ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 23
சில மாதங்களுக்கு பிறகு…..
பதினோரு வகை சாதமும் அதற்கேற்ப கறி வகைகளும் என்று வீடே மணத்துக்கொண்டிருந்தது.
அன்று காலை தான் இதயாவிற்கு வளைகாப்பு போடப்பட்டிருக்க இன்னும் சிறிது நேரத்தில் சிதம்பரத்திற்கு கிளம்ப இருக்கிறாள்.
வளைகாப்பு என்றதுமே எத்தனை சந்தோஷம் இருந்ததோ அதேபோல அவள் சென்றுவிடுவாள் என்ற வருத்தமும் இன்னும் அதிகமாய் சுரந்தது கண்ணனின் மனதில்.
ஆனாலும் இதை எல்லாம் காட்டிக்கொள்ள முடியாதே. நிறைய விஷயங்களை அவன் இயல்பாய் எடுத்துக்கொண்டாலும் சில நிகழ்வுகள் ஏற்கமுடியாததாக இருந்தது.
‘இப்ப இப்படி இருக்கிறவன் தான் அன்னைக்கு அப்படி இருந்தாயா?’ என்ற பேச்சுக்கள் இன்னுமே தொடரத்தான் செய்தது.
எதையும் மனதில் வைத்துக்கொள்வதில்லை. பலநேரங்களில் இதயாவும் பேசிவிடுவாள். பதிலுக்கு பேசினாலும் இருவருக்குமே அது காயம் தான். ஆனாலும் அதை கடந்து வர பழகி இருந்தனர்.
இன்றளவும் இரு குடும்பங்களும் அப்படி ஒன்றும் ஒட்டிக்கொண்டு பழகிவிடவில்லை.
இதயா தாயாகிவிட்ட செய்தி அறிந்து இரு குடும்பங்களுமே வந்து இருந்து அவளை தாங்கிவிட்டே சென்றனர்.
உத்ராவை மட்டும் வேலவன் அனுப்புவதே இல்லை. இடையில் ஒருமுறை அவனும் சேர்ந்தே வந்து தங்கவும் அனுமதிக்காமல் அழைத்து வந்த அன்றே கூட்டியும் சென்றுவிட்டான்.
இப்போதெல்லாம் எங்கும் வாய்திறக்கமுடிவதில்லை உத்ராவால். வீட்டில் உத்ரா அமைதியாக இருந்தாலே தவிர வேறு பிரச்சனைகள் எதுவும் இருப்பதில்லை.
பிரச்சனை என்று வந்தால் அது உத்ராவை கொண்டு தான் என்று ஆகிவிட வேலவனின் தயவும் இன்றி, பெற்றோரின் ஆதரவும் இன்றி உத்ரா அடக்கி வாசிக்கவேண்டிய நிலை.
ருக்மணி வந்து மருமகளிடம் அப்படி உருக இதை எல்லாம ஒரு பார்வையோடு கடந்துவிடுவான் கண்ணன்.
எந்த காலத்திலும் தாயும் தமக்கையும் செய்த அந்த செயலை அவன் மன்னிக்க தயாராகவே இல்லை. அதற்கென விட்டுவிடவும் இல்லை.
பேச்சுக்கள் குறைந்து ஓரிரு வார்த்தைகள் அவ்வளவே. ஒரு எல்லையில் அவர்களை தள்ளி வைக்காது தான் தன் மனைவியுடன் விலகி நின்றான்.
இன்றுவரை கடலூர் செல்ல இதயாவும் நினைக்கவில்லை. கண்ணனும் சொல்லவில்லை. சிவசுந்தரமும் இதை பற்றி பேச யாரையும் அனுமதிக்கவில்லை.
ருக்மணி கூட சிவசுந்தரத்திடம் பேசினார் வளைகாப்பு தங்கள் வீட்டில் செய்வது தானே முறை என்று.
ஒற்றை முறைப்பில் அடக்கிவைத்தார் மனைவியை. அதை விட அதை பற்றி யாரையும் வாய்திறக்க விடவில்லை.
“வந்தோமா போனோமான்னு இருக்கனும். அந்த பொண்ணா தானா மனசு இறங்கி வரட்டும். கூட்டிட்டு வரனும்னா கண்ணன் கூட்டிட்டு வந்திருக்கமாட்டானா? அவனுக்கும் நினைப்பு இருக்கும்ல. எதுக்கு வளைகாப்பை அங்க வைக்க சொல்லிருக்கான்?…”
இப்படி ருக்மணியை அதட்டி வைக்க அதன் பின்னர் வாயே திறக்கவில்லை அவர். உத்ரா அவரிடம் கேட்டதற்கு ‘உன் அப்பாவிடம் நீயே பேசு’ என்றுவிட்டார்.
முன்பை போலவா இருக்கிறார் சிவசுந்தரம்? இப்போது அவரிடம் எதார்த்தமாக ஏதாவது பேசினால் கூட அதிலும் எதையாவது கேட்டு சத்தம் போடுகிறாரே? எங்கே பேச என்று உத்ராவும் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
சத்தமின்றி கிளம்பி வந்தனர் கடலூரில் இருந்து. இங்கே அய்யாசாமி வீட்டில் முதல் வாரமே சிதம்பரம் வந்து வீட்டை சுத்தம் செய்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தி அங்கிருந்து யசோதா, சுதகாரன், தீப்தி குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்கள்.
நவீன் நேரடியாக சென்னையில் இருந்து வந்துவிடுவதாக சொல்ல மகளுக்கான சீர்வரிசைகளை எல்லாம் திரட்டிக்கொண்டு அமோகமாக கிளம்பி சென்றார்கள்.
யசோதா சொந்தங்களுக்கு சொல்ல வேண்டும் என்றதற்கு மஞ்சு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
“யார் கண்ணு பட்டுச்சோ? இந்த மாதிரி இத்தனை வருஷம் பிரிஞ்சு இப்பத்தான் ஒண்ணா வாழ்ந்து ஒரு சந்தோஷமான விசேஷம் செய்ய போறோம். கூட்டத்தை கூட்ட வேணாம் அண்ணி. அதுவும் இப்ப அங்க மாப்பிளைக்கு இதெல்லாம் ஒத்துவருமான்னு தெரியலை…” என்று சொல்லிவிட்டார்.
மஞ்சு இப்போது கண்ணனின் பதவிக்காக யோசிக்க, யசோதா இதயாவிற்காக யோசித்தார்.
“என்ன இருந்தாலும் இத்தனை வருஷம் பிரிஞ்சவங்க சேர்ந்துட்டாங்கன்னு நாம எப்படி காட்டுறதாம்?…”
“ஒன்னும் காட்ட வேண்டாம். அவ நல்லா இருக்கா. அது போதும்…” என ஒரேடியாக சொல்லிவிட குடும்பம் மட்டும் கிளம்பி சென்றார்கள்.
சென்ற இடத்தில் பழையவற்றை விட்டுவிட்டு அடுத்து நடக்கவேண்டியவற்றை பேசிக்கொண்டிருக்க கண்ணன் எப்போதும் போல ஓரிரு வார்த்தைகள் தான் அவர்களிடம்.
விடியற்காலை நவீன் வந்திருங்க, வேலவனும் உத்ராவோடு காலை தான் வந்து சேர்ந்தான்.
முதலில் எதற்கு வேண்டாம் என நினைத்திருக்க கண்ணனே அழைத்துவிட்டான் வேலவனை.
அதிலும் அக்கா முறைக்கு உத்ராவும் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட சம்மதித்தவன் அவளுடன் காலை தான் கிளம்பியே வந்தான். வரும் பொழுதே அத்தனை அறிவுரை.
“உன்னால இன்னொருவாட்டி நான் தலைகுனியற மாதிரி எதாச்சும் நடந்துச்சோ அன்னையோட உனக்கு முழுக்கு…” என்று மிரட்டி அழைத்து வந்திருந்தான்.
இவர்கள் வரும் பொழுதே நவீனும் சேர்ந்தே வர உத்ராவிற்கு அவனை பார்த்ததும் ஒரு எண்ணம்.
நேரம் செல்ல செல்ல அவ்வெண்ணம் வார்த்தையாக வர தயாராக இருந்தது. அதன் மூலம் தான் நல்லபெயர் எடுத்துவிடலாம் என்று நினைத்து பேச இருந்தாள்.
இங்கே எல்லாம் நிறைவாக முடிந்து கிளம்ப நல்ல நேரம் பார்த்துக்கொண்டு அமர்ந்து பேசியபடி இருந்தார்கள்.
“டெலிவரிக்கு எந்த ஹாஸ்பிட்டல்ன்னு முடிவு பண்ணியாச்சா?…” என்று ருக்மணி தொடங்க அவர்கள் பேச்சுக்களுடனே மெல்ல எழுந்து இதயா உள்ளே சென்றாள்.
கண்ணன் என்னவோ யோசனையில் ஜன்னலில் சாய்ந்து நிற்க அவனருகே மெல்ல நடந்து செல்லவும் அவளை திரும்பி பார்த்தான்.
கொலுசும், கை நிறைய வளையலும் இசைக்க அன்னமென நடந்து வந்தவள் மேல் பார்வையை பதித்திருந்தவனின் முகத்தில் சிறு புன்னகை.
“என்ன தனியா வந்து நின்னுட்டீங்க?…” என கேட்க,
“சும்மா தான். எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க. நான் இருந்தா பேச யோசிப்பாங்கன்னு தான் வந்துட்டேன்…” என்றவன் அவள் அருகே வரவும் அணைத்துக்கொள்ள மேடிட்டிருந்த வயிறு இடித்தது.
“ஹ்ம்ம், இன்னும் கொஞ்சம் நாள்ல பேபி வெளில வந்திரும். இப்போலாம் உன்னை ஹக் பண்ண கூட யோசிக்க வேண்டியதாகிடுச்சு இதனால…” என்று பெருமூச்சு விட,
“இப்படி பிடிச்சுக்கலாம்ல…” என்று தோளருகே ஒருபக்கமாய் அவன் மேலே சாய்ந்துகொண்டாள்.
“இதை சொல்லிக்குடுக்க கூட நீ வேணும்டி…” என்றவன்,
“இதயா, ஒன்னு கேட்டா கோவிக்கமாட்டியே?…” என்று ஆரம்பித்தான்.
அவன் ஏதாவது கேட்க ஆரம்பித்தாலே இந்த கேள்வியுடன் தான் தொடுத்துக்கொண்டு அடுத்த கேள்வி வரும். அதுவே அவளை எரிச்சலுக்குள்ளாக்கும்.
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன், இப்படி கேட்க கூடாதுன்னு. கோவப்படற மாதிரி கேள்வி இருந்தாலும் அதுக்கான வேலிட் ரீசன் என்னவோ அதை சொல்லுங்க. சும்மா சும்மா கேட்கவே பயந்துட்டு…” என்று திட்ட அவனுக்கு டென்ஷன் ஆனது.
“சரி கோவப்படமாட்டேன். சொல்லுங்க, ஹ்ம்ம். ப்ச். கேளுங்க…” என்றாள்.
“இன்னும் ரெண்டு மாசம் கழிச்சே வளைகாப்பு போட்டிருக்கலாம்ல. ஏன் ஏழாம் மாசமே?…” என ஆரம்பிக்க,
“எல்லாம் உங்களால தான். ஒரு நாள் லீவ் எடுக்க முடியுதா? முடியலைன்னாலும் அங்க வந்து இருன்னு படுத்தறீங்க. ரெஸ்ட்டே இல்லை. அதான் கிளம்ப சொல்லவும் கிளம்பிட்டேன்…” என்று சிரித்தவள்,
“ஆமா, இனிமே யாரை கூட்டிட்டு போவீங்களாம்?…” என்றாள் அதே கேலி புன்னகையுடன்.
“போடி…” என்றவன் வேஷ்டியை நன்றாக எடுத்துவிடு கட்டிலில் அமர,
“ஹ்ம்ம், போய்ருவேன்…” என்று சொல்லவும் நிமிர்ந்து பார்த்தவன் அப்படியே இருந்தான்.
“உண்மையை சொல்லுங்க. திரும்பவும் நான் விட்டுட்டு நீங்க வேண்டாம்னு சொல்லிருவேனோன்னு இன்னும் நினைச்சுட்டே தானே இருக்கீங்க?…” என்று அவள் கேட்க அதிர்வுடன் அவளை பார்த்தான்.
“எனக்கு தெரியும். உங்க மனசுல நான் எப்போ வேணா போய்டுவேனோன்னு பயம் இருக்குது. எப்போ என்ன பிரச்சனை வருமோன்னு என்னை ரொம்பவே உங்க கைக்குள்ளையும், கண்ணெதிர்க்கவும் வச்சுக்கறீங்க. சரியா?…”
“இதயா…” என்றபடி எழுந்துவிட்டான் கண்ணன்.
“வேண்டவே வேண்டாம்னு நினைச்சதும் நான் தான். இங்க வந்த பின்னாடி கூட நிறைய யோசிச்சேன். இத்தனை தூரம் வாழ முடியாதுன்னுட்டு இப்போ சேர்ந்து இருக்கோமேன்னு. இவ்வளோ தானா நான்னு தோணுச்சு. தனிய ஐருக்கும் போது நிறைய யோசிக்கவே கூடாதுன்னு நினைப்பேன்…”
“கோவம், அவ்வளோ கோவம் வரும். ஆனாலும் என்னால முடியலையே. இப்பவும் அதை நான் மன்னிக்கவே இல்லை. மன்னிக்கவும் மாட்டேன். அது வேற. அப்படித்தான் தோணுச்சு. உங்களுக்கு தெரியுமா இப்போ வரைக்கும் நம்ம கல்யாண ஆல்பத்தை நான் பார்க்கவே இல்லை…”
“பார்க்கவே கூடாதுன்னு அதை எடுக்கறதே இல்லை. எவ்வளவு ஆசை? எத்தனை சொல்லியிருந்தேன். எப்படியெல்லாம் எடுக்கனும். எப்படியெல்லாம் அந்த நிமிஷத்தை கொண்டாடனும்னு. என்னால நீங்க தாலி கட்டும் போது கூட உணர முடியலை. நிமிர்ந்து பார்க்கனும்னும் தோணலை…”
இதயா சொல்லிக்கொண்டிருக்க கண்ணன் இறுகி போனான் தனக்குள். தவறின் ஆரம்பம் தான் என்பது தெளிவாய் புரிந்தது அவனுக்கும்.
அவளிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்திருக்கலாம் தன் வீட்டில் நடப்பவற்றை. அவள் பேசும் பொழுதாவது தான் பார்த்துக்கொள்வதாக தைரியமூட்டி இருக்கலாம்.
ஆனால் எதையும் செய்யாமல் அவளையும் போராடவிட்டு தானும் தவித்து இப்படி காலத்திற்கும் அகற்ற முடியாத பாரத்தை இருவருமே சுமக்க ஆளாகிவிட்டேனே என்று கலங்கி நின்றான்.
“இப்போ என்கிட்டே சில நேரம் பேச அத்தனை யோசனை உங்களுக்கு. இதுக்கு நான் என்ன நினைப்பேனோன்னு யோசிக்கிறீங்க. இதுல இருந்து என்ன தெரியுது? உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும் அந்த நம்பிக்கையை கொடுக்கலைன்னு தானே?…”
“அப்படி இல்ல இதயா, இது நம்பிக்கையை தாண்டிய ஒரு விஷயம். பிரிஞ்சு இருக்கும் போதே எந்த சூழ்நிலையிலும் சுத்தமா விலகி நிக்கனும்னு நீயும், நானும் நினைச்சதில்லை. என் மனைவியா தான் நீ இருந்த. உன் புருஷனா தான் நான் இருந்தேன். அதை மாத்திக்க நாம நினைக்கலை. இது வேற…”
“என்ன வேற? எல்லாம் ஒன்னு தான்…” என்று இதயா முறைக்க,
“சரி இப்ப யோசிக்காம பயமில்லாம ஒன்னு கேட்கறேன். நீ சொல்லு. திரும்ப கல்யாணம் செஞ்சுக்கலாமா? உனக்கு பிடிச்ச மாதிரி, எனக்கும் பிடிச்ச மாதிரி. யாருமே வேண்டாம். நாம மட்டும் இங்க கோவில்ல….” என்று கண்ணன் கேட்க பக்கென்று சிரித்தவள்,
“திரும்ப கல்யாணம் நாம விரும்பின மாதிரி நடந்தா மட்டும் நடந்த எதுவுமே இல்லைன்னு ஆகிடுமா? இல்லை இந்த சில வருஷங்கள் எல்லாம பின்னால போய்டுமா? ஆபீசருக்கு மண்டை குழம்பிருச்சு. பொண்டாட்டி கிளம்பறான்னதும்…”
அவனின் நெற்றியில் எக்கி முட்ட முயல அவளால் முடியாமல் போனது. அதில் சிரித்தபடி தானே குனிந்து அவளுக்கு வாகாய் தன் நெற்றியை தர மெல்ல முட்டி விடுத்தாள் இதயா.
விலக இருந்தவளின் முகத்தை மென்மையாய் பற்றியவனின் தவிப்புகளை தாங்கிய முத்த சத்தங்கள் அவ்வறையிலேயே வலம் வந்தது சிறு சிறு முத்து சிதறல்களாய்.
அந்த ஏகாந்த வேளையில் சின்ன சின்ன ஊடல்களும் கூட இருவரின் ஆனந்த தேடல்களுக்கே வித்திட்டது.
“நான் கிளம்பட்டுமா?…” என இதயா கேட்க அவளின் நெற்றியில் இருந்த குங்கும, சந்தனங்களை பெருவிரலால் ஒழுங்குபடுத்தியவன் மெல்ல தலையை நீவி சீர் செய்தான்.
“ஹ்ம்ம், நீ வெளில போ. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்…” என சொல்ல,
“ஏன்? எல்லாரும் இருக்கும் போதே இப்படி இருக்கறது சரியில்லை. வாங்க…”
“இதயா ப்ளீஸ். அங்க இருந்தா அக்கா வேணும்னே என்கிட்டே பேச ட்ரை பண்ணுவாங்க. இன்னொரு பிரச்சனையை தாங்கிக்க என்னால முடியாது. சில விஷயங்களுக்கு தள்ளி தான் இருக்கனும். காலையில இருந்தே பார்த்துட்டு இருக்கேன். என்னை பார்க்கும் போதெல்லாம் என்னவோ புலம்பிட்டே இருக்காங்க…”
“அதுக்குன்னு பயந்து ஒதுங்குவீங்களா? முதல்ல இப்படி இருக்கறதை விடுங்க. பேசினா பதிலுக்கு என்னன்னு கேளுங்க…”
“இதயா இதென்ன அபிஷியலா? சட்டுன்னு முடிவெடுக்க? குடும்பம். சட்டுன்னு முகத்தை முறிக்க முடியாது. அதுவும் அவங்க என் கூட பிறந்தவங்கன்றப்போ. இது காலத்துக்கும் வர வேண்டிய உறவு…” என்றான்.
“எனக்கு புரியுது. அதுக்குன்னு நீங்க இப்படி இருக்கறது எனக்கு பிடிக்கலை. அவ்வளவு தான். பேசலாம். அவங்க பேசினா அதுக்குத்தக்கன பேசுங்கன்னா அவங்களை மாதிரியே பேசனும்னு சொல்ல வரலை. புரியுதா?…”
இதயா அவனின் கை பிடித்து அழைத்து வர அனைவருமே அவர்களை பார்க்கவும் கையை விடுத்தவள் நவீனின் பக்கம் சென்று அமர்ந்தாள்.
“எப்போ கிளம்பனும்?…” என்றான் கண்ணன் பொதுவாக எல்லோரிடமும்.
“இன்னும் ஒரு மணி நேரம் இருக்குதுப்பா….” என்றார் சிவசுந்தரம்.
“ஹ்ம்ம், சரி…” என்றவன் பேசாமல் இருக்க வேலவன் தான் அவனருகே வந்து பேச்சுக்கொடுக்க அவனிடம் மரியாதைநிமித்தம் பேசினான் கண்ணன்.
இங்கே தீப்தி, நவீன், இதயா மூவரும் அவர்களுக்குள் அரட்டையடித்தபடி இருக்க சுற்றிலும் ஒவ்வொருவரையாய் பார்த்தவள்,
“ம்மா, உன்கிட்ட சொன்னேன்ல. கேளு…” என்றாள் ருக்மணியிடம்.
“என்ன? என்ன கேட்கனும்?…” என ஒருநொடி அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.