அவனது உற்சாகத்துக்குக் காரணம் மஞ்சரியே மனமுவந்து தன் பெண்ணைச் சத்யாவுக்குத் தர சம்மதித்திருந்தார்.
சத்யா அன்று அகல்யாவிடம் பல்ப் வாங்கிய பின் அவள் மனம் மாற வேண்டி காத்திருக்க, அகல்யாவோ எப்போதும் ஒருவித இறுக்கத்தோடயே காணப்பட்டாள்.
மஞ்சரியும் மகளது அமைதியையும் ஒதுக்கத்தையும் கவனிக்கவே செய்தார்.அதனால் கொஞ்ச நாள் திருமணப் பேச்சை ஒத்திவைத்தார்.ஆனால் கூட இயல்பான அகல்யா மீளவில்லை.அதில் வாசுவும் நந்தினியும் தான் மாட்டிக்கொண்டு முழித்தனர்.அவர்களிடம் தான் அதிகமாய் எரிந்து விழுந்தாள்.
அவளின் நடவடிக்கைக் கண்டு மஞ்சரி ஒரு சமயம் , “ஏன் அம்மு இப்படி இருக்கிற……….என்னாச்சு உனக்கு……?” என
“நான் என்ன செஞ்சேன்….எனக்கு ஒன்னுமில்லையே…”
“இல்லடா…நீ நார்மலாவே இல்ல…”
“நார்மலா இல்லாம பைத்தியமாவ இருக்கேன்…….?” என எரிச்சலோடு கேட்க
“நான் அப்படிச் சொல்லல………….நீ இப்ப எல்லாம் ரொம்பக் கோவப்படுற….சரியா பேசல..”
“பண்ணிக்கிறேன்மா…நான் தான் முன்னாடியே சொன்னேனே…..சும்மா சும்மா ..” என எரிச்சல் கொள்ள ,
மஞ்சரிக்கு மனம் மிகவும் கஷ்டமாகி விட்டது.தனது வாழ்க்கையால் அவளுக்கு இயல்பான குழந்தைப்பருவம் கூடப் பாதிக்கப்பட்டதாக அவர் நினைத்துக் கவலைப்படுவார்.ஆம் மற்றவர்களைப் போல் அகல்யாவுக்கு இயல்பான குடும்பச் சூழ்னிலை அமையவில்லை தானே.சிறு வயதிலே மனம் மிகவும் முதிர்ந்து சின்னச் சின்னச் சந்தோசங்களையெல்லாம் அவள் இழந்து விட்டாள் என மஞ்சரிக்குப் பெரும் வருத்தம் உண்டு.
இப்போது அவளது திருமண வாழ்க்கையும் அவளுக்கு நிம்மதியைத் தராமல் கடமையாய் எங்கே வாழ்ந்து விடுவாளோ என்ற பயம் அவரைத் தொற்றிக்கொண்டது.அவருக்குக் கல்யாண வாழ்க்கைதான் கசப்பாய் அமைந்தது.ஆனால் இருபத்தொறு வருட பெற்றோருடனான வாழ்க்கை அவருக்குச் சொர்க்கம் தான்,ஒரே பெண் என்பதால் செல்லமும் அதிகம்.மிகவும் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்தார்.கடவுள் வாழ்க்கையில் ஒரு பாதியைத்தான் ஒருவருக்கு நிறைவாய்த் தருவார் போல் என்று நினைத்தார் மஞ்சரி.
ஆனால் மகளுக்குத் திருமணத்துக்கு முன்னான வாழ்க்கையும் அப்படி ஒன்றும் மகிழ்ச்சித் தரவில்லை என்பதை அவர் அறிவார்.எதையும் ஆசைப்பட்டு அவள் கேட்டதில்லை.அவளாக விரும்பி உறுதியாய்க் கேட்ட இரண்டு விடயங்கள் ஒன்று சட்டம் இன்னொன்று சத்யா அவ்வளவே,…!!
மகள் திருமணத்துக்குச் சம்மதித்து விட்டாள் என மகிழ முடியாமல் வேதனை அந்தத் தாயுள்ளத்தை அரித்தது.அவள் முகத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை என்பதை அவர் அறிவார்.அதனால் அவர் தனது தோழி வான்மதியை சந்திக்கச் சென்றார்.மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் ஒரு உணர்வு.வான்மதியின் வீட்டிற்குச் செல்ல , அங்கே அவரை வரவேற்று வான்மதி பேசத் தொடங்கினார்.
“என்ன சொல்ற மஞ்சு…….என்னாச்சு……..அவளுக்கு….நானே பார்த்து ஒரு மாசம் மேல இருக்கும்….போன் கூடப் பண்ணல அவ….?”
அவர் நடந்த அனைத்தையும் சொல்ல ,
“இப்ப என்ன முடிவு செய்திருக்க நீ….?”
“என்ன செய்றதுன்னே தெரியல…….மதி…..மனோகர் நல்ல பையன்…காஞ்சனாவோட ரிலேஷன் தான் அவன்…ஆனா அகல்யா முழு மனசோட சம்மதிக்கலன்னு தோணுது….அவ வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்…அவ மட்டும் தானே எனக்கு இருக்கா….அவ சந்தோசமாயில்லையோன்னு தோணுது…”
“அப்போ..சத்யாவ அவ விரும்புறதா அண்ணா வாசுல்லாம் சொன்னாங்க……….”
“ஆன்ட்டி இதைச் சத்யாவ எங்கிட்ட சொல்லல…நானா அவர்கிட்ட போய்ச் சண்டை போடவும் தான் சொன்னாரு…அகல் பத்தி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை…..அவளோட அழுத்தம் பத்தி உங்களுக்கே தெரியும்….அவளுக்கு இப்போ சத்யாவ வெறுக்கவும் முடியல..திரும்பப் போய்ப் பேச ஈகோவும் தடுக்குது….இனி அவ பேசவும் மாட்டா….”
“என்ன என்னாதான் செய்யச் சொல்ற வாசு….என் பொண்ணு ரெண்டாந்தாரமா…..ப்ச்……உனக்குப் புரியலயா நான் சொல்ல வரது…?”
“நல்லாவே புரியுது…ஆனா அகல்யா வறட்டுப் பிடிவாதத்தால அந்த மனோகரைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டா…கண்டிப்பா…..அவளால சந்தோசமா இருக்க முடியாது……..அவ ஒன்ன நினைச்சா அதுல எவ்வளவு பிடிவாதமா இருப்பா… ஆன்ட்டி?
“டேய்..வாசு..சும்மா இருடா….அவளே பாவம்…….” என வான்மதி அதட்ட
“ஆன்டி…அது அவ சத்யா மேல உள்ள கோவத்துல சொன்னது…..சத்யாவ அவளை மீட் பண்ணி சாரி சொன்னப்போ அவ பெருசா ரியாக்ட் பண்ணல…..இதே வேற யாராவது அவள அப்படி பேசியிருந்தா கதையே வேற….ஏன் நானா இருந்தா கூட அவ ஜென்மத்துக்கும் பேசியிருக்க மாட்டா….அது சத்யாவா இருந்ததால தான் நின்னு திட்டிட்டாவது போயிருக்கா..”
“இப்போ நான் என்னதான் செய்றது மதி..நீயே சொல்லு.என் வாழ்க்கை தான் இப்படி ஆச்சு….அவ வாழ்க்கையும் இப்படி ஆகணுமா…..அந்த பையன் நல்லவன் தான் எனக்குச் சந்தேகமே இல்ல…ஆனா என் பொண்ணுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கை வேண்டாமா…இவ சொன்னா கேட்க மாட்டா…. நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல அவ அதான் வேணும்னு அடம் பிடிப்பா…அதனால தான் சத்யா கிட்ட நான் போய் அப்படிச் சொன்னேன்… ஒரு அம்மாவா நான் செஞ்சது தப்பா மதி…?” என அவர் கண்கலங்க கேட்க
“நீ செஞ்சது தப்பு இல்ல மஞ்சு..ஆனா நமக்குக் கௌரவத்தை விட நம்ம பசங்க சந்தோசம் தான் முக்கியம்..அகலிமா நம்ம கிட்ட எதையும் ஆசைப்பட்டுக் கேட்டதில்லை…இதே சத்யா இடத்தில் வாசு இருந்திருந்தா… நான் உங்கிட்ட அகல்யாவ பொண்ணு கேட்டா நீ தராம இருப்பியா…..சொல்லு…..?”
“அய்யோ…அப்படியில்ல மதி……சத்யா மேல எந்தக் குறையுமில்ல….ஆனாலும் என் பொண்ணு கௌரவமா வாழனும்………என்னை வாழவெட்டின்னு சொன்னது மாறி என் பொண்ணைரெண்டாந்தாரம்னு சொல்லிட்டா……..அவளுக்கு என்ன இல்லன்னு கேட்கிறேன்…..எங்கம்மாவோட நகை என் நகைன்னு இருக்கு……எங்கப்பா அவ பேர்ல பேங்க்ல போட்ட பணம் அப்படியே இருக்கு…..எல்லாம் செஞ்சு அவளை நல்லபடியா என்னால கட்டிக் கொடுக்க முடியும்……இப்படி ரெண்டாந்தாரமா போகனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்து…?” என்றார் ஆற்றாமையோடு.
“சரி நான் ஒன்னு சொல்றேன்னு தப்பா நினைக்காத மஞ்சரி…..நீ முதல் தாரமா போய் என்ன அப்படி வாழ்ந்திட்டேன்னு கேட்கிறேன்…..ரெண்டாந்தாரமா போனவ தான் இன்னிக்குப் புருஷன் கூடச் சந்தோசமா வாழ்ந்திட்டிருக்கா……சமூதாயத்தோட பார்வையில அவங்க நல்ல தம்பதி…..ஆனா நீ…..உன்னை என்ன சொல்றாங்க…புருசனை அனுசரிக்கல, கைகுள்ள போட்டுக்கத் தெரியலன்னு தானே சொல்றாங்க………அந்த ஆளு குடும்பமா நல்லா ஷேமமா தானே இருக்கான்……….”
“அம்மா சொல்றது சரிதான் ஆன்ட்டி…” என வாசு தாயின் கூற்றை ஆமோதிக்க , சின்னவனான மகன் முன் தோழி தர்மசங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று நினைத்தவர் ,
“வாசு…நான் பேசும்போது பேசாத..” என்று மகனை அதட்டியவர் ,
“மஞ்சரி சில சமயம் வாழ்க்கையில குவாண்டிட்டியை விடக் குவாலிட்டி முக்கியம் ….நம்பர்ல என்ன இருக்கு…..ஷாஜகானுக்கு மும்தாஜ் என்ன முதல் மனைவியா இல்ல கடைசி மனைவியா ….இல்லை இல்ல….ஆனா அவ ஒருத்திக்காகத்தானே தாஜ்மஹால் கட்டினார்……கணக்கெல்லாம் கணக்கே கிடையாது…..அவ்வளவுதான் சொல்வேன் மஞ்சு……..அகல்க்கு ஏத்தவன் சத்யா தான்….இனி உன்னிஷ்டம்…” என்று சொல்லிவிட
மஞ்சரியால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.சமூக அந்தஸ்து ஒரு புறம் , மகளது நலம் ஒரு புறம் என மனம் இருபுறமும் எந்தப் பக்கம் விழப்போகிறோம் எனத் தெரியாமல் இருக்கும் கால்பந்து போல் ஆடியது.யோசித்து முடிவெடுப்பதாய் சொல்லிவிட்டுத் தோழியிடம் விடைபெற்றார்.
மஞ்சரி சென்ற பின் வாசு தாயை ஒரு பார்வை பார்க்க,
வான்மதி மகனது பார்வை கண்டு “என்னடா என்னை அப்படிப் பார்க்கிற…?” என
“இல்ல….உன்னை கூடக் கருத்து சொல்ல வைச்சிட்டாங்களே….அதையும் நீ கரெக்டா செஞ்சிட்டியே அதான்…புரியல……”
“டேய்…வாலு…….என் ப்ரெண்ட்க்கு நான் அட்வைஸ் பண்ணுவேன்….நானெல்லாம் எந்த ரோல் கொடுத்தாலும் கரெக்டா செய்வேன் டா….”
“ரோல்லாம் நல்லா செய்ற……ஆனா நீ செய்யுற சாப்பாத்திதான் ரோட் ரோல்லர் வைச்சு உடைக்கிற கணக்கா இருக்கு…..” எனக் கிண்டல் செய்ய,
“இவ்வளவு பேசுறலடா…உன் பொண்டாட்டி என்னை விட மோசமா சமைப்பா பாருடா….” எனச் சாபமிட்டு அவர் வேலையைப் பார்க்க கிட்சனுள் செல்ல,
வாசுவோ தாயின் பேச்சைக் கேட்டு வாய் விட்டு நகைத்தான்.
வீட்டிற்கு வந்த மஞ்சரிக்கு வான்மதி சொன்னதே மனதில் ஓடியது.முதல் தாரமாய் இருந்து அவர் என்ன அனுபவித்தார்? வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் சமூகம் தூற்றத்தான் செய்யும்.
ஏன் அவரைத் தூற்றவில்லையா..? கணவனின் துரோகத்தால் துவளாமல் தனி மனுஷியாய் வாழ்ந்துகாட்டுகிறவளை வாழாவெட்டியென……….!
அதனால் அவர் மகளது நலனே முக்கியம் என்று முடிவு செய்தார்.எப்போதுமே அவருக்கு அகல்யாவின் நலன் முக்கியம் தான்.ஆனால் மனதில் ஒரு ஓரமாகக் கொஞ்சம் தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.வான்மதியிடம் பேசிய பின் மனம் தெளிவானது.அது மட்டுமில்லாமல் வாசு சொன்னதையெல்லாம் கேட்டவருக்குச் சத்யாவை நினைத்துப் பெருமிதமாக இருந்தது.அதனால் மகிழ்ச்சியுடன் வான்மதிக்குப் போன் செய்து பேசினார்.வாசுவிடம் சத்யாவிடம் நேரில் பேச வேண்டும் என்று அவர் சொல்ல, அதற்கு வாசுவும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னான்.
அந்த வார வெள்ளிக்கிழமையில் காளிகாம்பாள் கோவிலில் வைத்து மஞ்சரி சத்யாவிடம் பேசினார்.
உடன் வாசுவும் ராஜேஸ்வரனும் வந்தனர்.ராஜேஸ்வரனை மஞ்சரியே போனில் அழைத்தார்.மகளுக்காகவும் அவரின் மஞ்சுக்காகவும் அவரும் போனார்.
மஞ்சரி சத்யாவிடம் , “என்னை மன்னிச்சிருங்க தம்பி……” என மன்னிப்பை வேண்ட
“ஐயோ…ஆன்ட்டி…என்னதிது…நீங்க ஏன் மன்னிப்பெல்லாம் கேட்கிறீங்க……….உங்க மேல எந்தத் தப்பும் இல்ல”
“இல்லப்பா……நீங்களே மனசு மாறி அகல்யாவை ஏத்திட்டு இருந்திருப்பீங்க…ஆனா..நான் உங்க கிட்ட பேச போய்தான் நீங்க குழம்பி….இப்போ இவ்வளவு குழப்பம்……அகல்யாவுக்கும் டென்ஷன்…….உங்களுக்கும் தான்….”
“இல்லவே இல்ல…ஆன்ட்டி………….உங்க இடத்துல நான் இருந்தாலும் அப்படித் தான் செஞ்சிருப்பேன்….உங்க மேல தப்பில்ல……இன்ஃபேக்ட் சொல்லப்போனா உங்க மாறியோ இல்ல அங்கிள் மாறியோ….எனக்குப் பெருந்தன்மை வராது……”
அவன் கூறியது கேட்டு லேசாய்ப் புன்னகைத்த மஞ்சரி , “உங்க அங்கிள் வேணும்னா பெருந்தன்மையானவரா இருக்கலாம் சத்யா….பட் நாட் மீ…..இப்ப கூட உங்களுக்காக நான் வரலையே…என் பொண்ணுக்காகத்தான வந்தேன்….” என்றவர் ஈஸ்வரை அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்று பார்த்து வைக்க
அந்தப் பார்வைக்கான அர்த்தம் ஈஸ்வருக்குப் புரிந்தது…..மஞ்சரி பெற்ற மகளைத் தன் மகளாகப் பார்க்கிறாராம்…!
அதைப் பார்த்த வாசு மெதுவே மாமன் காதில் , “மாமி பார்க்கும் மர்மம் என்ன…?” எனக் கிசுகிசுக்க,
“ப்ச்..சும்மா இருடா” என்றார் ராஜேஸ்வர்.
“ஆமா ஆன்ட்டி…” என்று ஒப்புக்கொண்ட சத்யசாகரன்
“நீங்க கவலைப்படாதீங்க…. நான் அகல்யாவை சீக்கிரமே கன்வீன்ஸ் பண்ணிடுவேன்……” என்று நம்பிக்கையாய் சொல்ல
“நான் அவகிட்ட பேசுறேன் சத்யா…..யூ டோண்ட் வொர்ரி……” என மஞ்சரி சொல்ல
“வேண்டாம் ஆன்ட்டி..நீங்க அவ கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்…..நானே சமாளிச்சுக்குவேன்….”
அனைவரின் மன நிலையும் மழை நின்ற பின் வரும் சில்லென்ற காத்து போல் லேசானது.
ராஜேஸ்வர் சத்யாவிடம், “அவ கோபக்காரி தான் சத்யா….ஆனா அன்பானவ……..எப்போவாது தான் ரொம்பக் கோவம் வரும்…அப்படி வந்தா ஒன்னு கத்திடுவா இல்ல..அமைதியா அழுத்தமா இருந்திடுவா…..” என மகளுப் பரிந்து பேச மஞ்சரி , வாசு முகத்தில் கீற்றாய்ப் புன்னகை.
“நீங்க கவலைப்படாதீங்க அங்கிள்…ஐ வில் டேக் கேர்…..அண்ட் ஆன்ட்டி…..நீங்க அவ கிட்ட எதுவும் பேச வேண்டாம்….அவ என்னைப் புரிஞ்சிக்கிட்டு தான் என்கிட்ட திரும்பி வரனும்…..அதுதான் பின்னாடி நல்லது…என் மேல தப்பு இருந்தாலும் அவ அதை மன்னிச்சுதான் ஏத்துக்கனும்….” என்று உறுதியாய் சொல்ல ராஜேஸ்வரும் வாசுவும் கூட ஆமோதித்தனர்.
மஞ்சரியும் ஒத்துக்கொண்ட பின் , கோவிலை சுற்றி விட்டு சத்யா விடைப்பெற்று செல்ல , மஞ்சரி கிளம்பும் முன் ஈஸ்வர் அவரிடம், “ரொம்பத் தேங்க்ஸ் மஞ்சு….you honoured me….” என்றார் நிறைவாய்.
மஞ்சரியும் மெல்லிதாய்ப் புன்னகை செய்து , “நான் என் கடமையைத் தான் செஞ்சேன்…..அம்முக்கு நீங்கதான் அப்பாவா… நடந்துக்கிட்டீங்க” என்றார்.அனைவருக்கும் அவரின் வார்த்தையில் மனம் நிறைந்து போனது.அதிலும் ஈஸ்வருக்குக் கண்கள் கலங்கி விட்டன.அதன்பின் மன நிறைவோடு அவரவர் வீட்டிற்குச் சென்றனர்.
பழைய நினைவுகள் கலைந்து சத்யா அகல்யா வரும் வழியில் வழிமறித்துக் காத்திருக்க , அவளைக் காணாது அவன் வாசுவுக்கு அழைக்க , வாசு அகல்யாவை அழைத்து அவள் எங்கிருக்கிறாள் என விசாரித்துச் சத்யாவுக்குத் தகவல் சொன்னான்.
சத்யாவும் வாசு சொன்ன உணவகத்துக்குச் செல்ல , அங்கே அகல்யா யாரோ ஒருவனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க , சத்யாவுக்கு உள்ளே ஜெர்க்கானது.
‘எங்கே இவள் தன் மேல் உள்ள கோபத்தில் அந்த மனோகரிடம் பேசுகிறாளோ…..’ என்று அவன் மனம் பயம் கொண்டது.ஏனெனில் அகல்யா புன்னகை முகமாக வேறு பேசிக்கொண்டிருந்தாள்.அவள் ஆண்களிடம் பேசுவதே அரிது….!
அதிலும் புன்னகையோடு ஆண்களிடம் பேசுவது……அரிதினும் அரிதானதே….!!
உள்ளே பொறாமைத் தீ புசுபுசுவெனப் புகைக் கக்க , அகல்யாவையே பார்த்துக் கொண்டே அவளை நோக்கி வர ,
அகல்யா அவனைப் பார்க்கவில்லை.ரிஷி தான் சத்யாவைப் பார்த்தான்.பார்த்தவுடனே சத்யாவை நோக்கி எழுந்து வர , அகல்யாவும் அப்போதுதான் திரும்பினாள்.
‘இவர் எங்கே போகிறார்…’ என்பதாய் அவள் ரிஷியைப் பார்க்க
ரிஷியைப் பார்த்த சத்யா பிரேக் போட்ட வண்டியென நிற்க ,
“ஹே….!!எஸ்.எஸ்….எப்படி மேன் இருக்க….நீ…..பார்த்து பல வருசம் ஆச்சுல்ல….அதான்…இப்பவும் எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேன்னு வேகமா வந்தேன்….ஹவ் ஆர் யூ மேன்” என ரிஷி புன்னகையோடு கைகுலுக்க
அதைக் கண்டு அகல்யா “இங்கயேயும் வந்தாச்சா…….” என்று எரிச்சலோடு அவள் இருக்கையில் இருந்து எழுந்து அவர்கள் நின்ற இடம் நோக்கி வந்தாள்.
“நான் நல்லாருக்கேன் டா போலிஸ்காரா…உன்னைதான் பிடிக்க முடியல…..நீ எப்படியிருக்க…அம்மா எப்படியிருக்காங்க…..”
“நான் நல்லாயிருக்கேன்….ஆமா உங்க வீட்ல….எல்லாரும் எப்படி இருக்காங்க…உன் கல்யாணத்தப்ப பார்த்த்து….உன் மிஸஸ் எப்படியிருக்காங்க…பசங்க எத்தன….” என அடுக்கிக்கொண்டே போக ,சத்யாவின் முகம் வேதனையோடு அங்கு நின்ற அகல்யாவின் வதனம் பார்க்க,
அவளோ வேகமாய் ரிஷியிடம் “வரேன்” என்று முனுமுனுத்து விட்டு வெளியேற ,
சத்யா அவள் பின்னாலேயே “அகல்யா நில்லு…..” என்று கத்திக்கொண்டே போக , ரிஷிதான் ஒன்றும் புரியாமல் விழித்தபடி நின்றான்.
அகல்யா ரோட்டை க்ராஸ் செய்து ஆட்டோ பிடிக்கப் போக , அவள் கைப்பிடித்த சத்யா அவளைப் பரபரவென்று இழுத்து அவனின் காரினுள் தள்ளினான்.