ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 25
நேரம் சென்றதே தவிர இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் விலகுவதை போல தெரியவில்லை.
“நான் வேணா இருக்கட்டுமா?…” என்று இதயா தானாகவே கேட்க அவளின் முகம் நிமிர்த்தி பார்த்தவன்,
“இல்லடா, வெளில எல்லாரும் வெய்ட் பன்றாங்க. வாசல் வரைக்கும் வந்திட்டு கிளம்பாம இருந்தா நல்லா இருக்காது…” என்று கண்ணன் சொல்லவும் பட்டென்று அவனின் கையை தட்டிவிட்டு தள்ளி நின்றவள்,
“எல்லாம உங்க இஷ்டம். எங்க வீட்டுல மாட்டேன் மாட்டேன்னு சொல்லும் போது வம்படியா இங்க கொண்டுவந்து விட்டுட்டு போனாங்க. இப்ப நானே போக வேண்டாம்னு சொல்றேன். நீ கிளம்புன்ற. போறேன், போதுமா?…” என கடுப்புடன் சென்றவள் விறுவிறுவென நடந்தாள்.
அவள் கோபமாக வருவதை கண்ட இதயாவின் வீட்டினர் பயந்து போய் கண்ணனை பார்க்க அவனுக்கு ஐயோவென்று இருந்தது.
சென்றவள் நேராக காரில் ஏறி அமர்ந்துகொள்ள அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் இதயாவையும் கண்ணனையுமே மாறி மாறி பார்க்க சங்கடமாய் நின்றான் அவன் அவ்விடத்தில்.
“என்னாச்சு அத்தான்? திரும்ப சண்டையா?…” என நவீன் பதட்டத்துடன் கேட்க,
“ஐயோ, என்ன சண்டையா?…” என மஞ்சு நெஞ்சில் கை வைத்து நின்றார்.
“டேய் அதெல்லாம் ஒண்ணுமில்லை. கிளம்பும் போது சொல்ல வேண்டாமேன்னு நினைச்சேன்…” என்றவன்,
“இப்ப தானே ஏழாவது மாசம்? இன்னும் டைம் இருக்கே. அதுவரை இதயா இங்கயே இருக்கட்டும்னு சொன்னேன்…” என்று அவனாக இதயா சொல்லியதை தன் முடிவென சொல்ல,
“அதான் கோச்சுக்கிட்டு போய்ட்டாளா?…” என்றார் அய்யாசாமி.
“மாமா, நானே ரெண்டு நாள் கழிச்சு அனுப்பி வைக்கறேன். இல்லன்னா இன்னொன்னு செய்யலாம். இங்கயே இதயாவுக்கு செக்கப்க்கு பார்க்கிற ஹாஸ்பிட்டல்ல டெலிவரி பார்த்திடலாம். உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே…”
இப்படி அவன் கேட்கும் போது எங்கே மறுக்க? ஆனால் அதை ஏற்க முடியுமா? தலைப்பிரசவம் பெண்ணை சேர்ந்தவர்களின் கடமை அல்லவா?
“அது வந்து மாப்பிள்ளை…” என்று அவர் தயங்க,
“இல்லை மாமா. அவ என்னோடவே இருக்கட்டும். எனக்கு அனுப்ப மனசில்லை…” என்று ஒரேதாக அவன் முடிக்க,
“இப்படி சொன்னா? ஊர்ல எல்லாருக்கும் பூவியை வளைகாப்பு முடிச்சு கூட்டிட்டு வரோம்ன்னு சொல்லிட்டோம். இப்போ போய் மக வரலைன்னு பேசமுடியுமா?…” என்று மஞ்சு கலங்கி போய் பேசினார்.
மீண்டும் ஊராரின் கேலி பேச்சை கேட்கவேண்டி வருமோ என்று அவரின் மனம் அடித்துக்கொண்டது.
ஒருபக்கம் இருவருக்கும் திரும்பவும் மனஸ்தாபம், இன்னொருபக்கம் சொந்தங்களின் பேச்சு இப்படி இரண்டிற்கும் நடுவே குடும்பம் திணற கண்ணனுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றிவிட்டது.
“எல்லாத்தையும் வாசல்ல வச்சு தான் பேசனுமா? உள்ள வாங்க….” என்று வேலவன் சொல்ல,
“இல்லை கிளம்பி வெளில வந்தாச்சு. திரும்பவும்…” என மஞ்சு தயங்கி நின்றார்.
“ஓகே அத்தை. நீங்க இதயாவை கூட்டிட்டு கிளம்புங்க. நான் அடுத்த வாரம் வந்து அழைச்சுக்கறேன். ஆனா இங்க தான் டெலிவரி. அதை ஞபாகம் வச்சுக்கோங்க…” என்று அழுத்தமாக சொல்ல அதற்கு மேலும் பேச அவர்களுக்கும் மனதில்லை.
எந்த பிரச்சனையும் இன்றி இந்த திருமணம் நடந்திருந்தால் அடித்து பேசியிருந்திருக்கலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம் என்று.
இங்கே மூன்றுவருட பிரிவின் பின்னால் சேர்ந்தவர்கள் இதை கொண்டே மறுபடியும் முறுக்கிக்கொண்டால்?
விழிபிதுங்கி போய் பார்த்தார்கள் இதயாவின் குடும்பத்தினர். ஆனாலும் கண்ணனின் பேச்சிற்கு ஒன்றும் மறுக்கவில்லை.
“என்ன கண்ணா நீ? அவங்களுக்கும் மகளுக்கு பேர்காலம் பார்க்கனும்னு ஆசை இருக்கும்ல…” என சிவசுந்தரம் சொல்ல,
“இருக்கட்டும்ப்பா. நான் வேண்டாம்னு சொல்லலையே. ஆனா இங்க இருந்து பார்க்கட்டும். போதும் நாங்க தனி தனியா இருந்தது…” என்று சொல்லிவிட்டான்.
இந்த வார்த்தையே அங்கே மறுப்பிற்கு வேலையில்லாமல் செய்தது. வாயை மூடிக்கொண்டார்கள்.
“சரி, ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க. வந்திடறேன்…” என்றவன் அந்த இன்னோவா காரை நோக்கி சென்றான்.
அங்கே சீட்டில் கோபத்துடன் தலையை முன் சீட்டில் முட்டுக்கொடுத்து சாய்ந்திருக்க ‘இப்ப என்ன ஆகிடுச்சுன்னு இப்படி படுத்திருக்கா?’ என்ற கடுப்போடு உள்ளே ஏறினான்.
அவன் தான் வருவான் என்று அறிந்திருந்தவளோ நிமிரவே இல்லை. கோபம் என்றும் சொல்லமுடியாத ஒரு ஆதங்கம்.
தானே எல்லாம் கேட்கவேண்டி இருகிறதே? இவன் என்னை தேடவே மாட்டானா? என்னும் ஆதங்கம் பெருக கண்ணை மூடி க்கொண்டாள்.
“ஓய், நிமிர்ந்து பாருடி…” என்று அவளின் தலையை பிடித்து நிமிர்த்த முயல,
“ப்ச், பேசாம போய்ருங்க. இனி நான் கூட இருக்கேன்னு சொல்லவே மாட்டேன். நீங்களும் ஒன்னும் சொல்ல வேண்டாம். இங்க வரப்போ என்ன நினைச்சு வந்தேனோ அப்படியே இருந்துக்கறேன்…” என்று சொல்ல அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான் கண்ணன்.
“ப்ச், இடமில்லை. தள்ளி உட்காருங்க…” என நகர்வேனா என்பதை போல இதயா முரண்டு பிடிக்க அவளருகே அமர்ந்து தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டான்.
“என்னவாம்? என்ன நினைச்சு இங்க வந்தியாம்?…” என்று சிரிப்போடு கேட்கவும் இன்னும் காண்டாகி போனாள்.
“இப்படி சிரிச்சு தானே ஏமாத்திட்டே இருக்கீங்க. திட்டினா சிரிக்கிறது. தள்ளி போனா பாவமா மூஞ்சியை வச்சுக்கறது. எப்பவும் நான் தான் ஏமாந்து போறேன்…”
“நான் கேட்ட கேள்விக்கு இதான் பதிலா?…” என அதிலேயே நிற்க,
“ஏன் உங்களுக்கு தெரியாதா? உங்ககிட்ட என்னை கொண்டுவந்து விட்டுட்டு போன அன்னைக்கு முடிவு பண்ணினேன். யார்க்கிட்டயும் எந்த எதிர்ப்பார்ப்பும் வச்சுக்க கூடாதுன்னு…” என்று சொல்ல,
“ஓகே, இப்பவும் நீ எதிர்பார்க்கவே இல்லயே. உன்னோட விருப்பத்தை சொன்ன. இங்க இருக்கனும்ன்றது உன் முடிவு தானே? இதுல என்ன எதிர்பார்ப்பு இருந்துச்சு?…” என்று கண்ணன் கேட்க மௌனமாகிவிட்டாள்.
எப்படி பேசினாலும் தன்னை ஏதாவது ஒரு வழியில் இவன் மடக்கிவிடுவான் என்று வாயை திறக்க கூடாதென நினைத்துக்கொண்டாள்.
“இன்னொரு தப்பும் நீ பன்ற. இங்க கொண்டுவந்து விட்டுட்டு போனாங்கன்னு இன்னும் அதையே நினைச்சு பேசறது சரியா சொல்லு?…” என கேட்க,
“அன்னைக்கு என்னோட மனநிலை எப்படி இருந்ததுன்னு அனுபவிச்சா தான் தெரியும்…” என்றவள்,
“ஒவ்வொரு தடவையும் நீங்க பேசும் போதும், கூப்பிடும் போது எனக்குள்ளையே எத்தனை போராட்டம் தெரியுமா? இத்தனை பேச்சுக்கப்பறமும் நீங்க கூப்பிடும் போதெல்லாம் இன்னொரு மனசு போய்டு, போய்டுன்னு சொல்லும். இன்னோர் மனசு உன் மரியாதையும், சுயகௌரவமும் இவ்வளோ தானான்னு கேட்கும்…”
“இதை ரெண்டையும் ஹேண்டில் பண்ண முடியாம நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். இப்பவும் எந்தவகையிலும் நம்மோட வாழ்க்கைக்கு நீங்க எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. ஆனாலும் உங்களோட வாழ்ந்து இதோ இப்போ பாப்பா வந்திருச்சு. இந்த நிமிஷம் வரை எனக்கு அது குத்திட்டே தான் இருக்குது…”
இதயா சொல்ல சொல்ல அவளின் நெற்றியில் மென்மையாய் தொடர்ந்து இதழ் பதித்தபடி இருந்தவன் வாயே திறக்கவில்லை. அவள் தன்னை அப்படியே நினைத்துக்கொள்ளட்டும் என்று இருந்துவிட்டான்.
சொன்னால் முதலிலேயே ஏன் சொல்லவில்லை என்று கேள்வி வரும். சொல்லாத காரணம் எழும்பும் பொழுது அதுவே வேறு விதமாக புரிந்துகொள்ள கூடும்.
திருமணம் ஆவதற்கு முன் உன் குடும்பம் பற்றிய பிரச்சனைகள் எனக்கு தெரிய கூடாது என்று மறைத்தாயா என்று கேட்டுவிட்டால் என்ன சொல்வது? என்று மறைத்துவிட்டான்.
சென்றது சென்றதாகவே இருக்கட்டும் என்று வழக்கம் போலவே நினைத்தவன் இப்போதைக்கு இந்த சூழலை எப்படி மாற்றுவது என்று மட்டும் யோசித்தான்.
“நான் பேசிட்டேன் இதயா. நெக்ஸ்ட் வீக் உன்னை வந்து கூட்டிட்டு வந்திருவேன். இங்கதான் உனக்கு டெலிவரி…” என்று சொல்ல,
“அப்படி ஒன்னும் நான் கோவிச்சுட்ட பின்னால இந்த முடிவை எடுக்க வேண்டாம். எல்லாம் என்னோட ரியாக்ஷனுக்கு அப்பறம் தான் ஆக்ஷனே…”
“ஹேய் அங்க பேசி அவங்கக்கிட்ட சொல்லிட்டு தான்டி உன்கிட்டயே வரேன். நீயா எதையாச்சும் நினைக்காத. பக்குன்னு ஆகுது…” என்றான் தன் நெஞ்சை பிடித்தபடி.
“ஆமா பயந்துட்டீங்க. நம்பிட்டேன்…” என்று அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளியவள்,
“சத்தியமா உங்களை என்னன்னு விடமுடியாம இப்படி இருக்கேன்னு இப்ப வரைக்கும் தெரியலை…” என சொல்லியதும் கண்ணனின் முகத்தில் அப்படி ஒரு ஜொலிப்பு.
“இது இதான், எரிச்சலா இருக்கு…” என்று சிரித்துக்கொண்டே அவனின் பூரிப்பு பொங்கும் முகத்தை பிடித்து இப்படியும் அப்படியும் திருப்ப,
“ஓகே ஓகே. சண்டை போதும். இப்போ ஹேப்பியா நீ கிளம்புவியாம். அடுத்த வாரம் நான் வந்து கூப்பிட்டுப்பேனாம்…” என கன்னம் கில்லி அவளை கொஞ்சியவன்,
“சிரிச்ச மாதிரி கிளம்புடி. இப்படி நீ கிளம்பறது மனசு கிடந்து தவிக்குது. ஏற்கனவே எனக்கு சின்ன பிள்ளைக்கு மிட்டாயை காமிச்சு திரும்ப பறிச்சுக்கற மாதிரி ஒரு மாதிரி ஆகுது இப்ப நீ கிளம்பறது…” என்று குரல் கரகரப்புடன் சொல்ல இதயா உள்ளுக்குள் கலங்கி போனாள்.
“அச்சோ, இதென்ன பேச்சு? நான் தான் டெலிவரி ஆகவும் வந்திருவேனே? (Ultram) அப்பறம் என்ன?…”
“வந்திடுவ தான். ஆனாலும் உன் மூளை சும்மா இருக்காதே. எல்லாட்டஹியும் இழுத்து போட்டு யோசிக்கும். அதுதான் என் பயமே…” என்றான் அவளை அறிந்தவனாக.
“ஹ்ம்ம், கொஞ்சம் அதிகமாவே கஷ்டம் குடுத்துட்டேன்ல…”
“ஹ்ம்ம், இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா எனக்கு தேவைதான்…” என்றான் கண்ணன்.
அதே நேரம் பின்னால் இருந்து வண்டியை யாரோ தட்ட திரும்பி பார்த்தான் கண்ணன். வேலவன் தான் நவீனுடன் பேசியபடி நின்றுகொண்டு இருந்தான்.
“ஓகே, நேரமாகுது போல. நான் இறங்கிக்கறேன். பார்த்து போய்ட்டு வா. கால் வலிச்சா அப்பப்போ ரெஸ்ட் எடுத்துட்டு போகனும். புரியுதா?…”
என சொல்லி அவர்கள் பார்க்கின்றனரா என்று திரும்பி பார்த்துக்கொண்டே அவளை முத்தமிட போக அதற்குள் இதயாவே அவனின் கன்னத்தில் தன்னிதழ்களை பதித்திருந்தாள்.
“ஹேய் ஹார்ட்பீட்…” என அணைத்தவனுக்கு விட்டு செல்லவே விருப்பமில்லாது போக வேறு வழியின்றி கீழே இறங்கினான்.
இதயாவிற்கு அத்தனை கஷ்டமாக இருந்தது கண்ணனை அப்படி பார்க்க. நிச்சயம் தானின்றி அவன் நிம்மதியாய் இருக்கமாட்டான் என்று நன்றாகவே தெரியும் அவளுக்கு. ஆனாலும் வேறு வழியில்லையே.
உடனே அனைவரும் வந்து காரில் ஏறிக்கொள்ள நவீன் அப்போதே சென்னை கிளம்பிவிட்டான். வேலவனும் உத்ராவுமே கிளம்பிவிட்டனர் அங்கிருந்து.
ஒரு வாரம் போல சிவசுந்தரம், மகனுடன் தங்கியிருந்து செல்லலாம் என்று சொல்லிவிட்டார் ருக்மணியிடம். நிஷாவும் அவர்களுடன் இருக்க கண்ணன் தன்னறைக்கு நுழைந்துகொண்டான்.
அவளுடன் பிரிந்திருந்த காலம் கூட உணராத அந்த வெறுமை இப்போது அவனை சுட்டது.
இத்தனை நாள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்துவிட்டு இப்போது பிரசவத்திற்கேனும் பிரிந்து செல்வது மனதிற்கு கவலையளித்தது.
இன்னும் ஒரு வாரம் தானே? என்று மனதை தேற்றிக்கொண்டவன் இரவு உணவுக்கு வெளியே வர அவனுக்காக காத்திருந்ததை போல அத்தனையையும் எடுத்து வைத்தார் ருக்மணி.
“நிஷாக்குட்டி இங்க வாம்மா…” என அவளை அழைத்தவன் அவள் வரவும் தன்னருகே அமர்த்திக்கொண்டான்.
“உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன். ஆனா முடியலை. இன்னைக்கு இங்க நடந்ததுக்கு…”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ண்ணா. விடுங்க. நம்ம அக்காவை பத்தி தெரியாதா? லூஸு மாதிரி எதாச்சும் பேசுவாங்க. என்ன ஒன்னு இதனால உங்களுக்கு சங்கடமாகிடுச்சேன்னு தான் கஷ்டமா போச்சு….”
“உண்மையிலையே ரொம்ப சந்தோஷம்டா. நீ புரிஞ்சிக்கிட்டதுக்கு. முதல்ல மேல படி. கல்யாணம் தானா நடக்கும். அதுக்கு முன்ன உன்னோட அச்சீவ்மென்ட் எதுவோ அதுல கவனம் செலுத்து. நாங்க உனக்கான எதிர்காலத்தை பார்க்கறோம்…”
“இருக்கட்டும்ண்ணா, எனக்கு அதை விட வேற ஒன்னு கேட்கனும்…” என்றவள்,
“உண்மையா உங்க ரெண்டுபேருக்குள்ள சண்டை, அண்ணி கோவமா கிளம்பினது எல்லாம் என்னாலையா?…” என கேட்க,
“இல்லையே, நீ ஏன் அப்படி நினைக்கிற?…”
“இல்ல, அண்ணியும் கோவமா கிளம்பினாங்க. உங்களுக்கும் முகமே மாறிடுச்சு. கிளம்பறப்போ அண்ணி ஒன்னும் சொல்லாம கார்ல போய் உட்கார்ந்துட்டாங்க…” என்றாள்.
“அவளுக்கு உண்மையா கோபம் என் மேல. கிளம்பும் போது கொஞ்சம் கோவப்படுத்திட்டேன். அதான் அப்படி கிளம்பிட்டா. இப்படியெல்லாம் நினைக்க கூடாது. புரியுதா?…” என்று சொல்லவும்,
“நீ ஏன்ப்பா கிளம்பற பொண்ணை கோவப்படுத்தின?…” என்றார் சிவசுந்தரம்.
“அதுவும் பிள்ளைத்தாச்சி, பிரசவத்துக்கு போகும் போது?…” என்று அவர் லேசாய் கண்டிப்புடன் கேட்க கண்ணனுக்கு முகத்தில் சிறு புன்னகை. ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு முடித்தவன்,
“சாப்பாடு எல்லாம் குடுத்து விட்டாச்சா? எதுவும் மிச்சம் விழுந்திடலையே?…” என்றான் நிஷாவை பார்த்து.
ருக்மணி பக்கம் திரும்பவே இல்லை. ஏற்கனவே அவர் மீது கோபம். இப்போது இன்று நடந்ததற்கு இன்னுமே. ஆனாலும் முகம் திருப்பவெல்லாம் இல்லை.
“வேலைக்கார பொண்ணுட்ட எல்லாத்தையும் குடுத்தனுப்பிச்சுட்டேன். நமக்கு கொஞ்சம் மட்டும் எடுத்து வச்சுட்டு. பாவம் தானே அதுவும். நல்ல சாப்பாடு இன்னைக்கு…” என ருக்மணி சொல்ல,
“ம்மா, முதல்ல வேலைக்காரங்கன்னு சொல்லாதீங்க. அவங்களுக்கு பேர் இருக்குது தானே? போனதடவை வந்தப்பவே நான் உங்களுக்கு இதை சொல்லியிருக்கேன். அதோட நாம இன்னைக்கு குடுக்கலைன்னாலும் அவங்க வீட்டுல சமைக்கத்தான் செய்வாங்க. பாவம் எங்க இருந்து வந்தது?…”
நிதானமாக அழுத்தத்துடன் அவன் கேட்க ருக்மணி அயர்ந்து போய் பார்த்தார் மகனை.
முன்பு இப்படி எல்லாம் தன்னை அவன் பேசியதே இல்லை. இப்போது பேசுவதெல்லாம் தவறாகி போகிறதே என்று அவனின் முகத்தை பார்த்தபடி கையை பிசைந்து நின்றார்.
போதாததிற்கு தனம் கிளம்பும் பொழுது அவருக்கு சாப்பாட்டை கொடுத்துக்கொண்டே தான் ஏதோ பெரிய உபகாரம் செய்துவிட்டதை போலவும் பெருமையாய் பேசிவேறு வைத்திருந்தார்.
அது மகனுக்கு தெரிந்தால்? இதை சொல்லியதற்கே இத்தனை பேசுகிறானே? அது தெரிந்தால் என்று வாயை மூடிக்கொண்டார்.
“சரி நான் காலையில ஆபீஸ் கிளம்பனும். போய் படுக்கறேன்…” என்றவன் பார்க்கவேண்டிய பைல்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றுவிட்டான்.
இதயா சிதம்பரம் செல்லும் வரையில் அவ்வப்போது எங்கே செல்கிறாள் என்று கேட்டுக்கொண்டே தான் இருந்தான் கண்ணன்.
இரண்டு நாட்கள் ஆகிற்று. அலுவலகத்தில் கூட நேர சென்றதே தவிர வீட்டில் அவளில்லாத தனிமை பைத்தியம் பிடிக்க வைக்காதது தான் குறை.
இவ்வளவு வருடம் இவளை விட்டு எப்படி இருந்தேன் நான்? என்று அவனுக்கவனே வியந்து போனான்.
வீட்டிற்கு வந்தால் பெற்றோருடன் சில வார்த்தைகள். பின் வேலையில் மூழ்கிவிடுவான்.
இப்படியே அந்த வாரமும் முடியவிருக்க இதயாவை பார்க்க செல்லும் நாள் ஆளுக்கு முதல் கிளம்பி வந்து நின்றான் சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும் என்றதும்.
சிவசுந்தரத்திற்கும், நிஷாவிற்கும் அப்படி ஒரு சிரிப்பு. ‘நல்லா இருந்தா சரி’ என்பதை போல ருக்மணி பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.
“என்னப்பா? நீங்களும் சிதம்பரத்துக்கு வாங்களேன்…” என்று சொல்லி கடலூருக்கு செல்ல இருந்தவர்களை சிதம்பரம் அழைத்து வந்துவிட்டான்.
அவர்களுமே வந்ததும் வந்தாகிற்று, மருமகளை பார்த்துவிட்டே செல்லலாம் என்று வந்துவிட்டனர்.