“உங்க மகளை கேளுங்க த்தை. என்னவோ நான் ஸ்வீட் குடுக்கற மாதிரி என்னை கூப்பிடறீங்க?…” என்றவள்,
“எவ்வளோ நேரம் அதை கையிலையே வச்சிட்டு இருப்ப நீ?…” என்றாள் மோனிகா மேகா தோளை லேசாய் இடித்து.
“மேகா இல்லைன்னா என்கிட்டே குடு. நானே தரேன்…” என்று அதிரன் தனது கையை நீட்ட,
“நானே குடுப்பேன்…” என அவள் முதலில் தேவராஜிடம் தர,
“ரொம்ப சந்தோஷம் ம்மா. மனசு நிறைஞ்சு போச்சு…” என்றார் எழுந்து நின்று அவளின் உச்சந்தலையில் கை வைத்து ஆசிர்வாதமாய்.
சுபத்ரா உறைந்த நிலையில் தான் அமர்ந்திருந்தார். மனதெல்லாம் முதல் நாள் மேகா கூட்ட நெரிசலில் அலைமோதி வந்தது தான் ஞாபகம் வந்தது.
“அத்தை…” என்றதும் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டவர் அவளிடம் எதுவும் பேசாமல் அணைத்துக்கொண்டார்.
“கடவுள் நமக்கு துணையா இருக்கார் ம்மா. எனக்கு என் சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஆனா என்னவோ பண்ணுது…” என்று சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டார்.
அமுதனும், பல்லவனும் கூட தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து அதிரனுக்கும் வாழ்த்தை சொல்லிக்கொள்ள,
“நேத்து இதோட எப்படி நீ அங்க போன வரு?…” என்றார் மலர் மட்டும்.
திடுக்கிட்ட பார்வையுடன் மேகா விழிக்க மலரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
“மேகா இங்க வா, எனக்கு ஸ்வீட் இல்லையா?…” என அழைத்து தனக்கு வாங்கிக்கொண்டு அவளையும் அருகே அமர வைத்துக்கொண்டான் அதிரன்.
“அதான, தெரிஞ்சிருந்தா எப்படி வரு போயிருப்பா? அதுவும் என்கிட்டே சொல்லாம கூட?…” என சுபத்ராவும் பெருமையாகவும், மருமகளுக்கு ஆதரவாகவும் பேச மேகாவிற்கு குற்றவுணர்ச்சியாக போனது அந்த நொடி.
“சரி அதை என்னத்துக்கு இப்ப பேசிட்டு. சந்தோஷமான நேரம் சந்தோஷமா பேசுவோம்…” என்றார் அமுதன்.
“இனி உன் ராஜாங்கம் இங்க எல்லாம் செல்லாது பார்த்துக்கோ…” மோனிகா மகனை வம்பிழுக்க,
“எப்பவும் என் சேம்ப் எனக்கு ஸ்பெஷல் தான். நீ வொர்ரி பண்ணிக்காத குட்டி…” என்றான் அதிரன்.
“ரொம்ப செல்லம் தான் இவனுக்கு…” என்று பல்லவன் கூட சொல்ல அதிரன் கண்டுகொள்ளவில்லை.
அஷ்வின் மீதான பிடித்தம் என்பது மேகத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் பனித்துளியை போன்றானது அதிரனுக்கு.
மேகாவின் குடும்பத்தில் அவன் உறவிற்கென கைநீட்டிய பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தானே அவனை கை கோர்த்துக்கொண்ட அந்த குழந்தை என்றுமே அதிரனுக்கு விசேஷம் தான்.
மதிய உணவு விருந்தை போல தயாரானது. அன்று மாலை வரை இருந்துவிட்டு மேகாவின் குடும்பத்தினர் கிளம்ப அதன் பின்னர் மருத்துவமனைக்கு கிளம்பினார்கள் அதிரனும், மேகாவும்.
மேகாவிற்கும் செக்கப் செய்யவேண்டும் என்று கிளம்பி இருக்க தேவராஜ், சுபத்ரா உடன் வந்தனர்.
மேகாவை பரிசோதித்து உறுதிப்படுத்தி அவளுக்கான மருந்து மாத்திரைகள், வழக்கமான அறிவுரைகள் என்று சொல்லியிருக்க இனி மொத்த கவனமும் மேகாவிடம் தான் சுபத்ராவிற்கு.
அன்றே ஆடிட்டரிடம் தேவராஜே நேரடியாக பேசி விஷயத்தை சொல்ல அவர் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஓய்வில் இருக்கட்டும் என்றுவிட்டார்.
அவள் பாடம் சம்பந்தமான விவரங்களை தான் கவனித்து மேகாவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
மறுநாள் தங்களை பார்க்க வந்த ப்ரடியூசர், இயக்குனர் இருவரிடமும் பேசியாகிவிட்டது.
அதிரனின் படத்தை பற்றிய கவலையும் ஓரளவு குறைந்தது. எடுக்கப்பட்டது வரை சிறப்பாகவே வந்திருக்க இனி எடுக்கவேண்டிய அதிரன் காட்சிகள் மிக குறைவே.
பாடல்கள் மட்டும் இருக்க அதிரன் இருக்கும் நிலையில் வெளிநாடு செல்ல முடியாது. அதனால் அங்கேயே செட் போட்டு பட்டப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
மற்ற காட்சிகளை எல்லாம் டூப் வைத்து எடுத்துவிட்டு அதிரன் சம்பந்தப்பட்ட க்ளோசப் காட்சிகள் கட்டு பிரித்த பின்பு எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
அவர்கள் கேட்டுக்கொண்டது பாடலையும், டப்பிங்கையும் மட்டும் இந்த நேரத்தில் முடித்து கொடுக்குமாறு மட்டுமே.
அதிரனுக்கு அதில் எந்த சிரமமும் இல்லை. ஆனாலும் எதுவாக இருந்தாலும் முழுதாய் இரண்டுமாத ஓய்வின் பின்னர் தான் என்று சொல்லிவிட்டான்.
அவர்களாலும் மறுக்க முடியவில்லை. வேறு வழியும் இருக்கவில்லை. தொண்ணூறு சதவிகிதம் முடிந்த படத்தை வேறு ஒருவரை வைத்து இயக்கவும் முடியாது.
அதிரன் போன்று அவர்கள் அதற்கு பொருந்தி போவார்களா என்பதும் சந்தேகம். அவ்வளவு அழகாய் வந்திருந்தது காட்சிகள் எல்லாம்.
அதனால் மாற்றத்தை விரும்பவில்லை. நாளானாலும் மற்ற வேலைகளை அதற்குள் முடித்துவிடலாம் என்று இருந்தனர்.
தேவராஜ், அதிரன் தேவராஜ் எனும் திரைத்துறையின் அசைக்கமுடியாத இரு பெரும் தூண்கள் படத்தில் இருக்க அவர்களை அத்தனை சுலபமாக விலக்கவும் முடியாது.
தேவராஜே வலிந்து சொல்லிவிட்டார் இந்த படத்தில் தனக்கு எந்தவித பணமும் தேவை இல்லை என்று.
“என்னால முடிஞ்சது. எப்படியும் ப்ரடியூசர் வட்டி கட்டனும். இதுல ரெண்டுமாசமோ நாலு மாசமோ படம் வெளி வர வரைக்கும் நஷ்டம் அவருக்கு தான். அதனால நான் இதை செஞ்சு குடுக்கறேன்…” என்று தனிப்பட்ட முறையில் சொல்லியிருந்தார்.
அதிலேயே ஏகபோகமாக மகிழ்ந்துவிட்டனர். அதற்கு மேல் மறுக்க என்ன இருக்கிறது என்று.
எல்லாம் முடிந்து ஒரு இலகுவான மனநிலை. இன்னும் மேகா உண்டாகி இருப்பதை வீட்டினர் தவிர வேறு யாருக்கும் பகிர்ந்திருக்கவில்லை.
பத்து நாட்கள் ஆகியிருந்தும் சுபத்ரா சொல்லிவிட்டார் மலரிடம். இப்போதைக்கு உறவுகளுக்கு கூட சொல்லவேண்டாம். ஐந்து மாதம் ஆகட்டும் என்று.
வெளியில் தெரிந்தால் அதுவேறு செய்தியாக்கி எதையாவது பேசி வைப்பார்கள் என்று அதிரனும் ஹர்ஷத்திடம் சொல்லியிருக்க வீட்டிற்குள்ளேயே தான் இருந்தது விஷயம்.
இரவு தூங்கும் முன் இருவருக்குமான மாத்திரைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் அதிரன்.
“நான் வருவேன்ல. அம்மாட்ட பேசிட்டு வரதுக்குள்ள என்ன இது அதி?…” என்றாள் இருவருக்கும் கையில் கொண்டுவந்த பாலோடு.
“இப்போ என்ன? என்னால சும்மாவே இருக்க முடியலை. அதான் எடுத்து வச்சேன்டா…” என்றான்.
“ஹ்ம்ம் கேட்கவே மாட்டீங்க…” என்று சொல்லியவள் பாலை வைத்துவிட்டு உடைமாற்றி வர அதிரன் விரல்கள் தாளமிட துவங்கியது.
மேகா வரவும் முயன்று விரல்களை இறுக்கிக்கொண்டான். பார்த்தால் வருந்துவாள் என்று.
மனது அலைபாய்ந்தது அவள் வேண்டும் என்று. இரண்டு நாட்களாகவே அதிரன் தன்னை கட்டுப்படுத்தியபடி இருந்தான்.
“வந்துட்டேன். டேப்லெட் போடலாம்…” என்று சம்மணமிட்டு அமரவும் புன்னகையுடன் அவளிடம் கையை நீட்டினான்.
அவனுக்கு எடுத்து தந்துவிட்டு தானும் போட்டுக்கொண்டவள் தண்ணீரை குடித்துவிட்டு நிமிர்ந்தாள்.