ஆனாலும் வேலை இருக்கிறதே ஒரு சிரிப்போடு கொண்டுவந்த பைலில் மூழ்கி போனாலும் அவ்வப்போது இவள் என்ன செய்கிறாள் என்ற பார்வையிடவும் மறக்கவில்லை.
இரவு உணவு நேரமும் கடந்து போக கண்ணன் வருவேனா ஏன்பதை போல இருந்தான். முதல்நாள் நடந்ததை போல அன்றும் பிரச்சனை ஆகிவிட கூடாதென்பதில் அத்தனை சிரத்தை அவனுக்கு.
காவல்துறைக்கு அத்தனை எச்சரிக்கையை விடுத்திருந்தான். பாராபட்சம் பார்க்காமல் பிரச்சனைக்குரியவர் யாராக இருந்தாலும் உடனே கைது செய்யும் படி ஆணையிட்டிருக்க மாற்றி மாற்றி போன் வேறு அவனுக்கு வந்துகொண்டே இருந்தது.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் அவனின் டென்ஷன் முகத்தை கண்டு மேலும் சூடேற்ற வேண்டாம் என வாயை அடக்கிக்கொண்டாள்.
ஒரு கிண்ணத்தில் இட்லியை வைத்து சாம்பாரையும் ஊற்றி ஸ்பூனை போட்டு டேபிளில் வைக்க,
“என்ன இது?…” என்றான் அவன்.
“மணி ஒன்பதாச்சு. சாப்பிட வர மாதிரி தெரியலை. எனக்கு பசிக்குது. அதான். நீங்க சாப்பிட்டு மாத்திரையை போடுங்க…” என்று சொல்ல,
“ஸாரிடா, உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலை…” என்றான் கண்ணன்.
அதற்கு ஒரு முறைப்பு முறைத்துவிட்டே அவள் செல்ல ஒரு சிரிப்போடு இட்லியை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான்.
அவனுக்கும் தெரிந்தது தானும் சற்று அதிகமாக போகிறோமோ என்று. ஆனாலும் அந்த பதவி அவனை வைத்து செய்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அங்கு வந்ததில் இருந்து ஏகப்பட்ட குளறுபடிகள். அவற்றை எல்லாம் கண்டுபிடிக்கவே நாட்கள் கடக்க இப்போது சரி செய்யும் பணியுடன் அன்றாட வேலைகளும், அதை கொண்டே பல குடைச்சல்களும்.
இவற்றை எல்லாம் கண்டு அச்சமானால் வேலைக்காகுமா? ‘வேலையிலாவது நேர்மையா இருங்க’ என்ற மனைவியின் மந்திரம் எப்போதுமே அவனை தீப்பற்ற செய்யும்.
அவன் சறுக்கிய இடமல்லவா? வாழ்க்கையில் மிக மிக மோசமாக சறுக்கிய இடம். சரி செய்யும் வாய்ப்புகளை பக்காவாக சொதப்பியவனும் கூட.
இப்படி மெல்ல உணவை முடித்தபடி நிமிர்ந்து பார்க்க முதல்நாள் போல சோபாவை இழுத்து போட்டு அதில் படுத்திருந்தாள் இதயா.
“இவளுக்கு தனியா தூங்க பயம் கூட இல்லையே? ஏன் இப்படி தூங்கறா?…” என்ற யோசனையுடன் அதற்கு மேலும் அமர முடியாமல் வேலையை எல்லாம் ஒற்றிவைத்தவனாக எழுந்துகொண்டான்.
சாப்பிட்டவற்றை கொண்டு கிட்சனில் போட்டுவிட்டு வர அதை பார்த்துக்கொண்டு இருந்தாலும் இதயா கண்டுகொள்ளவில்லை.
‘என்னவும் செய்துகொள்’ என்று படுத்திருந்தவள் கண்ணன் அத்தனை விளக்குகளையும் அணைத்துவிட்டு அவளருகே வர படக்கென்று கண்ணை மூடிக்கொண்டாள்.
சில நொடி அவளின் முகத்திற்கு நேராய் இடுப்பில் கை வைத்து நின்றவன் அவள் அசையாமல் இருக்க,
“நீ தூங்கலைன்னு தெரியும். எழுந்துக்கோ. உள்ள வா…” என அழைக்க,
“ம்ஹூம். இன்னைக்கு இங்க தான் தூங்குவேன்…” என்று அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பி படுத்துக்கொள்ள,
“அடங்கமாட்டடி நீ…” என்றவன் யோசிக்காமல் கைகளில் அள்ளிக்கொண்டான்.
“விடுங்க, விடுங்க நீங்க. கை வலிக்கும்…” என்று துள்ள,
“அப்போ நீ என்னை தூக்கிக்கயேன்…” என்றான் குறுஞ்சிரிப்போடு.
“ஆசை தான். கை வலிக்கும். விடுங்க…”
“அதெல்லாம் மேனேஜ் பண்ணிக்கலாம்…” என்றான் தன் விரல்களுக்கு அழுத்தம் கொடுத்தவனாக.
அவனின் இந்த நெருக்கம் மனதிற்குள் ஓங்கார ஓசையை எழுப்ப அவனின் கைகளில் நெளிந்தாள்.
“இறக்கி விடுங்க, ப்ளீஸ். நானே உள்ள வரேன்…” என்று இப்போது கெஞ்ச,
“ஹ்ம்ம், உள்ள வந்து…” என்று அவளை வைத்துக்கொண்டே மெல்ல இங்குமங்குமாய் சுற்ற,
“ஆமா, டேப்லெட் போட்டாச்சா?…” என்றாள் பேச்சை மாற்ற.
“இல்லையே…”
“ப்ச், மெனக்கெட்டு டாக்டரையும் பார்த்துட்டு வந்து டேப்லேட்டும் போடாம. விடுங்க. நானே போய் எடுத்துட்டு வரேன்…”
“ம்ஹூம், வேண்டாம். வலிச்சா தான் போட்டுக்க சொல்லிருக்காங்க…” என்றவன் அவளின் முகத்தையே ஒரு புன்னகையுடன் பார்த்திருக்க அவனிடம் இருந்து விலக முடியாமல் அங்குமிங்குமாய் விழிகளை சுழற்றியவள்,
“எவ்வளவு நேரம் கைல வச்சிருப்பீங்க? உள்ள போவோம்…”
“அது நான் எழுப்பும் போதே வந்திருக்கனும். இப்போ நீ உன் இஷ்டத்துக்கு சொன்னா?…” என்றவன் வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
“எனெக்கென்ன? உங்க கை தான் வலிக்கும். வலிக்கட்டும்…” என்றவளின் வார்த்தைகள் தடுமாறி திணற,
“என்னவாம் ஹார்ட்பீட்? பேச்சே உளறுது…” என்றவனின் கேலி சிரிப்பில் அவனின் தோளில் கிள்ளி வைத்தவள்,
“இறக்கி விடுங்க. இல்ல டென்ஷன் ஆகிடுவேன்…”
“நான் எப்பவோ ஆகிட்டேன். உனக்கு தான் புரியலை…” என்றான் அப்போதும்.
அவளின் தவிப்புகளை நிதானமாக ரசித்தவனின் மனநிலையே மாறி போக குறுங்கடலென அவனின் உணர்வுகள் கொதிக்க ஆரம்பிக்க கட்டிவைத்த ஆசைகள் அணையுடைக்க ஆர்ப்பரித்தது.
“இதயா…” அவனின் குரலே மாறிவிட்டிருக்க,
“ம்ஹூம், நீங்க சரியில்லை. விடுங்க, நான் தூங்க போகனும்…”
“நான் கூப்பிடும் போதே வந்திருந்தா விட்டிருந்திருப்பேன். தூங்க தான கூப்பிட்டேன் உன்னை…” என்று சிரிக்க,
“சிரிக்காதீங்க…” என்றாள் அவனின் வாயை கைகளால் மூடி.
“ஏதோ நேத்து அடிபட்டதுல பாவமேன்னு கையை பிடிச்சு பக்கத்துல வந்தா ரொம்ப பன்றீங்க. தள்ளி போங்க…”
“நேத்து கோழிக்குஞ்சு மாதிரி சாஃப்டா இருந்தியேடி…” என்றான் சில்லாகிப்புடன்.
“அது நீங்க சிரிச்சே மயக்கிட்டீங்க…”
“யாரு நீ? நான் சிரிச்சு, நீ மயங்கின? இந்த வேலை தானே வேண்டாம்ங்கறது. மனுஷனை பாடா படுத்திட்டு என்னம்மா டிமிக்கி குடுக்கற நீ?…” என்றவனின் கைகள் லேசாய் தளர துள்ளி இறங்கினாள்.
தள்ளி நின்று அவனை பார்த்தவள் அவனின் பார்வையுடன் விழிகள் கோர்த்து நின்று,
“உள்ள போங்க. இல்ல தள்ளி நில்லுங்க…” என சொல்ல,
“ம்ஹூம். நீயே போய்க்கோ…” என்று சிரிப்போடு சுவற்றில் சாய்ந்து நிற்க அவனின் பார்வையும், நின்ற தோரணையும், அந்த புன்னகையும் மனதை மயக்கியது.
அத்தனையையும் உடைத்துவிட்டு அவனின் கைகளில் சரண் புக இதயம் ஆர்ப்பரித்தது.
அவளின் விழிகளின் நடனமே நாணத்தயக்கத்தை பிரதிபலிக்க தயங்காமல் அவளை நெருங்கினான் ஆசைத்தீயுடன்.
“இதயா இப்போ என்னை மட்டுமே நினை நீ. நம்மோட வாழ்க்கையோட அடுத்தக்கட்டம். ரெண்டுபேரோட முழு ஒப்புதலோட விருப்பத்தோட அரங்கேற வேண்டிய ஒரு விஷயம். புரியுதா இதயா?…”
தன்னிருகைகளாலும் அவளின் கன்னம் தாங்கி நேசம் பொங்க கேட்க இதயா தன் சம்மதத்தை அவனின் தோள் சாய்ந்து ஒப்புவிக்க நிறைவோடு அவளை அணைத்துக்கொண்டான்.
தீண்டலில் தொடங்கி முத்தத்தை விழுங்கி கன்னத்தோடு கன்னம் உரச பெண்ணவளை கொண்டாடினான் மன்னவன்.
நெருங்காமல் நெருப்பில்லை. நெருங்கியவன் சூழ்ந்துகொண்டான் தன் பூங்கொடியை.
“அச்சோ கை வலிக்கும்…”
“நான் மேனேஜ் பண்ணிப்பேன். மூச், நீ என் மேல கான்சன்ட்ரெட் பண்ணு…” என்றவன் அவளின் பேச்சிற்கு தடைவிதித்து தான் மட்டுமே மொழி சிந்தினான்.
கோடி கனவுகள் கொண்டு கோர்த்து வைத்த ஷணங்களின் அத்தனை ஏக்கங்களையும் தீரா தேடல்களையும் மெல்லிய மென்மையும், வன்மையுமான ஸ்பரிசங்கள் உணர்த்தியது இருவருக்குமே.
தனித்தனியே உணரப்பட்ட அந்த முடிவில்லா ஸ்வப்பன ஸ்பரிசங்களின் பயணம் இருபது விரல்களின் கோர்ப்பில் ஒருவழிப்பாதையில் திசைமாறியது.
களைத்து விலகியவனின் பார்வை மனைவியை வருட கண்மூடி ஓவியமென இருந்தவளின் முகத்தின் சிறு புன்னகையில் முகம் மலர்ந்தான்.
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் நானே
நாணத்தாலோர் ஆடை சூடி கொள்வேன் நானே
பேசிக்கொள்ளாத மௌனம். இருவரின் கைவிரல்கள் மட்டும் தங்களின் பரிபாஷையில் திளைத்திருக்க வார்த்தைகளற்ற அந்த அருகாமையே போதும் என்பதை போல மெல்ல கண்ணுறங்கினார்கள்.
தீர்க்கப்படாத பிரச்சனைகள் தீர்வின்றியே போகட்டும் என்றதை போல அவற்றை பற்றிய எந்த எண்ணமும் இல்லை.
மறுநாள் காலை வழக்கம் போல அவளை எழுப்ப அன்று சுத்தம். அவள் கண் திறக்கவே மறுத்தாள்.
“பேசாம போயிருங்க. இன்னைக்கு சுத்தமா முடியாது. எந்த ஆக்ஷனும் எடுத்துக்கோங்க…”
“உன்கிட்ட என்ன ஆக்ஷன் எடுக்க?…”
“ஆமா நேத்து ஒண்ணுமே எடுத்துக்கலை தான்…” என்றவளின் முணுமுணுப்பில் சிரிப்பு பொங்கியது கண்ணனுக்கு.
“நான் வெக்கப்பட்டுட்டேன் போ. கிளம்புடி. நான் மட்டும் ஆபீஸ் போகனுமா?…” என்று அவளை படுத்தி எடுத்தான்.
“இன்னைக்கு பக்கத்துல வாங்க வச்சிக்கறேன். இனிமே வீக்கென்ட் கூட நோ…” என்று அவள் கண்களை உருட்ட அவளை பார்த்து வாய்பொத்தி சிரித்தவன்,
“என்னனு லீவ் சொல்லுவ?…”
“நான் ஏன் சொல்றேன்? நீங்க சொல்லிக்கோங்க. இன்னும் பத்துநாளைக்கு ஆபீஸ் வர முடியாதுன்னு என்ன எழுதனுமோ எக்கச்சக்க பிட் போட்டு நீங்களே எழுதி குடுத்து சைன் பண்ணிக்கோங்க…”
“இதெல்லாம் அநியாயம். நீ மட்டும் ரெஸ்ட் எடுப்பியா? கிளம்பு கிளம்பு…”
“இதை நீங்க நேத்தே யோசிச்சிருந்திருக்கனும். நேத்தும் தூங்கலை. முந்தாநாளும் தூங்கலை. தூங்காம இருந்தா நான் என்னாகறதாம்?. நீங்க ஆபீசரா வரதுக்கு முன்னடி நினைச்சா லீவ். பர்மிஷன்னு சந்தோஷமா இருந்தேன். நீங்க வந்ததுல இருந்தே லீவும் போச்சு. பர்மிஷனும் பணால்…”
மூச்சு விடைக்க அவனிடம் பேசிக்கொண்டே சட்டையை பிடித்து இழுத்து அவனின் மேல் சாய்ந்திருந்தாள்.
“இதான் கோபத்துல கொந்தளிக்கிறதா? ஷர்ட் கசங்கி போச்சு. உன்னோட சேர்ந்து நானும் கெட்டு போய்ட்டேன்…” என்றவனின் கைகள் அவனின் பேச்சை கேட்டால் தானே?
“ப்ளீஸ், நான் வரலை. அங்க முன்ன மாதிரி ஓபி அடிக்க முடியாது. வேலையும் இன்னைக்கு பார்க்க முடியாது. சும்மாவே மிருணா ஓட்டுவா என்னை. இன்னைக்கு நானே எடுத்து குடுத்திருவேன். என் மூஞ்சியே காட்டிக்குடுத்துரும்…”என்றவளின் பேச்சில் கண்ணன் முறைக்க,
“பேசாம நீங்களும் லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாம்ல…” என்று அவனுக்கு ஐடியா தர,
“லீவ் போட்டுடுவேன். அப்பறம் ரெஸ்ட்டுக்கு தான் ரெஸ்ட்…” என்றதும் இதயா சிரிக்க,
“உண்மையில சிரிச்சு மயக்கறது நீ தான்டி…” என மெல்ல அவளின் அதரங்களில் தன்னை தொலைத்தவனின் மொபைல் சிணுங்க,
“ம்ம்ம்…” என்று அவனை விலக்கினாள் இதயா.
“ப்ச், என்ன உன் பிரச்சனை?…”
“எனக்கொண்ணும் இல்லை. ஆபீசருக்கு தான் போன்…” என்று அவள் சிரிக்க,
“இந்த வேர்ட் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு?…” என்றான் அவளின் கன்னம் பற்றி லேசாய் கரகரத்த குரலுடன்.
அப்போது தான், தான் அவனை சொல்லிய அந்த வார்த்தை ஞாபகம் வர இதயாவின் முகமும் கலங்கி போக தொண்டையடைத்தது.
“நிறைய விஷயங்களுக்காக நாம நம்மளை தொலைக்க இருந்தோம் இல்லயா?…”
“இல்ல, நான் நான்தான் தொலைஞ்சு போக இருந்தேன். இப்பவும் நான் செஞ்சது தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனாலும் ஆனாலும்…” என்றவளின் விசும்பலில் தன்னை தானே கடிந்துகொண்டவன்,
“ஹேய் என்னடா இது? இதுக்கு போய் கலங்கிட்டு? நீ செஞ்சதுல எந்த தப்பும் இல்லை. நானுமே தப்பு பண்ணிருக்கேன். ப்ச், அதை பேசவேண்டாம்…” என்று அவளின் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்திக்கொள்ள மீண்டும் அவனின் மொபைல்.
“ப்ச், இவரோட இம்சை தான்…” என்றபடி போனை எடுத்து காதில் வைத்தவன்,
“அகிலன் இன்னைக்கு ஒரு ஒருமணி நேரம் லேட் ஆகும் வர. பார்த்துக்கோங்க…” என்று அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே கேட்காமல் இவன் பேச,
“ஸார் உடம்புக்கு எதுவும் முடியலையா? நான் வேணா டாக்டரை அழைச்சுட்டு வரட்டுமா?…” என்றார் அகிலன் வேகமாய்.
“சுத்தம்…” என்று நெற்றியை தட்டிக்கொண்டவன்,
“ஆமா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்…” என்று சொல்லி போனை வைக்க அவனின் பேச்சில் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் இதயா.
“உன்னால பாரு…” என்று கண்ணனும் சேர்ந்து சிரிக்க,
“முதல்ல அப்படித்தான் இருக்கும். அப்பறம் போக போக இதுவே பழகிரும்…” என கேலி பேச,
“இந்த மாவட்டத்துக்கு வந்த சோதனை…” என்று அவனும் சேர்ந்துகொண்டான் அவளுடன்.
எத்தனை பிரச்சனைகளிலும் அவளிடம் அவனுக்கான தேடலை ஒருபோதும் தொலைத்ததில்லை. இனி தொலைப்பதாகவும் இல்லை.
எப்பொழுதும் உன் ஸ்வப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டாய் என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா