“ம்மா, நிஷா கல்யாணம்…” என்று ஆரம்பிக்க கண்ணன் நிமிர்ந்து பார்த்தான் நிஷாவையும், தாயையும்.
“என்ன பேசற உத்ரா? நிஷா கல்யாணத்துக்கு என்ன அவசரம். இன்னும் ஒருவருஷம் போகட்டும்ன்னு முடிவு பண்ணிருக்கோம்ல….” என சிவசுந்தரம் சொல்ல நிஷாவையும் வைத்துக்கொண்டு பேசியது கண்ணனுக்கு உவப்பாயில்லை.
அதிலும் இதயாவின் வீட்டினரும் இருக்க இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது என்று நினைத்தவன் ருக்மணியை பார்க்க அவருக்கு மகனின் பார்வையிலேயே பேச்சு வரவில்லை.
“ம்மா, நீ தான என்கிட்டே சொன்ன? இப்ப நம்ம வீட்டாளுங்க தானே இருக்கோம்? பேசு. நல்ல மாதிரியான சூழ்நிலை. பேசும்மா…” என்றாள் மீண்டும் உத்ரா.
நம் வீட்டாளுங்க என்று இதயாவின் குடும்பத்தையும் சேர்த்தே உத்ரா சொல்லியது அவர்கள் குடும்பத்தினரை புருவம் உயர்த்த செய்திருக்க,
“பூவிக்கா, இவங்க சும்மா ஒன்னும் பேசறவங்க இல்ல. என்னவோ விஷயம் இருக்கு…” என்றான் நவீன்.
“அவங்க இன்னும் எதுவுமே பேசலை நவீத்தான். அதுக்குள்ளே நீயா எதாச்சும் கோர்த்துவிடாத…” என்று தீப்தி அவனின் பின்னந்தலையில் லேசாய் அடிக்க அதை பார்த்த உத்ரா,
“வளர்ந்த பையனை இப்படித்தான் வயசு பொண்ணு கை நீட்டுவியாம்மா?…” என்றாள் நல்லபிள்ளை போல உத்ரா.
இப்போது எல்லோருக்குமே அதிர்ச்சியாக என்ன பேசுகிறாள் இவள் என்பதை போல முறைத்து கண்ணனின் முகத்திற்காக பார்த்திருக்க,
“ம்மா, இதென்ன பேச்சு?…” என்றான் அவன் கோபத்துடன் ருக்மணியிடம்.
“எல்லாம் காரணமாத்தான் பேசறேன் கண்ணா. என்ன இருந்தாலும் நவீன் நம்ம வீட்டு மாப்பிள்ளையாக போறார்ல…” என்று குண்டை தூக்கி போட்டதும் நவீனிற்கு நெஞ்சே வெடித்துவிட்டது.
“டேய் நவீத்தான், எனக்கு தெரியாம தனி ட்ராக் ஓட்டிட்டு இருக்கியா நீ?…” என்று கேட்ட தீப்தி,
“பூவிண்ணி இதுக்கு நீயும் உடந்தையா?…” என கிசுகிசுக்க இருவரும் ஒரே சேர தீப்தியின் தலையில் நறுக்கென வலிக்கும் படியே கொட்டு வைத்தனர்.
“என்ன பேச்சு இது? என்ன நடக்குது இங்க எனக்கு தெரியாம?…” என கோபத்துடன் கண்ணன் எழுந்துவிட இப்போது அவனின் கோபத்தில் இதயா பதறி எழுந்தாள்.
“ப்ச், நீ பேசாம உட்கார். அதான் பேசிட்டு இருக்கேன்ல. நீ ஏன் வேகமா எழுந்துக்கற?…” என்று அவளை திட்டியவன்,
“பக்கத்துல இருக்கியே கவனிக்க மாட்டியா நீ? உன் அக்காவை பாரு முதல்ல….” என நவீனிடமும் எகிறியவன் உத்ராவின் பக்கம் திரும்பினான்.
“என்ன பேசறீங்க நீங்க? உங்களுக்கு யார் சொன்னா நவீன் மாப்பிள்ளையாக போறான்னு?….” என்றதும் உத்ரா ருக்மணியை பார்த்தாள்.
உண்மைக்கும் உத்ராவிற்கு அப்படி ஒரு நினைப்பு இருந்தது தான். அத்தனை பேரும் தன் பேச்சிற்கு சந்தோஷப்பட்டால் தான் தான் இந்த யோசனையை தொடங்கியது என்று சொல்ல இருந்தவள் இப்போது ஒருவரின் முகமும் மகிழ்வின்றி கறுத்திருக்க பயந்து போனாள்.
வந்ததில் இருந்து அவ்வபோது நவீனை பார்ப்பதும், நிஷாவை பார்ப்பதுமாக இருந்த ருக்மணியிடம் என்ன விஷயம் என்று கேட்டிருக்க அவரோ,
“நல்ல பையனா இருக்கான். சுமூகமா எல்லாம் இருந்திருந்தா நிஷாவ அந்த பையனுக்கு குடுத்திருந்திருக்கலாம். இப்ப நினைக்க மட்டும் தான் முடியுது…” என்று சொல்லியிருக்க,
“இவ்வளோ தானே நான் பார்த்துக்கறேன். இப்ப தான் எல்லாரும் நல்லா இருக்காங்களே. கலெக்டர் தங்கச்சியை கட்டிக்க கசக்குமா? அதுவும் அவங்க வீட்டு பொண்ணு நம்ம வீட்டு மருமக. அப்படி இருக்கும் போது மாட்டேன்னா சொல்லிருவாங்க?…” என்றாள் அவள்.
இப்போது இதை சொன்னால் என்ன நடக்குமோ என்று பயந்தவள் வேலவனை பார்க்க ‘உன் வேலையா இது?’ என்று பார்வையால் எரித்துக்கொண்டு இருந்தான்.
“இங்க எனக்கு பதில் சொல்லுங்க. இந்த பேச்சு ஏன் வந்துச்சு?…” என்றான் அவன்.
அப்படி கேட்க உத்ராவின் பிறவி குணம் தலைதூக்கியது. கண்ணனின் கேள்வியில் கோபம் சுறுசுறுவென ஏற, அதிலும் இதயாவின் குடும்பத்தின் முன்னர் அப்படி பேச வாயை கட்டிவைக்க முடியவில்லை.
“இப்ப என்ன கேட்டுட்டேன்? நல்ல விஷயம் தானே பேசினேன்? அதுல என்ன தப்பு? அதிலையும் இப்போ நவீனுக்கு நிஷாவை குடுக்க நாம நினைக்கிறதுக்கு அவங்க சந்தோஷமா ஏத்துக்கனும்…” என்று பேச,
“தேவை இல்லாம பேசாதீங்க. இது என் தங்கச்சி கல்யாண விஷயம். எப்போ எப்படி முடிக்கனும்னு அவளை பெத்தவர் இருக்கார். அண்ணன் நான் இருக்கேன். பார்த்துப்போம்…”
“பெத்தவளும் பாக்கலாம் தானே? ஏனா அம்மாவோட ஆசை தான் இது…” என போட்டுடைக்க அத்தனை பேருக்கும் இன்னுமே பேரதிர்ச்சி.
“ம்மா, என்ன இது?…” என்றான் கண்ணன்.
“இல்லப்பா, மனசுக்கு பட்டுச்சு….” என்றவரை பேச விடாமல் தடுத்த உத்ரா,
“இப்ப அவங்க என்ன தப்பா கேட்டுட்டாங்க? பையனும் பாக்க நல்லா இருக்கான். வேலை இருக்குது. போதாததுக்கு அவங்க பொண்ணை நம்ம வீட்டுல குடுத்திருக்காங்க. பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறது என்ன புதுசா? எல்லா இடத்துலையும் நடக்குறது தானே?…” என்றவள்,
“நாளைப்பின்ன ரெண்டு குடும்பத்துக்கும் ஒரு பிரச்சனைன்னு வரப்போ நாம பொண்ணு குடுத்திருக்கோம்னு அவங்களும், நம்ம நிஷாவை குடுத்திருக்கோம்னு நாமளும் கொஞ்சம் நீக்கு போக்கா போய்டலாம் பாரு…” என்றவளின் பேச்சில் அனைவருக்குமே பிடித்தமில்லாது போனது.
உத்ராவின் கூற்றில் மறைமுகமாக நீ பெண்ணை கொடுத்திருக்கிறாய், எடுத்து தான் ஆக வேண்டும் என்னும் பொருள் ஒளிந்திருக்க இதயா நவீனை பார்த்தாள்.
நிஷாவிற்கு அங்கு அத்தனைபேரின் முன்னும் நிற்கவே சங்கடமாக இருக்க ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்றாள்.
“பொண்ணு குடுத்தா அவங்க கண்டிப்பா நம்ம பொண்ணை கட்டனும்னு இருக்கா என்ன? அதுவும் நிஷாவையும் வச்சுட்டு…” என்ற கண்ணன் பேச்சை நவீன் நிறுத்தினான்.
“நான் பேசிக்கறேன் அத்தான். இது என் கல்யாண விஷயம் தானே? நானே எங்க வீட்டுல பேசலாம்ன்னு இருந்தேன்…” என்று முன்னே வந்தவன் தீப்தியை பார்த்தான்.
“இங்க வாடா…” என்று அவளின் கை பிடித்து யசோதா, சுதகாரன் முன்னே நின்று,
“மாமா, எனக்கு தீப்தியை குடுப்பீங்களா? ஏனா அவளை தான் நான் கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன்…” என்று போட்டுடைக்க தீப்தி வாய்பிளந்துவிட்டாள்.
அவர்களும், அய்யாசாமி, மஞ்சுவுமே அசந்து நிற்க கண்ணன் இதயா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேலவன் ஒரு பெருமூச்சுடன் நிம்மதியானார்.
“நவீ, இதுக்காக நீ பேசலையே. அவசரப்பட வேண்டாம்டா…” என இதயா சொல்ல,
“ஐம் சீரியஸ். நீ சும்மா இரு பூவிக்கா…” என்று நவீன் சொல்ல,
“இதென்னடா கூத்து? நாங்க இங்க என்ன பேசிட்டு இருக்கோம்? நீங்க என்ன பன்றீங்க?…” என உத்ரா சத்தம் போட அவளை திரும்பி முறைத்தான் நவீன்.
“நீங்க உங்க நாட்டாமையை உங்க வீட்டுல வச்சுக்கோங்க. என் வாழ்க்கையில கொண்டு வராதீங்க. உங்களுக்கு அந்த உரிமை இல்லை. இது எங்க குடும்பம். எங்க குடும்பத்துக்கு எதுவும் சொல்லனும்னா அது என் அத்தானுக்கு மட்டும் தான் அந்த ரைட்ஸ் இருக்கு…” என்று சொல்ல,
“இதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம…”
“ஆமா மரியாதை இல்லாம தான். இங்க என்ன விசேஷத்துக்கு வந்திருக்கோம்ன்றது மறந்து நீங்க பேசறது எந்தளவுக்கு மரியாதையோ அதுல நான் பேசினது எதுவும் குறைஞ்சிடலை…” என்று நவீனும் பதிலுக்கு பதில் குடுக்க,
“நவீன் அப்படி பேசாத. சும்மா இரு…” என அதட்டினார் அய்யாசாமி.
அவருக்கு எங்கே நவீன் பேச்சில் மீண்டும் மகளின் வாழ்க்கையும் சிக்கலில் மாட்டிக்கொள்ளுமோ என்ற அச்சம்.
“அப்பா, நீங்க இருங்க…” என்றவன்,
“மாமா, என்ன ஒண்ணுமே பேசாம இருக்கீங்க? நான் தீப்தியை நல்லா பார்த்துக்கமாட்டேனா? இல்ல எனக்கு குடுக்க இஷ்டமில்லையா?…” என கேட்க திணறினார் சுதாகரன்.
“ஏய் என்னடா இது?…” என்றவர் அவனை அப்படி பேசவும் யோசித்து,
“சந்தோஷமா தான் இருக்குப்பா. ஆனா இதை நாங்க யோசிக்கவே இல்லை. எல்லாம் ஒண்ணா வளர்ந்த பிள்ளைங்க. அதனால இப்படி நினைக்க தோணலை எங்களுக்கு. நீ கேட்டதும்…” என்றவர்,
“யசோ என்ன பேசன்னு தெரியலையே யசோ. பாரேன் நம்ம நவீயை…” என்று கண்கலங்கி பார்த்தான்.
“எப்பவும் போல என்னடான்னே பேசுங்க மாமா. இது யாரோ மாதிரி இருக்குது…” என்று சொல்லவும் இருவருக்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை.
மஞ்சு, அய்யாசாமியை பார்க்க அவர்களின் சம்மதம் முகத்திலேயே தெரிய நிறைவாகி போனது.
“எல்லார்ட்டயும் கேட்ட. தீப்திட்ட கேட்கலையே நீ?…” என்றான் கண்ணன் கிண்டலாக.
“மாட்டேன்னு சொல்லமாட்டான்னு ஒரு தைரியம் தான் தம்பிக்கு. என்ன நவீன்?…” என்று வேலவனும் நிலமையை இலகுவாக்க சிறு வெட்க சிரிப்போடு தீப்தியை பார்த்தான்.
அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராததை போல மிரள மிளர பார்த்துக்கொண்டு இருக்க இன்னுமே அனைவருக்கும் சிரிப்பு.
ருக்மணி, உத்ராவை தவிர மற்ற அனைவருமே அவர்களை நெருங்கி வந்து சூழ்ந்து நின்றனர். நிஷா உட்பட.
“என்ன தீப்தி நான் உனக்கு செட் ஆக மாட்டேன்னு நினைக்கிறியா?…” என்று நவீன் கேட்க,
“உன்னை பத்தி நான் என்னைக்கு நவீத்தான் நினச்சேன்? நான் என்னை பத்தி தான் யோசிக்கிறேன். நான் உனக்கு செட் ஆவேனா மாட்டேனான்னு?…” என்று யோசிக்கும் பாவனையுடன் இன்னும் தெளியாத முகத்தோடு சொல்ல,
“அவ்வளவு தானே? அதெல்லாம் பட்டி, டிங்கரிங் பண்ணிக்கலாம்…” என்று சொல்லி அவளிடம் இரண்டு அடியை வாங்கிக்கொள்ள,
“தீப்தி இங்கிட்டு வா. உதை வாங்குவ நீ. என்ன இது கை நீட்டிட்டு இருக்கறது?…” என்று யசோதா மகளை கண்டிக்க நவீனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“பார்த்தியா நவீத்தான், இத்தனை நாள் உன்னை அடிக்கும் போதெல்லாம் ஒன்னும் தெரியாது. இதுங்களுக்கு வேற வேலை இல்லைன்ற மாதிரி பேசுவாங்க. இப்ப மருமகன்னதும் உடனே ட்விஸ்ட் அடிக்கிறதை. நம்பிடாத நீ…” என்று சொல்ல அவ்விடமே கலகலத்தது.
“ரொம்ப சந்தோஷம் நவீன். ஆனா இப்படி உடனே கேட்பன்னு நான் நினைக்கலை…” என்று அவனை அணைத்து தன் சந்தோஷத்தை கண்ணன் வெளிப்படுத்த,
“நானும் இப்படி கேட்பேன்னு நினைக்கலை அத்தான். ஒரு வருஷம் போகட்டும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். இதனால நீங்க எதுவும்…”
“ச்சே, ச்சே. அதெல்லாம் இல்லை. இது அவங்கவங்க லைப். யார் வேணா கருத்து சொல்லலாம். வாழறது நாம தான். இன்னொருத்தருக்காக நம்மோட சந்தோஷத்தை மாத்திக்க முடியாது. அதே மாதிரி உடனைக்குடனே இந்த பிரச்சனையை நீ பேஸ் பண்ணி சால்வ் பண்ணினது இன்னுமே சூப்பர்…”
கண்ணன் பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்த இதயாவிற்கு அவனுக்காக மனது துடித்தது.
தான் முன்பு செய்த தவறை எண்ணி இன்னுமே தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறானே மனதளவில். அதன் காயம் இன்னுமே ஆறாமல் இருக்க அது இருவருக்குமே போதுவானதாகிற்றே என்று மௌனமாக பார்த்து நின்றாள்.
பின் பேச்சுக்கள் நவீன், தீப்தி திருமணத்தை பற்றியே இருக்க சிறிது நேரத்தில் நல்லநேரம் என்று கிளம்பிவிட்டார்கள்.
கிளம்பும் முன்னர் இதயாவை அணைத்து விடுத்தவன் மனமின்றி அவளை வழியனுப்பினான்.
“பார்த்து போய்ட்டு வா. பத்திரமா இரு. கண்டிப்பா வீக்கென்ட் அங்க இருப்பேன்…” என்று சொல்லி அனுப்ப இதயாவிடம் பேச்சில்லை.
ஒருமாதிரி நெஞ்சை அடைத்தது அவனை விட்டு செல்வது. இந்த சில மாதங்கள் இருவரும் மட்டுமே என்று வாழ்ந்திருக்க அதில் தான் எத்தனை அனுசரணைகள், எத்தனை அரவணைப்புகள். எவ்வளவு ஆறுதல்கள். அத்தனையும் தாண்டிய நேசத்தின் தேடல்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அல்லவா அவர்களின் மனதை அந்த வாழ்க்கை பிரதிபலித்தது.
கண்ணனின் விழிகள் கலங்கி சிவந்திருக்க ஒருவரையும் ஏறிட்டு பார்க்கவில்லை அவன். லேசாய் தலை திருப்பி விழி தாழ்த்தி மற்றவர்களுக்கு விடைகொடுக்க மற்றவர்களுக்குமே கஷ்டமாக இருந்தது.
வாசல் வரை அவனும் கூடவே வர வேண்டாம் என்று சொல்ல ருக்மணிக்கு பயம். அதற்கும் மகன் ஏதாவது பேசிவிட்டால்?
“ப்பா, ஒரு நிமிஷம். ஒரு நிமிஷம்…” என்றவள் கண்ணனை பார்க்க அவளோடு உள்ளே வந்தான். வந்தவனின் நெஞ்சில் சாய்ந்து இடையோடு கை கோர்த்துக்கொண்டாள்.
“இதயா…” என்று அவனும் அணைத்துக்கொள்ள இருவருக்குமே வெளியே நின்றவர்களை பற்றிய எண்ணமில்லாது போனது.
பிரிவின் வலி பழையவற்றையும் லேசாய் கிளறி செல்ல மனது அதிலிருந்து மீள்வேனா என்று இருந்தது இருவருக்குமே. அப்படி செல்லத்தான் வேண்டுமா என ஒருமித்த எண்ணம் தோன்ற அணைப்பு இறுகியது.
உன் மார்போடு சாயுமந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்