Episode 33
“அந்தி மழை பொழிகிறது...
“அந்தி மழை பொழிகிறது...
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...
ஆஆஆஆஆஆஆஆஅ....
சிப்பியில் தப்பிய நித்திலமே...”
“ப்ச்ச். ஏய் மது. நல்ல பாட்டு. எதுக்கு இப்போ இயர்போன புடுங்குன.?” என்று அவளின் கைகளில் இருந்த தனது இயர்போனை திரும்பவும் காதுகளில் வைக்கப் போன அஞ்சலியைத் தடுத்தாள் மது.
“ஏய்.. இரு நீ பாட்டு அப்பறம் கேப்பியாம். ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும்னு வந்திருக்கேன். கேக்கறியா இல்லையா.?” என்று பரபரத்தாள் மது.
“ஹூம்ம். நிம்மதியா பாட்டு கேட்டுட்டு இருந்தவகிட்ட, பேசணும்னு சொல்லிட்டு அத கேக்கறியான்னு கேட்டா எப்படி மது.? என்ன விஷயம் சொல்லு.” என்றாள் அஞ்சலி.
“இப்போ தான் அப்பா பேசினார். எனக்கும், பிரவீனுக்கும் என்கேஜ்மெண்ட் பண்ணப் போறாங்களாம். இந்த மன்த் எண்ட், வெங்கடேசன் அங்கிளும், பத்மா ஆண்டியும் சிங்கப்பூர்ல இருந்து வந்துடுவாங்களாம். அதுக்கப்பறம் ஒன் வீக் கழிச்சு பிரவீன் வந்ததும் என்கேஜ்மெண்ட்டாம்.” என்றாள் மது.
“ஹே.. சூப்பர் மது. கங்க்ராட்ஸ். சந்தோஷமான விஷயம் தானே.? அத ஏன் இவ்ளோ பதட்டமா சொல்ற.?” என்றாள் அஞ்சலி.
“இல்ல. எனக்கும், பிரவீனுக்கும் கல்யாணம்னு உறுதி பண்ணியாச்சு தான். ஆனா, திடீர்னு என்கேஜ்மெண்ட்னு சொன்னதும் ஒரே பதட்டமா இருக்கு.” என்றாள் மது வியர்க்க.
“ஹே. மது. நிஜமா நீ தானா இது. எங்க மது ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சிட்டிருந்தோம். ஆனா, இந்த விஷயத்துக்கு இவ்ளோ பதட்டப்படறியேன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.” என்றாள் அஞ்சலி நம்ப முடியாத பார்வையில்.
அதற்க்குள் ஷாலினியும், ரூபாவும் அவளோடு சேர்ந்து கொண்டு கிண்டலடித்தனர். “ஹே வாவ் மது. கங்க்ராட்ஸ். இது எந்த நீ இதுவர பரஞ்சிலல்லோ.?” என்றாள் ஷாலினி.
“இல்ல, ஷாலு. அவளுக்கே இப்போதான் அவங்க அப்பா சொன்னாராம். அதனால தான் ரொம்ப டென்ஷனா இருக்கா.” என்றாள் அஞ்சலி.
“ஓஓ.. அதுதன்னே விஷயம்.” என்றாள் ஷாலினி.
“ஏய். மது. எதுக்கு சும்மா பயந்துக்கிட்டு. நீ தாராளமா சந்தோஷப்படலாம். நல்ல வசதியான குடும்பம். மாப்பிள்ளை வேற சிங்கப்பூர்ல இருக்காரா.? கேட்கவே வேண்டாம். ஜாலியா இருக்கலாம். என்னைப் பாரு. எவன் வருவானோ.? என்ன பண்ணுவானோன்னு.? பயந்துட்டு இருக்கணும்.” என்று சொல்ல,
“ஹே ரூபா. நீ ஏன் அதப் பத்தியெல்லாம் கவலப்படற. அதப் பத்தி உன்னை கட்டிக்கப் போறவங்க தான் கவலைப்படணும்.” என்று அஞ்சலி கிண்டலாக சொல்ல, அதுவரை டென்ஷனாக இருந்த மது, சிரித்து விட்டாள். கூடவே ஷாலினியும் சிரித்தாள்.
ரூபா, அஞ்சலியை முறைத்தாள். “என்ன திமிர் இவளுக்கு.?” என்று நினைத்தாள். “எப்படியும், நெக்ஸ்ட் மன்த் தானே சொன்னாங்க. அத நினைச்சு இப்போவே ஃபீல் பண்ணிட்டு இருக்க.? ஏன் உனக்கு பிரவீனப் புடிச்சிருக்கு தானே.?” என்று அஞ்சலி சந்தேகமாகக் கேட்க,
“ஏய். அஞ்சலி. அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு பிரவீனப் பிடிக்கும். ஆனாலும், இந்த என்கேஜ்மெண்ட் அப்பறம் கல்யாணம்னா கொஞ்சம் டென்ஷனா இருக்கு. அந்த ஃபீலிங்க எப்படி சொல்றது?” என்றாள் மது.
“யாருன்னே தெரியாதவங்க வீட்டுக்கு போறதுக்கு தான் நாம ரொம்ப பயந்துக்கணும். ஆனா, உனக்கு அந்தப் பிரச்சினை எதுவும் இல்ல மது. உனக்குப் புடிச்ச மாதிரி ஃபேமிலி தான் உனக்கு வரப் போறாங்கன்னா, நீ ஏன் டென்ஷனாகனும்.? சொல்லப்போனா, நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும். ஓகே.” என்று அஞ்சலி சொல்ல, மதுவுக்கு அப்போதுதான் கொஞ்சம் பரவாயில்லை போல் தோன்றியது. அஞ்சலி திடீரென்று தன்னைப் போல் மாறி விட்டதாய் ஒரு எண்ணம் மதுவுக்கு தோன்றியது.
கண்ணை மூடித் திறப்பதற்க்குள், அடுத்த மாதத்தில் மதுவின் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தனக்கு மிக நெருக்கமான தோழன், தோழிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாள் மது.
சென்னையிலேயே நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தனர். கல்யாணம் கோயம்புத்தூரில் என்பதால், நிச்சயம் இங்கேயே நடத்த முடிவு செய்திருந்தனர். ஒரு சின்ன பார்ட்டி ஹாலில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
மினுமினுக்கும் வண்ண சேலையில் மிதமான மேக்-அப்பில் ஜொலிஜொலித்தாள் மது. கூடவே தோழிகள் மூவரும் அவளுக்கு இணையாக வேறு கலரில் சேலை கட்டி இருந்தனர். அதில், அஞ்சலி மட்டுமே தனியாகத் தெரிந்தாள்.
பிரவீன் மதுவின் சேலைக்கு இணையான கலரில் கோர்ட் போன்று உடையணிந்திருந்தான். இருவரும் பொருத்தமான ஜோடியாக சிறிய அளவில் அமைத்திருந்த மேடையில் நிற்க, அனைவரின் கண்களும் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தன.
அர்ஜூனுக்கும், ரவிக்கும் மது அழைப்பு விடுத்திருந்ததால், இருவரும் வந்திருந்தனர். அர்ஜூன் வந்ததுமே அஞ்சலி பார்த்து விட்டாள். ஒரு ஹீரோவைப் போல டிப்-டாப்பாக உடையணிந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு ஏக சந்தோஷம்.
அதே போல், வந்தவுடனேயே அஞ்சலியை அர்ஜூனின் கண்கள் தேடின. மதுவுக்கு அருகில் சேலையில் மின்னிக் கொண்டிருந்தவளைக் கண்ட போது அவனால் வேறு எந்த விஷயத்தையும் கவனிக்க முடியவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை, அவர்களுக்கே தெரியாதபடி பார்த்துக்கொண்டனர். இருவரின் கண்ணாமூச்சி ஆட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
“டேய்.. சூப்பரா இருக்குல்ல..” என்று ரவி, அர்ஜூனிடம் சொல்லிக் கொண்டிருக்க, “ஆமாடா.. சூப்பரா இருக்கா..” என்று அர்ஜூன் சொல்ல, ரவி புருவத்தை சுருக்கியவாறே, அவனைக் கிள்ளினான்.
“டேய்.. நான் எத சொல்றேன்.? நீ எதப் பார்த்துட்டிருக்க.?” என்றான்.
“உனக்குப் புதுசா சொல்லித்தான் தெரியணுமா.?” என்று அவன் சைகையால் அஞ்சலியைக் காட்ட. “ஹூம்ம். அதானே பார்த்தேன். ரெண்டு பேரும் இப்படியே பண்ணிட்டிருங்க. எப்போதான் லவ்வ சொல்லப் போறீங்க.?” என்றான் ரவி.
“இப்போ வரைக்கும் அந்த எண்ணம் வரல. ஆனா, இன்னைக்கு அவளப் பார்க்கும் போது சொல்லணும் போல தோணுது.” என்றான் அர்ஜூன்.
“தோணுது கிடையாது. கண்டிப்பா இன்னைக்கு சொல்லியாகணும். இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாத.” என்றான் ரவி.
“ம்ம்ம். பார்க்கலாம் நண்பா..” என்று அவனைக் கூட்டிக் கொண்டு மேடைக்கு சென்றான். அதுவரை அங்கே பலவிதமான பாடல்கள் பாடிக்கொண்டிருந்தன. அவன் வரும் போது,
“நீ மலரா, மலரா, மலரானால்
எந்தன் மீது பூவாசம்...
நீ மழையா, மழையா, மழையானால்
எந்தன் மீது மண்வாசம்...
உயிரே...... உயிரே.........
பிறந்தாயே, எனக்காய் பிறந்தாயே.....”
பாடல் பாடிக்கொண்டிருக்கும் போதே, அர்ஜூன் மேடையேற, அஞ்சலியும் பார்க்க அந்தப் பாடல் அவர்ளுக்கென்றே பாடியது போன்று இருந்தது. மது, அர்ஜூனையும், ரவியையும் பிரவீனுக்கு அறிமுகம் செய்தாள்.
சிறிது நேரத்தில் அஞ்சலி போனை எடுத்தவாறு, மேடையை விட்டு கீழே இறங்கினாள். அவளது அம்மா அழைத்திருக்க, பேசுவதற்க்காக சென்றாள்.
அதைப் பார்த்த ரவி, “டேய். அஞ்சலி போனை எடுத்துட்டு தனியா போறா. போ. இப்பவாது அவகிட்ட உன் லவ்வ சொல்லு. இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாத.” என்றான்.
“இரு டா. போறேன். அவசரப்படுத்தாத.” என்று அர்ஜூன் சொல்ல,
“இது உனக்கே அநியாயமா தெரியலையா டா. இது உங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனா, நீங்க ரெண்டு பேருமே பிடிகொடுக்க மாட்டிங்கறீங்க. நான் தான் ரொம்ப மெனக்கெடுற மாதிரி தெரியுது. ஒரு சான்ஸ் வந்தா அத யூஸ் பண்ணிக்கத் தெரியாதா.? அவசரப்படுத்தறேன்னு என்னை நீ சலிச்சுக்கற.” என்று சற்று டென்ஷனாகப் பேசினான்.
“சரி டா. அதுக்கு எதுக்கு நீ இப்போ டென்ஷன் ஆகற.?” என்று அர்ஜூன் சொல்ல,
“டேய், இருக்கறவன டென்ஷன் பண்ணாம போய் ஒழுங்கா பேசி லவ்வ சொல்லு. இல்லன்னா என்னமோ பண்ணு. எனக்கென்ன.?” என்றபடி அந்தப் பக்கமாக நகர்ந்தான் ரவி.
இருக்கும் டென்ஷனில் இவன் வேறு என்று நினைத்தபடி, அஞ்சலி சென்ற பக்கமாக மெதுவாக சென்றான். அவள் இன்னும் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தாள். அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவன், அவளுக்காக ஒரு ஓரமாய் நின்றான்.
அஞ்சலி பேசி முடித்து திரும்பி வரும் போது, அர்ஜூன் மெல்ல எதார்த்தமாய் வருவதைப் போல் வந்தான். அவன் வருவதைக் கண்டதும், ஏனோ அஞ்சலியின் இதயம் திடீரென்று வேகமாக துடித்தது. அவன் அருகே வரும் போது அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தான்.
“ஹாய்..” என்றான் அர்ஜூன்.
இவளும் பதிலுக்கு, “ஹாய்..” என்றாள்.
அதன் பிறகு இருவருக்கும் என்ன பேசுவது என்று குழப்பம். காதல் இருவர் மனதிலும் ஆத்மார்த்தமாய் துளிர் விட்ட காரணத்தால், வார்த்தைகள் தடுமாறின. ஆனால், பார்வைகள் ஏனோ ஆயிரம் மொழிகள் பேசிக்கொண்டிருந்தன.
ஒரு வழியாய் அர்ஜூனே ஆரம்பித்தான். “உனக்கு சாரி ரொம்ப அழகா இருக்கு அஞ்சலி. இதுதான் ஃபர்ஸ்ட் டைம் உன்ன சாரில பார்க்கறேன். உனக்கு நீயே சுத்திப் போட்டுக்கோ.” என்றதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஏன் சிரிக்கற.?” என்றான்.
“இல்ல, நீ என் தலை மேல ஐஸ் பெட்டியே வைக்கற மாதிரி எனக்குத் தோணுது. அதனால தான் சிரிச்சேன்.” என்று சொல்லி மீண்டும் சிரித்தாள்.
“ஹே.. நான் ஒண்ணும் உன்ன கிண்டல் பண்ணல. நான் நிஜமாலுமே தான் சொல்றேன். இந்த சாரில நீ ரொம்ப அழகா இருக்க.” என்று மீண்டும் அதையே தான் சொன்னான்.
“சரி. ஆனா, நானும் ஒண்ணு சொல்வேன். அத நீயும் ஒத்துக்கணும்.” என்றாள்.
“ம்ம்ம். சொல்லு.” என்றான்.
“இந்த ஃபார்மல்ஸ்ல நிஜமாலுமே ஒரு ஹீரோ மாதிரி இருக்க.” என்றாள்.
“ஏய். பாத்தியா. நான் சொல்றேன்னு நீ என்னைக் கிண்டல் பண்றியா.?” என்றான் அவன்.
“இல்ல அர்ஜூன். நிஜமாலுமே இந்த டிரஸ்ல நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க.” என்றாள் அஞ்சலி.
“சரி, சரி போதும். இந்த காம்ளிமெண்ட்ஸ்ஸ இதோட நிறுத்திக்குவோம். நான் வேற ஒரு விஷயமா உன்கிட்ட பேச வந்தேன். ஆனா, அதுக்கு பதிலா நான் வேற ஏதேதோ பேசிட்டிருக்கேன்.” என்றான்.
எதையோ எதிர்பார்த்தவளாக அவனது கண்களைப் பார்த்தாள் அஞ்சலி. ஆனால், அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை கீழே குனிந்தவாறு பேச ஆரம்பித்தான் அர்ஜூன்.
நீண்ட நேரமாக அஞ்சலியை எங்கே சென்றாள் என்று வேவு பார்ப்பதற்க்காக வந்தாள் ரூபா. இவர்கள் தனியே நின்று பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தாள். ஏதோ ஒரு பட்சி திடீரென்று அவள் மனதில் எதையோ சொல்ல, ஒரு வேகத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்க்கு வந்தவள்,
“ஏய்.. அஞ்சலி இங்க நீ என்ன பண்ணிட்டிருக்க.? அங்க மது உன்னைக் காணோம்னு தேடினா. நான் தான் உன்னைக் கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு உன்னைக் கூப்பிட வந்தேன். எங்கல்லாம் உன்னைத் தேடறது.?” அதுவரை அங்கே நின்றிருந்த அர்ஜூனைக் காணதது போல், அவனை அப்பொழுது தான் பார்த்தவாறு,
“ஓ. அர்ஜூன். நீ என்ன இங்க பண்ற.? என்ன தனியா நின்னுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க.? ரெண்டு பேரும் என்ன சிதம்பர ரகசியம் பேசறீங்களா.?” என்றாள் கிண்டலாக.
“ஹூம்ம்ம்.. எங்க ரகசியம் பேசறது.? அதான் நீ வந்துட்டியே.” என்று சொன்னபடி சலித்துக்கொண்டே அங்கிருந்து எரிச்சலில் சென்றான் அர்ஜூன்.
அவன் போவதைப் பார்த்து புருவத்தைத் தூக்கியவாறு உதட்டைச் சுழித்த ரூபா, “அப்படி என்ன அஞ்சலி ரகசியம் பேசிட்டிருந்தீங்க. அர்ஜூன் கொஞ்சம் டென்ஷனா போற மாதிரி தெரியுது.” என்றாள் ரூபா.
அவளைத் தன் கண்களினாலேயே எரித்து விடுவதைப் போல் பார்த்த அஞ்சலி எதுவும் பேசாமல் கோபத்தோடு சென்றாள். ஏதோ ஒரு வீர சாகசம் புரிந்து விட்டதைப் போல் சந்தோஷப்பட்டு “யே..யே..” என்றபடி உற்சாகமாக சென்றாள் ரூபா.
(தொடரும்...)