வந்தவர்களுக்கு தடபுடல் கவனிப்பு தான். அக்கம்பக்கத்தினரின் பார்வையை கண்டு மஞ்சுவே,
“பூவி மாமனார், மாமியார் வந்திருக்காங்க….” என தானே வலிய சென்று சொல்லிவிட்டு வந்தார். அத்தனை மகிழ்ச்சி முகத்தில்.
கையில் பிடிக்கமுடியவில்லை அவரை. அங்கும்மிங்குமாய் ஓடி ஓடி விருந்து தயாரித்தார்.
அன்று அங்கே இருந்துவிட்டு மாலை சிவசுந்தரம் கிளம்ப கிளம்பும் முன்னர் நிஷா தனியே பேசவேண்டும் என்று இதயாவை அழைத்து வந்தவள்,
“எங்க மேல என்ன கோவம்ன்னாலும் பேசாம கூட இருந்துக்கோங்க அண்ணி. ஆனா இனி அண்ணனை விட்டு இருக்காதீங்க. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க அண்ணா…” என்றவள் திருமணத்தின் முன்பு நடந்த பிரச்சனைகளையும் ஒவ்வொன்றாய் சொல்ல இவை எல்லாம் அவளுக்கு புதிது.
“ப்ளீஸ் அண்ணி, இனிமே அண்ணனை தனியா விடவேண்டாம்…” என்று கையை பிடித்து இறைஞ்ச இதயாவின் விழிகள் கலங்கி போயின.
இதை பற்றி இத்தனை நாளில் ஒருமுறையாவது சொல்லியிருப்பானா? கல்லுளிமங்கன் என்று வேறு அத்தனை திட்டு மனதிற்குள்.
“நான் பார்த்துக்கறேன் நிஷா. எனக்கு இப்ப யார் மேலையும் கோவம் இல்லை. முக்கியமா உங்கண்ணன் மேல…” என்று அவளை பார்த்து புன்னகைத்தவள்,
“நீ ஒன்னும் ஹர்ட் ஆகிடலையே?…” என்றாள் அன்று நடந்த பிரச்சனையை வைத்து.
“ச்சே, ச்சே. அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன் அண்ணி. நீங்க அதை எல்லாம் நினைக்காதீங்க…” என்று சொல்லி சிரிக்கவும்,
“நீ ரொம்ப ஸ்வீட்….” என இதயாவும் சொல்ல,
“நிஷா நேரமாகுதும்மா…” என அழைத்தார் ருக்மணி.
“கிளம்பறோம் பூவி. உடம்பை பார்த்துக்கோ. நான் அடுத்தமாசம் வந்துடறேன். கூடவே இருந்து உன்னை பார்த்துக்கறேன்…” என ருக்மணி சொல்ல தலையை அசைத்தாள் இதயா.
ஆனாலும் இப்போதும் ருக்மணியை பார்த்தால் அத்தனை ஆச்சர்யம். இவரால் எப்படி ஒன்றுமே நடவாததை போல இருக்க முடிகிறது என்று. ஆனாலும் மனதிற்குள் வைத்துக்கொண்டாள்.
அவர்கள் கடலூர் கிளம்பிவிட இரவு கண்ணன் அவளுடன் கிளம்பிவிட்டான் திருச்சிக்கு.
காரில் ஒரு பக்கம் தள்ளி அமர்ந்து அவளை மடியில் படுக்கவைத்துக்கொள்ள இதயாவிற்கு சிதம்பரம் செல்லும் போது இருந்ததை விட இப்போது அங்கிருந்து கிளம்பி திருச்சி வர இலகுவாக இருந்தது அந்த பயணம்.
திருச்சி வரவுமே இரு நாட்கள் விடுமுறை எடுத்து அவளுடன் இருப்பதாக முடிவு செய்திருந்தான் அவன். வீட்டினுள் நுழைந்ததும் அவனை பிடிபிடியென பிடித்துவிட்டாள் இதயா.
“உங்களுக்கு அப்படி என்ன ஹெட்வெய்ட்? ஏன் பேசலைன்னு கேட்டப்போ நடந்ததை சொல்லவும் அத்தனை கஷ்டமோ? இவக்கிட்ட என்ன சொல்றதுன்னு தானே நினைச்சுட்டீங்க? ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் தானே? நிஷா சொல்லலைன்னா இன்னும் எனக்கு தெரிஞ்சிருக்காது இல்லையா?…”
“ஓஹ் அவ வேலையா?…” என்றான் அலட்சியமாக.
“பேசவேண்டிய இடத்துல பேசுங்கன்னாலும் வாயை திறக்கறதில்லை. பேசினதையும் சொல்றதில்லை. எல்லாம் உங்க இஷ்டம். இப்படி தான் நினைச்சேன் நினைச்சேன்னு மனசுக்குள்ளயே நினைச்சா யாருக்கு தெரியும்?…” என்றவளின் அத்தனை கோபத்தையும் ஒரு சிரிப்போடே அவன் கடந்து செல்ல,
“இதுக்கு இந்த சுவத்துக்கிட்ட பேசியிருக்கலாம். எப்ப பார்த்தாலும் ஒரு சிரிப்பு, இல்ல ஒரு முறைப்பு. அட போங்க ஆபீசர்…” என சோர்ந்து போனாள்.
இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் கிளம்பியவன் வேலையை இன்னும் அவள் விடாமல் இருக்க விடுமுறையை தான் எடுத்திருக்க தன்னுடன் வருகிறாயா என்றுவேறு கேட்டு அவளிடம் வாங்கிக்கட்டியிருந்தான்.
“நீங்கலாம் மனுஷனே இல்ல தெரியுமா? எப்ப பார்த்தாலும் கூட வா வான்னு ஸ்கூலுக்கு போற பிள்ளை மாதிரி துணைக்கு கூப்பிட்டுட்டே இருக்கறது. இதுக்குத்தான் கூட்டிட்டு வந்தீங்களா?…” என அவள் பாடிய பாட்டில் அடித்துபிடித்து தான் மட்டும் கிளம்பி சென்றான்.
அவனை அனுப்பிய சிறிது நேரத்திலேயே போரடிக்க போனை போட்டு இதயா அவனை வேறு நொச்சு பண்ண இப்போது அவள் மீது அவன் காய்ந்தான்.
“ஒழுங்கா ஆபீஸ் வந்திருந்தா அப்பப்பவாச்சும் பார்த்திருந்திருப்பேன். என்ன பன்றன்னு. அங்க வீட்டுல இருந்துட்டு என்னை போட்டு படுத்திட்டு இருக்க நீ?…” என்று எகிறும் போது அவள் அடங்கிவிடுவாள்.
மஞ்சுவும், யசோதாவும் இடையில் வந்து பத்துநாட்கள் இருந்துவிட்டு செல்ல ருக்மணி எட்டாம் மாசம் நிறைவுறும் நேரம் வந்துவிட்டார்.
அதன் பின்னர் வீட்டில் ஆட்கள் இருந்துகொண்டே இருக்க கண்ணனுக்கும், இதயாவிற்கும் தனிமை என்பது இரவு நேரம் என்றானது.
ஒன்பதாம் மாதம் துவங்கியதுமே மஞ்சு மீண்டும் வந்துவிட்டார். குழந்தை பிறக்கும் போது துணைக்கு யசோதா வருகிறேன் என்றுவிட சொல்லியதை போலவே பிரசவத்திற்கு இரு நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டார்.
அடுத்த இரு நாளில் அதிகாலை நேரம் இதயா கண்ணனை போலவே ஒரு ஆண்மகனை பெற்றெடுக்க கண்ணனின் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்வலைகள் மகனை கையில் ஏந்தும் பொழுது.
இருவரும் பிரிந்திருந்த நேரம் இதயாவின் பிடிவாதத்தின் வலிமையில் தங்கள் வாழ்க்கை எப்படியோ ஆகிவிடுமோ என்று அவன் நினைக்காத நாளில்லை.
வரமென வந்தவளின் வரவு அவன் வாழ்க்கை சுகம்பெற செய்ய இன்றோ அவனை கொண்டே ஒரு சிசு.
மெல்ல மெல்ல கண்கள் கூச தந்தையை பார்க்க முயன்று நாக்கை நீட்டி சப்புக்கொட்டி தலையசைத்தது. உடல் கூசி சிலிர்த்து போனான் அவன்.
“இதயா எப்படி இருக்கா அத்தை?…” என்று கேட்க,
“மயக்கத்துல தான் இருக்கா மாப்பிள்ளை. ரூம்க்கு மாத்தவும் பார்த்திடலாம்…” என்றார் மஞ்சு.
அதன் பின்னர் மனைவி, குழந்தை என கழிய அடுத்த இரு மாதத்தில் தருமபுரி மாவட்டத்திற்கு மாற்றுதலானான் கண்ணன்.
இதயாவால் வேலைக்கும் அப்போதைக்கு செல்ல முடியாது. அதுவும் பிள்ளையை விட்டு இதயா அங்குமிங்கும் அகலவே மாட்டாள்.
அப்படி இருக்க வேறு வழியின்றி கண்ணன் மாற்றுதலாகவும் வேலையை விட்டுவிட்டாள்.
அதுவும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு செல்வேன் என்று சொல்லியே எழுதி கொடுத்தாள்.
எதிலும் கண்ணனின் தலையீடு இல்லை. உன் விருப்பம் என்றுவிட்டான் அவளிடம்.
குழந்தை வளர்ந்ததும் மீண்டும் வேலையில் சேர்ந்துவிடுவேன் என்றதற்கும் அவனிடம் மறுப்பில்லை.
“எல்லாத்துக்கும் தலையாட்டாதீங்க…” என்பாள் கடுப்போடு.
“என்ன பேசினாலும் நீ சண்டைக்கு வருவ. அதான் தலையசைச்சிடறேன்…” என சிரித்துக்கொண்டே அவன் தப்பிக்க,
“ரொம்ப தெளிவு ஆபீசர்…” என்பாள் அவனின் வயிற்றில் குற்றி.
குழந்தை பிறந்ததும் கண்ணனுக்காக அவனின் வீட்டிற்கு கடலூருக்கு சென்றாள். அதுவும் யாரின் வற்புறுத்தலும் இன்றி. யாரின் சொல்பேச்சும் இன்றி தானாகவே சென்றவள் ஒரு நாள் அங்கே தங்கியிருந்துவிட்டே வந்தாள் அவனிடம்.
பேரனின் வரவை கொண்டாடிவிட்டார் சிவசுந்தரம். அக்கம்பக்கத்தினர் அத்தனை பேரும் இதயாவையும், குழந்தையையும் பார்க்கவென கூடிவிட காஞ்சனாவும், உத்ராவும் கூட வாயை திறக்கவில்லை.
முன்பு போலவா அவர்கள் ராஜ்ஜியம் இருக்கிறது? இருவருக்குள்ளேயே முட்டிக்கொண்டிருக்க இதில் அடுத்தவரை பேச நேரமெங்கே? இன்னுமே வீட்டில் பஞ்சாயத்து தான்.
தீராத தலைவேதனை உத்ராவிற்கு. இப்படி உன் பாட்டை பார்த்தாள் தான் மற்றவர்களை பற்றி நினைக்கமாட்டாய் என்றுவிட்டான் வேலவன். எங்கும் பேசமுடியவில்லை அவளால்.
அதிலும் இனி இதயாவை தான் பேசிவிட முடியுமா? இவர்கள் வந்ததுமே கண்ணன் இதயா அருகே வந்து நின்றுவிட்டான். அவர்கள் நகர்ந்து செல்லும் வரை அகலவே இல்லை.
அங்கிருந்த பொழுதுகளில் எல்லாம் அத்தனை சங்கடத்துடன் மனைவியின் முகம் பார்த்து பார்த்தே நேரத்தை கடத்தினான்.
எதையும் நினைக்கிறாளா? வருத்தப்படுகிறாளா? பழையவற்றினால் முகம் வாடி இருக்கிறாளா? என்று பார்க்க அவளோ அத்தனை வருடம் கழித்து வந்ததில் அங்கே அருகிருந்தவர்களின் தொடர் வருகையிலேயே களைத்து போயிருந்தாள்.
இரவு படுத்ததுமே உறங்கியும் போக காலை கண்ணன் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். இந்தளவிற்கு அவள் வந்து இருந்ததே போதும். இப்படியே சுமூகமாக கிளம்பிவிடுவோம் என்று கிளம்பிவிட்டான்.
இருவருக்கும் குழந்தையுடன் பொழுதுகள் ஓட இதோ குழந்தைக்கு குலதெய்வ கோவிலுக்கு மொட்டை போட்டு காதுகுத்தவென வந்திருந்தார்கள்.
தாய்மாமன் மடியில் அமர்த்தி காதுகுத்தி முடித்திருக்க தீப்தி குழந்தை அர்ஜூன் கழுத்தில் போடுவதற்கு தங்க சங்கிலியை எடுத்து நீட்டினாள் நவீனிடம்.
இருவருக்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. நிஷாவுக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருக்க அக்குடும்பமும் இந்த விசேஷத்திற்கு வருகை புரிந்திருந்தார்கள்.
“பூவிக்கா, குழந்தை ரொம்ப அழறான். என்னன்னு பாரு…” என்று நவீன் நீட்ட,
“பசிச்சிருக்கும் இதயா. நீ அந்த மண்டபத்துல போய் உட்கார்…” என சொல்லிய கண்ணன் நிஷாவை துணைக்கு அனுப்பினான்.
அத்தை முறைக்கு தாங்கள் செய்யவேண்டிய செய்முறையை செய்ய உத்ரா தயாராக இருக்க இதயா குழந்தைக்கு பசியாற்ற தனியே செல்ல ருக்மணியிடம் முணுமுணுத்தாள்.
“பார்த்தியாம்மா, நான் என் முறையை செய்யற நேரம் பார்த்து புள்ளயை தூக்கிட்டு போறா. என்னை பார்த்தா மட்டும் அவளுக்கு ஆகவே ஆகாது. இப்பவும் வந்தவளை வாங்கன்னு கூப்பிட்டாளா? யாரோயோ பார்த்த மாதிரி தலையை மட்டும் அசைச்சுட்டு போறா. என்னை மதிக்கிறதே இல்லை…” என்றாள்.
உத்ரா சொல்லியதை போல அவளை இதயா ஒரு மனுஷியாக மதிக்கவே இல்லை. கண்டுகொள்வதும் இல்லை.
“விடும்மா உத்ரா. இதை பெருசு பண்ணாத?…” என ருக்மணி தேற்ற,
“எல்லாம் உன் மகன் குடுக்கற இடம். குழந்தை பெத்து நம்ம வீட்டுக்கு கூப்பிட அத்தனை யோசனை. அவளா வரவும் இந்த அப்பாவும் என் மருமகளை போல உண்டான்னு தலையில தூக்கி வச்சு தாங்கறாரு. அவ கொஞ்சமாச்சும் உன்னையும், என்னையும் மதிக்கிறாளா?…”
இப்படி பேசி பேசி ருக்மணியை ஏற்றிவிட என்ன முயன்றும் ருக்மணி பழைய பல்லவியையே பாடிக்கொண்டு இருந்தார்.
“நான் என்ன செய்ய உத்ரா? உன் தம்பியை பத்தி உனக்கு தெரியாதா?…” என்ற பாட்டு தான்.
“நீயெல்லாம் என்னம்மா மாமியாரு? என் மாமியாரை பார்த்து படிச்சுக்கோ…” என்று சொல்ல,
“நீயெல்லாம் திருந்தாத ஜென்மம். உன் வாயில வசம்பை தான் வச்சு தேய்க்கனும்…” என்று கடுகடுத்து வந்தான் வேலவன்.
“ஏன்த்த, அவளுக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்கு. ப்ச், நீங்க என்ன பார்த்துட்டே நிக்கறீங்க? அந்த பொண்ணு என்ன வேணும்னா புள்ளயை தூக்கிட்டு போச்சு. உங்க பேரனுக்கு தானே பசியாத்த போயிருக்குது. இவதான் வேலையத்தவ பேசறான்னா நீங்களும்மா கேட்டுட்டு நிப்பீங்க?…”
இருவரையும் பிடித்து வாங்குவாங்குவென்று வாங்கியவன் கடுமையாக உத்ராவை பேசிவிட்டே சென்றான்.
சிறிது நேரத்தில் இதயா குழந்தையோடு வர வேலவன் உத்ராவை பார்க்கவும் கம்மென்று வந்து முறை செய்துவிட்டு செல்ல வேலவன் சிறிது நேரம் பேசிக்கொண்டே அங்கே நின்றான்.
அவனிடம் பேச இதயாவிற்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் தானாகவும் சென்று பேசவில்லை. மரியாதையோடு அவனிடம் இன்முகத்தோடே பேச கண்ணனும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
அவனுக்கு தெரியுமே அவனுக்காக அவனுக்காக என்று இவள் இத்தனை வருகிறாளே என. இன்னும் அவனுக்காக என்னவும் செய்வாள் தான். ஆனால் அவன் என்ன கொடுப்பதாம் காதலை தவிர?
நித்தமும் இரவு மகனுக்கு கதை சொல்வாள். சொல்லும் கதையில் முழுக்க முழுக்க ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும்?, எந்த சூழ்நிலையிலும் எப்படி நடக்கவேண்டும்? என்பதை அழகுற அவள் சொல்ல சொல்ல கண்ணனுக்கு லேசாய் வலிக்கும்.
சில காயங்கள் ஆறாமல் அப்படியே அதன் வீரியத்துடன் தான் இருக்கும். அதை போல தான் அவர்களுக்கிடையேயான கசப்பும். அது அடி தங்கிவிட்டது. ஆனாலும் அவ்வப்போது அதன் இருப்பை காட்டிக்கொண்டு தான் இருக்கும்.
ஆனாலும் அக்காயத்தை இருவரின் மேலும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பே ஆற்றிவிடும். வலிக்கு மருந்தாகி, விழிக்கு விருந்தாகும் அவர்களின் நேசம்.
அன்று நல்லபடியாக விசேஷம் முடிய அனைவருமே கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தனர். தீப்தியும், நவீனும் சென்னையில் இருக்க இங்கே சிதம்பரத்திலேயே இருந்துகொண்டார்கள் அய்யாசாமியும், மஞ்சுவும்.
மறுநாள் அனைவரும் காலை கோவிலுக்கு சென்றுவிட்டு பிச்சாவரம் செல்ல கண்ணனுக்கும் இதயாவிற்கும் மனதில் பழைய நினைவுகள்.
குடும்பமாக பெரிய போட்டில் கிளம்ப அவர்களுடன் குழந்தையோடு ஏற இருந்தவளின் கை பிடித்து நிறுத்தியவன்,
“நவீன் குழந்தையை பார்த்துக்கோ…” என்று மகனை மனைவியிடம் இருந்து வாங்கி நவீனிடம் தர,
“என்ஜாய் அண்ணா…” என்றாள் தீப்தி.
“இதெல்லாம் ஓவர் அத்தான். எத்தனை தடவை பூவிக்காவோட வந்திருக்கீங்க? இந்தவாட்டி எங்களோட சேர்ந்து வரலாம்ல…” என வேண்டுமென்றே நவீன் சீண்ட,
“இனியும் எத்தனை தடவை வந்தாலும் இதயாவோட தான் இந்த ட்ரைவ். நீங்க கிளம்புங்க…” என்று கையசைத்தவன் தங்களுக்கு தனி போட்டை எடுத்தான்.
“இப்போ ஏன் தனியா? எல்லோரோடையும் போயிருந்திருக்கலாம் தானே?…” என்று கேட்க,
“இங்க வந்து எத்தனை வருஷம் ஆச்சு? நம்ம லவ் பண்ணப்போ வந்தது…”
“லவ்வா?…” என்று இதயா சிரிக்க,
“ஆமா. இல்லயா என்ன?…” என்றான் ஒளிரும் புன்னகையோடு.
“ஆபீசர் சொன்னா சரிதான். ஆமா ஆமா…” என்று தலையாட்ட,
“என்கிட்டே இருந்து உனக்கு தொத்திருச்சு போ…” என்று அவளை தலையை பிடித்து ஆட்டியவன்,
“வா நமக்கு வெய்ட் பன்றாங்க…” என்று சொல்லி ஒரு போட்டில் ஏறியதும் முதலில் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவள் ஐந்து நிமிடத்திலேயே பேச ஆரம்பித்தாள்.
ஒவ்வவொரு இடங்களையும் அவனிடம் சொல்லிக்கொண்டே தன் பழைய நினைவுகளை பூவிதயா மீட்டெடுக்க கண்கொட்டாமல் பார்த்தபடி ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“எம்மா நீ தான அது? அந்த பொண்ணு….” என்றார் படகை ஓட்டுபவர்.
“என்னை தெரியுமா உங்களுக்கு?…” என்று இதயா கேட்க,
“நல்லா கேட்ட போ. கத சொல்ற பொண்ணு தான நீ? இந்த இடத்தை ஒண்ணுவிடாம சுத்தி காமிச்சியே. என் வேலைக்கு வந்திருன்னு நான் கூட சொன்னேனே?…” என்று அவர் சொல்ல கண்ணன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“செம ஞாபகம் தான் இவருக்கு. ரொம்ப பாதிப்பு போல…” என்று அவன் இன்னும் சிரிக்க,
“இப்ப எதுக்கு சிரிப்பு? நீங்க மறந்துருப்பீங்கன்னு ஒன்னும் சொல்லலை. எனக்கு ஞாபகம் இருக்கான்னு பார்த்தேன். அவ்வளோ தான்…” என்று உதட்டை சுழிக்க,
“நான் சும்மா தான் சிரிச்சேன். உன்கிட்ட ஒன்னும் கேட்கலையே?…” என்று கண்ணன் இன்னும் சிரிக்க,
“உள்ளதத்தான சொன்னேன்? அப்ப நீ அந்த பொண்ணு இல்லையா?…” என்றார் அவர் மீண்டும்.
“அவளே தான். கரெக்ட்டா ஞாபகம் வச்சிருக்கீங்க நீங்க…” என்று கண்ணன் சொல்லியதும் அவரின் முகம் மலர்ந்துவிட்டது.
“பேசிக்கிட்டே இங்கயே நின்னுட்டு இருக்கீங்க, அந்த டேர்னிங் திரும்புங்க…” என இதயா சொல்ல கன்னத்தில் கை வைத்தபடி அவளை பார்த்துக்கொண்டே அந்த ரம்யமான சூழலை அனுபவித்தபடி அவளின் கை கோர்த்துக்கொண்டான் கண்ணன்.
கண்ணனை தேடி வந்த மீரா அவளை கண் அணைக்கும் ஸ்பரிசங்களோடு காதலாய் அரவணைத்து தானே அவளிடம் அடைபட்டு கொண்டவன் இந்த கண்ணபிரான்.
இருவரின் கனவுகள் கனவுகளாக மட்டுமே இருந்துவிட்டு போய்விடுமோ என்ற சூழலில் காதலும், அதனை தொடர்ந்த கனவுகளும் முதலில் இனித்து பின் வலித்து இப்போது வாழ்க்கையில் இணைந்து கையிழந்து, கண்ணோடு கரையவிருந்த ஸ்வப்பனங்களை உயிர் உருக ஸ்பரிசித்து உணர்வோடு ஸ்வீகரித்துக்கொண்டார்கள்.
இன்னும் எண்ணிலடங்கா ஸ்வப்பன ஷணங்கள் அவர்களை தென்றலென ஸ்பரிசிக்கட்டும் என்ற வாழ்த்துக்களுடன் நாம்
மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல
கண்ணன் நீதானென்று என்று மீரா வந்தாளின்று
காதல் கதை ஜாடைகளில் சொல்ல
மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி
மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி
ஸ்வப்பன ஸ்பரிசங்கள் தீண்டியது