“நீங்க என்ன பண்ணுவீங்க?…” என்று சொல்லியவள் வேக நடையுடன் வெளியே வந்தாள்.
இன்னும் பத்திரிக்கையாளர்கள் அங்கே தான் இருந்தனர். இவளின் வருகைக்காக காத்திருக்க சிரிப்பு மாறாமல் வந்து நின்றவள்,
“இப்போவாவது ஒன் பை ஒன்னா கொஷின் பண்ணுவீங்களா? இல்லை கூட்டத்துல கோவிந்தாவா?…” என சிரித்துக்கொண்டே கேட்கவும் அங்கிருந்தவர்களுக்கு கோபம் எழுந்தாலும் உண்மை தானே என்றும் தோன்றியது.
“கேஸ் டிபார்ட்மென்ட்க்கு ஹேன்ட் ஓவர் பண்ணியாச்சு. இனி விசாரணை பத்தி அவங்க தான் முடிவு பண்ணுவாங்க…” என்றாள் அவளாகவே.
“மேம், இந்த கேஸாவது நேர்மையா நடக்குமா? பாரஸ்ட் ஃபயர் ஆக்சிடன்ட்ல நிறைய விஷயங்கள் மறைக்கப்படுவதா சொல்றாங்களே? உண்மையா?…”
“இந்த கேள்விக்கான பதிலை நான் ஏற்கனவே சொல்லிட்டேன். என்னோட என்கொயரிஸ் அன்ட் ரிபோர்ட்ஸ் எல்லாம் நேர்மையா தான் நான் குடுத்திருக்கறதா நம்பறேன்…”
“இப்போ இந்த கேஸ்ல இன்வால்வ்டாகி இருக்கறது மினிஸ்டரோட தம்பி பசங்கன்னு பேசப்படுதே? அவங்க மீதான விசாரணை எப்படி இருக்கும்?…”
“அதை அசிஸ்டன்ட் கமிஷனர் லக்ஷ்மணன்கிட்ட தான் நீங்க கேட்கனும். இப்ப அந்த கேஸ் அவர் தான் டீல் பன்றார்…”
“நேத்து என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா மேம்?…” என்றதும் ‘உன்னை தான்ய்யா இவ்வளோ நேரமா தேடுனேன்’ என்னும் மெச்சுதலான பார்வையுடன் பார்த்தவள்,
“இது ஒரு ட்ரன்க் அன்ட் ட்ரைவ் கேஸ்….”
“குடிச்சுட்டு பாரஸ்ட்க்குள்ள வந்திருந்தாங்களா?…” என்ற கேள்விக்கு,
“வித் ஸ்மோக்கிங்…” அவனே கேட்கவில்லை என்றாலும் இதை எல்லாம் தெரியப்படுத்திக்கொண்டிருந்தாள்.
“நேத்து நாங்க ஸ்பாட்டுக்கு போனப்போ…” என ஆரம்பித்து ஒவ்வொன்றையும் விளக்கமாக விவரித்து நிதானமாக சொல்லி அவர்களின் மெடிக்கல் ரிப்போர்ட் வரை காண்பித்துவிட்டாள்.
இதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த லக்ஷ்மணன் பார்வையில் சிறு பாராட்டு.
அவர்கள் இப்படி ஆதாரங்கள் எதையும் காண்பிக்க கூடாதென்பது சட்டமாக இருக்க இப்படி அத்தனையும் வெட்டவெளிச்சமாய் சொல்லியும்விட்டு கிளம்பி சென்றவளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
“லக்ஷ்மணன்…” கமிஷனர் அழைத்துவிட்டார்.
“ஸார், பிரஸ்க்கு அவங்க…”
“எல்லா இழவையும் பார்த்துட்டு தான் இருந்தேன். செய்ய கூடாதுன்னா அதை தான் செய்வா. இப்ப இன்னும் பிரஷர்…” என்றவரின் போனில் வேதநாயகம் வந்துவிட்டார்.
“போச்சு அந்தாள் வேற எனக்கு கூப்பிடுறார்….”
“சார், பேசாம பசங்க மேல கேஸ் பைல் பண்ணிடலாம். லாயர் வச்சு அவரை ஜாமின்ல எடுக்க சொல்லுங்க. இதுக்கு மேல வெறும் கார் ஆக்சிடன்ட். பசங்க மேல தப்பில்லைன்னு சொல்ல முடியாது..”
“என்ன எனக்கு நீ புத்தி சொல்றியா?…”
“அப்படி இல்லை ஸார். கார் மெயின் ரோட்ல இருந்து காட்டுக்குள்ள எவ்வளவு டீப்ல இருந்தாங்கன்னும் ரிப்போர்ட்ல காமிச்சிருக்காங்க. இது பெரிய இஷ்யூவாகிரும். நமக்கு வேற வழி இல்லை…”
லக்ஷ்மணன் சொல்ல இதனை வேதநாயகத்திடம் அப்படியே சொல்லமுடியுமா? நிச்சயம் வாய்ப்பில்லை.
வேறு எந்த வழியில் இதனை கையாளலாம் என மண்டையை உடைக்க ஆரம்பித்துவிட்டார்.
ஜீப்பில் வந்து அமர்ந்தவளை சுமந்துகொண்டு வாகனம் கிளம்ப காளி கேட்டுவிட்டார் மனம் கேட்காமல்.
“என்ன மேம் இப்படி பொசுக்குன்னு போட்டு உடைச்சுட்டீங்க?…”
“வேற இவங்களை எப்படித்தான் அடக்கறது?…” என்றாள் வெளியே பார்வையிட்டபடி.
“நானே இதை பத்தி கவலைப்படலை. எப்படியும் வார்னிங் ப்ளஸ் என்கொயரி. இது கூட தெரியாமலா எல்லாம் மீடியால பேசுவேன்? கொஞ்ச நாளாச்சும் அலையட்டும். ஈஸியா நம்மளால எதுவும் செய்ய முடியும்ன்னு தான ஆடறாங்க…”
எத்தனை பேசினாலும் அச்சமின்றி பார்த்துக்கொள்ளலாம் என துணிச்சலுடன் இருப்பவளை நினைத்து பெருமை கொள்வதா, இல்லை எதுவுமாகிவிட கூடாதென்று கவலைகொள்வதா என காளிக்கு புரியவில்லை.
வாழவேண்டிய வயது. இந்த வேலையில் நல்லபடியாக இங்கே நீடிக்கவேண்டும் என்று மட்டுமே தான் அவரின் வேண்டுதல்.
அவள் நினைத்தபடி தான் நடந்தது. மீடியா முழுக்க விஷயம் பற்றிக்கொள்ள மேலிடத்தில் அவளை அழைத்து விசாரணை மேற்கொள்ள அவள் வாக்குமூலத்தில் எந்தவித மாறுதலும் இல்லை.
மேலதிகாரிகளின் அனுமதியின்றி செயல்பட்டதாகவும், கொஞ்சமும் பொறுப்பின்றி மீடியா முன்னால் ரிப்போர்ட்ஸ் எல்லாம் காண்பித்ததன் அடிப்படையில் ஒரு வாரம் சஸ்பென்ட் செய்யப்பட்டாள்.
மூன்று நாட்களாக அத்தனை அலைச்சல் அவளுக்கு. இந்த முறையும் ஊருக்கு செல்ல போவதில்லை என்று பூவம்மா நினைத்திருக்க இப்படி வந்ததும் வேகமாய் உடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளை பார்த்து அத்தனை ஆச்சர்யம்.
“அதுக்கு என்ன செய்யனும்? பேசாம இங்கயே இருந்து என்னை ஸ்கூலுக்குள்ள விடுங்கன்னு சொல்லனுமா?…” என சிரித்தாள்.
“சரி கண்ணு. அம்மாப்பாவ கேட்டேன்னு சொல்லு…”
“ஏன் நீங்க பேசவே இல்லையாக்கும்?…” என்றவள்,
“நாளைக்கு அங்க போய்ட்டு கால் பன்றேன்….”
“சரிங்க கண்ணு, மெட்ராஸ் வாரது என்னைக்குன்னு சொல்லுங்க. வந்துடுவேன்…” என்று சொல்ல இருவருமாக கிளம்பிவிட்டார்கள்.
முதல் நாள் இரவே கிளம்பிவிட தான் நினைத்தாள். ஆனால் சற்றே நிதானம் தேவைப்பட்டது.
வாட்சர் முருகவேல், காளி இருவரையும் அழைத்து கவனிக்கவேண்டியவற்றை வலியுறுத்திவிட்டே கிளம்பவேண்டிய கட்டாயம்.
தான் இல்லாத சமயத்தில் இங்கே என்னவெல்லாம் மாறுபடும் என அவளறியாததா?
தன்னால் முடிந்த குடைச்சல்களை எல்லாம் குறைவின்றி செய்துகொண்டு தான் இருந்தாள்.
“எப்படியும் அவங்க எல்லாம் மாற போறதில்லை. எதுக்கு இது? உங்களை நீங்களே வறுத்திக்கிட்டு?…” என லக்ஷ்மணன் கூட பேசிவிட்டான் இந்த சஸ்பென்ட் ஆடரை வாங்கவும் அழைத்து.
“தப்பு செய்யறானுங்க. ஆனா ஈஸியா செஞ்சிட்டு போகலாம் யார் கேட்பான்னு இருந்தா இன்னும் திமிரெடுத்து தான் செய்வாங்க. கொஞ்சமாச்சும் மண்டையை பிச்சுக்கட்டும். சும்மா இருக்கற மூளைக்கு வேலை குடுத்துட்டு போவோமே? என்ன குறைஞ்சிட்ட போறோம்…” என்றவள்,
“அப்பறம் எதுக்கு படிச்சிட்டு இந்த போஸ்ட்டிங்ல நாம எல்லாம்?…” என்றாள்.
லக்ஷ்மணன் என்றுமே அவளின் நலம் விரும்பியாக, அவளுக்கான உதவிகளை மறைமுகமாக செய்யும் நல்ல நண்பனாக இருந்துவர இப்போதும் அதன் அடிப்படையில் ஆதங்கத்தில் கேட்டும்விட்டான்.
இதோ மதுரை விமானத்திற்காக வந்து காத்திருந்தாள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவனை நேரில் சந்தித்து.
நிச்சயம் இங்கே வந்திருப்பான். தன் குடும்பத்தில் அவனின்றி ஒரு விழாவா? விசேஷமா? இதுவரை நடந்ததே இல்லை. இனியும் நடக்க போவதில்லை.
நினைக்கையில் சிறு புன்னகை. தன்னை பார்த்ததும் என்ன செய்வான்? என்ன பேசுவான்? என்ற எண்ணம் எதுவுமில்லை.
அவனை பார்த்ததும் தன்னுடைய பாவனைகள் எப்படி இருக்குமோ என தன்னை குறித்தான சிந்தனை தான் இப்போது.
விமானத்திற்கு காத்திருக்க அதன் அறிவிப்பும் வந்துவிட கிளம்பி சென்று அமர்ந்தவள் கண் விழிக்கையில் மதுரையை அடைந்திருந்தாள்.
இயற்கையை, மலைகளை, வனங்களை, அதன் ஆதாரங்களை என்று ஒவ்வொன்றையும் ரசிக்க ஆணிவேராய் இருந்த இடம் அது.
தன்னைப்போல் புன்னகையும், ஒரு எதிர்பார்ப்பும் வந்து ஒட்டிகொண்டது அவள் முகத்தில்.
வெளியே வர அவளுக்கான வாகனம் காத்திருந்தது. ட்ரைவரை பார்த்ததுமே முகம் தானே மலர,
“ப்பா…” என மென்மையாய் சொல்லிக்கொண்டவளை பார்த்தவர்,
“பூவம்மா போன் போட்டுடுச்சு பாப்பா. எங்க நாளைக்கு இங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சோம்…” என்று அவளின் பயண பையை வாங்கி டிக்கியில் வைத்தார்.
“சாப்பிடறீங்களா பாப்பா?…”
“அம்மா குடுத்தனுப்பினாங்களா?…”
“ஆமாங்க…” என்று அவர் கேரியரை எடுத்து தர பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள்.
“போற வழில எங்கையாவது நிழலா பார்த்து நிறுத்துங்க அங்கிள். சாப்பிடலாம்…”
“சரிங்கம்மா…” என்று சொல்ல மதுரையிலிருந்து வெளியே சென்றதும் ஓரிடத்தில் நிறுத்த உண்டு முடித்தனர்.
அதன் பின்னர் மீண்டும் குட்டி தூக்கம் போட்டாள். மலை ஏற துவங்கவுமே தன்னைப்போல விழிப்பு வர கையிலிருந்த பேக்கை எடுத்துக்கொண்டவள் ஹேண்டி கேமராவுடன் இயற்கையை கைகளுக்குள் கொண்டுவர முயன்றாள்.
காரின் வேகத்திற்கு காற்று அவள் முடிகளை கலைத்து விளையாட தூக்கி போனிடெயில் போட்டுக்கொண்டவள்,
“அங்கிள் ஸ்டாப் பண்ணுங்க…”
“என்னாச்சு பாப்பா? பக்கத்துல வந்துட்டோமே?…”
“இல்லை, நான் இறங்கிக்கறேன். நீங்க கெஸ்ட்ஹவுஸ் போங்க. நானே வந்திடறேன்…”
“பாப்பா, நேத்தெல்லாம் மழை. சேறும், சகதியுமா இருக்கு, பாதை வழுக்கிரும் பாப்பா….” என்றவரை திரும்பி பார்த்தவள்,
“நான் பார்க்காததா அங்கிள்? போங்க, போங்க. கேமராவை சீட்ல வைக்கறேன். எடுத்து அம்மாட்ட குடுத்திருங்க…” என சொல்லியவள் அவரின் அழைப்பை காதில் வாங்காமல் உள்ளே இறங்கிவிட்டாள்.
ஆசையும், ஆர்வமுமாக அந்த காற்றை ஆழ்ந்து சுவாசித்தவள் மூச்சுக்குழாயில் நிரப்பியபடி நடக்க சற்றே சரிவான அந்த தோட்டத்தில் இறங்கினாள்.
சொல்லியதை போலவே சேறும், சகதியும் இருக்க ஷூ கால்கள் லேசாய் வழுக்கியது.
இருந்தாலும் லாவகமாய் இறங்கியவள் அந்த மாலைவேளை காட்சிகளை, மஞ்சள் மாலை வானத்தை, செஞ்சாந்து பூசிய மேகத்தை என விழிகளால் படமெடுத்தபடி வந்தவள் பார்வை அங்கே அப்படியே நிலைகுத்தி நின்றது.
அவன் தான். அவனே தான். கையில் கேமராவுடன் அவளை படம் பிடித்திருந்தான்.
அவனை பார்த்ததும் மலர்ந்து சந்தோஷித்த தன் பிம்பத்தை அவன் கேமராவும், அவன் விழிகளும் உள்வாங்கிக்கொண்டதை உணர்ந்துகொண்டாள் பெண்.
கண்சிமிட்டும் நேரம் மட்டுமே அவளின் ஸ்தம்பித்த நிலையும், அதிர்வும். லேசாய் மனது படபடக்க அதனை தட்டி அடக்கி வைத்துவிட்டு அடுத்த அடி எடுத்து வைக்க இப்போது இன்னும் சறுக்க தடுமாறி விழுந்தாள்.
“ஸ்பூர்த்தி பார்த்து…” என கத்தியபடி அவளை நோக்கி வேகமாய் வந்தான் அவன். அஷ்வின்.
இப்போதும் அவன் பார்வை எப்போதையும் போலவே அவளை பார்த்து வைக்க மறைக்க முயன்ற எதிர்பார்ப்பு மனதில் பீறிட அதனை விழிகளும் பிரதிலித்துவிட்டது அவனிடத்தில்.