“சுத்தம், எவன் எந்த உரண்டையை இழுத்தானோ? சும்மாவே ஆபீசர் விரைப்பா சுத்துவார். இன்னைக்கு தூங்கின மாதிரி தான்…” என்ற அலுப்புடன் அவனின் அறை வாசலில் சென்று நின்றாள் கதவை தாங்கியபடி.
“உனக்கு தூக்கம் வந்த நீ தூங்கு இதயா. எனக்கு எதுவும் வேண்டாம்…” என்றான் அவளை நிமிர்ந்தும் பாராமல்.
“ஆமா, அப்படியே கொண்டுவந்து குடுக்காங்க. ஒன்னும் கிடையாது. போங்க. ஒரு போன் பண்ணி எப்போ வரேன்னு சொல்ல முடியலை…” என்று கிண்டலாக அவள் சொல்ல,
“என்னடி வேணும் உனக்கு?…” என்றன அவளின் பேச்சில் லேசான சிரிப்போடு.
“ஒன்னும் வேண்டாம். இன்னும் சாப்பிடலையே நீங்க…” என்றாள் அவள்.
“ஹ்ம்ம், பசி இல்லை…” என்றவன்,
“நீ சாப்பிட்டியா? எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தியா?…”
“அதெல்லாம் இல்லை. பசிச்சது. இட்லி வச்சு சாப்பிட்டாச்சு…” என சொல்லவும் ஒரு விரிந்த புன்னகை அவன் முகத்தில்.
“ஓகே, அப்பறம் என்ன? போய் தூங்கு. நாளைக்கும் எழுந்து சமைக்கனும்ல…” என்று சிரிப்போடு போனை எடுத்து ஏதோ நம்பரை தேடிக்கொண்டே பேச,
“அதெல்லாம் இல்லை. இன்னைக்கு சாம்பார் இருக்குது. நாளைக்கு ரைஸ் மட்டும் தான். தினமும் சமைச்சு கீழே போடவா முடியும்?..”
“ஓகே, பிரமாதம்…”
“காலையில கலெக்ட்டருக்கு கல்லு மாதிரி இட்லியும், பொடியும்…”
“வித் ப்ளஷர் ஹார்ட்பீட். இப்போ கிளம்பு…” என்றவன்,
“முடிஞ்சா ப்ளாஸ்க்ல கொஞ்சம் டீ மட்டும்…” என்று சொல்ல,
“ஏன் முதல்லையே கேட்டா குறைஞ்சு போய்டுவீங்களா?…” என்று கேட்டாலும் அவனுக்கு போட்டுக்கொடுத்துவிட்டே அவள் சென்றாள்.
முதலில் நன்றாக பேசிக்கொண்டிருந்தவன் டீயை கொண்டு வைத்துவிட்டு வரும் பொழுது முகம் வரும் பொழுது இருந்ததை போலவே மாறியிருந்தது.
“கண்ணன்…” என்றவளின் அழைப்பில் அவன் நிமிர்ந்து பார்க்க,
“ஒண்ணுமில்லை…” என்று சொல்லி கதவை நன்றாக திறந்து வைத்துவிட்டே சென்றாள்.
பின் சோபாவை அவனின் அறை தெரியும் படி இழுத்து போட்டு அங்கே தலையணை பெட்ஷீட்டை கொண்டுவந்து அதில் படுத்துவிட்டாள்.
அதை பார்த்துக்கொண்டு தான் இருந்தான் அவனும். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னாலும் அவள் கேட்கமாட்டாளே என்று விட்டுவிட்டான்.
ஒன்றரை மணி நேரம் சென்றதும் தான் கண்ணனின் பிபி அடங்கியது. விளக்கை அணைத்துவிட்டு கதவை தாழிட்டுவிட்டு வந்து இதயாவை எழுப்ப,
“வேலை முடிஞ்சதா?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், வா உள்ள வந்து தூங்கு…” என்றதும் எழுந்தவள் அப்படியே உள்ளே செல்ல,
“அந்த பில்லோ, பெட்ஷீட்டை யாரு எடுத்துட்டு போவாங்களாம்? அப்படியே போற?…” என்று தானே அதை எடுத்துக்கொண்டு வர அவன் பேச்சை எங்கே கேட்டாள். வந்ததும் படுத்து தூங்கி போனாள்.
“ஓஹ் ஷிட்…” என்ற கண்ணனின் கோபக்குரல் உச்சஸ்தானியில் ஒலிக்க பதறி கண் திறந்தவள் எழுந்து பார்த்தாள்.
போனை வைத்துவிட்டு வேக வேகமாய் ஷர்ட்டை எடுத்து மாட்டியவன் கை கொண்டே தலையை வாரிக்கொண்டே திரும்ப இதயா அவனருகே வந்திருந்தாள்.
நேரமோ பன்னிரெண்டு மணிக்கு மேல் என்றது. கலவரமான முகத்துடன் அவனை பார்க்க,
“பெரிய ப்ராப்ளம் இதயா. இப்போ வந்திடறேன். டேக் கேர்…” என்று சொல்லி கிளம்ப அவனின் சட்டையை பிடித்து நிறுத்தியவள்,
“என்ன பிரச்சனை? எதுக்கு இந்நேரம் கிளம்பறீங்க? எனக்கு பயமா இருக்குது…”
“இதயா சொல்லிட்டு இருக்க நேரமில்லடி. மினிஸ்டர் வீட்டு முன்னாடி பிரச்சனை. பெரிய கலவரமா மாறிட்டு வருது. இப்போ போயே ஆகனும். இதென்ன சின்ன பிள்ளை மாதிரி. பிஹேவ் யுவர் செல்ப்…” என்றான் கிளம்பும் டென்ஷனில்.
“இல்ல நான்…” என்றவளின் எந்த பேச்சையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை. மாறி மாறி அழைப்பு வந்துகொண்டே இருக்க போனை எடுத்துக்கொண்டு இதயாவின் கையை உருவி விட்டபடி,
“வந்திடறேன்டா…” என்று லேசாய் அணைத்து விடுவித்து கிளம்பினான்.
அவனின் பின்னே ஓடியவள் கார் கிளம்பும் வரை பார்த்திருந்துவிட்டு வீட்டுக்குள் வந்து டிவியை ஆன் செய்து நேரலை செய்தியை ஓடவிட்டாள்.
எதிர்கட்சி தொண்டர்களுக்கும், ஆளுங்கட்சி தொண்டர்களுக்குமான பிரச்சனை இப்போது இரு கட்சிகளின் மத்தியில் வெடித்திருக்க இருதரப்பினரும் அடித்துக்கொண்டு, ரோட்டில் நின்றிருக்கும் ஆட்டோ, பஸ் என எரித்து கொளுத்திக்கொண்டு இருந்தார்கள்.
கண்ணன் என்று அந்த பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதித்து நல்லபடியாக நடத்தி கொடுத்தானோ அன்றில் இருந்தே ஆளுங்கட்சியின் நெருக்கடியும், சிலபல தொந்தரவுகளும் அவனுக்கு ஆரம்பித்தது.
எதற்கும் அசராமல் அவன் அவனின் வேலையை செய்ய அது இருதரப்பினருக்குமே குடைச்சலாக மாறியது.
அவனை அசைக்கமுடியாது மாற்றி மாற்றி ஏதேனும் செய்துகொண்டு இருந்தவர்கள் இப்போது தொட்டு தொட்டு பிரச்சனை அடிமட்ட தொண்டனில் தொடங்கி கட்சியின் முக்கிய அலுவலகம் வரை வந்துவிட்டிருந்தது.
இப்படி மொத்த சிட்டியும் பற்றி எரிந்துகொண்டு இருக்க இங்கே இதயாவிற்கோ இருப்பு கொள்ளவில்லை.
அவனின் பணியே அதுதான் என்றாலுமே மனைவியாய் பதறிக்கொண்டு வந்தது.
அதிலும் திரையில் தெரிந்தவர்களில் ஆக்ரோஷமான முகபாவனைகளும், கோபங்களும் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களும் என பயந்து போனாள்.
இதற்கு முன்பும் இப்படி நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறாள் தான். ஆனால் இன்று அந்த களத்தில் இருப்பவனோ தன் கண்ணபிரான் ஆகிற்றே.
“பேசாம ஊரோட ஒத்து போறதை விட்டுட்டு இருக்கற பிரச்சனையை இவனே தோண்டி எடுத்து கேட்டு வாங்கிட்டு இருக்கான். இவனால என் நிம்மதியும் போச்சு. கடவுளே ஒன்னும் ஆக கூடாது…” என்று கண்ணனை திட்டியும், கடவுளை வேண்டியும் என பொழுது போவேனா என்றது.
அகிலனுக்கு அழைக்க அவரும் எடுக்கவில்லை. வேறு யாரை தொடர்புகொள்வது என்று அமர்ந்திருந்தவளின் கண்ணீரோடு கண்ணீராய் அவளும் கரைந்துகொண்டு இருந்தாள்.
நேரம் ஒன்று, இரண்டு, மூன்று என்று கடக்க மயக்கம் வருவதை போல இருந்தது. என்ன நிலவரம் இவன் எங்கே என்று எதிலும் காட்டப்படவில்லை.
முதலில் காட்டியவற்றையே காட்டிக்கொண்டே இருக்க கலவரம் கொஞ்சம் கட்டுக்குள் வந்ததாக ஒளிபரப்பப்பட கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் இன்னும் கண்ணனை தொடர்புக்கொள்ள முடியவில்லை.
நான்கு மணிவாக்கில் கார் சத்தம் கேட்க கண்ணீருடன் ஜன்னலின் அருகே நின்றாள். சோர்வுடன் உள்ளே வந்தவன் முதலில் ஓடிக்கொண்டிருந்த டிவியை அமர்த்திவிட்டு உள்ளே செல்ல அங்கே இதயா இல்லை.
அவள் வெளியே நின்றதை வரும் பொழுது கவனித்திறாதவன் பாத்ரூமினுள் இருக்கிறாளா என்று தேட அங்குமில்லாமல் போக குழப்பத்துடன் திரும்பியவன் அறைவாசலில் நின்றவளை கண்டதும் திடுக்கிட்டான்.
முகமெல்லாம் சிவந்து இதழ்கள் காய்ந்துபோய் இன்னும் அழுகையில் விசும்பிக்கொண்டே நின்றாள்.
“இதயா, நீ தூங்காம என்ன பன்ற?…” என்று கேட்டவன்,
“இங்க வா…” என்று சட்டையை கழற்றி போட்டுவிட்டு அயர்வுடன் கட்டிலில் சாய லேசாய் கையை உதறிக்கொண்டான்.
“அழுதியா நீ?…” என்று தன்னருகே அமர்ந்தவளிடம் கேட்க,
“கைக்கு என்னாச்சு?…” என்றாள் அவனின் வலது கை சிவந்து தடித்து இருப்பதை கண்டு.
“நத்திங். லேசா அடி. அவ்வளோ தான்…”
“இவ்வளோ வீங்கி போய் இருக்குது. லேசான்னு சொல்றீங்க?…” என்று தன் கையால் அவனின் கையை நீவிவிட அவளின் அழுது வீங்கிய முகத்தை பார்த்தவன்,
“என்னால நீ அழுதுட்டே தான் இருக்க இல்லையா?…” என்றான் மெதுவாக.
“பயங்கர கோபத்துல தான் இருந்தேன். எதுவும் சொல்லாம இப்படி நீங்க கிளம்பி போனதுக்கு. என்ன எதுன்னும் தகவல் சொல்லாம. ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? உங்க கவர்மென்ட் காரை எரிச்சிட்டதா வேற சொன்னாங்களா…”
“நீ எனக்கு என்னவோன்னு அழுதியாக்கும்?…” என்றான் அவளின் தலையில் கை வைத்து லேசாய் ஆட்டியபடி.
“உயிரே போய்ருச்சு…” என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு.
சில நொடிகள் சுத்தமாய் பேச்சு இல்லை. மௌனம் மட்டுமே. அவனின் கையை விலக்காமல் தன் விரலோடு கோர்த்துக்கொண்டவள் இன்னொரு கையால் அந்த காயத்திற்கு மருந்து பூசிவிட்டாள்.
“இப்போ நார்மல் ஆகியாச்சா?…” என கண்ணன் கேட்க மூக்கை உறிஞ்சிக்கொண்டே தலையசைத்தாள் மறுப்பாக.
“ஏன் இப்படி உன் உதடெல்லாம் காய்ஞ்சு போய் இருக்குது? கிட்ட வா…” என அழைத்தவனை தயங்காமல் நெருங்கி அமர்ந்தாள்.
இன்னொரு கையால் அவளின் கன்னம் பற்றி மெல்ல அவளின் இதழ்களை தன் விரல்கொண்டு ஸ்பரிசித்தவன் சிறு புன்னகையோடு அவளின் அனுமதி வேண்டி நிமிர்ந்து பார்க்க விழிகளை மூடிக்கொண்டாள் அவள்.
மொத்த தவிர்ப்பிற்கும், தவிப்பிற்கு ஆறுதலாக அப்பூவின் இதழணைத்து இதழோடு இதயம் நனைத்தவன் விலகவே நேரமெடுத்தது.
எத்தனை எத்தனை காத்திருப்புகள். இத்தனை வருடங்களின் கனவுகளுடனான ஏக்கங்கள். ஒற்றை முத்தத்தில் முடிந்துவிட கூடியதா?
பேசி தீர்க்கபடாத பிரச்சனைகள் எல்லாம் அப்படியே இருந்தது. பிரிந்த காரணங்களும், இணைந்த காரணங்களும் அவர்களை விட்டு விலகி வேடிக்கை பார்க்க இருவருமே ஒருவரில் ஒருவர் ஒன்றி போய் இருந்தார்கள்.
முத்தங்களால் அவளின் முகத்தை நிறைத்துக்கொண்டே அவன் இருக்க கண்மூடி மறுப்பின்றி அவற்றை உள்வாங்கிக்கொண்டாள் இதயா.
“தவிக்க விட்டுட்டடி நீ…” என்று அவளை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள மூடிய விழிகளை திறக்கவே இல்லை. அவனை விட்டும் விலகவில்லை.
“இப்போ ஓகே தானே?…” என்று கேட்க,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் கைகள் இன்னும் இறுக்கமாய் அவனின் பனியனை பற்றியிருந்தது.
“சரி தூங்கு. எனக்கும் டயர்ட்…” என்று சொல்லியும் அவள் விலகாமல் போக,
“இந்த பக்கம் வா இதயா. ரைட் ஹேண்ட் வலிக்குது. லெப்ட் சைட் வா…” என்றதும் அவனில் இருந்து மறுபக்கம் வந்தவள் அவனின் கைவளைவிற்குள்ளேயே தலைசாய்த்துக்கொண்டாள்.
அதிகாலை எழுந்து பாத்ரூமிற்கு செல்ல முயல அப்போதும் விடாமல் பதறி எழுந்துகொண்டவள்,
“எங்க எங்க போறீங்க?…” என்றாள் இன்னும் கலக்கம் தெளியாத முகத்துடன்.
“வாஷ்ரூம் தானே போறேன். எங்கயும் போகலை. என்ன நீ?…” என்றான் அவளின் கன்னம் பற்றியபடி.
“ஓஹ், சரி…” என்றவள் அவன் வரும் வரை காத்திருக்க திரும்பி வந்தவன் அவளை பார்த்துவிட்டு,
“இதெல்லாம் பழகிக்கனும். இதயா என்ன பொண்ணு நீ? நம்மோட லைப்ல இதெல்லாம் இனி சர்வசாதாரணமா நடக்கும். இந்த பிரச்சனை எல்லாம் ஒண்ணுமே இல்லை. எதையும் பேஸ் பண்ணனும்…” என்று மென்மையாக எடுத்து சொல்ல கேட்டுக்கொண்டாள் தான். ஆனாலும்,
“பழகனுமா? ரொம்பவே சோதிக்கிறீங்க. ப்ச்…” என்று அவன் மேல் சாய்ந்துகொள்ள,
“கண்ணனாச்சே. உன்னையும் சோதிச்சு என்னையும் சோதிச்சுக்கிட்டேன். இனி சோதிக்க எவ்வளவோ இருக்கு. அதை பார்ப்போம்…” என்று மெல்ல திரும்பி அவளை அணைக்க,
“கை வலி இருக்கும். நேரா படுங்க…” என்றாள் அதட்டி.
“இப்ப நீ தான் சோதிக்கிற. லேசான வலி தான். மேனேஜ் பண்ணிப்பேன்…” என்றான் குறும்புடன்.
“அதெல்லாம் முடியாது. இன்னும் கொஞ்சம் நேரத்துல வெளிச்சம் வந்திரும். தூங்குங்க கொஞ்சமாச்சும்…”
“தூங்கவாடி அத்தனை குடுத்தேன்?…” என்று அவன் அவளின் கன்னத்தில் அழுத்தம் கொடுக்க,
“ஆமான்னு வச்சுக்கோங்க. இப்போ கண்ணை மூடுங்க…” என்று அவனின் கண்களை தன் கைகளை கொண்டு மூட,
“இதயா…” என்றவனின் பேச்சையும் இன்னொரு கையால் நிறுத்தினாள்.
கேட்கமாட்டாள் என்று முடிந்தளவு அவளை தன் அணைப்பிற்குள் வைத்துக்கொண்டே உறங்க முயன்றான் கண்ணன்.
அவன் உறங்கினானோ இல்லையோ இதயா உறங்கவில்லை. விழித்துக்கொண்டே இருந்தாள். அவளின் ஆழ்மனதும் கூட விழித்துக்கொண்டது பொத்திவைத்திருந்த காதலுடன்.
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியர்க்கிறேன் வியக்கிறேன்
எனக்கு நானல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழலென தொடர்கிறேன்