ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 21
காலை எழுந்ததில் இருந்து பரபரப்புடன் வேலை நடந்துகொண்டு இருந்தது.
அந்த பங்களாவிற்கு அவர்கள் இருவரும் குடிவந்து இரண்டு மாதம் ஆகவிருக்கிறது.
இதற்குள் ஒருமுறை மஞ்சுவும், அய்யாசாமியும் நவீனுடன் வந்து பார்த்துவிட்டு சென்றிருக்க, சிவசுந்தரமும் நிஷாவும் மட்டும் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு கிளம்பியிருந்தார்கள்.
யாரும் வந்ததற்கு தங்கவில்லை. வந்தனர், பார்த்தனர், கிளம்பினர். அவ்வளவே. அங்கிருந்து இருவருக்குமிடையே இனியும் இடையிடுவதில்லை என்றதை போல வந்துவிட்டு உடனே சென்றுவிட்டனர்.
இதயா அன்று விடியும் முன்னமே எழுந்து வேலையை துவங்கி இருந்தாள். தனம் நான்கு நாள் விடுமுறை கேட்டிருக்க தனக்கு பதிலாக வேறு யாரையேனும் சமையலுக்கு அனுப்பவா என்றதற்கும் மறுத்து தானே பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டாள்.
ஒரு வேகத்தில் சொல்லிவிட்டாலும் இப்போது சிரமமாக இருந்தது இதயாவிற்கு. மதிய சமையலும் சேர்த்து முடிக்கவேண்டிய அவசியத்தில் பரபரவென்று இயங்கிக்கொண்டு இருந்தாள்.
ஓரளவு வேலை முடிந்தது. மதிய உணவு தயாராகி முடிய இருவருக்கும் பேக் செய்து முடித்தாள்.
அப்போது தான் காலைக்கு இன்னும் தயார் செய்யாமல் இருக்க அவசரமாய் சேமியா உப்மாவை செய்து முடித்தவள் இன்னும் குளிக்காமல் இருந்தாள்.
“இன்னைக்கு ஆபீஸ்க்கு கிளம்பின மாதிரி தான்…” என புலம்பியபடி கிரைண்டரில் ஓடிக்கொண்டிருந்த உளுந்தை ஓரம் வழித்துவிட்டு லேசாய் தண்ணீரை தெளித்து மூடிவைத்தாள்.
மாவு அரைத்து முடிவதற்குள் குளித்துவிட்டு வந்துவிடலாம் என வெளியே வர கண்ணன் சாப்பிட வந்தான்.
“ப்ரேக்பாஸ்ட் ரெடியா இதயா?…” என கேட்க,
“ஹ்ம்ம், முடிச்சுட்டேன். ஸ்டவ் மேல இருக்கிற பாத்திரத்துல சேமியா உப்மா இருக்குது. சுகர் வச்சுக்கோங்க. லஞ்ச் பேக் பண்ணிட்டேன்…”
“என்ன உப்மாவா?…” என அவன் முகம் அஷ்டகோணலாக மாறியது.
“என்ன உப்மாவா?…” என்று முறைத்தவள்,
“மாவும் இல்லை ஒண்ணுமில்லை. அதுக்கு தான் அரைச்சிட்டு இருக்கேன். இனி இன்னும் மூணு நாளைக்கு பிரச்சனை இல்லை…” என்று வியர்க்க வியர்க்க சொல்லியவள்,
“அப்பறம் சொல்ல மறந்துட்டேன்….”
“என்ன?…”
“உளுந்து பொங்கிருச்சு. கிரைண்டர்ல இருக்கிற மாவை வழிச்சு எடுத்துட்டு அரிசியை போடுங்க. போடும் போது கொஞ்சமா தண்ணி தெளிச்சிட்டே போடுங்க. இல்லன்னா சிக்கிக்கும். நான் அதுக்குள்ள குளிச்சிட்டு ஓடிவரேன். டைம் ஆகிடுச்சு….” என்றவள் அவனின் தோளில் கிடந்த டவலை உருவிக்கொண்டு போக,
“என்ன, நான் மாவை தோண்டவா? என்ன விளையாடுறியா நீ?…” என்றான் கோபத்துடன்.
“ஆமா, எனக்கு நேரமாகுதுல…”
“அதுக்கு?…” என்றவனின் கண்களோ தெறித்துவிடும் போல திணறி முழித்தது.
“என்ன இந்த டிஸ்ட்ரிக் கலெக்ட்டர்ன்னு மிதப்போ? அப்போ பண்ண மாட்டீங்களா?…”
“நான் எப்போ அப்படி சொன்னேன்?…”
“சொல்லலை தான். ஆனா உங்க பார்வை அப்படித்தானே இருக்குது. இங்க எனக்கு நீங்க புருஷன். அப்போ எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணாம யார் பண்ணுவா?…”
“இதயா, நான் அப்படி சொல்லலை…”
“அப்போ போங்க. போய் மாவை பாருங்க. சேரி வேற கட்டனும்…” என்றபடி உள்ளே சென்று புடவையை ஆராய்ந்தாள் எதை கட்டுவது என்று.
அவளின் பின்னோடே வந்த கண்ணன் தலையை கோதியபடி நின்றான் அவளிடத்தில்.
“இன்னும் இங்க நீங்க என்ன பன்றீங்க?…” என்று ஒரு புடவையை எடுத்து கட்டிலில் வைக்க,
“லேட் ஆனா கூட ஓகே. ஆனா நீயே மாவை எடேன். எனக்கு வராது இதயா. புரிஞ்சுக்கடி…” என்றான் அவளின் கன்னம் பிடித்து தன் பக்கம் திருப்பி.
“என்னவோ அன்னைக்கு சொன்னீங்க, கலெக்டர் எல்லாம் மத்தவங்களுக்கு தான். உனக்கு இல்லைன்னு. எல்லாம் சும்மாவா?…” என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று முழித்தான்.
“உங்ககிட்ட ஹெல்ப் கேட்டேன்ல, என்னை சொல்லனும்…” என்றபடி காலை உதைத்துக்கொண்டு கிட்சனிற்கு சென்றவள்,
“பாவமே டெய்லி உப்மா செய்ய முடியாதே, மாவு இருந்தா இட்லி, தோசைன்னு ஊத்திக்கலாமேன்னு நினைச்சேன்ல. என்னை சொல்லனும். இனிமே தனம் அக்கா லீவ்ன்னா கண்டிப்பா மூணு வேளையும் உப்மாவும், சர்க்கரையும் தான். இருங்க வச்சுக்கறேன்…”
கண்ணனை அவனின் முன்னாடியே தாளித்தபடி உளுந்து மாவை எடுத்துவிட்டு அரிசியை போட அவளின் பின்னே வந்து நின்றவன்,
“சொல்லிக்குடு. எப்படின்னு கத்துக்கறேன்…” என்றான் சமாளிப்பாக.
“போயிருங்க. இது கூடவா தெரியாம இருக்கும்? நாங்க எல்லாம் போய் படிச்சுட்டா வரோம்? கத்து குடுக்கனுமாம்….” என்று அவள் காய்ந்தாள் அவன் மேல்.
“இதுக்குத்தான் மெஸ்ல சொல்லிக்கலாம்னு சொன்னேன். இந்த கஷ்டம் உனக்கு வேண்டாமேன்னு…”
“ஆஹா, எங்க வெளில ரெண்டு நாள் சாப்பிட்டதுக்கே இது சரியில்லை. அது நல்லா இல்லைன்னு முணங்கிட்டு எனக்காக வெளில. போயிருங்க…” என்றபடி அங்கேயே ஒரு ஸ்டூலை போட்டு அமர்ந்துவிட்டாள்.
“குளிக்க போகலை?…” என கண்ணன் கேட்க,
“மாவை தோண்டிட்டு போறேன். இன்னும் பத்து நிமிஷம் அரைஞ்சிரும்…” என்று சொல்ல,
“இதயா டைம் ஆகிடும், நீ கிளம்பி வா. அதுக்குள்ளே அரைச்சதும் எடுத்துக்கலாம்….”
“என்னது? கொஞ்சம் முன்னாடி தான் லேட் ஆனாலும் பரவாயில்லைன்னு சொன்னீங்க?…”
“அது…”
“எதுவும் இல்லை. நான் லீவ் போட்டுக்கறேன். நீங்க கிளம்புங்க…” என்றுவிட்டாள் கடுப்புடன்.
“இந்த வேலை எல்லாம் வேண்டாம். மரியாதையா கிளம்பிரு. டைம் எல்லாம் இருக்குது தான். இப்பலாம் ஓவரா லீவ் போடற நீ. அதுக்கு முன்னாடியும் அப்படித்தான் பண்ணியிருக்க. கொஞ்சம் கூட லீவை சேவ் பண்ண மாட்டியா?…”
கண்ணன் அவளை அதட்டிக்கொண்டு நிற்க அவனுக்கு தட்டில் உப்மாவை வைத்து சர்க்கரையை ஒரு ஓரமாய் வைத்து நீட்டியவள் தானும் சாப்பிட அப்போதும் வாயை வைத்துக்கொண்டு இல்லாமல்,
“நீ இன்னும் குளிக்கலை…” என்றான் அவளை.
“சத்தியமா என்ன செய்வேன்னே தெரியாது. மாவட்ட கலெக்ட்டரை மாவு கலெக்ட்டரா மாத்திருவேன். நீங்களும் எதுவும் செய்யமாட்டீங்க. லேட்டாவும் போக கூடாது. லீவும் போட கூடாது. சரி சாப்பிட்டு குளிச்சுட்டு கிளம்புவோம்ன்னா அதுக்கு நொட்டை சொல்றீங்க…”
“சாப்பிட்டதும் குளிக்க கூடாதுல. அதுக்கு சொன்னேன்…”
“உங்க ரூல்ஸ் உங்களோட. ஒருநாள் சாப்பிட்டதும் குளிச்சா ஒன்னும் ஆகாது. வர வர உங்க இம்சை ரொம்ப போய்ட்டே இருக்கு…” என்றவள் சாப்பிட்டு முடித்து மாவும் எடுக்க வந்திருக்க, அதை பாத்திரத்தில் கலந்து உப்பு சேர்த்து கரைத்து கிரைண்டரை தண்ணீர் ஊற்றி லேசாய் அலசி அங்கேயே வைத்துவிட்டு குளிக்க சென்றாள்.
அவள் வருவதற்குள் இருவருக்கும் பேக்குகளை தயாராக ஹாலில் எடுத்து வைத்தவன் தானும் உடை மாற்றி வந்திருக்க ஒரு சிந்தடிக் புடவையில் கிளம்பி வந்தாள் இதயா.
நிமிர்ந்து பார்த்தவனுக்கு பார்த்த நொடி அவளின் பிம்பம் அப்படியே பதிந்துபோக ஒரு சிரிப்போடு அவளை பார்த்தான்.
“என்ன? என்ன லுக்கு? இப்போ மட்டும் நேரமாகலையா?…” என்றவள் லேசாக கலைந்திருந்த தலையை சீராக்கிவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க,
“இன்னைக்கு காட்டன் சேரி கட்டலையா?…” என்றான் பாக்கெட்டினுள் கைகளை ஒளித்துக்கொண்டு.
“எதுக்கு இன்னும் நேரமாச்சுன்னு என்னை கத்தறதுக்கா? வந்து இன்னைக்கு பெரிய சண்டை இருக்குது உங்களுக்கு. ஈவ்னிங் பேசிக்கிறேன்…” என்றவளின் கடுப்பில் இன்னுமே சிரித்தான்.
ஒருவழியாய் கிளம்பி அலுவலகம் வர சுத்தமாக முடியவில்லை இதயாவிற்கு. மஞ்சுவோடு இருந்தவரை இரவு உணவு, விடுமுறை நாளில் எல்லாம் உதவுவாள்.
ஆனால் அலுவலக நாட்களில் இப்படி அரக்கப்பரக்க என்றுமே கிளம்பியதில்லை.
கண்ணனுடன் வந்த பிறகு அப்போது எடுத்த விடுமுறை தான். அதன் பின்னர் லேசாக முடியவில்லை என்றாலும் அவளை இழுத்துக்கொண்டு தான் அலுவலகம் வருவான்.
அப்போதெல்லாம் அத்தனை கோபம் வரும் இதயாவிற்கு. கொஞ்சமும் இளக்கம் காட்டாமல் இப்படி தன்னுடனே கூட்டிக்கொண்டே செல்கிறானே என்று.
“கூடவே சுத்துறியே செவ்வாழ…” என்ற முணங்களுடன் அவள் முன்னே நடக்க கண்ணனும் கிளம்பினான்.
காரில் ஏறியதும் வழக்கம் போல கண்ணன் தோரணையுடன் அமர்ந்துகொள்ள, ‘இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை’ என்ற கடுப்புடன் அவளும் கண்டுகொள்ளாததை போல இருந்துகொண்டாள்.
இதயா இறங்கி செல்லவும் தானும் உள்ளே சென்றவன் சென்ற வேகத்தில் வெளியே கிளம்பினான்.
“என்ன கலெக்ட்டர் வந்ததும் வெளில கிளம்பிட்டாரு?….” என மிருணா கேட்க,
“தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? வேலையை பாரு…” என நளினி மிரட்டினாள்.
“ம்க்கும்…” என்ற மிருணா,
“என்ன பூவி, இப்பவே இவ்வளவு டயர்டா தெரியற?…” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.
“நீ உன் லைனை க்ராஸ் பன்ற. அடி தான் வாங்க போற,…” என்று ந்யூஸ் பேப்பரை எடுத்து சுருட்டி நளினி ஒரு போடு போட,
“விடுங்க நளினிக்கா….” என்ற இதயா,
“மெய்ட் லீவ். அதான் குக்கிங், மத்த வேலை எல்லாம் முடிச்சுட்டு வர சரியா போச்சு…”
“ஏன் அவங்க வேற யாரையும் அரேன்ச் பண்ணலையா?…”
“செய்யறேன்னு சொன்னாங்க நளினிக்கா, ஆனாலும் மனசுக்கு ஒப்பலை. அதான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அவங்கன்னா பழக்கம். நாங்க இல்லைன்னாலும் வேலையை முடிச்சுட்டு வீட்டை பார்த்துப்பாங்க…”
“மேடம் ரொம்ப செக்யூர் பண்ணிக்கறாங்க…” என்றாள் மிருணா.
“மேடம் உங்க லஞ்ச் பேக். ஸார் குடுத்திட்டு வர சொன்னார்…” என்று ப்யூன் வந்து நீட்ட,
“அச்சோ மறந்துட்டேனா கார்லயே. தேங்க்ஸ்…” என்ற வாங்கிக்கொண்டாள்.
“இருக்கட்டும் மேடம்…” என்று சென்றான் அவன்.
இதயா முன்பை போலவெல்லாம் இப்போது யாரின் பார்வைக்கும், கிண்டலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பார்க்கிறாயா பார்த்துக்கொள். பேசுகிறாயா பேசிக்கொள். அவ்வளவே.
எதையும் கண்டுகொள்வதில்லை. மிருணா கிண்டல்களை கூட ரசிக்க ஆரம்பித்தவள், ‘ஆமாம் அப்படித்தான். நான் கலெக்ட்டரம்மா தான்’ என விளையாட்டிற்கென்றாலும் கெத்து காண்பிக்க ஆரம்பித்தாள்.
அன்று மதிய உணவு நேரம் கூட கண்ணன் வராமல் போக யோசனையுடன் அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
வெகுநேரம் கழித்தே பார்த்தவனும் ‘போன் எதுவும் செய்யாதே. வேலை முடிந்தால் வீட்டிற்கு கிளம்பு’ என்று அனுப்பிவிட்டான்.
அதன் பின்னும் எதுவும் வேலையில் மனம் ஓடாமல் அப்படி இப்படி என்று நேரத்தை நகர்த்தியவளும் கிளம்பும் நேரம் ப்யூன் வந்து நின்றான்.
“மேடம் உங்களுக்கு கார் வந்திருக்குது. ஸார் உங்களை வீட்டுக்கு கிளம்ப சொன்னாங்க…” என சொல்ல இன்னும் திக்கென்று ஆனது.
அவனிடம் ஒன்றும் கேட்காமல் தலையசைத்தவளின் முகம் லேசாய் பதட்டத்தில் இருக்க,
“பூவி, ஓகே தானே? நான் வேணும்னா கூட வரவா?…” என கேட்டாள் நளினி.
“இல்லக்கா, வேண்டாம். நான் பார்த்துக்கறேன்…” என்று மறுத்தவள் கிளம்பி சென்றாள்.
வீடு வந்து சேர்ந்த பின்னர் மீண்டும் ஒருமுறை அவனுக்கு முயற்சிக்க கட் செய்துவிட்டான் கண்ணன். ஏழு மணி வரை பார்த்தவள் அகிலனுக்கு அழைத்துவிட்டாள் வேறு வழியின்றி.
“இவனும் எடுக்கமாட்டான். நானும் பேச கூடாதுன்னா? எல்லாம் இவன் இஷ்டம். நானே இறங்கி இறங்கி வரனும் இவனுக்கு…” என அகிலன் எடுப்பதற்குள் அவனை திட்டி ஓய,
“சொல்லுங்க மேடம்…” என்றார் அகிலன்.
“ஸார், அவர். ஹ்ம்ம். இல்ல நீங்க அவரோட தானே இருக்கீங்க?…” என்றாள் அவன் எங்கே என்று கேட்க வந்த கேள்வியை மாற்றி.
“ஆமா மேடம். நானும் சாரும் மினிஸ்டர் வீட்டுல இருக்கோம்…” என்றவர் பின் குரலை தாழ்த்தி,
“இங்க ஒரு பிரச்சனை. இன்னும் கொஞ்சம் நேரமாகும் கிளம்ப…”
“ஓகே, கிளம்பும் போது சொல்லுங்க…” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.
பின் மனதை அமைதிப்படுத்தியபடி சமைக்க மாவை எடுத்து வெளியே வைத்தவள் காலை வைத்த சாம்பார் இருக்க சூடு செய்துவிட்டு, சட்னி மட்டும் அரைத்துவிட்டு இட்லியை ஊற்றி வைத்து டிவியை போட்டு அமர்ந்துகொண்டாள்.
மதியமும் கொண்டு சென்றதை கண்ணனின் நினைப்பில் சாப்பிடாமலே கொட்டியிருக்க இப்போது பசி வேறு.
அவனுக்காக காத்திராமல் சாப்பிட்டும் முடித்து அவன் வந்ததும் சூடாக ஊற்றி கொள்வோம் என்று அமர்ந்து அப்படியே தூங்கவும் செய்தாள்.
காலை நேரமே எழுந்தது வேலை என்று உறக்கத்தில் தள்ள அவ்வப்போது விழித்து பார்த்துக்கொண்டே உறக்கமும் விழிப்புமாக இருக்க பத்துமணி போல கார் சத்தத்தில் விழித்துக்கொண்டாள்.
வரும் போதே போன் பேசிக்கொண்டே வந்தவனின் முகத்தில் அப்படி ஒரு எரிச்சலும், கோபமும்.
“சொன்னதை மட்டும் செய்ங்க. இன்னும் பத்து கார்ட்ஸ் அவங்க வீட்டுல போடுங்க…” என்றவன் இதயாவையும் பார்த்துக்கொண்டே அலுவலக அறைக்குள் நுழைந்துகொள்ள,