பாகம் - 5
இடம்: பார்க்கிங்/Barking
நேரம்: பொன்னான நேரம்
காரில் செல்லும் போது, என்னைப்பற்றி, என் குடும்பம், லண்டன் வந்த காரணம், எல்லாத்தையும் கேட்டு தெரிந்துகொண்டான்.
அர்ஜூன்-க்கு சொந்த ஊரு ஈரோடு, அவங்கப்பா கோழிப்பண்ணைகள் வைச்சிருக்காங்க. அம்மா பள்ளி ஆசிரியை. வீட்டுக்கு ஒரே பையன். பிசியோதெரபி முடிச்சிட்டு, 2 வருசமா, இங்க என்.ஹெச்.எஸ்யில் வேலை பார்க்கிறான்.
இல்போர்ட்/ILFORD ல ஸ்டுடியோ பிளாட் எடுத்துத் தங்கியிருக்கான். அவனும், என்னை மாதிரியே அம்மா கூப்பிடறாங்களேன்னு ‘பிரதோஷம்’ போவானாம். எப்பவெல்லாம் அம்மா நியாபகம் வருதோ அப்போதெல்லாம், இங்க கோயிலுக்கு போவானாம்.
‘’ வலியோடு தனியா எப்படி சமாளிப்ப! என் வீட்டுக்கு வா, நான் பார்த்துக்கறேன்.’’ என்றான் அக்கறையுடன்.
‘’இல்ல. கடையில் வேலை பார்க்கிற மீனாக்கா, நைட் கடையை பூட்டிட்டு வரேன்னு சொன்னாங்க. பிரச்சனை இல்லை. பார்த்துக்குவேன்’’ என்றேன்.
‘’உன் வலி எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரியும். சொன்னாக் கேளு’’
‘’இல்லை, அந்தக்காகிட்ட வரச் சொல்லிட்டேன். எதாவது உதவி வேணும்ன்னா கடையில் இருக்கறவங்ககிட்ட கேட்டுக்கறேன்.’’
‘’அப்புறம் உன்னிஷ்டம். பாதியில் விட்டிட்டு போய்ட்டேன்னு பின்னாடி திட்டக்கூடாது’’ என்றான்.
‘’ஹலோ… ஹலோ, என்ன? ரொம்ப பேசறீங்க? நீங்க தெரபிஸ்ட், நான் பேஷண்ட், ரெண்டு பேரும் தமிழ்ங்கிறதாலயும், நான் நடக்க கஷ்டப்படுறதாலும் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடறீங்க. அவ்வளவுதான்’’ என்றேன்.
காரை சடன் பிரேக் அடித்து, ‘’அவ்வளவுதானா?’’ என்றான் அர்ஜூன்.
மனசு எத்தனையோ சொல்லத் துடிக்குது. ஆனா புத்தி எதையோ தடுக்குது.
அதன் பிறகு, வீடுவரும்வரை யாரும் பேசவில்லை. காரை நிறுத்தியபிறகு என் பக்க கதவை திறந்திவிட்டு,
‘என் பேஷண்ட் யாரா இருந்தாலும் இப்படித்தான் கைதாங்கலா கூட்டி போவேன். அதனால நீயும் என் கையைப் புடிச்சே நடக்கலாம்’’ என்றான்.
அவனை காயப்படுத்தியிருக்கிறேன் என்பது தெளிவாக புரிந்தது.
வீட்டுக்குள் சென்றதும், ‘’நான் சோபால படுத்துக்கிறேங்க. அதுதான் எனக்கு வசதி’’ என்றேன்.
என் படுக்கையறை எதுவெனக்கேட்டு, உள்ளே சென்று இருதலையனைகள் எடுத்துவந்து, சாய்வதற்கு வாகாக வைத்தவன், ‘’நானும் எங்க வீட்டில் எப்பவும் சோபாலதான் தூங்குவேன். நைட் டி.வி பார்த்துக்கொண்டே சோபால சாஞ்சு தூங்கறது சுகமா இருக்கும்’’ என்றான்.
நான் எதுவும் பேசாமல், அவன் அக்கறையை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
‘’டிரஸ் மாத்திக்கிறியா? படுக்கறதுக்கு சுலபமா இருக்கும்?’’
‘’இல்லங்க… இதுவே ஓ.கேதான்.
வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி என் அருகே வைத்தவன், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், எதிரே இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தான். அங்கு சில நிமிடங்கள் மெளனம் மட்டுமே ஆட்சி செய்தது.
‘’வேற எதாவது வேணுமா?’’ என்றான்.
‘’இல்லங்க, தூக்கம் வருது, படுக்கப்போறேன்.’’
‘’கீழ்வீட்டில் தமிழ் குடும்பம் இருக்குன்னு சொன்னியே? அவங்களைக் கூப்பிட்டு சொல்லவா?’’
‘’வேண்டாங்க… அவங்களே ரெண்டு குட்டிப் பசங்களை வைச்சிட்டு, சமாளிக்க முடியாம கஷ்டப்படுவாங்க’’
‘’சரி..நான் கிளம்பவா?’’
‘’ம்ம்’
அவன் கதவருகில் செல்லும் போது,
‘ஏங்க’’ என்றழைக்கவும் திரும்பி பார்த்தான்.
‘’எனக்கு ரூட் போடறீங்களா?’’
ஒரு பார்வை மட்டும் தந்தான். அதன் அர்த்தம் ‘ஏன், உனக்கு தெரியாதா? என்பதாகும்.
‘’எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு’’ என்றேன்.
‘’பைன்’’ என்றபடி கதவை அறைந்து சாத்திவிட்டுச் சென்றான்.
காதல் வளரும்