“குடிச்சுட்டு கெளம்பு சும்மா என்கிட்டே ஒரண்டை இழுக்காம…” என்று எரிச்சலாய் சொல்லிவிட்டு சாம்பார் வைக்க பருப்பை கழுவினார்.
“நல்லா பேசத்தான் செஞ்சா என்ன? வந்து அஞ்சு மாசமாச்சு. இன்னும் ஒழுங்கா பேசக்கூட உனக்கு முடியலை….” என்றவரை கடுப்பாய் திரும்பி பார்க்க,
“காப்பில சக்கரை குறைவு தான்…” என்றுவிட்டு தம்ளரை அங்கே வைத்துவிட்டு கிளம்பினார்.
கர்நாடகாவிற்கு பணி மாற்றுதலாகி வந்து சேர்ந்து இத்தோடு ஐந்து மாதங்களாகிற்று.
அவரின் போலீஸ் கண்ணுவிற்கு சமைக்க என எங்கு சென்றாலும் உடன் சேர்ந்தே கிளம்பி சென்றுகொண்டு இருந்தார்.
இதோ இங்கே வந்து இந்த குளிர் ஒத்துக்கொள்ளவே இல்லை. இதுவரை இரண்டு மாநிலங்களில் தங்கியிருந்தாலும் இதன் குளிர் உச்சத்திற்கும் உச்சமாய் இருந்தது.
இன்னும் இங்கே எத்தனை மாதங்களோ? என்று நினைத்தபடி சமையலை கவனித்தார்.
இன்னும் சற்று நேரத்தில் அவள் வந்துவிடுவாள். சாப்பிட்டதும் நல்ல உறக்கம். அதுவும் சிலமணி நேரம் மட்டுமே. மீண்டும் பணிக்கு கிளம்புகிறேன் என எழுந்து சென்றுவிடுவாள்.
“பூவம்மா…” என்ற குரலில் அவரின் ஈரமாகியிருந்த கைகளை துடைத்தபடி,
“வந்துட்டேன் கண்ணு…” என ஓடினார்.
“என்ன கண்ணு குளிச்சியா?…”
“ம்ம்ம், மேல கொஞ்சம் சகதி. அதான் குளிச்சிட்டேன்…” என்றவளுக்கு தட்டை எடுத்து வைத்தார் பூவம்மா.
கடுகடுவென்று பேச அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு. சிரித்ததில் புரையேறிவிட தலையை வேகமாய் வந்து தட்டிய பூவம்மா,
“வீட்டுல நினைக்காக போலீஸ் கண்ணு…” என்று சிரித்தார்.
“ஹ்ம்ம், வீட்டுல தான் நினைப்பாங்க. வேற யார் நினைக்க?..” என்று அவளும் சொல்ல பூவம்மாவுக்கு மனதிற்குள் கவலை.
“நாளைக்கு அங்க கிளம்புறீங்களா போலீஸ் கண்ணு?…” என கேட்க,
“இன்னும் ரெண்டு இட்லி வைங்க…” என்று கேட்டு வாங்கி உண்டவள்,
“ஒரு காபி…” என்று எழுந்து சென்று சோபாவில் அமர்ந்துகொண்டாள்.
இன்னும் விடிந்திருக்கவில்லை. கும்மென்ற இருள் சூழ்ந்திருக்க அந்த குளிரிலும் கொஞ்சமும் நடுக்கமில்லாமல் அதனை தாங்கிக்கொண்டு அவள் இருப்பதை பார்த்தார் பூவம்மா.
“இன்னிக்கு லீவு போட முடியாதா கண்ணு?…” என தயக்கத்துடன் கேட்டபடி அங்கிருந்த ஸ்டூலில் அமர,
“இங்க இத்தனை இருக்கே? ஏன் ஸ்டூல்லையே உட்காருறீங்க பூவம்மா?…” என கண்டனத்துடன் பார்த்தாள் அவள்.
“அட போங்க கண்ணு, நா ஒன்னு கேட்டா அதுக்கு வேற கேள்வி கேட்கறீங்க. இல்ல வேற பேசறீங்க…” சலிப்புடன் பூவம்மா எழுந்து நிற்க,
“எனக்கு எதுக்கு பதில் சொல்லனும்னு தோணுதோ அதுக்கு சொல்லுவேன்…”
“ஊருக்கு போறதுக்கு சொல்ல வேணா? என்னமோ பண்ணுங்க. நீங்க போனா நானும் ஊருக்கு போவேன். இல்லனா இங்கதான் உங்க கூட இருக்க போறேன்…” என்ற பூவம்மா,
குறைபடுவதை போல சொல்லவும் அவளிடம் புன்னகை மட்டுமே. சிரித்தபடி எழுந்தவள்,
“இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கும். போகனும்…” என்றவள்,
“டூ ஹவர்ஸ்ல என்னை எழுப்பிடனும் பூவம்மா. மறந்துடாதீங்க…”
“சரிங்க கண்ணு…”
“ஹ்ம்ம், இந்த வாங்க போங்க நிப்பாட்டுங்கன்னா கேட்கறதே இல்லை. எங்கம்மா வயசுக்கு மேல நீங்க. ஆனாலும்…”
“நீங்களும் தான் கேட்கலை. வாங்க போங்கன்னு கூப்பிடறீங்க…”
“அது உங்க வயசுக்கு மரியாதை பூவம்மா…”
“இருந்தாலும் இருக்கட்டும்ங்க கண்ணு…” என்று சொல்ல தலையசைத்தவள் உள்ளே சென்றாள்.
அதுவரை அணிந்திருந்த நீள அங்கியை கழற்றியவள் அறையின் ஹீட்டரை போட்டுவிட்டு படுக்கையில் சாய்ந்தாள்.
கண்ணை மூட இமைகள் பின்னிக்கொண்டதும் வழக்கமான நினைவுகள் நிகழ்வுகளை தாங்கிக்கொண்டு மூடிய விழிகளின் மனக்கதவை எழுந்துகொள் என தட்டி நின்றது.
‘வந்துட்டான். ப்ச், நிம்மதியா தூங்க முடியுதா?’ என சலித்தாலும் இதழ்கள் ஓரம் ஒளிந்திருந்த சிறு புன்னகை பெரிதாய் ஒளிர முயன்றது.
“நீங்களும் தான் கேட்கலை….” என்ற பூவம்மாவின் குரலுக்கு பின்னால் அவனின் குரல்.
“முதல்ல எல்லாருக்கும் மரியாதை குடுக்கனும். நாம குடுக்கற மரியாதை தான் நமக்கானது. புரிஞ்சுக்கோ…” என்றவன் குரல் உள்ளுக்குள் உருக்கியது.
“இதுல எல்லாம் குறைச்சலே இல்லை. ஆனா…” என பல்லை கடித்தாள் இப்போது.
டெல்லி யுனிவர்சிட்டியில் பி.எஸ்.சி வனத்துறை சம்பந்தமான படிப்பை இதற்கென்றே படித்துவிட்டு வந்தவள்.
யு.பி.எஸ்.சி தேர்வில் ஐ.ஏ.எஸ் பணிக்கு பதில் ஐ.எஃப்.எஸ் தான் தனக்கு என்று ஸ்திரமாய் தேர்ந்தெடுத்த உடனே முதலில் நின்றது அவனிடம் தான். எந்தவித ஆச்சரியமும் இல்லை அவனிடம்.
“யூர் விஷ். பட் நிறைய ஸ்ட்ரகிள் இருக்கு. ஆரம்பிச்சிட்டு நீ பேக்கடிக்க கூடாது…”
“கண்டிப்பா மாட்டேன். எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு…” என்றவளின் உறுதியில் முழுமனதுடன் தலையசைத்தவன் படிப்பை முடிக்கும் வரை அவளுக்கு உறுதுணையாய் இருந்தான்.
“ஓகே, டூ இட்…” அவ்வளவு தான்.
அவனிடமிருந்து எந்தவித வாழ்த்து கூட இல்லை. ஆனால் அவன் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்ததே.
அதைவிட வார்த்தையில் வரும் வாழ்த்து தேவையாய் இருக்கவில்லை அவளுக்கு.
வீட்டில் இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் கணித்திருந்தான் என்று அவன் அதிராததில் கண்டுகொண்டாள்.
தானே சென்று அவனிடம் சொல்லும் வரை கேட்கவில்லை. ஆனால் அவனுக்கு தெரிந்திருந்தது.
தானும் கேட்கவில்லை. தெரிந்த ஒன்றை கேட்டு அது எதற்கு என்று விட்டுவிட்டவள் கேட்கவேண்டியதை கேட்ட பொழுதில்?
உறக்கம் கண்களை தழுவ முயன்ற சமயம் இந்த நினைவு எழும்ப கைகளும் தன்னைப்போல் மேல் எழுந்து கன்னத்தை லேசாய் வருடியது.
இப்போதும் தீயாய் தகதகக்கும் போல் லேசாய் கன்னம் எரியும் பிரம்மை. அவன் அன்று கொடுத்த கன்னத்து அடியை இப்போதும் மறக்க முடியவில்லை.
சட்டென எழுந்தமர்ந்துவிட்டாள். இதற்கு மேலும் உறக்கம் வரும் என தோன்றவில்லை.
இதோ இரண்டு வருடமாகிறது. ஆனாலும் எதையும் மறக்க முடியாதபடி தான் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.
அவன் பற்றிய விஷயங்கள் காதுக்கு வருவதும் போவதுமாகவே இருந்தது. அவள் எதிர்பார்த்த செய்தி மட்டும் வரவில்லை.
ஏமாற்றமா? சந்தோஷமா? என பிரித்தறிய முடியாத ஒரு உணர்வு. வேண்டாம். அப்படி எந்த தகவலும் வேண்டாம்.
இப்போதும் இரண்டில் எது நடந்தாலும் அதனை ஒப்புக்கொள்ளவும், தாண்டி செல்லவும் மனதில் வலு இருக்கிறதா என்றால் சந்தேகமே.
“உன் கண்ணை தாண்டி என்னால பார்க்கவோ, இல்லை வேற யோசிக்கவோ முடியலை. உன்கிட்ட இதை எதிர்பார்க்கவும் இல்லை…”
அவனின் அதிர்ச்சியும், கோபமுமான அந்த முகம் அவளுக்குள் விதைத்த அவமான உணர்வை துடைத்தெறிய முயன்று முயன்று தோற்றுக்கொண்டே தான் இருக்கிறாள் இன்றளவும்.
அவனிடம் தோற்பதை பெரிதாய் நினைக்கவில்லை. ஆனால் அவனின் அந்த உணர்வு கொடுத்த வலியிலிருந்து மீள முடியாத தோல்வி. முடியவில்லை.
“ஏன் ஏன் முடியலை? நீ பார்க்கலைன்னா நானும் அப்படி இருக்கனுமா? போடா…” என்று சத்தமாகவே சொல்லி கோபத்தில் அருகிருந்த தண்ணீர் ஜக்கை தட்டிவிட கதவு தட்டும் சத்தம்.
திடுக்கிட்டு திரும்பியவள் நிதானத்திற்கு வரவே நேரமெடுத்தது. மீண்டும் படுத்துவிட்டாள்.