அத்தியாயம் — 15
பிரசாத் திலகவதியின் முன்னாள் கணவன் என்பது மறந்து.. இருவரும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம்.. நெஞ்சில் பச்சைக் குத்தியதுபோல் பதிந்திருக்கும் நாட்கள் வலம் வந்தது.
பிரசாத்தின் பத்தாவது பிறந்த நாளன்று இருபத்திஐந்து பைசா ஆரஞ்சு சாக்லட்டை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு ஆசையோடு சூர்யா சென்றான் பிரசாத்தின் வீட்டிற்க்கு..
‘இன்னைக்கு என் பிறந்த நாள்ன்னு உனக்கு நியாபகம் இருக்கா..?” என்று அதிசயமாக கேட்டவன்.. ‘ஏய் உனக்கேது டா இரண்டு ரூபா..?” என்று பிரசாத் சூர்யாவை மிரட்ட..
‘உனக்கு பிறந்த நாள்ன்னு அப்பா சொன்னார்.. அப்போ பிரசாத்துக்கு சாக்லேட் வாங்கி தர காசு கொடுங்கன்னு நான் ஐம்பது பைசாதான் கேட்டேன்.. அப்பாதான் உங்கம்மாப்பா நவீன்.. ஆதுக்குன்னு எல்லாருக்கும் வாங்கி கொடுன்னு அப்பா இரண்டு ரூபா கொடுத்தார் பிரசாத்..” என்று சந்தோசமாய் சொல்லி ஒரு சாக்லட்டின் கவரை பிரித்து பிரசாத்தின் வாயில் சூர்யா திணிக்க..
சந்தோசமாய் பெற்றுக்கொண்டவன்.. ‘சரி வா.. வா.. கேக் வெட்டலாம்..” என்று பிரசாத் உள்ளே அழைக்க..
‘கேக்காhhh…?” என்று குதூகலித்து எட்டு வயது சூர்யா உள்ளே போக.. ஒரு பிளாஸ்டிக் முக்காலியில் ஒரு கைக்குட்டையை விரித்து.. அதன்மேல் பெரிய பண் (ரொட்டி) இருக்க.. அதன் மேல் ஒரு மெழுகுவர்த்தியையும் சொருகியிருக்க..
பண்னைப் பார்த்த சூர்யாவின் முகம் சட்டென வாட.. நண்பனின் ஏமாற்றத்தை தாங்க முடியாதவனாய்.. ‘நாம பெருசாகி.. நிறைய சம்பாதிச்சதும் பிறந்தநாளுக்கு பெரிய கேக்கா வெட்டலாம்.. இப்போ இதுதான் நமக்கு கேக்..” என்று ஆறுதலளிக்க..
‘ம்ம்..” என்று ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் சூர்யா முகம் திருப்ப..
தன்னிடம் இருக்கும் இருபது ரூபாய்க்கும் அப்பளக்கட்டும் சாம்பார் வைக்க தோதான பொருள்களும் மூர்த்தி வாங்கியிருக்க.. சூர்யா அருகே வந்த மூர்த்தி..
‘சூர்யா குட்டி.. நீ சாங்காலம் ஸ்கூல்லயிருந்து வரும்போது இந்த மூர்த்திப்பா உனக்கு கேக் வாங்கி வருவனாம்.. இப்போ இந்த ரொட்டியை சாப்பிடுவியாம்.. சரியா..?” என்று ஆறுதலளிக்க.. சமத்தாய் சரியென தலையசைத்த சிறுவனை ஏமாற்ற மனமில்லாமல்.. அன்று மாலையே கேக்கோடு சூர்யாவின் வீட்டிற்க்கு வந்தார்.
‘ஏன் மூர்த்தி இப்படி..? அவன் சின்ன பையன்.. இப்போ பத்துரூபா போட்டு வாங்கியே ஆகனுமா..? இந்த பணமிருந்தா பூரணிதங்கச்சி மூனுநாள் பொழப்பை ஓட்டிடும்..” என்று ஆதங்கப்பட..
சூர்யாவிற்க்கு தான் செய்தது தவறென்று பட.. முகமும் வாடிப்போக.. ‘டேய்.. என் சூர்யாக்கு நான் வாங்கி தரேன்.. உனக்கென்ன..?” என்று இராஜேந்திரனைத் திட்டி.. ‘நீ சாப்பிடு செல்லம்..” என்று சொல்ல..
‘பிராசாத்துக்கு..?” என கேக்க.. ‘அவனுக்கும் நவீனுக்கும் கொடுத்திட்டுத்தான் வரேன்.. நீ சாப்பிடு..” என்று சொல்ல.. பாதியை ஆதவனுக்கு கொடுத்து தானும் சாப்பிட்டவன்.. அதன் பிறகு வந்த பிறந்த நாள்களில் இதுபோல் அடம் செய்வதில்லை.
பிரசாத் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரையிலும்.. ஆதவன்.. சூர்யா.. நவீன் பிரசாத் என்று யார் பிறந்த நாளென்றாலும் பெரிய ரொட்டியை வாங்கி.. அதையே கேக்கைபோல வெட்டி பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.
சூர்யாவின் அப்பாவும் பிரசாத்தின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள்.. இவர்களாலேயே சூர்யா பிரசாத்தின் நட்பு இன்னும் வலுவானது..
நண்பர்கள் இருவரும் ஒரே பள்ளியில் தன் மகன்களை படிக்கவைத்தனர். மாணவப் பருவத்திலேயே பிரசாத் என்.சி.சி. யில் சிறந்து விளங்கியவன்.. தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரனாவான். பள்ளி விழாக்கள் என்றால் கூட தேசப்பற்றுடைய நாடகத்தில்தான் நடிப்பான்.
சூர்யா பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் அவனின் தந்தை இறந்தார். வேலைக்கு கிளம்பியவர்தான்.. சட்டென நெஞ்சை பிடித்து உக்கார.. கமலம் தண்ணீர் கொண்டுவருவதற்க்குள் உயிர் பிரிந்திருந்தது.. சூர்யா அப்பொழுது எடுத்த முடிவுதான் டாக்டராக வேண்டுமென்று..
பிரசாத் தனது பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் கல்லூhயில் சேர்ந்தான்தான்.. ஆனால் படிப்பில் கவனம் பதியவில்லை.. ஒரு வருடம்தான் கல்லூரி சென்றான். கல்லூரி பிடிக்காமல் போகவே இராணுவத்தில் பணிபுரியும் ஆவலை தன் தகப்பனிடம் சொல்ல.. தன் மகனின் நாட்டுப்பற்றை உணர்ந்தவராய் மூர்த்தியும் அதற்கு பெருமையோடு சம்மதிக்கவும் விரும்பிச் சென்றான் இராணுவப் பணிக்கு..
சூர்யாவை விட பிரசாத் இரண்டு வயது பெரியவனாதலால்.. பிரசாத் இராணுவத்தில் சேரும்போது.. சூர்யா பத்தாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான்.. அப்பொழுதுதான் நண்பர்கள் இருவரும் பிரிய நேரிட்டது.. அப்பொழுதே அப்படி அழுதான் சூர்யா.. தன் தந்தை இறப்பிற்க்குப் பிறகு நட்பிலிருந்து இன்னும் கொஞ்சம் முன்னேறி பொறுப்பான அண்ணனாகவும்.. சிலநேரம் தந்தை போன்ற அறிவுரை கூறுபவனாகவும் மாறியிருந்தானல்லவா..? அதனாலேயே பிரசாத்தின் பிரிவை சூர்யாவால் தாளமுடியவில்லை.
சூர்யா.. என்னைவிட நீ நல்ல படிக்கிற பையன்.. நல்லா படிச்சி டாக்டர் ஆகி எல்லாருக்கும் முடிந்தவரை இலவசமா சேவை செய்.. வருங்காலத்தில நான் நம்ம நாட்டு எல்லை ல பணி செய்யப் போறேன்.. நீ நம்ம நாட்டு எல்லலைக்குள்ள பணி செய்யப்போற.. உங்கப்பா என்னை மேலயிருந்து பார்த்துக்குவார்.. எங்கப்பா உன்னை பக்கத்திலயிருந்து பார்த்துக்குவார்.. என்று நண்பனுக்கு ஆறுதலளித்து கிளம்பினான்.
இராணுவத்தில் சேர்ந்த பிறகு குறுகிய காலத்தில் அவனின் வளர்ச்சி அபாரம்தான்.. பணியில் ப்ரமோசன்.. என்பது போல எந்த விசயமென்றாலும் முதலில் சூர்யாவிடம் சொல்லிவிட்டுத்தான் அவனின் தந்தைக்கே சொல்லுவான்..
நினைவுகள் சுழற்றியடிக்க.. வெடித்தழுதான் சத்தமாகவே.
பயந்தவளாய்.. ‘சூர்.. சூர்யா..” என்று அவனை நோக்கி இரண்டடி முன்னேற..
‘கொஞ்சநேரம் வெளில போ.. என்னை தனியா விடு..” என்று அவளின் முகம்பாராமல் கர்ஜிக்கவும்.. இவள் தயங்கி நிற்க்கவும்.. ‘ப்ச்.. போடி..” என்று மனைவியை வெளியே தள்ளி அறைந்து சாத்தினான் கதவை.
கணவனின் கண்ணீர் நிறைந்த சிவந்த முகம் திலகவதியை வெகுவாய் பாதிக்க.. எதற்க்கு அழறான்..? உள்ளே சென்றால் இன்னும் கோபப்படுவானோ.. என்று செய்வதறியாமல் தன் துப்பட்டாவை கசக்கியபடி பதட்டத்தோடு கதவையே பார்த்திருக்க..
அறையின் கதவு சாத்தப்பட்ட விதமும்.. தன் மகள் தவிப்பாய் நின்றிருந்த கோலமும் கண்டு.. ஒரு நொடியில் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு முறை புரிய.. இத்தனை நாள் மகளை காணாதிருந்த தவிப்பெல்லாம் மறந்தவராய்.. பேரதிர்ச்சியோடும் ஆத்திரத்தோடும் தன் மகளைப் பார்;த்திருந்தார் ஜெயா.
முறைத்துக் கொண்டிருந்த ஜெயாவை இன்னும் திலகவதி பார்க்கவில்லை.. தான் வந்தது கூட தெரியாமல் என்ன சிந்தனையிலிருக்கிறாள் என்று ஆத்திரம் கிளம்ப.. கோபத்தோடு தன் மகளை நெருங்கி.. ‘திலகா..” என்று அழுத்தமாய் அழைக்க..
இவளிருந்த பதட்டத்தில் தன் அன்னையின் கோபக் குரல் புரியாமல்..
வெகுநாள் காணாதிருந்த தவிப்பில்.. ‘அம்மா..” என்று கட்டியணைத்து கண்கலங்க..
சட்டென மகளை விலக்கி.. அடிக்க கை ஓங்க.. ‘சம்மந்தி..” என்ற கமலத்தின் அதிகாரக் குரலில் ஓங்கிய கையை கீழறக்கினார் ஜெயா.
‘திலகவதி உங்க பொண்ணுமட்டுமில்ல.. சூர்யா பொண்டாட்டி.. என் மருமக.. இப்படி பொசுக்குன்னு கையெல்லாம் ஓங்கக்கூடாது..” என்று தன் குரலைத் தாழ்த்தி தன்மையாகவும் மரியாதையாகவும் சொல்ல.. கண்கலங்கினார் ஜெயா.
‘முதல்ல உக்காருங்க..” என்று ஜெயாவிடம் கனிவாக சொல்லி..
தன் மருமகளிடம்.. ‘என்ன இப்படி நின்னுட்டே இருக்க..? போய் குடிக்க எதாவது எடுத்து வா..” என்றார் சிடுசிடுப்பாக.
அம்மா எதுக்கு என்னை அடிக்க வந்தாங்க..? அத்தை அதை தடுத்திட்டாங்களே.. என ஆச்சர்யமடைந்து.. எல்லாம் போக சூர்யா எதுக்கு இப்படி அழறான் என குழப்பத்தோடே கிச்சன் சென்றவள்.. தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க.. வாங்கி குடித்த ஜெயா..
‘நல்லாயிருக்கியா..?”என்றார் மிரட்டும் குரலில். தன் அன்னையின் குணம் தெரியாதவளல்லவே.. நான் என்னம்மா தப்பு செய்தேன் என்ற பாவனையை அவளின் முகம் காண்பிக்க..
பின்புதான் தன் மகளின் உடையில் கவனம் பதிந்தவர்.. மேலிருந்து கீழ் வரை பார்த்து.. மனதினுள் சந்தோசமடைந்து… அதனை வெளிக்காட்டாதவராய்.. ‘நீ சந்தோசமாத்தான் இருக்க.. உன்னால இங்க இருக்கவங்களும் சந்தோசமா இருக்காங்களா..?” என்றார் இரு பொருள் பொதிய.
‘ம்மா..” என்று திலகவதி கண்கலங்க..
‘விடுங்க.. திலகாகிட்ட இதுப்பத்தி அப்புறம் பேசிக்குவிங்க.. இப்போ எல்லாரும் ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்.. இந்த நேரம் அவளை அழவைக்க வேணாம்.. அங்க போகும்போது அமைதியான மனநிலைல போனாதான் சூர்யாக்கு பிடிக்கும்..” என்றார்.
ஜெயா.. ‘நான் எதுக்குங்க..? நீங்க போய்ட்டு வாங்க..” என்றார் பெருத்த சங்கடத்தோடு.
அதானே..? நாமும் கூட எதுக்கு..? திருமணம் முடிந்து முதல்முறையாய் மனைவியோடு சூர்யா வெளியில் செல்கிறான். இவர்கள் போய் வரட்டுமே.. நாம் இன்னொரு நாள் போய்க்கலாம் என்று கமலத்திற்க்கும் தோன்ற..
‘நீங்க சொல்றதும் சரிதானுங்க.. நாம ரெண்டு பேரும் பேசிட்டிருப்போம்.. சூர்யாவும் திலகாவும் போய்வரட்டும்.. நாம எல்லாருமா இன்னொரு நாளைக்கு போய்க்கலாம்..” என்று சொல்ல..
‘இல்ல.. நீங்க போறதுன்னா போய்ட்டு வாங்க.. டாக்டர்தம்பி வெளில வந்ததும் ஒரு வார்த்தை சொல்லிட்டு நான் கிளம்பறேன்..” என்று சொல்ல..
வெகுவாய் சிரமப்பட்டு தனக்குத்தானே சமாதனம் செய்து.. தன்னை சரிசெய்த சூர்யா வரவழைத்த இயல்போடு வெளியே வர.. மருமகனைக் கண்டதும் தன்போல் ஜெயா எழுந்து நிற்க்க..
‘ப்ச்.. என்னம்மா நீங்க..? உக்காருங்க..” என்று உரிமையாய் கூற.. ஜெயா அமர்ந்ததும்.. ‘பாலா நல்லாயிருக்கானா..? ஏன் வீட்டுப் பக்கமே வரமாட்றிங்க..? திலகாக்கு உங்களை பார்க்கனும்னு இருக்கும்தானே..?” என்றான் அக்கறையாக.
‘என்னைப் பார்த்து என்ன ஆகப்போகுதுங்க..? உங்களை அம்மாவைல்லாம் சந்தோசமா பார்த்துக்கிட்டாள்ன்னா அதுதான் எனக்கு பெரிய சந்தோசம்..” என்றார் கவலையாக.
‘ம்ம் அதெல்லாம் நல்லா பார்த்துக்கிறா.. தினமும் காலைல அம்மாகூடதான் இருப்பா.. நாங்க சாப்பிடும்போது பக்கத்தில நின்னு பரிமாறுவா.. இப்போ நாலு மாசமா துணி தைக்க கத்துக்கிட்டிருக்கா.. அவளைப் பத்தி நீங்க கவலைப்படாதிங்க..” என்றான் நம்பிக்கையான குரலில்.
என்னதான் சூர்யா திலகவதியை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும்.. ஜெயா தன் மகளை அறியாதவரா என்ன..? எனினும் மருமகனின் நிம்மதிக்காக தானும் நிம்மதிப் பார்வை பார்த்தார்.
பிரசாத்தின் நினைவில் சூர்யாவின் மனம் கனத்திருக்க.. அதன் பொருட்டு தலையும் லேசாய் கனக்க.. தற்போது கா‡பி தேவையாய் இருக்க.. ‘திலகா.. எனக்கு கா‡பி எடுத்திட்டு வா..” என்றான்.
‘என்னப்பா முகமெல்லாம் சிவந்து ஒருமாதிரியா இருக்கு..? தலைவலிக்குதா..?” என்று தன் வீல்சேரை தள்ளிக்கொண்டு அவசரமாய் சூர்யாவிடம் வந்த கமலம்.. தன் மகனைத் தொட்டுப்பார்க்க.. அம்மாவின் கையை ஆதரவாய் பிடித்தவன்..
‘ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் தலைபாரமா இருக்கு.. ஒரு கா‡பி குடிச்சா சரியாய்டும்..” என்றான்.
‘அப்போ ரெஸ்ட் எடுத்திட்டு இன்னொரு நாளைக்கு போலாம்ல சூர்யா..?” என்று கமலம் எடுத்துரைக்க..
‘இல்லம்மா.. இன்னைக்கு வரேன்னு சொல்லிட்டேன்.. பெரியவங்க கூட புரிஞ்சிப்பாங்க.. குழந்தைங்க என்னை ரொம்ப எதிர்பார்ப்பாங்க..” என்று அன்னையிடம் சொன்னவன்..
பின்னே பிரசாத்தின் நினைவில் எங்கோ பார்த்து.. ‘எனக்கும் கொஞ்சம் அங்க போய் வந்தா பரவால்லையா இருக்கும்னு தோணுதும்மா..” என்றான் சோர்வாக.
திலகவதி கா‡பி கொடுக்க வாங்கி பருகியவன் முகம் அத்தனை வாட்டமாய் இருக்க.. ‘என்ன சூர்யா..? குழந்தைங்க யாரவது ரொம்ப கிரிட்டிக்கலா அட்மிட் ஆகியிருக்காங்களா..? ரொம்ப சோர்ந்து தெரியற..?” என்றார் அக்கறையாக.
அன்னையிடம் பொய் சொல்ல முடியாதவனாய் சூர்யா தலைகுனிய.. வழக்கமாய் மருத்துவமணையில் யாருக்கேனும் மோசமான நிலையென்றால்தான் இதுபோல் சோர்ந்திருப்பான் என நினைத்த கமலம்..
‘இதுவரைக்கும் நீ செய்த ஆப்ரேசன் எது தோல்வில முடிஞ்சிருக்கு..? கவலைப்படாதப்பா.. உன் குழந்தை மனசுக்கு உனக்கு தோல்வியே வராது..” என்று தன் மகன் தலைகோதி ஆறுதல் சொல்லி..
‘கல்யாணமாகி முதன்முறையா பொண்டாட்டியோட வெளில போற.. இப்பவும் ஹாஸ்பிட்டல் நினைப்புதானா..?” என்று செல்லமாய் அதட்ட..
இயல்புக்கு வந்தவன்.. ‘கிளம்பலாமாம்மா..?” என கேட்டபடியே எழுந்தான்.
‘இன்னைக்குத்தான் இவங்க வந்திருக்காங்க.. நாங்க பேசிட்டிருக்கோம்.. நீயும் திலகாவும் போய்ட்டு வாங்க.. நாங்க இன்னொரு நாளைக்கு வரோம்..” என்றார் கமலம்.
சூர்யா இருக்கும் மனநிலையில் தான் தனியாக சென்றால் கூட நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தான்.. ஆனாலும்; அங்கு திலகவதியைத்தான் அனைவரும் ஆர்வமாய் எதிர்பார்ப்பார்கள் என நினைத்து ‘சரிம்மா..” என்றான்.
ஏதோ குழப்பத்தில் மனம் சரியில்லாமல் தவிக்கிறான்.. இல்லையென்றால் தன்னை விட்டு கிளம்பவேமாட்டான் என நினைத்த கமலம்.. மகனை இயல்பாக்க..
‘ஏண்டா சூரிப்பயலே.. நாங்க வரலன்னு ஒத்த வார்த்தை சொன்னதும் இப்படி பட்டுன்னு ஓ.கே சொல்லிட்டியே..? அதுக்கு நேரடியாவே எனக்கு பொண்டாட்டியோட தனியா போக ஆசையாயிருக்குன்னு முன்னமே சொல்லியிருக்கலாமில்ல..?” என்று சிரிப்போடு கேட்க..
‘ப்ச் ம்மா..” என்று அழகாய் சலித்தவன்.. ‘நீங்களும் வாங்க.. எல்லாருமே போலாம்..” என்று மீண்டும் சோபாவில் அமர்ந்தான். மகனின் முகத்தில் லேசான சிவப்பு தெரிய.. தன் மகன் இயல்புக்கு திரும்பிய சந்தோசத்தில்..
‘வேணாம்.. வேணாம் நாங்க இன்னொரு நாளைக்கே போய் பார்த்துக்கிறோம்.. நீங்க கிளம்பலாம்..” என்றார் பொய்கோபத்தோடு.
மகனும் அம்மாவும் பேசிக்கொள்வதை பூரிப்போடு பார்த்திருந்தார் ஜெயா.
‘உங்களுக்கு அரட்டையடிக்க ஆள் கிடைச்சிட்டாங்கன்னு சொல்லுங்க..” என்று சின்னதாய் சிரித்தவன்.. ‘ம்ம்.. பொண்டாட்டியோட தனியா போனா கூட நல்லாத்தான் இருக்கும்.. இல்லம்மா..? ம்ம் போய்தான் பார்க்கிறேனே..” என்று கண்ணிமைத்தவன்..
‘எங்கம்மாவோட பேசுனிங்கனா டைம் போறதே தெரியாது.. நீங்க பேசிட்டிருங்கம்மா.. ஒரு இரண்டு மணிநேரத்தில வந்திடறோம்..” என்று ஜெயாவிடம் சொல்ல.. மருமகன் தன்னை அம்மா என்றழைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட ஜெயா..
‘சந்தோசமா போய்ட்டு வாங்கப்பா..” என்றார் சந்தோசமாக.
‘வா திலகா..” என்றவன் முன்னே போக.. சூர்யாவின் பின்னே சென்ற தன் மகள் அணிந்திருக்கும் உடைகண்டும்.. வெகு நாட்களுக்கு பிறகு அவளின் நீண்ட பின்னல் அசைந்தாடும் அழகு கண்டும் சந்தோசமடைந்த ஜெயா.. ‘உங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் என்பொண்ணு பெரிய இடத்து பொண்ணுமாதிரி இருக்கா..” என்றார் பூரிப்பாக.
இருவரும் வெளியேறும் வரை அமைதிகாத்திருந்த கமலம்.. ‘ம்ம்.. பொண்ணு அழகாயிருந்து என்ன பண்ண..? என் மகனோட இணக்கமா வாழமாட்றாளே..” என்றார் வருத்தமாக.
மகளைப் பார்த்த அடுத்த நொடியே அவளின் வாழ்வுமுறையை புரிந்திருந்த ஜெயாவின் முகமும் சுணக்கத்தை காண்பிக்க.. ‘வருந்தாதிங்க.. ஒரு பொண்ணா திலகாவோட சூழ்நிலை எனக்கும் புரியாம இல்ல.. இருந்தாலும் பெரியவங்க நாமளும் இதை இப்படியே விடக்கூடாது இல்லைங்களா..?” என்றார் அனுசரனையாக.
‘எனக்கும் புரியுதுதானுங்க..” என்று கண்கலங்கிய ஜெயா..
‘என்னையும் அடிக்கக்கூடாதுன்னுட்டிங்க.. அவளைப் பொருத்தவரை தன்மையா சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டா.. நீங்களே நாலு தட்டு தட்டுங்க.. எல்லாம் சரியாய்டுவா..” என்றார்.
‘இதென்னங்க..? ஒரு கல்யாணமான பொண்ணை அடிக்கிறதை இவ்ளோ சாதாரணமா சொல்றிங்க..?” என்று கமலம் ஆச்சர்யத்தோடு கோபமும் பட..
‘என் அறிவுக்கு எட்டினதைத்தானுங்க என்னால சொல்லமுடியும்..?” என்று ஜெயா பாவமாய் சொல்ல..
‘திலகாவை யாரும் அடிக்க வேணாம்.. வாரம் ஒருமுறையாவது மகளைப் பார்க்கன்னு வந்து போய்ட்டிருங்க.. உன்மக இந்த மாசம் தலைக்குளிச்சாளான்னு அக்கம் பக்கம் இருக்கிறவங்களெல்லாம் என்கிட்ட கேக்குறாங்கன்னு திலகாகிட்ட சொல்லுங்க.. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் புரிய ஆரம்பிச்சிடும்.. கூடவே நானும் அப்பப்ப கொஞ்சம் சிடுசிடுப்பாவே காட்டிக்கிறேன்..” என்றார் கமலம்.
நிம்மதியானவராய்.. ‘ரொம்ப சந்தோசமுங்க.. நான் கிளம்பறேன்..” என்றார் ஜெயா.
தான் சொல்லுவதற்கெல்லாம் சரியென்பதாய் ஏற்றுக்கொள்ளும் ஜெயாவை கமலத்திற்க்கு மிகவும் பிடித்துவிட.. ‘இருங்க.. இருங்க.. என்ன அவசரம்..? சூர்யா வந்ததும் அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போவிங்க..” என்று அவரை தடுத்தவர்..
‘முத்து இன்னைக்கு சீக்கிரம் டிபன் செய்… சம்மந்தியை சாப்பிட வச்சிதான் அனுப்பனும்..” என்று வெகுநாள் கழித்து பழங்கதை பேச ஆள்கிடைத்ததால் வாய்ப்பை நழுவ விடாமல் சந்தோசமாய் அமர்த்திக்கொண்டார் சம்மந்தியை.