அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் பார்கிங்கில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அந்த கட்டிடத்தை பார்த்தாள் ஜனனி.
இதற்குமுன் இதுபோன்ற இடத்திற்கு எல்லாம் அவள் வந்ததே இல்லை. வர தோன்றியதும் இல்லை.
இன்று வெற்றிகரமாக அவளது ‘தீசிஸை’ சப்மிட் செய்துமுடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்ததுமே அவளுக்கு அழைத்தான் ஷியாமளன்.
இந்த ஹோட்டல் பெயரை சொல்லி, “ஈவனிங் ஏழு மணிக்கு வந்துடு! உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்!” என்றிருந்தான்.
வீட்டிற்கு சென்று நிதானமாய் யோசித்தவளுக்கு ஏதோ விபரீதமாகவே தோன்ற, ‘போகாமல் இருந்துவிடுவோமா?’ என்றுக்கூட எண்ணினாள்.
அவள் எண்ணம் புரிந்தவன் போல உடனே அவளுக்கு அழைத்தவன், “கிளம்பிட்டியா?” என்று கேட்க, இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருந்தது அவன் சொன்ன நேரத்திற்கு.
“அதுக்குள்ளயா?”
“ஸ்பெசலா கிளம்பி வர சொன்னேனே, மறந்துட்டியா? பொண்ணுங்க சும்மா கிளம்பவே ஒரு மணி நேரம் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன்!” என்றவன் சிரித்தான் போலும்.
“சரி, வரேன்!” என்றவள் வைத்துவிட்டு, ‘எல்லாத்தையும் சொல்லிடனும்!’ என்ற முடிவோடு, மிதமான வேலைப்பாடு கொண்ட ஒரு சில்க் சுடிதாரை அணிந்துக்கொண்டு கிளம்ப, ‘எங்கே?’ என தந்தை கேட்டதற்கு, ‘வந்து சொல்றேன்!’ என்றுவிட்டு ஸ்கூட்டியை எடுத்தவள் இப்போது அவன் சொன்ன இடத்தில் நிற்கிறாள்.
யாரோ ஒருவன், “மேம்… ஆர் யூ ஜனனி?” என்று கேட்டுக்கொண்டு அவள் எதிரே நின்றான்.
அவள் தலையசைத்ததும், “ஷியாமளன் சார் இஸ் வெய்ட்டிங் ஃபோர் யூ அட் ‘ரூப் டாப்’! ஷால் வீ கோ மேம்?” என்றான் மரியாதையாய்.
சிறு தயக்கத்துடனே அவனுடன் நடந்தாள். லிப்டில் ஏறி பயணிக்கும் போது அவள் மனம் திடுக்’ திடுக்கென அதிர்ந்துக்கொண்டிருந்தது.
‘கடவுளே, நான் பயப்படுற மாதிரி எதுவும் அவர் சொல்லிடக்கூடாது!’ என்று வேண்டிக்கொண்டே நின்றாள்.
“மேம்? ஹியர் யூ கோ!” என்றவன் வழி காட்ட, அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றவள், அந்த தளத்தில் இருந்த பெருங்கதவில், ‘வெல்கம் ஜானு’ என்று எழுதியிருப்பதைக்கண்டு மெதுவாய் அதை தொட, கதவை தன்னால் அகல விரிந்தது.
அவளுக்கு நேரெதிரே வசீகரமாய் பற்கள் தெரிய சிரித்துக்கொண்டு பேண்ட்டின் இருபக்க பாக்கெட்’களிலும் கையை நுழைந்தபடி வெளிர் நிற ப்ளேசரில் ரம்யமாய் நின்றிருந்தான் ஷியாமளன்.
அந்த அறை முழுக்க மஞ்சள் நிற ஒளி அமைப்பு! மெழுகுவர்த்தி போன்ற எலெக்ட்ரிக் விளக்குகள்! விசாலமான அறையில் ஒரே ஒரு மேசை! இரு நாற்காலி! கூடவே ஒரு பியானோ!
பார்த்தவளுக்கு ஏதோ ‘ஹை பட்ஜெட்’ திரைப்படத்தில் வரும் காட்சி போல இருக்க அப்படியே நின்றாள்.
“உனக்காக தான் இவ்ளோ நேரம் காத்துக்கிட்டு இருக்கேன்! வாசல் வர வந்தவ, உள்ள வர மாட்டியா?” அவன் குரல் கூட அந்த அறையில் பட்டு எதிரொலிக்க, ஏதோ மந்திரம் சொல்வது போல இருந்தது அவளுக்கு.
மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் தன்போல நடந்து உள்ளே வர, அவளுக்கான நாற்காலியை எடுத்துப்போட்டவன் அவள் அமர்ந்ததும், எதிரே தானும் அமர்ந்தான்.
அவளுக்கு அவனை எதிர்க்கொள்ள பெருந்தயக்கமாய் இருந்தது. இதோடு நூறாவது முறையாக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தாள் அவள் மனம் நினைப்பது நடக்கக்கூடாது என!
“என்ன பேசவே மாட்டேங்குற?” என்றான் ஷியாமளன். அவள் லேசாக சிரிக்க,
என்னவோ அவனை முதல்முறையாய் பார்த்து பேசுவதை போல அப்படி ஒரு தயக்கம் அவளுக்கு. உண்மையில் அவனை முதன்முதலில் சந்தித்தபோது கூட அவள் பேச தயங்கவில்லை.
“பிடிச்சுருக்கு… ஆனா இவ்ளோ செலவு எதுக்கு?” என்றாள்.
“நம்ம இங்கேயே தினம் தங்க போறது இல்லையே ஜானு! ஜஸ்ட் த்ரீ ஆர்ஸ்! அதுவும் ஒரு முக்கியமான மொமென்ட்’க்காக!” என்றவன் அவளை அழுத்தமாய் பார்க்க, அவளுக்கு தெரிந்துப்போனது தன் வேண்டுதல் எல்லாம் இறைவன் பாதங்களை கூட சென்று சேரவில்லை என!
“ஸ்ஸ்… கொஞ்சம் நர்வஸ்’ஸா இருக்கேன்… உன் அளவுக்கெல்லாம் எனக்கு தைரியமே இல்லை!”
அவன் பேச பேச அவள் தலை தாழ்ந்துக்கொண்டேபோனது.
“என்னென்னவோ பேசணும்’ன்னு ப்ளான் பண்ணேன்! எல்லாம் மறந்துபோச்சு!” என்றவன், “ஏதோ இப்போ தோணுறதை அப்படியே பேசுறேன்… முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றுவிட்டு பேச துவங்க அவனை பேசவிடவே வேண்டாம் என்று நினைத்து அவள் தடுக்கப்போன சமயம்,
“எனக்கு என் அப்பா யாருன்னே தெரியாது” என்றான் ஷியாமளன்.
ஜனனி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.
“என் அம்மா ஸ்கூல் படிச்சு முடிச்சப்போ யாரோ ஒருத்தரை லவ் பண்ணிருக்காங்க! அம்மா வசதியான இடம்ன்னு தெரிஞ்சு அந்தாளு நல்லா பழகி ஏமாத்தி, அப்பப்ப கொஞ்சகொஞ்சமா பணம் வாங்கிக்கிட்டு இருந்துருக்கான். அம்மாவும் அவனை நம்பிருக்காங்க!
கொஞ்ச நாள்ல அவங்களுக்கு தான் கர்பமா இருக்கோம்ன்னு தெரிஞ்சுருக்கு! பண்ணப்போ தெரியாத தப்பு, அதோட பலன் கைல விழும்போது உரைச்சுருக்கு.
அந்தாள்’ட்ட போய் சொல்லிருக்காங்க! நல்லவிதமா பேசி, சீக்கிரம் பொண்ணு கேட்டு வரேன்னு எல்லாம் சொல்லி அம்மாவை அனுப்பிவச்சவன் அடுத்து எங்க போனான்னே தெரியலயாம்! அம்மாவும் அவங்களுக்கு தெரிஞ்ச இடமெல்லாம் தேடிருக்காங்க!
வெறும் பதினேழு வயசு என்ன தெரியும் சொல்லு? தப்பு பண்ணிட்டோம்ங்குற குற்றவுனர்வே அவங்களை பாதி கொன்னுருக்கு.
அதுவரைக்கும் தெரியாத அப்பா, தம்பி எல்லாம் அதுக்குபிறகு தான் கண்ணு தெரிஞ்சுருக்காங்க! அவங்களை பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி அதிகமாகிட்டே இருந்துருக்கு.
ஒருபக்கம் அவங்க வயித்துல நான் வளர்ந்துட்டே இருந்துருக்கேன்… இன்னொரு பக்கம் அம்மாவை ஏமாத்திட்டு போன ஆள் எங்கனே தெரியல! எல்லாம் சேர்ந்து ஒருமாதிரி டிப்ரெஷன்’ல தற்கொலை செஞ்சுக்க முயற்சி செஞ்சப்போ தான் என் மாமா காப்பாத்தி எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டாராம்!
அதுக்குபிறகு அவர் விசாரிச்சப்போ அந்தாளு செம்ம ஃபிராடு’ன்னு தெரிஞ்சுருக்கு! மேற்கொண்டு தேடாம விட்டுட்டாங்க!
அபார்ட்’ பண்ற ஸ்டேஜை தாண்டிட்டதால என்னை பெத்துக்க வேண்டிய சூழ்நிலை அம்மாக்கு…
தாத்தா ரொம்ப நொடிச்சுப்போய்ட்டாராம்! அவரால இதை தாங்கிக்கவே முடியல! நான் பொறக்கும் முன்னாடியே அவர் படுக்கையில விழுந்துட்டாரு.
என்னால தான் அப்பாக்கு இப்படி ஆச்சுன்னு கவலைப்பட்டே இன்னும் டிப்ரெஷன்’ல மூழ்கிப்போன என் அம்மா பிரசவத்துலையே என்னை விட்டு போய்ட்டாங்க!” என்றான்.
ஜனனி அவனை பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. அநாதரவாய் தவித்து நிற்கும் சிறு வயது ஷியாமளன் அவள் கண்களில் வந்து நின்றான்.
“அதுக்குபிறகு என் மாமா தான் எனக்கு எல்லாம்! தன்னோட அக்கா பட்ட கஷ்டத்தை கண்க்கூடா பார்த்தவருக்கு காதலிக்கணும்…. கல்யாணம் பண்ணணும்… இந்த ஆசை எல்லாம் இல்லாமலே போய்டுச்சு!
அவர்க்கூடவே வளர்ந்த எனக்கும் இந்த காதல், கல்யாணத்து மேல எல்லாம் பெரிய நாட்டம் இருந்ததே இல்லை!” என்றான்.
“என் அம்மா மட்டும் காதல்’ன்னு போகாம இருந்துருந்தா தாத்தா இன்னும் ரொம்ப வருஷம் இருந்துருக்கலாம்! என் மாமா அவருக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு குடும்பத்தோட வாழ்ந்துருக்கலாம்…
அம்மாவும் சந்தோசமா என்னை பெத்து என்கூடவே இருந்து வளர்த்துருப்பாங்க! அம்மா பாசம்’ன்னா என்னனு தெரியாம அவங்க மடிக்காகவும், அவங்க கையால ஊட்டுற ஒரு வாய் சாப்பாட்டுக்காகவும் மத்த பிள்ளைங்களை பார்த்து நான் ஏங்கிருக்க மாட்டேன்!” என்றவன் கலங்கிய கண்களை பெருவிரல் நகத்தால் சுண்டிவிட்டான்.
ஜனனிக்குமே கண்ணை கரித்துக்கொண்டு வந்தது.
நாசியை உறிஞ்சுக்கொண்டே லேசாக எழுந்தவன் பின் பாக்கெட்டில் இருந்து பர்சை எடுத்தான்.
அதை விரித்து அவள் புறம் நீட்டியவன், “என் அம்மா!” என்று சொல்ல, வெகு ஆர்வமாய் வாங்கி பார்த்தாள் ஜனனி.
உண்மையில் ஷியாமளனின் அம்மா அத்தனை அழகு..!
ஷியாமளனின் ஜாடை அவரிடம் தெள்ளத்தெளிவாய் இருக்க, ஆசையாய் பார்த்துக்கொண்டே இருந்தவளிடம்,
“என் அம்மா பேரு ஜானகி! ஜானு’ன்னு தான் வீட்ல கூப்பிடுவாங்களாம்!” என்று சொல்ல, இன்பமாய் திகைத்தாள் பெண்.
“என் அம்மா ஜானு’க்கூட என்னால இருக்க முடியல! ஆனா, என் அம்மா தான் எனக்காக உன்னை அனுப்பிருக்காங்க! இந்த ஜானு’க்கூட நான் கடைசி வரைக்கும் வாழணும்ன்னு ஆசைப்படுறேன்!” என்றவன்,
போட்டோவில் இருந்து அதிர்ந்து நிமிர்ந்தவள் முன்னே ‘ஜானு’ என்ற எழுத்துகள் மீது வெண்கற்கள் மின்னும் மோதிரத்தை ஏந்திக்கொண்டு, அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன்,
“உன்னை மாதிரி ஊரு முன்ன ப்ரொபோஸ் பண்ண எல்லாம் எனக்கு தைரியம் இல்லை!” என்று சிரித்து,
“இந்த ‘ரிங்’ என் விரல்ல போட்டு என்னை திருவாளர் ஜனனி’யா மாத்திக்கோ!” என்றான் ஷியாமளன்.
அவன் முகத்தில் அத்தனை பூரிப்பு! கொஞ்சம் கூட இவள் தன்னை மறுத்துவிடுவாளோ என்ற ஐயம் துளியிலும் துளியாய் கூட இல்லை!
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவள் உண்மையை சொல்வதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் தத்தளித்து நின்றாள்.
முகம் முழுக்க ஆசையும் அவளும் நிறைய பூரிப்புடன் மண்டியிட்டு கையேந்தி இருப்பவனை எப்படி நிராகரிக்க?
அவனை பற்றி எல்லாம் தெரிந்தபின்னும் அவன் மனதை நோகடிக்க இயலுமா அவளால்?!
“ரொம்ப நேரமா இதே ‘போஸ்’ல இருக்கேன்!” ஷியாமளன் சொன்னதும் தான் சுயவுணர்வுக்கு வந்தவள்,
“எழுந்துக்கோங்க சார்! ப்ளீஸ்!” என்றாள்.
“நீ இன்னும் அக்சப்ட் பண்ணவே இல்ல ஜானு”
“சார், ப்ளீஸ் எழுந்துக்கோங்க! இது எனக்கு அன்கம்போர்டபில்’லா இருக்கு” என்றாள்.
அவள் பேச்சில் துணுக்குற்றாலும் எழுந்துக்கொண்டவன், “பப்ளிக்கா ப்ரொபோஸ் பண்ணனும்ன்னு எதிர்ப்பார்க்குரியா ஜானு?” என்றான்.
“ஐயோ சார்! அதெல்லாம் இல்லை! நான் கொஞ்சம் பேசணும்”
“சரி” என்றவன் நாற்காலியை இவள் அருகே இழுக்க,
“இல்ல, வேண்டாம்… அங்கேயே!” என்று தடுத்தவளை விநோதமாய் பார்த்துக்கொண்டே தள்ளி சென்று அமர்ந்தான்.
“சொல்லு ஜானு!”
“அது… நான்.. என்னோட படிப்பு பத்தி சொல்லிருக்கேன் தானே? அதுல கடைசி வருஷம்’ன்னு ஒரு தீசிஸ் பண்ண சொல்லிருந்தாங்க” என்று துவங்க,
“ஜானு… ப்ளீஸ்! உன் படிப்பு மேல நீ எவ்ளோ பேஷநெட்’டா இருக்கேன்னு எனக்கு தெரியும்! ஆனா, இந்த மொமென்ட்’ல நான் எதிர்ப்பார்க்குற பேச்சே வேற!” என்றவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல்,
“ப்ளீஸ் சார்… என்னை பேச விடுங்க” என்றாள்.
ஒன்றும் புரியாவிடினும் அவளை அவள்போக்கில் விட்டு அமைதியாய் இருந்தான் ஷியாம்.
ஆனால், எதற்க்காக சும்மா இருந்தவனை சீண்டிவிட வேண்டும் அவள்!?
“என்னோட் தீசிஸ்’சை எக்ஸ்பெரிமென்ட் பண்ண ஒரு ஆள் தேவையா இருந்துச்சு! என்ன டாபிக்’ன்னு தெரிஞ்சுட்டா உணர்ச்சிகள் இயல்பா வராது! எனக்கு தெரிஞ்ச ஆளுங்கக்கிட்ட என்னால ஃப்ளர்ட் பண்ணவும் முடியாது!
தெரியாத ஒரு ஆள் கிட்ட பண்ணணும்.. அந்த ஆளால எனக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது! இதுல நான் ரொம்ப தெளிவா இருந்தேன்! தேடுன வரை அப்படி யார் மேலையும் நம்பிக்கை வரல எனக்கு…
அப்போதான் உங்களை பாத்தேன்! பாத்ததும் பிடிச்சுது! யோசிச்சப்போ, பெரிய இடத்து பையன், டீசென்ட்டா இருந்தீங்க! உங்ககிட்ட முயற்சி செஞ்சா பிரச்சனை வராது.. அப்படியே வந்தாலும், காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன்’ல சொல்லி சமாளிக்க முடியும்ன்னு தோனுச்சு!” என்றவளை உணர்வின்றி வெறித்தான் அவன்.