“ஏதோ உடம்பு சரியில்லாம இப்படி ஆகிடுச்சு அவனுக்கு, நீங்க அவரை ஏன் மாமா கத்துறீங்க?” என்று மாமனாரை சமாதானம் செய்ய
“மிஸஸ். அன்பழகன் என்னாச்சு அவருக்கு?” என்று பவானியைப் பார்க்க, அவள் துயரம் தாங்காது அழுதாள். காவிரிதான்
“என் பையனுக்கு சூப் கொடுத்துட்டு இவ வந்துட்டா தம்பி, ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சுப் போய் பார்த்தா அவன் வாயில நுரை வந்து துடிச்சிட்டு இருந்தான்” என்ற காவிரிக்கும் அழுகை அடக்கமாட்டாமல் வர
“ஓகே, டாக்டர் என்ன சொல்றாங்க” என்று கேட்க
“இன்னும் ஒன்னும் சொல்லல” என்றான் ஜெயசீலன்.
அவர்கள் இருந்த இடம் விட்டு நகர்ந்து வந்த சிரஞ்சீவி பரத்திடம்
“பரத், நீங்க இங்க இருங்க. டோண்ட் மூவ் அட் எனி காஸ்ட், திஸ் இஸ் மை ஆர்டர்” என்றான் அழுத்தமாக.
“எஸ் ஸர்” பரத்தும் நிலைமை புரிந்து சொல்ல
“ஜெயசீலன் மேல டவுட் இருந்தாலும் எவிடன்ஸ் இல்ல, நான் கொஞ்சம் விசாரிக்கனும். அதே சமயம் இங்க அன்பழகனுக்கும் செக்யூரிட்டி வேணும், ஒரு வேளை அவருக்கு ஹெல்த் சரியில்லாம இப்படி ஆகியிருந்தா பரவாயில்லை, அப்படி இல்லாம மர்டர் அட்டெம்டா இருந்தா” என்று நிறுத்த
“கரெக்ட் ஸர், நான் பார்த்துக்கிறேன்” பரத் சொல்ல
“டாக்டர் வந்ததும் எனக்கு கனெக்ட் பண்ணிக் கொடுங்க, நான் பேசனும்” என்று சொல்லி சிரஞ்சீவி புறப்பட்டான்.
சிறிது நேரத்தில் பரத்திடமிருந்து சிரஞ்சீவிக்கு அழைப்பு.
“ஸர், அன்பழகன் இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர், டாக்டர் கிட்ட பேசினேன். அவர் ப்ள்ட்ல அவருக்கு ஒத்துக்காத ட்ரக் கலந்து இருக்கறதா சொல்றார். யாரு அவருக்குத் தெரியாம, அவருக்கு அலர்ஜிக்கா இருக்க டேப்லேட்ஸ் கொடுத்திருப்பாங்க தெரியல”
“இதைப் பத்தி டாக்டரை வேற யார்கிட்டவும் பேச வேண்டாம் சொல்லுங்க, ரீப்போர்ட்ஸ் வாங்கி வைங்க பரத். நான் பெர்மிஷன் தர வரைக்கும் டாக்டர்ஸ் தவிர யாரும் அன்பழகன் ரூம்குள்ள போகவே கூடாது” என்று கண்டிப்பாய் சொல்லி வைத்தான் சிரஞ்சீவி.
************
ஒரு வாரத்துக்கும் மேலாக அமராவதி மருத்துவமனையில் இருக்க, அதுவே அவளுக்கு மிகுந்த உளைச்சலைக் கொடுத்தது. நர்ஸ் வந்து அவளுக்கு பிபி செக் செய்துவிட்டு செல்ல, அது இன்னும் ஊசலாடியது, நர்ஸ் சென்று சொல்லவும் டாக்டர் வந்து அவளைப் பரிசோதித்தவர்,
“இவ்வளவு டென்ஷன் கூடாது அமராவதி, எனக்கு உங்க சிட்டிவேஷன் புரியுது. இப்போ சிக்ஸ் மந்த்ஸ், பேபிக்கு உங்க உணர்வுகள் புரியும், உங்க சோகம் அதே அளவு தாக்கத்தைக் குழந்தைக்கிட்டவும் ஏற்படுத்தும். பிஞ்சுக் குழந்தையால அந்தளவு சோகத்தைத் தாங்க முடியுமா சொல்லுங்க? நீங்க தைரியமா இருக்கனும், சந்தோஷமா உங்களை வைச்சுக்க ட்ரை பண்ணுங்க, அதான் உங்களுக்கும் குழந்தையோட ஹெல்த்துக்கும் நல்லது. உங்களுக்கு வேணும்னா கவுன்சிலிங் கூட ஏற்பாடு செய்றேன். ஈவினிங் ஒரு தடவ பிபி செக் பண்ணிடுங்க சிஸ்டர்” என்று சொல்லி அந்த மருத்துவர் போய்விட
இந்த செய்தி அமைச்சருக்கும் சொல்லப்பட்டது. அமராவதியை இன்னும் மருத்துவமனையில் வைத்திருக்க காரணம் அவளின் உடல் நிலை மட்டுமில்லை. அவள் குற்றவாளி இல்லை என அழுத்தமாய் சிரஞ்சீவி சொல்லியிருந்தான், யார் குற்றவாளி என இவர் கேட்டதற்கு ஆதாரங்களுடன் விரைவில் சொல்வதாக சொல்லியிருக்க, இதற்கு மேலும் தன் மகனின் வாரிசை சுமப்பவளை வதைக்கத் தோன்றுமா என்ன? அதைவிட அவளுக்குப் பாதுகாப்பு முக்கியமென நினைத்துதான் இந்த ஏற்பாடு.
மருமகளின் மன அமைதிக் கெடுவதை அவர் விரும்பவில்லை, மருத்துவரிடம் பேசியிருக்க அவளின் நிலையை அவர் சொல்ல மருமகளிடம் பேச நினைத்தவர் தனது நம்பிக்கைக்குரிய ஆள் மூலம் அவளிடம் ஒரு செல்போனை சேர்ப்பிக்க சொல்லியிருந்தார்.
நர்ஸ் ஒருவர் வந்து அவளிடம் செல்போனைக் கொடுத்து
“உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க மேடம்” என்று சொல்ல,
எதுக்கு இது என்பதாகத்தான் அவளின் எண்ணம். எதற்கு என்பது ஐந்து நிமிடத்தில் அவளின் மாமனாரிடம் இருந்து வந்து போன் சொல்லியது.
எடுத்தவுடனே “என்னை மன்னிச்சிடும்மா அமரா” என்று குரல் கமற வீகேவின் குரல் ஒலிக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவள் மௌனமாய் இருக்க,
“கார்வண்ணன் இறந்த அதிர்ச்சி அப்போ ஒன்னுமே யோசிக்கத் தோணல, என்ன என்னமோ நடந்து போச்சு” என்று அவர் பேச பேச இவளுக்கு விளக்கமில்லாமல் விளங்கியது.
இத்தனை மாதம் கடந்த பிறகு உண்மை தெரிந்திருக்கிறது. அவரின் மன்னிப்பு அவள் இழந்த எதையும் திருப்பித் தரப்போவதில்லை.
காலம் கடந்த நீதி, அநீதியே! அதையும் விடக் கொடியது!
அப்படி ஒரு அநீதிதான் அமராவதிக்கு விதிக்கப்பட்டிருந்தது. விதியாலோ சதியாலோ என்பது செய்தவருக்குத்தான் வெளிச்சம்.
“அவரை இப்படி செஞ்சது யாரு?” அதுதான் அமராவதி கேட்டது.
“அது இன்னும் அந்த எஸ்பி சொல்லலம்மா, ஆதாரம் கிடைக்கல. ஆனா நீ குற்றவாளி இல்லைன்னு மட்டும் அடிச்சு சொல்லிட்டார். உனக்கு அப்பீல் போட சொல்லி நம்ம லாயர் கிட்ட சொல்லியாச்சு, சீக்கிரமே நீ விடுதலையாகிடலாம் அமரா, அதுவரைக்கும் நீ ஹாஸ்பிட்டல்ல இரு. தப்பு செய்யாத என் மருமக இனி ஜெயில்ல இருக்க வேண்டாம்” என்றார்.
அவரின் பேச்சுக்கு மகிழும் மனபான்மை எல்லாம் அவள் இழந்து வெகு மாதம் ஆகியிருக்க, இப்போது தன் மீது களங்கம் இல்லையென்று தெரிந்தாலும் ஊர் பேசியதும் உறவு ஏசியதும் பத்திரிக்கை எழுதியதும் காணாது போய்விடுமா என்ன?
அவளின் வலி என்றும் தீராது, மாறாது!
அமராவதி அமைதியாய் இருக்க
“உனக்கு எங்க மேல வருத்தம் இருக்கும்னு எனக்குத் தெரியும்மா, ஆனா எங்க நிலையில இருந்து யோசி. சரி அது கூட போகட்டும், இப்போ நீ உன்னை முடிஞ்சவரைக்கும் நல்லா பார்த்துக்கோம்மா, டாக்டர் பேசினாங்க, நர்ஸ் கொண்டு வந்து கொடுத்த போன் நீ வைச்சுக்கோ உங்க வீட்டுக்குப் பேசு. என்ன வேணும்னாலும் கேளு” என்றார்.
“இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ குற்றவாளியைக் கண்டு பிடிச்சிடலாம்மா, நீ கவலைப்படாத” வீகே தன்னால் முடிந்த சமாதானங்களை சொல்லி போனை வைக்க
தன்னை சந்தோஷமாக இருக்க சொல்கிறார்கள், விழிகளை இழந்த பின் கறுப்பென்ன சிவப்பென்ன? வண்ணமெல்லாம் அவளின் கார்வண்ணனோட போய்விட குழந்தையை நினைத்துப் பார்த்தாள்.
அவளின் வருத்தம் குழந்தையைப் பாதிக்குமாமே? அவன் தாயில்லா பிள்ளையாக வளர, அவன் பிள்ளை தந்தையில்லா பிள்ளையாக வளரப்போகிறது நினைக்கவே நெஞ்சம் வலித்தது.
ஆனால் இனி வலி கூடாது, பிள்ளையைப் பாதிக்கும். அந்த எண்ணம் எழுந்த நொடி செல்போனில் யூ ட்யூப் போனவள் கணவனின் பெயரை போட்டுத் தேட, அவனின் பிரச்சார பேச்சுகள் குவிந்து கிடக்க, ஒன்றைத் திறக்க அவன் குரல் செவி தீண்ட, என்ன முயன்றும் பெண்ணிடம் பெரும் கேவல் வெடிக்க, அவனின் பேச்சுக் கேட்க கேட்க என்னவோ அவன் அருகே பேசுவது போலவே அகத்தினுள் ஒரு ஆசுவாச உணர்வு.
******************
அன்பழகன் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டான் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்க, அவனைப் பார்க்க இன்னும் யாரையும் அனுமதிக்கவில்லை. சிரஞ்சீவி ஜெயசீலனை கைது செய்வதற்குத் தேவையானதை செய்தவன் மருத்துவமனைக்கு விரைந்தான்.
அன்பழகனை சென்று பார்த்தவன் அவன் இன்னும் மயக்கத்தில் இருக்க, வெளியே வரவும் சக்கரபாணி பிடித்துக் கொண்டார்.
“என்ன தம்பி எங்களை இன்னும் அவனைப் பார்க்க அனுமதிக்க மாட்டேங்கிறாங்க, என்ன நடக்குது இங்க?” என்று ஆவேசமாய்க் கேட்டவர்
“என்னமோ அவனைக் கொலை செய்ய பார்த்தவங்களை பிடிச்சாச்சுன்னு சொன்னார் இந்த ஏசி, என்னாச்சு? யார் அவனுங்க?” ஒரு தந்தையாக
பாசத்தால் பரபரத்தார் சக்கரபாணி.
“ம்ம், கண்டுபிடிச்சாச்சு, அரெஸ்ட் பண்ணப்போறேன்” கூலாய் சொல்ல
“யாரு அவன்?” என்றார் கடுமையான கோபத்துடன்.
“நடக்கும்போது பாருங்க சக்கரபாணி” என்றவன் அருகே நின்ற ஜெயசீலனைப் பார்த்து
“ஜெயசீலன், ஸ்டேஷன் போகலாமா?” என்று கேட்க ஜெயசீலனுக்கு வியர்த்துப் போக, சக்கரபாணியோ
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ? என் மாப்பிள்ளையை அரெஸ்ட் பண்ணுவியா?” என்று குதிக்க
“நீங்கதானே உங்க மகனைக் கொல்ல நினைச்சவங்களை அரெஸ்ட் பண்ணனும் சொன்னீங்க, மறந்துட்டீங்களா?” என்று திருப்பிக் கேட்க
“என்ன?” என்று அவர் அதிர்ச்சியில் உறைய, காவேரியும் பவானியும் கலக்கத்தில் நின்றனர்.
“மாமா, இவர் பொய் சொல்றார், கேஸ்ல யாரையும் பிடிக்க முடியலன்னதும் என்னை மாட்ட வைக்கப் பார்க்கிறார்” ஜெயசீலன் தைரியமாய்ப் பொய் சொல்ல
“அப்பவும் நான் இப்படி செய்யலன்னு சொல்ல மனசு வரலையே ஜெயசீலன் உங்களுக்கு?” கேள்வி கேட்ட சிரஞ்சீவியைப் பார்த்த ஜெயசீலன்
“நான் எந்த தப்பும் செய்யல, அதுக்கு எவிடன்ஸ் இருக்கா?” என்றான் திமிராய். அவ்வளவு யோசித்து திட்டமிட்டல்லவா காய் நகர்த்தி அன்பழகனைக் கொல்ல ஆள் அனுப்பினான். அதுவும் அவன் நேரடியாய் தொடர்பு கொள்ளாது அவனின் ஆட்கள் மூலம் சந்தேகமே வராது வண்ணம் வெளி மாநிலத்தில் இருந்து கூலிப்படையை வரவழைத்தல்லவா காரியத்தை முடிக்க நினைத்தான். என்னவோ அன்பழகனுக்கு ஆயுசு அதிகம் போல பிழைத்துவிட்டான்.
“அஃப்கோர்ஸ் இருக்கே, prima facie எவிடன்ஸ் இல்லாமையா வருவேன்?” என்று சிரஞ்சீவி சொன்னவன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு ஜெயசீலனைப் பார்க்க
“மாமா, என்னை நம்புங்க” என்று ஜெயசீலன் சொல்ல
பவானி உடனே “அண்ணா, இன்னிக்கு நீங்கதானே அவருக்கு மாத்திரைக் கொடுத்தீங்க?” என்றாள் நடுங்கிய குரலில்.
“அதுக்காக நானா அவனுக்கு சேராத மாத்திரையைக் கொடுத்தேன்? நீ வைச்சிட்டுப் போனதைதானே கொடுத்தேன்” என்று பவானியிடம் சொன்னவன்
“மாமா என்ன இது வீட்டு மாப்பிள்ளைன்னு பார்க்காம உங்க மருமக என்னைக் கேள்வி கேட்கிறா, அத்தை நீங்களும் அமைதியா இருக்கீங்க?” என்றதும் காவிரி வாய்த் திறந்தார்.
“மாப்ள, நீங்கதானே வாணி சொல்ற மாதிரி அன்புக்கு மாத்திரைக் கொடுத்தீங்க?” எல்லார் பார்வையும் சந்தேகத்தில் நனைந்து வர ஜெயசீலனோ
“பவானி ஒழுங்கா கவனிக்காம எங்கிட்ட மாத்திரையைக் கொடுத்திருந்தா நான் என்ன செய்றது?” அலட்சியமாய்ப் பேசினான்.
“இல்லை பவானி எப்படி கவனமா மாத்திரைக் கொடுப்பான்னு எனக்குத் தெரியும்” காவிரி நம்பிக்கையாய்ச் சொல்ல
“நீங்க எல்லாம் என்னை நம்ப மாட்டீங்க, நான் என் லாயர்ட்ட பேசிக்கிறேன்” என்று போனை எடுக்கப் போக
“ம்ம், தாராளமா பேசுங்க, இன்னிக்கு நினைச்சாலும் பெயில் வாங்க முடியாது, இன்னிக்குக் கோர்ட் லீவ்” என்று சிரித்த சிரஞ்சீவி அவனின் செல்போனை பறித்து பரத்திடம் நீட்டியவன்
“இதை பத்திரமா வைங்க பரத்” என்றவன்
“எவிடன்ஸ் கேட்டீங்களே ஜெயசீலன், பக்கா எவிடன்ஸ் இருக்கு. கோர்ட்ல ப்ரோசீட் பண்றப்போ காட்டுறேன் இல்லையா உங்க லாயர் வரட்டும் பேசுறேன், பரத் ப்ரோசீட்” என்று ஆணையிட ஜெயசீலனைக் கைது செய்து அழைத்துப் போக சக்கரபாணியோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
அவரைப் பார்த்தவன்
“அப்புறம் மிஸ்டர். சக்கரபாணி நீங்களும் கிளம்புங்க” என்று சொல்ல
“நான் அப்புறம் வரேன், இங்க துணைக்கு யாருமில்லை” என்றதும் நக்கலாய் அவரைப் பார்த்தவன்
“நான் உங்களை உங்க மகன் கேஸ்காக கூப்பிடல, கார்வண்ணனோட கொலைக் கேஸ் விஷயமா கூப்பிடுறேன்” என்றதும் மனிதர் உறைந்து போகாத குறையாக அதிர்ந்து போனார்.
ஆனாலும் அத்தனை வருட அரசியல் நிதானம் தர
“அதுக்கு நான் ஏன் தம்பி வரனும்?” என்று பொறுமையாய்க் கேட்க
“எனக்குத் தெரியாது, கட்சியில என்னைப் பிடிக்காதவங்க என்னையும் என் குடும்பத்தையும் சிக்க வைக்க இப்படி செய்றாங்க. எவனோ ஒருத்தன் சொன்னா நான் கொலை செஞ்சேன்னு ஆகிடுமா?” என்று திண்ணமாய்ப் பேச
இவரின் இந்த திண்ணமும் திட்டமும் தெரிந்ததால்தானே எல்லா ஆதாரமும் திரட்டிய பின் இவரிடம் வந்தான்.
“சந்தோஷ் சொன்னா நம்பக் கூடாது ஓகே, சரவண்ணன் சொன்னா நம்புவீங்கதானே?”
சிரஞ்சீவி கேட்ட கேள்வியில் அதுவரை இருந்த நிதானம் சரவணனின் பெயரைக் கேட்கவும் அவரை விட்டு நீங்க தடுமாறி நின்றார் சக்கரபாணி.