.
அத்தியாயம்.. 23
அடுத்து வந்த நாட்களிலிருந்து மருத்துவமணை போகும்முன் மனைவியை அணைத்து நெற்றிமுத்தம் வைக்காமல் கிளம்புவதில்லை சூர்யா.. அதேபோல் இரவுகளில் திலகாவை அணைத்தவாறுதான் தினமும் தூங்குவது என்று வழக்கப்படுத்தியிருந்தான்.
ஹாஸ்பிட்டலில் நடக்கும் சம்பவங்கள்.. ஹோம் ஆரம்பித்ததுப் பற்றி என சிலதை பகிர ஆரம்பித்தான்.. இவளும் ஆர்வமாக கேட்ப்பாள்.. வெளியில் எங்காவது அழைத்து செல்லவேண்டும் என நினைப்பான்.. அவனின் கடமை அவனுக்கு நேரம் கொடுக்காமல் போகவே வெளியில் செல்ல முடியாமல் போனது.
இரவில் பழைய படம் தவிர்த்து தற்போது வந்திருக்கும் புதுப்படங்களை போட்டுவிட்டு இந்த படம் நல்லாயிருக்கும் பாரு என்று பார்க்க வைப்பான்.. படம் ஒடிக்கொண்டிருக்கவே மனைவியை அணைத்து படுக்கும் சூர்யா அடுத்த அரைமணிநேரத்தில் தூங்கிவிடுவான்.. வேணாம் உங்க தூக்கம் கெடும் என்று சொல்பவள் படம் முடியாமல் தூங்கமாட்டாள்..
முன்பெல்லாம் சூர்யாவை விட்டு விலகவேண்டும் என்று நினைத்திருந்தவள்.. தன்மீதான சூர்யாவின் நேசம் புரிய.. நாம் என்ன நினைத்தாலும் இவன் தன்னையும் விடமாட்டான் வேறு பெண்ணையும் மணக்க மாட்டான் என்ற உண்மை புரிந்திருக்க.. இனியாவது கணவனை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு மனம் எடுத்;துரைத்தாலும்..
ஒருநாள் என்றாலும் பிரசாத்தோடு வாழ்ந்ததால் தாம் கலங்கப்பட்டவளென்றும் இவனின் பரிசுத்தமான அன்பிற்க்கு தாம் தகுதியானவளில்லை என்றும் எண்ணம் ஓட.. இரவுகளில் சூர்யா அணைத்துப்படுக்க நெருங்கும்போதெல்லாம் சிறுநொடியேனும் திலகாவின் உடல் அவளையறியாமல் அதிர்வை காட்டாமல் இருந்ததில்லை.
மனைவி தன்னை புரிந்திருக்கிறாள் என்று சூர்யா அறிந்திருந்தாலும்; இருவருக்கும் இடையில் பெரும்பாறையாய் பிரசாத்தின் நினைவிருக்கிறது என்பதையும் தெரிந்திருந்தான்.. அதில் வருத்தமிருந்தாலும் தன்மீதான திலகவதியின் அக்கறையையும் உணர்ந்திருந்திருந்ததால்.. அக்கறை அன்பாய் மாறும்போது.. சீறும் அலையாய் மாறி பாறையை தகர்த்து தானாய் வருவாள் தன்னிடம் என்று திடமாய் நம்பினான்.
இதோ ஓடிவிட்டது மேலும் ஒரு மாதம்.. பாவம் சிறுபெண் என்று மருமகள் மீது அக்கறை காட்டிவந்த கமலம்.. எத்தனை எடுத்துரைத்தும் மகனிடம் இணக்கம் காட்டாமல் இருக்கும் திலகவதியிடம் மீண்டும் சிடுசிடுக்கும் மாமியாராக மாறியிருந்தார்.
என் பையன் எத்தனை ஆசையாய் இவளை கல்யாணம் செய்தான்.. தன் மகனின் குணம் புரிந்திருந்தும் இப்படியா கொஞ்சம்கூட மனமிறங்காமல் இருப்பாள்…? பெத்த தாயும் புத்தி சொல்லியாச்சி.. பொண்டாட்டியை பக்கத்தில வச்சிக்கிட்டு இப்படி சந்நியாச வாழ்க்கை வாழனும்னு என் மகனுக்கு என்ன இருக்கு..? என்று ஏக கடுப்பில் இருந்தார்.
நாளை ஆதவன் குடும்பத்தினர் இருபது நாள் விடுப்போடு வரயிருக்கிறார்கள்.. விடுமுறை முடிந்ததும் அவர்களோடு கமலம் செல்வதற்காக பாஸ்போர்ட் போன்ற அனைத்தும் ரெடியாகிவிட்டது.. தன் பெரிய மகனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் கமலம்.
‘சித்தா… நாங்க வந்திட்டோம்..” என்றபடி சோனா உள்ளே வந்தாள்.
‘ஹேய்.. பொண்ணுமா.. வாங்க வாங்க..” என்றவன் கீர்த்தியிடம் இருந்த தியாவை வாங்கியபடியே.. ‘நல்லாயிருக்கிங்களாண்ணி..?” என கீர்த்தியிடம் நலம் விசாரித்து..
ஆதவனிடம்.. ‘நாளைக்கு தான வரேன்னு சொன்ன ஆதவா…? பரவாயில்ல இன்னைக்கு நீ வந்தது குட்டிங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்..” என்றான்.
‘அதை ப்ளான் பண்ணித்தான் இன்னைக்கு வந்ததே.. எங்கடா திலகா..?” என்றவன் ‘அம்மா..” என்றழைத்தான்.
கமலமும்.. திலகாவும் ஒருசேர வெளியே வந்தார்கள். ‘தியாக்குட்டி…” என்று சூர்யாவின் கையில் இருந்து தியாவை வாங்கியவள்.. குழந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட.. சூர்யா ரசனையாக மனைவியை பார்க்க.. தான் குழந்தைக்கு முத்தமிடவும்தான் இப்படி பார்க்கிறான் எனப் புரிந்தும்.. எதுவும் புரியாதவள் போல்..
‘நல்லயிருக்கிங்களாக்கா..?” என்று கீர்தியிடம் கேட்டு.. ஆதவனைப் பார்த்து லேசாய் சிரித்தாள்.
‘ரொம்ப நல்லாயிருக்கோம்.. சூர்யா உன் பொண்டாட்டி பெரிய பிஸ்னஸ்வுமனா வரப்போறா..” என்று சிரித்து.. பிறகு கமலத்திடம்..
‘அத்தை நல்லாயிருக்கிங்களா..?” என்று கேட்க..
‘நல்லாயிருக்கேன்மா.. முதல்ல குளிச்சிட்டு எதாவது சாப்பிடுங்க.” என்று கீர்த்திக்கு பதிலிளித்து தன் பேரப்பிள்ளைகளிடம் பேசப்போனார் கமலம்.
‘திலகா.. இந்தா இது உனக்காக..” என்று ஒரு புதிய மொபைலை கொடுத்தான் ஆதவன்.
‘எனக்கு இதுல எதுவும் தெரியாது மாமா..” என்றாள்.
‘அதெல்லாம் ரொம்ப ஈசிதான்.. சூர்யாகிட்ட கேளு அவன் சொல்லி கொடுத்திடுவான்..” என்றான் ஆதவன்.
ஒருமணி நேரம் வரை பேசிக்கொண்டிருந்தார்கள்.. சோனுவும்.. தியாவும்.. தூக்க கலக்கத்தில் இருக்க.. ‘திலகா.. குழந்தைகளை கூட்டிட்டுபோய் படுக்க வை.. அவங்களுக்கு தூக்கம் வருதுபோல..” என்ற கமலம்.. திலகவதி குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரூமிற்குள் போனதும்..
‘கீர்த்தி.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. வா..” என்று தனதறைக்கு போனார் கமலம்.
கீர்;த்தி உள்ளே வந்ததும்.. ‘நாம அமெரிக்கா போறதுக்குள்ள திலகவதிக்கு வாழ்க்கையைப் பத்தி புரிய வை.. சூர்யாவும் திலகாவும் இன்னும் சேர்ந்து வாழலை.. திலகவதி இன்னும் பிரசாத்தையே நினைச்சிட்டிருப்பா போல.. அன்னைக்கொரு நாள் இவ பிரசாத்தை பத்தி என்ன பேசினாளோ தெரியல.. சூர்யாவால அதை தாங்க முடியாம.. கோபமா தள்ளிவிட்ருக்கான்.. அவ போய் செவுத்தில இடிச்சிக்கிட்டாளாம்… நெத்தி ரொம்ப வீங்கியிருந்திச்சி..
திலகா ரொம்ப அழுதிருப்பா போல.. கண்ணெல்லாம் சிவந்து வீங்கியிருந்திச்சி.. அவ நெத்தியைப் பார்த்ததும் எனக்கு மனசே தாளல.. திலகாவை பிடிச்சிதாண்டா கல்யாணம் செய்துகிட்ட..? இப்போ என்னன்னு கேட்டேன்.. கொஞ்ச நாள்ல எல்லாம் சரி செய்திடறேன்னு சொன்னான்.. திரும்பவும் சண்டை போடாதன்னு அவனுக்கு புத்திசொல்லி அனுப்பிவச்சேன்..
சூர்யா ரூம் போனதுக்கப்புறம் எனக்கு தூக்கமே வரல.. சாப்ட்டாளா இல்ல இன்னும் சண்டைதான் போடறாங்களான்னு மனசு கேக்காம எழுந்து இவங்க ரூம் பக்கம் வந்தேன்.. என் பக்கத்தில படுத்துகிட்டு பிரசாத்தை நினைச்சி கனவு காணுன்னு.. சூர்யா அத்தனை கோபமா சொன்னான்.. என்னால அதுக்கு மேல அங்க இருக்க முடியாம வந்துட்டேன்..” என்று வேதனையோடு கூறினார் கமலம்.
அதிர்வோடு விழிவிரித்த கீர்த்தி.. ‘நம்ம சூர்யாவா இப்படியெல்லாம் பேசுறாரு..?” என்றாள் நம்பமுடியாதவளாய்.
‘ஆமாம் கீர்த்தி.. என் மகன் சந்தோச்தைப் பத்தி கொஞ்சமும் யோசிக்கமாட்றா.. இது ஒன்னைத்தவிர திலகாகிட்ட வேற ஒரு குறையும் சொல்லமுடியாது.. எத்தனை கோபமா நான் பேசினாலும் மறுபேச்சி பேசமாட்டா.. என்னை குளிக்க வைக்கிறது.. பக்கத்தில இருந்து பரிமாறுறதுன்னு சலிக்காம சேவகம் பண்றா.. இருந்தாலும் வாழவேண்டிய வயசில என் மகனுக்கு இப்படி மனக்கஷ்டம் தேவைதானான்னு வேதனையா இருக்கு..” என்றார் கண் கலங்கியவராய்.
‘திலகாகிட்ட நான் திலகாகிட்ட பேசுறேன்.. நீங்க வருந்தாதிங்க..” என்றாள்.
அடுத்த நாள் காலை.. சூர்யா ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பியதும்.. மதியம் வரை ஓய்வெடுத்த கீர்த்தி மாலை நான்கு மணிபோல் திலகவதியிடம் டெய்லரிங்.. அவளின் அம்மா நலன்.. பாலாஜி படிப்பு என ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். பிறகு மெதுவாக..
‘சூர்யா உன்னை நல்லா பார்த்துக்கிறாரா திலகா..?” என்றாள்.
‘ம்ம்.. பார்த்துக்கிறார்க்கா..” என்றாள்.
‘அப்ப நீதான் அவரை சரியா பார்த்துக்கிறதில்லையா..?” என்று உள்ளார்ந்து கேட்டாள். கீர்த்தி எதைப்பற்றி பேச விழைகிறாள் என்று திலகவதிக்கு சட்டென்று புரிய அவளின் கண்கலங்கியது.
‘அழாதே திலகா.. உன் சூழ்நிலை எனக்கு புரியுது.. ஆனா.. அத்தையைப் பத்தி கொஞ்சம் யோசிச்சிபாரு.. பெத்த மகன் சந்தோசமா இல்லன்னா.. வருந்தாம இருப்பாங்களா..? அவங்க வாழ்ந்து முடிச்சவங்க.. நாம சொல்லித்தான் அவங்களுக்கு புரியனும்னு இல்ல.. முகத்தை வச்சே எதுன்னாலும் கண்டுபிடிச்சிடுவாங்க.. சூர்யா சந்தோசமா இல்லன்னு அத்தை ரொம்ப வருத்தப்படுறாங்க..” என்றாள்.
‘அவர் ரொம்ப நல்லவர்.. பரிசுத்தமானவர்.. ஆனா நான்..” என்றவளுக்கு ஒரு நாளென்றாலும் பிராத்தோடு சேர்ந்திருந்திருந்ததால்.. பரிசுத்தமான சூர்யாவிற்க்கு தான் தகுதியில்லாதவள் என்ற நினைப்பிருக்க.. ‘என்னால அவரோட வாழ முடியலயேக்கா.. மாமாவும் நீங்களுமாவது இந்த கல்யாணம் வேணாம்னு அவருக்கு சொல்லி புரிய வச்சிருக்கலாமில்ல.. போயும் போயும் ஒரு விதவையை கல்யாணம் செய்துக்க எதுக்குக்கா சம்மதிச்சிங்க..?” என்று கதறி அழ..
‘நிறுத்து திலகா.. நீ விதைவை இல்ல.. இந்த சூர்யாவை கட்டிகிட்ட சுமங்கலி.. இதுக்கு மேல நீ விதவை ஆகனும்னா.. அதுக்கு முதல்ல நான் சாகனும்..‚” என்று அத்தனை ஆத்திரத்தோடு கத்தினான்.
சூர்யாவின் குரலில் பயந்தவளுக்கு அழுகை கப்பென்று நின்றது. பிறகுதான் அவன் பேசிய வார்த்தையின் அர்த்தம் புரிய.. ‘அச்சோ.. என்ன வார்த்தை சொல்றிங்க..?” என்று தன் தலையில் அடித்துக்கொண்டு அழ..
திலகவதியின் கைகளை தடுத்த கீர்த்தி.. ‘அழாதே திலகா..” என்று சமாதனப்படுத்த.. வேதனையோடும் கோபத்தோடும் சூர்யா திலகவதியையே உறுத்து பார்த்திருக்க..
‘நான் பேசிக்கிறேன் சூர்யா.. நீ கோபப்படாத..” என்று சூர்யாவை இழுத்துக்கொண்டு அவனின் அறைக்கு வந்தாள் கீர்த்தி.
‘எப்படி லூசாட்டம் யோசிச்சிட்டிருக்கான்னு பார்த்திங்களாண்ணி..” என்று மிகுந்த வேதனையடைந்தான்.
‘அவ சின்னபொண்ணு.. உன்னை புரிஞ்சிக்கிற வரைக்கும் நீயாவது கொஞ்சம் பொறுமையா இரு.. உன்னை சரியா புரிஞ்சதுக்கப்புறம் உன் காலடியில கிடப்பா.. கவலைப்படாத சீக்கிரம் எல்லாம் சரியாய்டும்..” என்று ஆறுதலளித்தாள்.
‘அவ என்னை புரிஞ்சிக்கிலைங்கிறது ஒரு பிரச்சனையில்ல அண்ணி.. அவளுக்கு அவளையே கீழ்படுத்திக்கிட்டு மனசைப்போட்டு இப்படி வருத்திட்டிருக்காளேங்கிறதுதான் எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு. சரி.. டாக்டர்கிட்ட கூட்டிட்டுப்போய் ஒரு கவுன்சிலிங் கொடுக்கலாம்னு ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டா.. அதுக்கும் ஊமை மாதிரியிருந்திட்டு டாக்டரையே வளைச்சிப்போட்டுட்டான்னு இவளை மத்தவங்க பேசுவாங்கன்னு சொல்றா.. இவளை எப்படித்தான் இதுலயிருந்து வெளில கொண்டுவரதுன்னு எனக்கு சத்தியமா புரியலைண்ணி..” என்று வருந்தினான்.
வெளியில் இருந்து இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த ஆதவன்..
‘கீர்த்தி.. நீ போ.. சூர்யாகிட்ட நான் பேசுறேன்..” என்றான்.
கீர்த்தி வெளியே சென்றதும்.. கதவை தாழ்போட்டவன்.. ‘சூர்யா.. அநியாயத்துக்கு நீ இப்படியொரு அமுல் பேபியா இருப்பேன்னு நான் நினைச்சே பார்க்கலைடா..” என்று சிரித்தான் ஆதவன்.
‘எரிச்சலை கிளப்பாத ஆதவா..” என்றான் கடுப்பாக.
‘யாரு..? நான் எரிச்சலை கிளப்புறோன..? அவனவன் லவ் பண்ணும்போதே காதலியை அம்மாவாக்கிடுறானுங்க.. இங்க நீ என்னடான்னா..? எந்த ஒரு ஸ்டெப்பும் எடுக்காம திலகாவை குறை சொல்லிட்டிருக்கியா..?” என்று எள்ளலாய் கேட்டான் ஆதவன்.
‘அவளை நெருங்கனும்னு முடிவு பண்ணிட்டேன்னா அதுக்கு ஒரு நிமிசம் ஆகாது ஆதவா.. நாம விதவைங்கிற நினைப்புலயே இருக்கிறவகிட்ட என்னால அப்படி இருக்க முடியல..” என்றான் வேதனையாக.
ஆதவன்.. ‘விதவைங்கிற எண்ணத்தை திலகா மனசிலயிருந்து மறக்க வைக்க முடியலைங்கிறதுதான் உன்னோட மைனஸ்..” எனும்போதே..
‘நீ சொல்ல வரது எனக்கு புரியாம இல்ல.. புருசன் பொண்டாட்டியாவே இருந்தாலும் இரண்டு பேரும் உடன்பட்டாதான் தாம்பத்தியம்.. அவளுக்கு விரும்பமில்லன்னா அதுக்கு பேர்..” என்று நிறுத்தியவன்..
‘கேவலம் செக்சால என் அன்பை உணர்த்தனும்ங்கிற அவசியம் எனக்கில்ல ஆதவா.. நான் அதை விரும்பவும் இல்லை. நான் வாழ நினைக்கிறது தாம்பத்திய வாழ்க்கை.. எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாம என்னைக்கு அவ என் காதலை புரிஞ்சிக்கிறாளோ.. அன்னைக்குதான் என் வாழ்க்கை ஆரம்பமாகும்.” என்று உறுதியாய் சொன்னான் சூர்யா.