வேலை பார்க்கனும்னு எண்ணம் இல்லை? அப்படித்தானே?…” என்று படபடவென டைப் செய்து அனுப்பியவள்,
“ஆளாளுக்கு என்னையே பார்க்கறாங்க. உங்க பி.ஏ என்னன்னா என்னை அம்மான்னுட்டு போறார்? நான் என்ன அம்மாவா அவருக்கு? நான் வேலையே பார்க்க வேண்டாமா இங்கன்னு சொல்லி கிண்டல் பன்றாங்க. என்னால இங்க இருக்கவே முடியலை….”
வரிசையாய் அவள் அனுப்ப அனுப்ப பார்த்தபடி இருந்தவனுக்கும் அவளின் நிலை புரிந்தது.
ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது இப்படி எல்லாம் நடக்கும் தான். இதை எல்லாம் கடந்து தான் வரவேண்டும். அதை நினைத்து தானே அவளை வேலையை விட சொல்லி சொன்னது.
“இதயா, ரிலாக்ஸ். நீ காலையில இருந்தே டென்ஷனா இருக்க. இவ்வளோ கோபமும், எரிச்சலும் வேண்டாம். கொஞ்சம் ரிலாக்ஸா இரு. உன்னால ஹேண்டில் பண்ண முடியும்…”
“இல்லை, முடியாது. என்னை விடுங்க. எனக்கு வேற எங்கியாச்சும் ட்ரான்ஸ்பர்க்கு ஏற்பாடு பண்ணுங்க கண்ணன். ப்ளீஸ்…” என்று அனுப்பினாள்.
அடுத்து அவனிடத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை. சில நொடி ஆன்லைனில் இருந்தவன் ஆஃப்லைன் சென்றுவிட்டதை காட்ட இதயாவும் போனை வைத்துவிட்டு தண்ணீரை எடுத்து குடித்தாள்.
“என்ன பூவி? போன்ல ரொமான்ஸா? நீ நடத்து. உனக்கென்னம்மா?…” என்று மிருணா கண்ணடித்து கேலியை சொல்ல,
“கொன்னுடுவேன். வேலையை பாரு…” என்று இதயா மிரட்டி வைத்தாள்.
“பாருங்க நளினிக்கா. கலெக்ட்டரம்மா பார்முக்கு வந்துட்டாங்க. இனி நாம சரியா வேலை பார்க்கலைன்னா சிசி, கலெக்டர் சாரை விட இவ மிரட்டுவா போல?…” என்று அப்போதும் மிருணா பேச நளினிக்கு இதயாவின் முகமே எதையோ உணர்த்த,
“வாயை மூடிட்டு வேலையை பாரு…” என அதட்டினாள்.
கண்ணனுக்கு இதயா கேட்டதில் கோபம் எல்லாம் இல்லை. இப்போது பதில் பேசினால் அதை கொண்டு சண்டையாகவும் கூடும் என்று அமைதியாக இருந்துகொண்டான்.
இருக்கும் வேலையில் இது வேறு அவனை லேசாய் வருத்த அதை எல்லாம் ஒதுக்கி வைத்தவனாக பணியில் மூழ்கி போனான்.
ஏற்கனவே தலைக்கு மேல் அவனுக்கு தலைவேதனை ஆளுங்கட்சி செய்யும் பிரஷர் வேறு. சில விஷயங்கள் அவனை நிரம்பே சோதித்தது.
உடனே ஆக்ஷன் எடுத்துவிடாமல் அதனை நிதானமாகவே கையாள நினைத்தான். அதனை கொண்டு பொறுமையா இருக்க இங்கே வீட்டிலும் இப்படி ஒரு அலைகழிப்பு. அதை எல்லாம் பணியில் கொண்டுவர முடியாதே?
மாலை அனைவரும் கிளம்ப இதயாவிடம் இரு என்றும் சொல்லவில்லை. செல் என்றும் சொல்லவில்லை. அவனுக்கு உண்மையில் ஞாபகமும் இல்லை.
ஆனால் அவள் இருந்தாள். அவனுக்காக காத்திருந்தாள். நிச்சயம் தன் மீது கோபமாக இருப்பான் என்று தெரியும்.
வீம்புக்கு கிளம்பிவிட ஒரு மனது நினைத்தாலும் முடியவில்லை. எப்போதுமே அவனுக்காக பார்ப்பதே தன் வேலையாக இருக்கிறதே என்ற கழிவிரக்கம் வேறு அவளை ஆட்டிப்படைத்தது.
தனக்காக அவன் நிற்க போவதில்லை என்று தெரிந்து இப்படி இருக்கிறோமே என்று தன்னை குறித்தே நிந்தித்தபடி இருந்தவள் ஆதரவிற்கு கூட ஆளில்லாதை போல தவித்து போனாள். தலை வேறு பாரமாக இருந்தது.
கிளம்பும் பொழுதும் மிருணா சும்மா இல்லாமல் அப்போதும் இதயாவை கிண்டல் செய்துவிட்டே கிளம்பினாள்.
“இனி பூவிக்கு சைரன் வச்ச வண்டிதான். சுத்திலும் காவலுக்கு ஆளுங்கதான். வாழற பூவி…” என்று அவளை கட்டிபிடித்து சொல்லிவிட்டே கிளம்ப,
“அவ சும்மா ஓட்டுறா. நீ பெருசா நினைக்காத பூவி. நாங்க கிளம்பறோம்…” என்று நளினியும் சொல்லிக்கொண்டு கிளம்ப அலுவலகமே கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியானது.
அங்கேயே டேபிளில் தலைவைத்து அவள் உறங்கிவிட ஒருமணி நேரம் கழித்தே வந்தான் கண்ணன்.
“இதயா…” என்று தோள் தொட்டு அவளை எழுப்ப கண்ணை திறந்து பார்த்தவளின் முகமும் கண்களும் சிவந்து போய் இருந்தது.
“ஸாரிடா, வேலை இழுத்திருச்சு. வா கிளம்பலாம்…” என அவன் அமைதியாக பேசியதே நிம்மதி தர மெல்ல எழுந்தவளுக்கு கால்கள் மரத்து போனது.
“ப்ச்…” என்று புடவையை உதறிவிட்டு மேஜையை பிடித்து நிற்க,
“என்னாச்சு?…” என அவளின் கையை பிடித்தான்.
“விடுங்க, நானே எழுந்து வரேன்…” என்றவளுக்கு காலை எடுத்து வைக்கமுடியவில்லை.
அதனோடு இன்னும் சிலர் கிளம்பாமல் இங்கே இவர்களை பார்த்தபடி இருக்க சங்கடத்துடன் அவனை தள்ளி நிற்க வைத்தாள்.
“எல்லாரும் பார்க்கறாங்க…” என்று சொல்ல,
“இப்போ உனக்கு காலுக்கு என்னாச்சு?…”
“ரொம்ப நேரம் இப்படியே மடக்கி வச்சதால பிடிச்சுக்கிச்சு. இப்ப சரியாகிடும்…” என சொல்ல,
“சரி உட்கார்…” என அவளை அமரவைத்தவன் தண்ணீரை எடுத்து குடுத்துவிட்டு தானும் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டான்.
“என்ன இது?…” என்றவளுக்கு பேசவும் வரவில்லை.
அவன் எழுந்துகொள்ள மாட்டான் என்று தெரிந்தவள் ஐந்து நிமிடத்தில் காலை உதறி உதறி சரி செய்து எழுந்துகொண்டாள்.
“இப்போ போலாம்…” என சொல்லவும் சேர்ந்து அவளோடு காருக்கு சென்றான்.
காரில் ஏறியதும் லேசாய் கண்ணயர்ந்தவள் அப்படியே அவனின் தோளில் சாய்ந்து உறங்கிவிட விழித்த இடமோ செல்ல வேண்டியது அல்லாது வேறு ஓரிடம்.