ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 20
வந்திருக்கும் இடத்தை பார்த்திருக்கிறாள் ஏற்கனவே. ஆனாலும் புத்தியில் உரைக்கவில்லை. கண்ணுக்கு முன்னால் அந்த பங்களாவின் அழகு ஒளிரிட அங்கே தாம் எதற்கு என்று சுத்தமாய் பிடிபடவில்லை அவளுக்கு.
“இங்க எதுக்கு வந்திருக்கோம்?…” என்று கேட்க கண்களில் இன்னுமே மிச்சமிருந்தது உறக்கம்.
“முதல்ல கீழே இறங்கு சொல்றேன்…” என்று கதவை திறந்தவன் இறங்கும் முன்,
“ஓகே தானே? நல்லா தூக்கம் கலைஞ்சிருச்சா?…” என்றான்.
“ப்ச், ஹ்ம்ம். ஓகே…” என சொல்லி இதயா மறுபக்கம் இறங்கிக்கொள்ள,
“இதை சொல்லத்தான் உனக்கு மெசேஜ் பண்ணேன். நீ பேச்சை வேறெங்கையோ திருப்பி…” என கண்ணன் சலிப்புடன் சொல்லியபடி அவளுடன் நடந்தான்.
“ஸார், எல்லா வேலையும் முடிஞ்சது. எப்போ வரதுன்னு சொன்னா ஷிப்ட் பண்ண ரெடி பண்ணிடலாம்…” என அகிலன் வந்து நின்று சொல்ல,
“நீங்க கிளம்புங்க அகிலன். நாங்க பார்த்துட்டு புறப்படறோம். ஷிப்ட்டிங் எப்போன்னு என் வொய்ப்ட்ட பேசிட்டு சொல்றேன்…” என்று சொன்னான்.
“ஓகே ஸார். வரேன் மேடம்…” என கிளம்பும் போது அகிலன் இதயாவிடமும் விடைபெற தலையசைப்புடன் பதிலளித்தவள்,
“இப்போ சொல்லுங்க…” என்று மீண்டும் கண்ணனிடம் திரும்பினாள்.
“உள்ள போய் பேசுவோமா?…” என்று சொல்லிக்கொண்டே அந்த பங்களாவின் உள்ளே அவளுடன் சென்றவன்,
“இனிமே இங்க தான் நாம இருக்க போறோம்….”
“இங்கயா?…”
“உன்னை எல்லாம கவர்மென்ட் ஸ்டாப்புன்னு வெளில சொல்லாத. ஏன் உனக்கு தெரியாதா அபிஷியலா நமக்கு அலாட் பண்ணுவாங்கன்னு. இதுக்கு முன்ன இருந்த ஆபீசர் இங்க தானே இருந்தார்?…” என்றான் கடுப்புடன்.
இதயாவிற்கு அப்போதுதான் புத்திக்கே உரைத்தது. இதை எப்படி மறந்தோம்? என்றபடி புருவம் உயர்த்தி நெற்றியை பிடித்துக்கொண்டவள்,
“ஹ்ம்ம், மறந்துட்டேன். எல்லாமே மறந்து போச்சு. என்னவோ சரியில்லை…” என்றாள் மெல்லிய குரலில்.
“மறதி நல்லது தான் இதயா. சில விஷயங்களை மறக்காம வச்சிருந்தா மனசு செல்லரிச்சு போயிரும்…” என்றான் கண்ணன்.
“நீங்க முதல்லையே இங்க ஏன் வரலை?…”
“இது வேலை இருக்குதுன்னு சொன்னாங்க. அதோட எனக்கும் இன்னும் கொஞ்சம் பெட்டரா கிளீன் பண்ணினா என்னன்னு தோணுச்சு. அதான் அதுவரை கெஸ்ட்ஹவுஸ்ல இருந்தேன்…” என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் தன் இரு கைகளை கோர்த்து நெறிக்க,
“முதல்லையே சொல்லியிருந்தா அங்க என் ட்ரெஸ் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ணியிருக்க மாட்டேன்ல? இப்போ ரெண்டு வேலை?…” என சொல்லி அவனின் எதிரே வந்து நின்றாள்.
“சொல்லியிருந்தா வேலையை பார்க்காம இன்னும் எதையாச்சும் யோசிச்சு உன்னையும் படுத்தி என்னையும் ஒரு வழி ஆக்கியிருப்பியே. அதான் உனக்கும் டைம் பாஸ் ஆகனும்ல…” என்றான்அசால்ட்டாக.
“என்ன ஒரு ஏத்தம்? என்னால என் ட்ரெஸ் எதையும் திரும்ப நானே எடுத்து அடுக்க முடியாது…”
“நீ ஏன் கஷ்டப்படற? நான் பார்த்துக்கறேன். உனக்கே ட்ரெஸ் எடுத்து போட்டுவிடும் போது கப்போர்ட்ல எடுத்து அடுக்கறதா கஷ்டம். இப்போ நீங்க கலெக்ட்டரம்மா..” என்று சீண்டலாய் சொல்ல,
“எதாச்சும் பேசினீங்க?…” என்று மூக்குவிடைக்க அயர்ச்சியுடன் பேசியவளின் முகம் என்னவோ போல் இருந்தது.
“ஹேய் இதயா, என்ன இது? இதுக்கு போய் டென்ஷன் ஆகறதா?…” என்று அவளின் கை பிடித்து தன்னருகே அமர்த்திக்கொண்டவன் தன் தோளில் சாய்ந்துகொள்ள,
“என்னால முடியலை. என்னால நார்மலா இருக்க முடியலை. ஆபீஸ் எனக்கு எவ்வளவு பிடிச்ச இடம் தெரியுமா? எல்லாம் மறந்து வேலை, ப்ரெண்ட்ஸ்ன்னு ஜாலியா இருப்பேன். ஆனா இனி அப்படி இருக்க முடியாதோன்னு தோணுது…”
“இதயா டேய், நீயா இவ்வளவு டவுனா பேசறது?…” என்று அவளின் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்.
அவனை பார்த்துக்கொண்டே மெல்ல அன்று நடந்ததையும் தோழிகளின் பேச்சு, ப்யூன், அகிலன் நடந்துகொண்டது, மற்றவர்களின் பார்வை என சொல்ல சொல்ல பொறுமையாய் கேட்டுக்கொண்டவன்,
“ஓகே, என்ன பண்ணலாம்? நீயே சொல்லு…” என்றான் நிதானமாய்.
“நானென்னா? நான் என்ன சொல்ல?…”
“நீ தான் சொல்லனும். உனக்கு இப்போ எது கம்பர்ட்டபிள் அப்டிங்கறதை நீ தான் சொல்லனும் இதயா…” என்றான் முடிவாக.
“தெரியலை. இங்க இருக்க வேண்டாம்னும் தோணுது. அது தப்புன்னும் தோணுது. அப்பறம்…” என்றவள் அவனின் பார்வையில் பேச்சை நிறுத்த,
“பரவாயில்ல சொல்லு…” என்றான்.
“இல்லை வேண்டாம்…” என சொல்லவந்தவற்றை அப்படியே விழுங்கிக்கொண்டாள்.
“ஓகே, வேண்டாம். இப்போ அதை விடு. போக போக சரியாகிரும். மத்தவங்களுக்காக நம்ம முடிவை எடுக்க கூடாது. இது உன் பாலிசியாச்சே? யாரோ பார்க்காங்க, பேசறாங்கன்னு நீயும் நினைக்க ஆரம்பிக்கபோறியா?…”
“அப்படி இல்லை…” என்றவள் குரல் இன்னுமே கலங்கி இருக்க மெல்ல அவனின் நெஞ்சில் முகத்தை அழுத்தி கண்ணை மூடிக்கொண்டாள்.
“ஈஸி இதயா…” என தலையை வருடியவனுக்கும் அத்தனை கஷ்டமாக இருந்தது மனைவி நிலை.
ஆனாலும் இதில் தான் ஒன்று சொல்ல போய் அதுவே இன்னும் தங்களுக்கிடையே மேலும் இடைவெளியை கொண்டு வந்துவிட்டால்?
“ஓகே, இப்போ நாம வேற பேசலாம். சொல்லு இங்க எப்போ வரலாம்? நீ என்ன நினைக்கிற?…”
“எனக்கு தெரியலை நீங்களே சொல்லுங்க…” என மெல்ல அவனை விட்டு அகல தானும் தன் அணைப்பை தளர்த்தினான்.
“ஓகே, முதல்ல வீட்டை சுத்தி பார்க்கலாம். வா…” என எழுந்துகொண்டவன்,
“இதுக்கு முன்ன இங்க வந்திருக்கியா நீ?…” என்றபடி அவளோடு கை கோர்த்து ஒவ்வொரு அறையாக நடக்க,
“ம்ஹூம், இல்லை. எங்களுக்கு ஆபீஸ்லையே ஆபீஸ் வொர்க் மட்டும் தான். கலெக்ட்டரை மீட் பன்றது எங்க வேலை இல்லை. நீங்க என்னை வரவழைக்கவுமே எல்லாருக்கும் ஷாக். அன்னைக்கு எல்லாம் ரொம்ப சமாளிக்க வேண்டி வரும்…”
“ஹ்ம்ம், ஆமா. புரிஞ்சது. அகிலன்கிட்ட உன்னை வர சொல்லவும் அவருமே என்னடான்னு பார்த்தார். அதையெல்லாம் பார்த்தா பொண்டாட்டியை எப்படி பார்க்கறதாம்?…” என கண்ணன் சிரிக்க,
“நீங்க பண்ணின வேலைக்கு அவசியம் பார்த்து தான் ஆகனும்…” என்றாள் இதயாவும் நக்கலாக.
ஆனால் முன்பிருந்த காரம் அவளின் பேச்சில் இல்லை. பலவித யோசனைகளை சுமந்திருந்தாலும் தன் கோபத்தை கூட நிறையவே அலசிக்கொண்டு இருந்தாள்.
கண்ணனின் மேல் உள்ள கோபம் எல்லாம் கனன்றுகொண்டு இருந்தாலும் அவனின் அருகாமை அப்படி ஒரு நிறைவையும், நிம்மதியையும் உணர்த்தியதும் அவள் மட்டுமே அறிந்த உண்மை.
“இதயா, உனக்கு பிடிச்சிருக்கா?…” என அவன் கேட்டதும் அப்போதும் அவனின் முகத்தையே பார்க்க,
“என்னை கேட்கலை. இந்த பங்களா பிடிச்சிருக்கா?…” என்றான்.
“ஹ்ம்ம். பிடிக்கலைன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் தானே?….”
“அப்படி அட்ஜஸ்ட் பண்ண வேண்டாம். வெளில வீடு பார்த்துப்போமா?…” என கேட்க,
“இல்ல, இல்ல. இதுவே பிடிச்சிருக்குது. இருக்கட்டும்…” என்றாள் வேகமாய்.
‘என்ன எதுக்கெடுத்தாலும் இப்படி எடுத்தெறிஞ்சே பேசிட்டு இருக்கேன்’ என தன்னை குறித்தே சற்று கோபம் கூட வந்தது.
“ரொம்ப யோசிக்காத. நான் கேட்டதுக்கு நீ பதில் சொன்னதே போதும்…” என்றவன் ஒவ்வொரு இடமாக காண்பித்து மாடிக்கும் சென்று பார்த்துவிட்டு வர இருவருமே களைத்துத்தான் போனார்கள்.
காலையில் இருந்து வேலை, இங்கே வந்தது, சுற்றியது என களைப்பாய் தோன்ற,
“கிளம்புவோமா?…” என்றான்.
“ஹ்ம்ம்…”
“என்னைக்கு வரலாம்ன்னு சொல்லு. ரொம்ப நாள் லேட் பண்ண முடியாது…”
“ஓகே, நாளைக்கு அம்மாட்ட பேசிட்டு சொல்றேன்…” என்று முடித்துக்கொண்டாள்.
வீடு வந்து சாப்பிட்டு முடித்ததும் அவள் படுக்க செல்ல கண்ணனுக்கு உறங்க நேரமில்லை. நிறைய பார்க்கவேண்டிய வேலைகள் தலையை அழுத்தியது.
“தூங்க வரலை…” என்றாள் அன்று அவளாக.
“இல்லம்மா, கொஞ்சம் வேலை இருக்குது. நீ போய் படுத்துக்கோ…” என கனிவுடன் சொல்ல ஒரு நிமிடம் நின்றவள் தலையசைப்புடன் கடந்து சென்றாள்.
பின் எப்போது அவன் வந்து உறங்கினான் என்றே தெரியவில்லை. காலையில் தனக்கு முன்பே எழுந்திருந்தான். முகமும் அத்தனை டென்ஷனாக இருந்தது.
“எதுவும் பிரச்சனையா?…” என இதயா கேட்டாள்.
“ஹ்ம்ம். லைட்டா. பார்த்துக்கலாம். பிரச்சனை இல்லாம இருக்காதே. லீவ் இட்…” என்றான் லேசாய் அவளின் கன்னம் தட்டி.
அதற்கு மேல் அதை பற்றி கேட்டுவிடவும் முடியாது. பேசவும் அவன் அனுமதிப்பானா என்றும் தெரியாது. அவன் சொல்லியதே இதை விடு என்பதை போல சாஃப்ட்டாக சொல்லியிருக்க இதயாவும் துருவவில்லை.
இன்னும் தங்களுக்குள்ளேயே எதுவும் சரியாகாத நேரம் அவனிடம் என்னவென்று கேட்டுவிட முடியும்? உரிமையாக பேசவும் மனது இன்னும் இடம் கொடுக்கவில்லை.
ஆனால் பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது. மனது அடித்துக்கொண்டது. கண்ணனுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என காரணமற்ற பயம் மனதை கவ்வியது.
அலுவலகம் கிளம்பி சென்றவளுக்கு அங்கிருக்கும் சூழல் அன்று பாதிக்கவில்லை. நினைப்பு மொத்தமும் கண்ணனின் டென்ஷனான முகமே.
அதனோட மஞ்சுவிற்கு அழைத்தவள் இருப்பிடம் பற்றியதை சொல்ல மஞ்சுவிற்கு அத்தனை சந்தோஷம்.
இருவருமே ஒன்றாக இருந்தால் பிரச்சனை சரியாகி எல்லாம் மாறி இருவருமே ஒன்றாகிவிடுவார்கள் என்று தானே இத்தனை பாடுபட்டு கொண்டு சேர்த்தது மகளை அங்கே.
இன்று அவளே போன் செய்து வீட்டை மாற்றுவதை பற்றி பேசவும் அப்படி ஒரு பூரிப்பு.
தாங்கள் வரவேண்டுமா என கேட்டு வேண்டாம் என்று பதிலை வாங்கிக்கொண்டவர்கள் அடுத்த இரு நாளில், இல்லை அந்த வார இறுதியில் மாற்றிக்கொள்ளலாம் என்று காலெண்டரை பார்த்து சொல்லவும் சரி என்றுவிட்டாள்.
கண்ணனிடமும் தெரிவிக்க அந்த வாரமே வீட்டையும் மாற்றி அரசு பங்களாவிற்கு இடம்பெயர்ந்தனர்.
தனத்தையும், அவர் அழைத்து வந்த இரண்டு பெண்களையும் வைத்து கொஞ்சம் சுலபமாகவே வீட்டை அமைத்துமுடித்தாள் இதயா.
தன் வீடு என்னும் எண்ணம் அவளின் மனதில் அவளறியாமலே பதிந்துபோனது. பார்த்து பார்த்து இதை இங்கே வைத்தால் சரியாக இருக்குமா? எப்படி என்று யோசித்து யோசித்து வைத்து முடிப்பதற்குள் அயர்ந்து போனாள்.
“கொஞ்சம் கேப் விட்டு மெதுவா அரேன்ச் பண்ணலாம்ல? உடனே செய்யனுமா நீ?…” என கண்ணன் கடிந்துகொண்டான். அவனாலும் அவளுக்கு உதவமுடியவில்லை.
“இல்லை முடிஞ்சது. போட்டு வச்சா திரும்ப சோம்பேறி ஆகிடும். அதான் ஒரே வேலையா முடிச்சுட்டேன்…”
“ஹ்ம்ம்…” என்றவன்,
“வீட்டுக்கு இன்னும் சொல்லவே இல்லை. அப்பாவுக்கு சொல்லனும்னு நினைச்சிட்டே இருந்தேன். மறந்து மறந்து போய்டுச்சு…” என்று சொல்ல,
“ஓகே, நீங்க பேசுங்க. நான் வரேன்…” என்று அவள் எழுந்து செல்ல போக இழுத்து பிடித்து கைவளைவில் நிறுத்தினான்.
“இப்ப எங்க போறியாம்? இரு பேசுவோம்…”
“நீங்க பேச நான் ஏன்?…”
“அது அப்படித்தான். நான் பேசனும்னா நீ இருக்கனும்…” என சொல்ல,
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். இது போதும். இப்படியே இருக்கறது போதும். இனி புதுசா எதுவும் தெரிய வேண்டாம். பழசும் என்னை தொடர வேண்டாம்…” என்று போகிற போக்கில் அவள் சொல்லிவிட ஆழ்ந்த பார்வையை அவளிடம் செலுத்தியவன்,
“நம்ப முடியலை…” என்றான் அப்போதும்.
“நீங்க பேசுங்க. நான் எதோ உளறிட்டு இருக்கேன்…” என்று சொல்லி செல்ல,
“அதானே பார்த்தேன்…” என்று அவளின் தலையில் லேசாய் குட்டு வைக்க,
“நைட் டின்னர் இல்லை உங்களுக்கு…” என சொல்லி சென்றாள்.
ஒரு சிரிப்போடு அவளின் பேச்சை கேட்டபடி சிவசுந்தரத்திற்கு போன் போட எடுத்தவரின் குரலில் அத்தனை சுரத்தில்லை.
“எப்படிப்பா இருக்க?…”
“நான் நல்லா இருக்கேன்ப்பா. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?…” என்றான்.
“நல்லா இருக்கோம் கண்ணா. மருமக எப்படி இருக்கா?…”
“நல்லா இருக்கோம்ப்பா. ரெண்டுபேருமே நல்லா இருக்கோம்…” என்றவன் தன்கள் இல்லம் மாறிவிட்ட விஷயத்தை சொல்லியவன்,
“இன்னைக்கு தான் வந்தோம். எல்லாம் செட் பண்ணி முடிச்சாச்சு…”
“ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உதவிக்கு தங்கச்சியை அனுப்பி வச்சிருப்பேனே? ஒத்தையில என்னன்னு வீட்டை மாத்தினீங்க?…”
“அதெல்லாம் விஷயமில்லை. ஆள் இருந்தாங்க. மாத்தியாச்சு. நாங்க ரெண்டுபேர் தானே? ரொம்பவும் திங்க்ஸ் இல்லையே…” என்றான் சமாதானமாக.
“சரிப்பா, சரிப்பா…” என்றவர் குரல் என்னவோ சரியில்லை என்பதை உணர்த்த,
“அங்க என்னப்பா பிரச்சனை? ஏன் உங்க குரல் இப்படி இருக்குது?…” என்று கேட்கவும் சிவசுந்தரத்திற்கு சொல்லுவோமா வேண்டாமா என யோசனையாக இருந்தது.
“அப்போ பிரச்சனை தான் இல்லையா? என்னன்னு சொல்லுங்க…” என்றவனின் குரலை மறுக்க முடியாமல் போக,
“அக்கா அவ மாமியாரோட சண்டை போட்டுட்டு இங்க வந்துட்டாப்பா. அதான் பிரச்சனை…” என்றதும் அவனுக்கு புரிந்து போனது.
“பிரச்சனை யார் பண்ணினது?…” என்றான்.
“வேற யாரு? உங்கக்கா வாய் ஒட்டுகிடக்குமா? தள்ளி இருக்கும் போது ஒண்ணா கூடி குலாவிட்டு இப்ப அங்க போய் அடிச்சுக்கறாங்க…” என்றவர் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.
மாமியார் வீட்டுக்கு விருப்பமில்லாமல் உத்ரா சென்றாலும் அங்கே அப்படி எல்லாம் காட்டிக்கொள்ளாமல் இருக்க இரண்டு நாட்கள் நன்றாக தான் சென்றது.
அதன் பின் வழக்கமான குணம் தலைதூக்க அங்கே ஏற்கனவே வேலவனின் தம்பி மனைவி அந்த வீட்டின் அதிகாரத்தில் இருக்க இவளோ அங்கே தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட நினைக்க காஞ்சனாவின் சப்போர்ட்டும் இளைய மருமகளுக்கே இருக்க பிரச்சனை வலுத்தது.
நித்தமும் ஒரு பஞ்சாயத்து, நித்தமும் சண்டை என அங்கே பெரும் பிரளயத்தை உண்டுபண்ண அது உத்ராவை தான் தாக்கியது.
அங்கே இருக்கமுடியாது என்று பெற்றோரிடம் மகளுடன் வந்து சேர பின்னாடியே வந்த வேலவன்,
“நீ வரதுனா வா. என் மகளை ஏன் கூட்டிட்டு வர? உன் தம்பி பொண்டாட்டிக்கு எப்படி அனுசரிச்சு போகனும்னு படம் எடுத்தவ தானே நீ? உன் வாயை வச்சுட்டு இருந்தா ஏன் சண்டை வருது?…” என கேட்டு மகளை அழைத்துக்கொண்டவன்,
“இனிமே தனியா பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் ஒண்ணா தான் இருக்கனும். நீ அடக்கி வாசிச்சா எல்லாம் சரியா தான் போகும்…” என்று சொல்லிவிட்டு மகளுடன் வெளியேறிவிட ஸ்தம்பித்து போனாள்.
“பார்த்தீங்களாப்பா? என் மாமியாரை நான் சும்மா விடமாட்டேன்…” என்று ஆரம்பிக்க,
“பேசாம கிளம்பி போற வழியை பாரு. நீ ஒன்னும் அவங்க கொடுமை படுத்தியா இங்க வந்த? அங்கயும் உன் வாயை திறந்திருப்ப. அதுக்கெல்லாம் நாங்க வரமுடியுமா? உன் புருஷனே சொல்லிட்டு போய்ட்டார் நீ அமைதியா இருந்தா அங்க எதுக்கு பிரச்சனைன்னு. அதுவே சொல்லிருச்சு அங்க நீ என்ன பண்ணினன்னு…”
சிவசுந்தரம் இப்படி சொல்லிவிட ருக்மணி இன்னும் மகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.
“கொஞ்ச நாளைக்கு பொறுமையா இரும்மா. மாப்பிள்ளை பேச்சை கேட்டு நடக்க பழகிக்கோ…” என சொல்ல,
“உங்க வேலையை பாருங்க. நான் கேட்டேனா?…” என்று அழுதுகொண்டே வேறு வழியின்றி கிளம்பி சென்றாள் உத்ரா.
“என்னப்பா செய்யறது? உத்ரா ஒத்துபோக மாட்டேங்கறா. மாப்பிள்ளையே சொல்றார் உங்க பொண்ணு தான் வம்பை விலைகுடுத்து வாங்கறான்னு. அங்க போறதுக்கு முன்னாடியே சம்பந்தியம்மாட்ட சொல்லி தான் ஒண்ணா குடித்தனம் போயிருக்காரு…”
“ஆனாலும் உத்ரா தான் வச்சது தான் சட்டம்ன்னு அங்கயும் அழிச்சாட்டியம் செஞ்சா அவங்களும் என்ன செய்வாங்க? இவளுக்கு சப்போர்ட் பண்ணவும் முடியலை. அதே நேரம் கண்ணை கசக்கிட்டு வந்தாலும் மனசு கேட்கமாட்டேங்குது…” என பெற்றவராய் கலங்கி போய் சொல்ல,
“சரியாகிடும்ப்பா, இப்போவும் சரி பண்ணாம நீங்க தாங்கிட்டு இருந்தா அவங்க ரொம்ப பண்ணுவாங்க…” என்றவன்,
“எல்லாம் அத்தான் பார்த்துப்பார். அவர்கிட்ட விட்டுடுங்க. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க…” என்று ஆறுதல் சொல்லிவிட்டு, நிஷாவிடமும் பேசிவிட்டு வைத்துவிட்டான்.
தன்னிடம் மகன் பேசுவானோ என்னவோ என்று ருக்மணி வரவே இல்லை. மகளின் கண்ணீர் முகம் வேறு. அதே நினைப்பில் மகனிடம் சொன்னால் மட்டும் என்னாகிவிட போகிறது என்று பேசாமல் இருந்துகொண்டார்.
பேசிவிட்டு வைத்தவன் ஐந்து நிமிடம் போல அப்படியே அமர்ந்துகொள்ள அவனை சாப்பிட அழைக்க வந்தாள் இதயா.
“டின்னர் ரெடி…” என்று வந்து சொல்ல,
“ஹ்ம்ம், வரேன். அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா?…” என்றான் தனத்தையும் அவருடன் வந்தவர்களையும் கேட்டு.
“ஆமா, கிளம்பிட்டாங்க. அவங்களுக்கு சேர்த்தே சமைச்சு குடுத்தனுப்பிட்டேன். இனி அவங்க போய் செஞ்சிட்டு இருக்க முடியாதே? அதான்…”
“ஓகே…” என்றவன் பனியன், லுங்கியுடன் வெளியே வந்தான்.
பகலிலோ, வேலைக்கு இருப்பவர்கள் முன்னிலையிலோ இப்படி வெளியே அவன் வருவதில்லை. யாருமில்லை என்று வர அவனை பார்த்தபடி பிளேட்டை வைத்தவள் தனக்கும் போட்டுக்கொண்டாள்.
“அப்பாட்ட பேசினேன்…” என்றவன் சாப்பிட்டுக்கொண்டே அனைத்தையும் சொல்ல கேட்டுக்கொண்டவளிடம் பதில் ஏதும் இல்லை.
“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை. ரொம்ப வருத்தப்பட்டு பேசினாங்க…”
“ஹ்ம்ம், பொண்ணை பெத்து கட்டிக்குடுத்து அவங்களுக்கு பிரச்சனைன்னு வரதை பேஸ் பன்றது அத்தனை சுலபம் இல்லை. ஏனா எங்களுக்கு தெரியும்…” என்றவள் குரல் கமறிவிட்டது.
“ப்ச், இதயா…”
“ஹ்ம்ம், நத்திங். இனி இதை பேச வேண்டாம்…” என்று முடித்துக்கொண்டாள்.
வந்து படுத்தவளுக்கு சுத்தமாய் தூக்கம் இல்லை. அன்றுதான் அங்கே உறங்கும் முதல் நாள். புது இடம். சுற்றிலும் பாதுகாப்பிற்கு ஆட்கள் என்று இருந்தாலும் தூக்கம் கண்களை அண்டவில்லை.
“என்னாச்சு?…” என்றான் அவள் அசைவை கண்டு.
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லை. டயர்டா இருக்குது. ஆனாலும் தூங்க முடியலை…” என்றவள் மெல்ல எழுந்து அமர்ந்து தனது போனில் பாடலை ஓடவிட,
“முன்னலாம் நீயே பாடி அனுப்புவியே? இப்பலாம் பாடறதில்லையா இதயா?…” என்றான் கண்ணன்.
“மறந்து போச்சு…” என்றாள் படக்கென்று.
“ஞாபகப்படுத்தறேன்…” என்றவன் அவள் பாடி வாட்ஸாப் செய்திருந்த அந்த க்ளிப்பிங்கை ஓடவிட்டான் அவன்.
“அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ…” என்ற அவளின் குரல் இனிமையாக அந்த அறையை நிறைக்க,
“இப்போ பாடேன். கேட்கனும் போல இருக்கு…” என்றான்.
“இப்போ பாடனும்னா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடான்னு பாடனும் தோணுது. பாடவா?…” என்றாள் சூடாக.
அவள் கேட்டவிதத்தில் கோபத்திற்கு பதில் சிரிப்பு பொத்துக்கொண்டு வர அடக்கமாட்டாமல் கடகடவென்று அவன் சிரித்துவிட ஒருகட்டத்திற்கு மேல் இதயாவாலும் சிரிப்பை அடக்கமுடியாது போக பில்லோவை அடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
“பன்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப செய்யறதெல்லாம் சேட்டை. உங்களை போய் நம்பி எத்தனை பாட்டு? இப்ப நினைக்க எனக்கே ஷேமா இருக்குது. உங்களை…” என்று கோபமும், சிரிப்புமாக அவனை அடிக்க,
“ஹேய் போதும் கை வலிக்க போகுது…” என்று அவளின் கையை பிடித்து தன் முகம் நோக்கி இழுத்தவன்,
“இப்போ நீ ஹேப்பியா இருக்கியான்னு எனக்கு தெரியலை. ஆனா உன் பக்கத்துல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நிம்மதியா இருக்கேன். எனக்கு இது லைப் லாங் வேணும். கிடைக்கும் தானே?…” என்று கேட்க,
“என்ன திடீர்ன்னு?…” என்றாள் அவள்.
“அன்னைக்கு நீ ட்ரான்ஸ்பர் வாங்கி தாங்கன்னு கேட்டதும் மூச்சே நின்னுடும் போல ஆகிடுச்சு. இன்னும் உன்னை எப்படி என்னை புரியவைக்க போறேன்னு பயங்கர டென்ஷன். ரொம்ப கஷ்டமா போய்டுச்சு. கொஞ்சம் பயந்துட்டேன்…” என்றான் மிதமான சிரிப்புடன்.
“நீங்க, பயந்தீங்க. நம்பிட்டேன்…” என்றவள்,
“பேசாம தூங்குங்க. இப்ப நீங்க உளறிட்டு இருக்கீங்க…” என்றவள் தானும் படுத்துவிட்டாள்.
அருகருகே உறக்கம், மனது நெருங்கி இருந்தாலும் இன்னும் பனித்திரை உடையவில்லை. அதுவாக விலகட்டும் என்று இருவருமே நினைத்துக்கொண்டனர்.
எந்த நேரத்தில் கண்ணன் ‘உன்னால் பயந்து போனேன்’ என்றானோ சில நாட்களிலேயே இதயாவை பயம் காட்டிவிட்டான் அவன்.