ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 22
காலை எழுந்ததில் இருந்து அத்தனை முறை எழுப்பிவிட்டான் இதயாவை. கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை.
“வர வர ரொம்ப சோம்பேறி ஆகிட்ட நீ…” என்று அவளை சத்தம் போட்டுக்கொண்டே தான் கிளம்பியவன்,
“சாப்பாடும் இல்லை…” என்றதும் படக்கென்று எழுந்தவள்,
“நேத்து தான் கைல அடி பட்டிருக்குல. நீங்க லீவ் போடுவீங்கன்னு நினைச்சேன். இப்படி போட்டு படுத்தறீங்க?…”
“நான் எதுக்கு லீவ் போடனும்? ஏற்கனவே தலைக்கு மேல பிரச்சனை. இதுல லீவ் போட்டா முடிஞ்சது…”
“நல்ல கலெக்ட்டர். நீங்க லீவ் போட்டா தானே உங்களை பார்த்துக்கற சாக்குல நானும் லீவ் போட முடியும்…” என்றாள் இதயா.
“அப்படி சொல்லு, அதானே என்னடான்னு பார்த்தேன்…” என்றவன்,
“நீ சமைக்கவும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம். முதல்ல கிளம்பி வா. வெளில சொல்லிக்கலாம்…” என்று சொல்ல,
“இதுக்கா மாவரைச்சு வச்சேன்? அதெல்லாம் வேண்டாம். அப்பறம் சேரலைன்னு சொல்லிட்டு இருப்பீங்க…” என பேசியபடி எழுந்து உடையை எடுத்துவைக்க அவளையே பார்த்தபடி இருந்தவன்,
“கல்யாணம் முடிஞ்சதுல இருந்தே வெளி சாப்பாடு தான். அப்போ எங்க போச்சு இந்த அக்கறை?…” என கேட்க,
“அக்கறை எப்ப காட்டனும்னு எனக்கும் தெரியும். அதை காட்டற மாதிரி சூழ்நிலையை நீங்க எனக்கு குடுக்கலை. அதையும் மறந்திடாதீங்க…” என்று அவனுக்கு திருப்பி கொடுத்துவிட்டே அவள் சென்றாள்.
“தேவையாடா உனக்கு? வாயை குடுத்து வாங்கிக்கற…” என தன் தலையில் அடித்துக்கொண்டவன் தலைவார கையை தூக்க ஷர்ட் கையின் வீக்கத்தில் இறுக்கி பிடித்ததை போல இருந்தது.
“ப்ச், இதுவேற…” என்று சலித்தபடி அந்த ஷர்ட்டை கழற்றியவன் வேறு கொஞ்சம் பெரிய அளவில் ஏதேனும் உள்ளதா என்று தேடினான்.
அதற்குள் அரக்கப்பரக்க குளித்து வந்தவள் இன்னும் அவன் கபோர்டில் துழாவியபடி இருக்க,
“என்னை கிளம்புன்னு சொல்லிட்டு நீங்க ஏன் போட்டிருந்த ஷர்ட்டை கழட்டி வச்சிருக்கீங்க?…”
“ப்ச், அந்த ஷர்ட்ல கைக்கிட்ட டைட்டா இருக்குது. அதான் வேற ஷர்ட் தேடிட்டு இருக்கேன்…” என்றதும் வேகமாய் அவனருகே வந்தவள்,
“தேவையா உங்களுக்கு?…”
“தேடி போயா வாங்குவாங்க? சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?…” என்றான் கிண்டலாக சிரித்தபடியே.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. இப்போலாம் நிறைய பேச பழகிட்டீங்க இல்ல?…” என்றாள் இதயா அவனின் முகத்தை பார்த்தபடி.
“ஹ்ம்ம்…” என்றவன் பேச்சை மாற்றவென,
“நேரமாகுது இதயா…” என்று அவளை கிளம்ப சொல்லிவிட்டு ஷர்ட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அதற்குள் அவளும் புடவை மாற்றி கிளம்பி வர அருகில் இருந்த ஹோட்டலில் இருந்து உணவும் வந்திருந்தது.
“லஞ்ச் நீ கேண்டீன்ல சொல்லிக்கோ. நான் பார்த்துக்கறேன்…” என சொல்லி சாப்பிட்டு முடித்து கிளம்பி வெளியே வந்தான்.
அலுவலகத்தில் வந்து சற்று நேரத்தில் மீண்டும் கிளம்பி மினிஸ்டரை பார்த்துவிட்டு என்று வந்தவன் வரும் வழியில் ஹாஸ்பிட்டல் சென்று வந்தான்.
அன்று மிருணாவும், நளினியும் என்ன நடந்தது என்று பேசிக்கொண்டிருக்க அலுவலகம் மொத்தமும் வேலையில் இருந்தாலும் கிடைத்த நேரமெல்லாம் முதல்நாள் கலவரத்தை பற்றிய பேச்சுக்கள் தாம்.
முன்பை போலவெல்லாம் யாராலும் வேலையை ஒத்திபோட்டு நேரம் கடத்தி ஒப்பேற்ற முடியவில்லை.
அது நேரடியாக கண்ணனின் பார்வைக்கு செல்ல அதற்கு பயந்தே உடனுக்குடன் வேலைகள் துரிதமாக்கப்பட்டது.
மாலை அனைவரும் கிளம்ப கண்ணன் வரவும் நேரமாக, அவனறைக்கு செல்வோமா வேண்டாமா என்னும் யோசனையிலேயே இருந்தாள் இதயா.
ஏற்கனவே காலையில் இருந்து வீட்டில் அழைத்து மாறி மாறி விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.
உடனே கிளம்பி வரட்டுமா என்ன என்பதை போல பேச அவர்களை சமாளிக்கவே களைத்து போனாள் இவள்.
வார விடுமுறைக்கு இன்னும் இருநாட்கள் இருக்க இந்த அழுத்தத்தில் இருந்து எங்காவது சென்றால் தான் என்ன என்று தோன்றியது.
கண்ணன் நேரம் ஆவதை உணர்ந்து அவளை கிளம்ப சொல்லலாம் என்று கால் செய்ய,
“இல்ல, முடிச்சுட்டே வாங்க. சேர்ந்தே போகலாம். அங்க போய் என்ன பண்ண போறேன்?…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
போனை வைத்தவனின் இதழ்களில் ஒரு குறுஞ்சிரிப்பு. வாழவே வரமாட்டேன் என்றவள் இப்போது தனியே செல்ல முடியாதென்று சொல்ல மனதிற்கு அப்படி ஒரு தித்திப்பு.
பின் அதற்கு மேலும் தாமதிக்காமல் பைல்களை எல்லாம் வீட்டிற்கு எடுத்து சென்று பார்ப்பதென்று எடுத்து வைக்க சொல்லிவிட்டு கிளம்பினான்.
இதயாவையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வர வரும் பொழுதே அப்படி ஒரு தூக்கம் வர கண்ணை கசக்கி விழித்துக்கொண்டே வந்தாள்.
“தூக்கம் வந்தா தூங்கு. ஏன் இவ்வளோ ட்ரை பன்ற?…” என கண்ணன் சொல்ல,
“இல்ல வேண்டாம்…” என்றவள் அவனை பார்க்கவும், ஜன்னல் பக்கம் திரும்பவுமாக இருந்தாள்.
வீட்டிற்கு வந்ததுமே மாத்திரைகளை எடுத்து டையனிங் டேபிளில் வைக்க அதை பார்த்ததுமே,
“ஹாஸ்பிட்டல் போனீங்களா?…” என்றாள்.
“ஹ்ம்ம், இன்னும் வீக்கம் குறையலை இல்லையா? அதான் போய் பார்த்துட்டே வந்தேன்…”
“என்கிட்டே சொல்லவே இல்லையே…”
“அதான் சொல்லிட்டேன்ல. மருந்து குடுத்திருக்காங்க. அதை தடவினா சரியாகிடும். நைட், மார்னிங் சாப்பாட்டுக்கு அப்பறம் போட டேப்லட்ஸ். வலி அதிகமா இருந்தா மட்டும்…”
“ஓஹ்…” என்றவள் ஒன்றும் பேசவில்லை.
முதல் நாள் தான் தான் அவனிடம் அதிகமாய் ஒட்டிக்கொண்டோமோ என்று மனது முரண்டியது.
அவளின் முகம் மாறிவிட்டதுமே கண்டுகொண்டவன் நறுக்கென தலையில் ஒரு குட்டுவைத்தான்.
“இப்ப எதுக்கு உடனே டல்லாகிட்ட? எதையாச்சும் பழையபடி பிடிச்சுக்கிட்டு நின்ன அவ்வளோ தான். திரும்ப முதல்ல இருந்து என்னால முடியாதுடி…”
கண்ணன் சோர்வுடன் சென்று அமர்ந்துகொள்ள இதயாவிற்கு தன் எண்ணங்களுக்கு தடை போடவும் முடியவில்லை. அதே நேரம் அதை ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை.
மீண்டும் மீண்டும் நினைவுகள் அங்கேயும் இங்கேயுமாய் நெஞ்சில் அலைபாய தத்தளித்து நின்றாள்.
“இதயா…” என்றவனின் அழுத்தமான அழைப்பில்,
“ஹ்ம்ம்…” என திடுக்கிட்டு பார்க்க,
“குடிக்க தண்ணி கொண்டுவா….” என்றான் கண்ணன்.
அவனின் முகத்தில் இருந்த உணர்வுகளை கண்டு அமைதியானவள் தண்ணீர் எடுத்து வந்து நீட்ட,
“உட்கார்…” என கை பிடித்து அமர்த்தியவன்,
“உனக்கு தான். முதல்ல குடிச்சு முடி…” என்றான்.
“சொல்லியிருந்தா அங்கயே குடிச்சிருப்பேன்ல?…” என்று முகம் சுருக்கி சொல்லவுமே பக்கென்று சிரித்தவன்,
“உனக்கு உன் கவலை. நானே எடுத்து வைக்கிறேன். இப்ப என்ன? எதுக்கு திரும்ப முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க? என்னடா இவன் நமட்ட ஒண்ணுமே சொல்லாம அவன் இஷ்டத்துக்கு தான் இருக்கான். அப்படித்தான நினைக்கிற?…” என கேட்க அவள் மௌனமாக இருந்தாள்.
“வெளில போய்ட்டு வரும் போதே ஹாஸ்பிட்டல் பார்த்தேன். ஆபீஸ் வந்துட்டா அதுக்குன்னு தனியா போக நேரமிருக்குமோ என்னவோ? அதான், பார்த்துட்டு வந்தேன். இதை ஆபீஸ்ல வச்சு சொல்ல முடியாதே?…”
அவன் சொல்லுவதில் இருந்த நியாயம் பிடிபட்டாலும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற அதே நேரத்தில் தானும் இதை சொல்லாமல் விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் மேலோங்கியது.
“என் மேலையும் தப்பு இருக்குது…” என்றாள் மெல்ல.
“அப்படியா? என்ன தப்பு?…” என்று அவள் பக்கம் திரும்பி அமர்ந்து கால்களை மடக்கிக்கொண்டான்.
“நானும் சொல்லவே இல்லை ஹாஸ்பிட்டல் போகலாம்ன்னு. உங்களுக்கு எப்படி இருக்குன்னு நான் யோசிக்கவே இல்லை…” என்று சொல்ல,
“ஓஹ், அதை சொல்றியா? இன்னும் என் மேல உள்ள கோபம் முழுசா போகாம இருந்திருக்கலாம். அதான் உன்னால அதை யோசிக்க முடியலை. இதுவுமே…”
“ஆமா, எப்படி போகும்? அது போகாது தானே? அன்னைக்கு உங்களுக்கு தெரியாம பேசினதுக்கு நீங்க பொறுப்பில்லை. உங்க கண்ணுமுன்னாடி பேசினதுக்கு கூட நீங்க பதில் பேசாம என்னை போக சொன்னா? கோபம் போய்டுமா?…”
இதயாவின் கேள்வியில் கண்ணன் மௌனமாக அப்போதும் அவன் ஒன்றும் பேசாமல் இருக்க,
“இதான், இதான் எனக்கு பிடிக்கலை. பேச வேண்டிய இடத்துல பேசத்தானே செய்யனும்? நீங்க சண்டை போடுங்கன்னா கேட்டேன்? எனக்காக ஒரு வார்த்தை அன்னைக்கு நீங்க பேசிருந்திருக்கலாம் தானே? உங்களுக்கு அந்த கடமை கூடவா இல்லை?…”
“இதயா அன்னைக்கு இருந்த நிலைமை வேற. சொல்ல போனா அந்த சூழ்நிலையை என்னால ஹேண்டில் பண்ண முடியலை. இன்னும் பிரச்சனை பெருசாகாம இருக்க என்ன பண்ணனும்னு யோசிக்கும் போது உன்னை தான் என்னால சொல்ல முடிஞ்சது…”
“ப்ச், இப்போ பேசி என்ன செய்ய?…” என்றாள் இதயா சலிப்பாக.
“அப்பறம் எதுக்கு அப்பப்ப முகத்தை தூக்கி வச்சுக்கற?…”
“ஓஹ் அப்போ இதை அப்படியே மறந்திடனும், இல்ல?…” என்று முறைக்க,
“நான் அப்படி சொல்லலை இதயா. ப்ளீஸ். அதை அங்கயே விடு. அப்படியே விடு. அவ்வளோ தான். இதை வேற எப்படி சால்வ் பன்றது?…” என்றவன்,
“ஊர் பிரச்சனையை கூட சரி பண்ணிடலாம். வீட்டு பிரச்சனைக்கு தான் ஒரு முடிவே இல்லாம போகுது…” என கண்ணன் பெருமூச்சு விட இன்னும் கடுப்பாகிவிட்டாள்.
“அதானே? கவர்மென்ட் என்ன உங்க பொண்டாட்டியா? சண்டை போடற இடத்துல நீங்க சைலண்டா இருந்தாலும் ஒன்னும் கேட்காம இருக்க? இங்க விசாரணை கமிஷன் வைப்பான்ல? பதில் சொல்லனும்ல?…” என்று கிடுக்கிப்பிடி போட,
“என்னடி செய்ய சொல்ற?…” என்றவன் லேசாய் கையை தூக்கி சோபாவின் கைப்பிடியில் வைக்கையில் முகம் சுருக்க,
“ரொம்ப வலிக்குதா?…” என்றாள் மனம் பதற.
அவளின் அருகாமையிலும் தவிப்பிலும் மனது உருக ஆறுதலாய் அணைக்க நினைத்தவன் இதயாவை அருகே அழைக்க,
“என்ன?…” என்றாள்.
“பக்கத்துல வாயேன். அணைச்சுக்கனும்னு தோணுது…” என்று சொல்ல,
“கையை தூக்கவே முடியலை. இதுல உங்களுக்கு கிளுகிளுப்பு. பேசாம ரெஸ்ட் எடுங்க. டீ கொண்டுவரேன்…” என்றவள் அவனின் கள்ளப்புன்னகை புரிந்த கன்னத்தில் லேசாய் இடித்துவிட்டே சென்றாள்.
“ஹேய் வலிக்குதுடி…” என்று கன்னைத்தை தேய்த்துக்கொண்டவன் செல்பவளை பார்த்தபடி இருந்தான்.
அவனுக்கு ஒன்றுமட்டும் புரிந்துபோனது. திருமணத்தை ஒட்டிய அந்த பிரச்சனை தங்களின் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று.
எந்த நிலையிலும் அவளும் அதை மறக்க போவதில்லை என்பது உணர்ந்தவன் தன்னாலேயே மறக்கமுடியவில்லை. அவளால் முடியுமா? என்று தான் தோன்றியது.
சற்று நேரத்தில் டீயுடன் வந்தவளோடு பேசியபடி குடித்து முடித்தவன் கொண்டுவந்த பைல்களை பார்க்க செல்ல,
“இன்னும் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தா என்னவாம்?…” என்ற முணுமுணுப்புடன் செல்ல தப்பாமல் அவனின் காதுகளிலும் விழுந்தது.