Episode 35
எக்ஸாம் முடிந்து வீடு திரும்பியிருந்தாள் அஞ்சலி. நேற்றுதான் வந்தாள். வரும் பொது கூட தோழிகளிடமும், அர்ஜூனிடமும் நடக்கப் போகிறவை எதையும் சொல்லாமலேயே கிளம்பியிருந்தாள். அதற்க்குள் இன்றே அவளை பெண் பார்க்க வருகிறார்களாம். என்ன சொல்லி இதிலிருந்து தப்பிக்க.? ஏன் அப்பா, சிறிதும் யோசிக்காமல் அனைத்தும் செய்கிறார் என்று எரிச்சலாக இருந்தது.
இதுவரை, தனக்கு என்ன பிடிக்கும்.? என்று கூட்த் தெரியாதவர் எப்படி எனக்கு வரப் போகும் வருங்காலக் கணவனை முடிவு செய்ய முடியும்.? ஒரு நிமிடமாவது இதைப் பற்றி தனியாக தன்னிடம் பேசியிருப்பாரா.? ம்ஹூம்ம். அவர் நினைத்த்து நடந்தால் போதும். அவ்வளவு தான்.
உன் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டிருந்தால், அப்படியாவது தனக்கு அர்ஜூனைப் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருப்பேனே. ஆனால், அனைத்தையும் தானே முடிவு செய்து விட்டு அனைத்துக்கும் தயாராக இரு என்று சொன்னால், எப்படி.?
அதிகாலை வேளையில் தன் அறையின் பால்கனியில் அமர்ந்து கார்டனைப் பார்த்தவாறு எதை எதையோ, மனதுக்குள் தன்னைப் போல பேசிக்கொண்டிருந்தாள் அஞ்சலி. அவளின் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தவள் அருகே அவரது மாமா மகேஷ் நின்றிருந்தார்.
கீழே கார்டனில் இருந்து அவளைப் பார்த்து விட்டு தான் மேலே அவளது அறைக்கு வந்தார். “ஏன் அஞ்சலி மா. ரொம்ப யோசனைல இருக்கே. என்னன்னு எங்கிட்ட சொல்லக்கூடாதா.?” என்றார்.
“சொல்றதுக்கு என்ன இருக்கு மாமா.? நான் என்ன நினைச்சாலும் எதுவும் நடக்கப் போறது இல்ல. நான் ஏன் எல்லாத்தையும் சொல்லணும்.?” என்றாள்.
“ஏன், எப்பப்பாரு இதே டயலாக்க என்கிட்ட சொல்லிட்டே இருக்க அஞ்சலி மா.? அப்போ ஹையர் ஸ்ட்டீஸ் பண்ணப் போறதுக்கு முன்னாடியும் இதே மாதிரி தான் பேசிட்டிருந்த. ஆனா, நீ இப்போ படிச்சுட்டுத்தான இருக்க. இப்பவும் திரும்ப அதையே பேசிட்டிருக்க. ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கோ. லைஃப்ல நீ நினைச்சதுதான் உனக்கு நடந்துட்டிருக்கு. ஸ்ட்டீஸ் எல்லாமே உன் இஷ்டப்படி சென்னைல பண்ணனும்னு ஆசைப்பட்ட. அதே மாதிரி தான நடந்தது. இனியும் அப்படித்தான் நடக்கும். திங்க் பாஸிட்டிவ். ஓகே..” என்றார் மகேஷ்.
“இல்ல மாமா, அதெல்லாம் வேற ஆனா, இனி நடக்கப் போறது எல்லாமே என் இஷ்டப்படி நடக்காதுன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதுக்கு அப்பா முதல்ல விடணுமே. ரெண்டு விஷயத்துல உங்க ரெக்கமெண்டேசனால எப்படியோ படிச்சு முடிச்சுட்டேன். ஆனா, இனிமேல் நடக்கப் போறது அப்படி இல்ல. அது மட்டும் அப்பா இஷ்டத்துக்கு தான் நடக்கும். ஆனா, நான் தான் அதுல வாழப் போறேன்.” என்று சலித்துக்கொண்டாள்.
முதலில் புரியாதவர், அதன் பிறகு தான் புரிந்து கொண்டார். “ஓ.. இன்னைக்கு உன்னப் பொண்ணு பார்க்க வராங்களே அதைப் பத்தி பேசிட்டிருக்கியா.?” என்று சொல்ல, அவரை முறைத்தாள் அஞ்சலி.
“ஏய். என்ன ஏன் அஞ்சலி மா முறைக்கற.? நான் என்ன பண்ணுவேன்.? உங்கப்பா தான் வரச் சொல்லியிருக்கார்.” என்றார் அவர்.
“விடுங்க மாமா, எல்லாம் தெரிஞ்சது தானே. ஏதோ எனக்கு டென்ஷன். தூக்கமும் வரல. அதனாலதான் காலாங்காத்தாலையே இப்படி உட்கார்ந்து புலம்பிட்டிருக்கேன்.” என்றவளை அதற்க்கு மேல் எதுவும் பேசி வெறுப்பேற்ற முடியாமல் அங்கிருந்து கிளம்பினார் மகேஷ்.
7 மணி வரை அப்படியே சிலை போல் அமர்ந்திருந்தவளை கவனித்தாள் பானுமதி. “ஏய்.. அஞ்சலி. என்ன இங்க உட்கார்ந்திருக்க.? நீ இன்னும் தூங்கிட்டிருக்கன்னு நினைச்சிட்டிருந்தேன்.”
“ஹூம்ம். எங்க தூங்கறது.? அதான், நேத்தே அப்பா போன் பண்ணி இன்னைக்கே என்னை பொண்ணு பார்க்க வராங்கன்னு சொல்லிட்டாரே. அப்பறம் எனக்கு எப்படித் தூக்கம் வரும்.?”
“ஏன், உனக்கு அவங்க வரது புடிக்கலையா.?” என்றார் பானுமதி.
“ஹூம்ம்ம்...” என்று ஒருபுறமாய் திருப்பிக் கொண்டாள் அஞ்சலி.
“இங்க பாரு. எனக்கு மட்டும் உங்கப்பா பண்றது பிடிக்குதுன்னு நினைக்கறியா.? கிடையாது. ஆனா, என்ன பண்றதுன்னு தெரியாம தான் நானும் எல்லாத்தையும் பொறுத்துட்டுப் போறேன். எனக்கு வேற வழியில்ல. என்ன பண்றது.? எனக்கு பழகிப் போச்சு. ஆனா, உங்க ரெண்டு பேரோட லைஃப் நல்லா இருக்கணும்னு தான் கண்டிப்பா நான் நினைப்பேன். நீ ஒண்ணும் கவலைப் படாத. இப்போதைக்கு அவங்க உன்ன பொண்ணுதான பார்க்க வராங்க. மத்தபடி வேற எதுவும் உடனே நடக்கப் போறது இல்லை. இந்த மாதிரி பொண்ணு பார்க்கற படலம் எல்லாம் உடனே கல்யாணத்துல முடிஞ்சிடறதில்ல. நீ அந்தப் பையன் கிட்ட பேசு. அவன உனக்கு பிடிக்குமான்னு எனக்கு சந்தேகம் தான். ஏன்னா..” என்று இழுத்தவரை, அவள் அப்படியே சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தாள்.
“சரி, அதுதான்.. அதனால, உன் மனசுல என்ன தோணுதோ அதையே நீ எல்லார் முன்னாடியும் சொல்லிடு. ஏன்னா, உங்கப்பாவுக்கெல்லாம் தனியா சொன்னா தாம், தூம்னு குதிப்பார். இதே, சபைல சொன்னா எதுவும் பண்ண முடியாது. அதனால, நீ எதைப்பத்தியும் கவலப் படாம தைரியமா இரு. என்ன.?” என்று அவள் தாடையில் கை வைத்துக் கொஞ்சினார்.
“ம்ம்.. சரி..” என்று அம்மாவை அமர்ந்த நிலையிலேயே கட்டிக் கொண்டாள். அவரும் அவளின் அணைப்பை ஏற்றவாறு அவள் தலையைக் கோதி விட்டார்.
“சரி, சரி. உங்கப்பா எப்ப வேணும்னாலும் போன் பண்ணுவார். நீ எதுக்கும் குளிச்சு ரெடியா இருந்துக்கோ. உங்கப்பா சொன்னதும் உன்ன ரெடி பண்ணணும். சரியா.?” என்றபடி நகர்ந்தார் அங்கிருந்து.
அவர் சொன்னது போலவே ரகுராம் சரியாக ஒன்பது மணிக்கு போன் செய்தார். பத்து மணிக்கெல்லாம் வந்துவிடுவோம், அஞ்சலியை ரெடியாக்குங்கள் என்று. பானுமதியும், மீனாவும் அஞ்சலிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். அருகே அமர்ந்து பூஜாவோ அஞ்சலிக்கு என்னென்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர் சொன்னபடியே பத்து மணிக்கெல்லாம் அனைவரும் தயாராக வந்து காரில் இறங்கினர். மொத்தமாக பத்து பேர் இருந்தனர். வந்தவுடன் அனைவருக்கும் சூடான காபியும், சிறிது வடையும் பறிமாறப்பட்டது. அனைவரின் எதிர்பார்ப்பும் பெண்ணை எப்பொழுது அழைத்து வருவார்கள் என்றுதான்.
அதற்க்குள் வருணும், பூஜாவும் மாப்பிள்ளையான நிரஞ்சனைப் பார்த்து ஏதோ கிசுகிசுத்துக்கொண்டு இருவரும் அஞ்சலியின் அறைக்கு ஓடினர்.
“அக்கா, மாப்பிள்ளைய நாங்க பார்த்தோம். வந்ததுல இருந்து ஒரே போனும், கையுமாவே இருக்காரு. யாரையுமே பார்க்கல.” என்று சொல்லிக்கொண்டிருந்தான் வருண்.
“அக்கா, எனக்கு ஏனோ அந்த மாப்பிள்ளைய புடிக்கல. உனக்கும் புடிக்குமான்னு தெரியல.” என்றாள் பூஜா.
“ஏய். சும்மா இரு வாயாடி. அப்படில்லாம் சொல்லக் கூடாது. நீ வா அஞ்சலி போலாம்.” என்றபடி சொன்னாள் மீனா.
அவர்கள் சொன்ன நேரத்தில் அவளை மணப்பெண் போல் அலங்காரம் செய்து கூட்டிக்கொண்டு சென்றனர். உள்ளுக்குள் அஞ்சலிக்கும் ஏனோ ஒரு மாதிரி தான் இருந்தது. சின்னப் பிள்ளைகள் அவர்கள் மனதில் இருப்பதை பேசுவதற்க்கு இருக்கும் உரிமை கூட, நமக்கு இல்லையே என்று தோன்றியது அவளுக்கு.
அங்கே சென்றதும், அனைவரிடமும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தாள். தேவதை போல் மின்னிய அவளை, நிரஞ்சன் தன் பார்வையாலேயே அளவெடுத்தான். பிறகு, அவன் அப்பாவிடம் ஏதோ கூற அவரும் பேசினார்...
“நாம பேசினது இருக்கட்டும். கல்யணம் பண்ணிக்க போறவங்க இன்னும் பேசினது கூட இல்ல. அதனால, அவங்க ரெண்டு பேரும் போய் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வரட்டும்..” என்றார்.
இருவரும் அனைவர் சம்மதத்துடன் மேலே இருக்கும் ஹாலின் பால்கனிக்கு பேசச் சென்றனர். கூட மீனா செல்ல, அவள் சிறிது தள்ளி நின்று கொண்டாள். இருவரும் சென்றதும், தயங்கிய அஞ்சலியைப் பார்த்ததும், முதலில் நிரஞ்சனே ஆரம்பித்தான்.
“ஹாய். ஐ ஆம் நிரஞ்சன். ஐ தின்க் யூ ஃபீல் ஷை. சோ, ஐ வில் ஸ்டார்ட். ஆக்சுவலி ஐ தாட் டூ டாக் டூ யூ பிஃபோர். பட், ஹேவ் நோ டைம்.” என்று அவன் பீட்டர் கணக்கில் இங்கிலீஷில் பேசிக்கொண்டிருக்க, பொறுமை இழந்தவளாய் அஞ்சலி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அவன் அப்போதே புரிந்து கொண்டான், இவளுக்கு நாம் இப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்று. அதனால், தமிழிலேயே பேச ஆரம்பித்தான்.
“ஓகே, சாரி. நான் ஆஸ்ட்ரேலியால தான் இருக்கேன். அங்கயே பிஸினஸ் அது, இதுன்னு ரொம்ப பிஸி. இந்தியா வரதே ரொம்ப ரேர். ஆக்சுவலி நீங்க எனக்குப் பார்த்த பொண்ணு இல்லன்னு சொன்னாங்க. உங்க அக்கா யாரையோ மேரேஜ் பண்ணிக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். இட்ஸ் ஓகே. நீதான் என் வைஃப்பா வரணும்னு இருக்கு. எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல. உனக்கு ஓகேன்னா சொல்லு.” என்று ஏதோ வியாபாரம் பேச வந்தவனைப் போல் பேசினான். முதன் முறை சந்திக்கிறோம், இப்படி ஒருமையில் பேசுவது அஞ்சலிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அவள் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள். நிரஞ்சனின் பார்வையோ அவளை முழுதாக அளவெடுத்துக் கொண்டிருந்தது. திடீரென்று அவனைப் பார்த்தவள் இதைப் பார்த்து விட்டாள். அவளுக்கு அப்போதே உடம்பெல்லாம் கூசியது.
ச்சே.. என்ன இவன் பார்வையே சரியில்லை. இவனோடு என் திருமணமா, என எண்ணும் போது அவளால் அதை நினைத்தே பார்க்க முடியவில்லை.
மொத்தத்தில் அவர்கள் பேசச் சென்ற அரை மணி நேரத்தில் அவன் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான், அவள் ஏதோ இரண்டு வார்த்தைகள் தான் பேசியிருப்பாள். அவனை அவளுக்குப் பிடிக்கவே இல்லை. இதை எப்படி தான் சொல்ல முடியும்.? என உள்ளுக்குள்ளயே புழுங்கிக்கொண்டிருந்தாள்.
இருவரும் கீழே வந்தனர். வரும் போதே மீனா, “என்ன அஞ்சலி, உனக்கு மாப்பிள ஓகே வா.? பிடிச்சிருக்கா.?” என்று காதில் கிசுகிசுத்தபடி வந்தாள். அஞ்சலியோ எதுவும் சொல்லாமல் உம்மென்று வந்தாள். மகேஷூக்கும், பானுமதிக்கும் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்பதை அவளின் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டனர்.
அவளது அப்பா ரகுராமோ, புதிதாக இருப்பதால் சிறிது பயத்தில் அவள் அப்படி இருப்பதாய் சொல்லி அனைவரிடமும் சமாளித்தார். பானுமதிக்கே கோபம் வந்து விட்டது. அதை வெளிக்காட்ட முடியாமல் அமைதியாக இருந்தார்.
அஞ்சலி வந்ததும், “அஞ்சலி மா. இதுதான் நேரம். உன் மனசுல என்ன இருக்கோ, அதை அப்படியே சொல்லிடு. இல்லன்னா உங்கப்பா அப்படியே சமாளிச்சுடுவார்.” என்று மெதுவாய் அவள் காதில் ஓதினார் பானுமதி.
“என்னடா.? இப்போ திருப்தியா.? பேசிட்டியா.? எல்லாம் ஓகே தான.? அஞ்சலிய உனக்கு பிடிச்சிருக்கு தானே.?” என்றார் நிரஞ்சனின் அப்பா.
அவன் சிரித்துக்கொண்டே, “ம்ம். யா. ஓகே. ஐ லைக் ஹெர்.” என்றான் ஒரே வார்த்தையில்.
“அப்பறம் என்ன, மாப்பிள்ளையே ஓகே சொல்லியாச்சு. இனி, அடுத்து என்ன பண்ணனுமோ பண்ணிடலாம் தானே.?” என்று அவசரப்பட்டார் ரகுராம்.
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்களே. மாப்பிள்ளையை மட்டும் கேட்டவர்கள், கூட சேர்ந்து வாழப் போகும் பெண்ணையும் கேட்க வேண்டும் என்று ஏன் எவருக்கும் தோணாமல் போனது.? என்று எரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
ரகுராம் அடுத்து நிச்சயாதார்த்தம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். பானுமதி அவளை இடித்தபடி, “சொல்லு. ம்ம்..” என்றார்.
ஒரு நிமிடம் கண்களை மூடி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அப்பா, ஒரு நிமிஷம்..” என்றாள்.
அப்போது வரை வாயே திறக்காத பெண் இப்போது என்ன சொல்லப் போகிறாள்.? என்று ஒட்டுமொத்த கூட்டமும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது.
(தொடரும்...)