Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! - 07

Advertisement

அத்தியாயம் ஏழு:

காலை வேளை அமைதியாய் கழிந்திட, ஒண்டிவீரர் தங்கள் நகைக்கடைக்கு முன்புபோல சென்றுவிட்டார். இரு பேரன்களின் நல்வாழ்வுக்காக வேண்ட சிவகாமி கோவிலுக்கு சென்றுவிட, தங்கம் மதிய சமையலுக்கு ஆயத்தமானார்.



காண்டீபன் அவன் காதல் கன்னிகையை காண புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் சத்தியராஜன் வீட்டுக்கு வர, “அடிக்கடி பள்ளிப்பாளையம் பக்கம் போறீங்க போல” என்றான் பேரின்பன். திடுக்கிட்டு நின்றார் சத்தியராஜன். வேகமாய் சுற்றும் முற்றும் அவர் நோட்டமிட, அவர் எண்ணம் உணர்ந்தவனாய், “யாரும் இல்லை” என்றான் இன்பன்.



நின்று அவனை முறைத்தவர், திரும்பி போக பார்க்க, “தாத்தாக்கு விசயம் போய்டுச்சு!!” என்றான்.



“என்ன? என்ன? எந்த விஷயம்?” சத்தியராஜன் படபடக்க, “நீங்க மூணு நாளா மதிய நேரம் கடைல இருக்கிறது இல்லங்குற விஷயம்!” என்றான் இன்பன். சத்தியராஜன் சற்றே ஆசுவாசப்பட, “ரொம்ப தேடாதீங்க! கிடைக்க மாட்டாங்க” என்றான் இன்பன்.



அவனை உறுத்து விழித்தபடி சற்றே பீதி கலந்த பார்வையோடு அவர் நிற்க, மௌனமாய் அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டான் பேரின்பன்.



டுக்களைக்குள் அவன் செல்ல, சில வேலையாட்களுடன் தங்கமும் கோகிலாவும் பேசிக்கொண்டே சமையல் வேலையை கவனிப்பதை பார்த்தவன், ‘என்னைத் தவிர எல்லார்க்கிட்டயும் பேசுவா இவ!!’ என சலித்துக்கொண்டே, “என்ன சமையலோ!? ஆஹான், என்ன சமையலோ?” என பாட்டு பாடியபடி சமையல்மேடையில் ஏறி அமர்ந்தான் இன்பன்.



“டேய், வேகமா உட்காராதடா! ஒரு மாசத்துக்கு கொஞ்சம் அடங்கி இரு” என்றார் தங்கம்.



கூடையில் கிடந்த ஆப்பிளை தூக்கிப் போட்டு பிடித்தபடி, “இது வைரம் பாய்ஞ்ச கட்டை அத்தே! இன்னும் பல கத்திக்குத்துக்கூட தாங்கும்!!” என இன்பன் சொல்ல, அங்கிருந்த அத்தனை ஆட்களும் ஸ்தம்பித்து நின்று போயினர். அதை உணராதவன், “என்ன சமையல் அத்தே மதியம்?” என்றான் இயல்பாய்.



பதில் வராததால் அவன் யதார்த்தமாய் திரும்பி பார்க்க, தங்கம் அங்கே அசையா சிலையென நிற்ப்பதையும், கோகிலா கேள்வி தாங்கிய விழிகளோடு இவனையே கூறிடுவதையும், வேலையாட்கள் கூட அதிர்ந்து நிற்ப்பதை கண்டவன், தான் சொன்ன வார்த்தையின் வீரியத்தை உணர்ந்து விக்கித்து போனான்.



‘அடுத்து என்ன சொல்லி சமாளிப்பது?’ என்ற யோசனை அவனுக்குள். நிலவிய அமைதியை குலைப்பதற்க்கென கூடத்தில் இருந்த மணிக்கூண்டு பத்து மணி ஆகிவிட்டதை ஓசையெழுப்பி பறைசாற்ற, “நான் மில்லுக்கு கிளம்புறேன்!! ஏற்கனவே ஒரு வாரம் லீவ் போட்டுட்டேன்! இனி பொண்டாட்டி வந்தாச்சு, உருப்படியா சம்பாதிக்கனும்ல?” என்றான் அவன்.



அவன் எதிர்ப்பார்த்ததை போல தங்கம் கோவத்துடன், “உடம்பு இருக்க நிலைமைக்கு வேலைக்கு போறியா? ஒழுங்கா வீட்ல உட்காரு, இல்லனா தாத்தாக்கிட்ட சொல்லிடுவேன்!!” என்று கரிசனமாய் மிரட்ட, “நான் நல்லா இருக்கேன்த்தே! வீட்லயே இருந்து சோபையா இருக்கு! அப்படியே போய் என் கிளிங்களை பார்த்துட்டு வரேன்” என்றான்.



தங்கம் அப்போதும் அவனை போகக்கூடாது என அதட்ட, “விவசாய ஆபிஸ்ல இருந்து கூப்பிடுட்டே இருக்காங்கத்தே! அவங்களை ஒரெட்டு போய் பார்த்துட்டு வந்துடுறேன்” என்றான்.



தங்கம், “அவங்க எதுக்கு கூப்புடுறாங்க?”



“அது...! நம்ம சோளக்காடு சும்மாவே கடக்குதுல பல வருஷமா!? அதுல பயிறு போட்டு நான் விவசாயம் பண்ணனும்ன்னு என் பொண்டாட்டிக்கு ஆசை! எனக்கே தெரியாம விவசாய ஆபிஸ்க்கு மண்ணு டெஸ்ட் பண்ண அனுப்பிருக்கா! இப்போ அதுல என்ன என்ன பயிரிட முடியும்ன்னு சொல்றதுக்காக என்னை கூப்பிட்டுட்டு இருக்காங்க!!” என்றான் அவன், ஓரக்கண்ணில் கோகிலாவை நோட்டமிட்டபடி.



கேரட் துருவுவது மட்டுமே என் தலையாய பணி என குனிந்துக்கொண்டு நிற்ப்பவளின் முகத்தில் இருந்து எந்த உவகையும் அவன் கண்ணில் சிக்கவில்லை.



“அதுல என்னத்த வளர்க்க முடியும்? பல வருஷமா பட்டுப்போய் கடக்குற நிலமாச்சே!!” என்றார் தங்கம்.

அதை ஆமோதித்தவன், “என்ன சொல்றாங்கன்னு கேட்டு தான் பார்ப்போமே! என் பொண்டாட்டி ஆசைக்காக!!” என்றான் அவளையே ஆவலாய் பார்த்தபடி.



கல்நெஞ்சக்காரி! அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை!!



“ஹும்ம்! நான் கிளம்புறேன் அத்தே!! அப்டியே மில்லுக்கும் போயிட்டு வரேன்” என்றான் இன்பன் அங்கிருந்து சென்றபடியே.



வாசல் வரை சென்று, ‘வேலை செய்யக்கூடாது, வெயிட் தூக்கக்கூடாது’ என பல முறை உபதேசித்து அவனை வெளியே செல்ல அனுமதித்தார் தங்கம். நொடிப்பொழுதில் பேச்சை மாற்றிவிட்ட அவன் வாய்ஜாலத்தை கண்டு, ‘எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்குறேன்’ என கருவிக்கொண்டாள் கோகிலா.



அவனை வழியனுப்பிவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் வந்த தங்கத்திடம் மெதுவாய் பேச்சுக்கொடுத்தாள் கோகிலா.



“சித்தி...!? ஏன் சோளக்காட்டுல மட்டும் விவசாயம் பார்க்காம அப்படியே விட்டுட்டீங்க? கிட்டத்தட்ட மூணு ஏக்கர் நிலமாச்சே?” என்றாள்.



“அது....!!” என தயங்கியவர், “எங்க அண்ணி இருந்த வரைக்கும் அதுல அண்ணன் வெள்ளாமை பார்த்துட்டு தான் இருந்துச்சு!! அண்ணி போனதும் விட்டுட்டாங்க” என்றார்.



“அதான்... ஏன்?” கோகிலா விடாது கேட்க, அருகே இருந்த இரு வேலையாட்களிடம் வேறு வேலை சொல்லி வெளியே அனுப்பி வைத்தார் தங்கம்.

அவர்கள் சென்றதும், “சொல்லுங்க சித்தி?” என அவரை ஊக்கினாள் கோகிலா.



“அண்ணன் அண்ணியை சோளக்காட்டுல தான் எங்கப்பா தனி குடித்தனம் அனுப்பினாருன்னு சொன்னேன்ல? அப்போ அந்த நிலம் முழுக்க அண்ணன் பொறுப்புல தான் இருந்துச்சு, அண்ணனுக்கும் விவசாயம் ரொம்ப பிரியங்குறதால அந்த நிலத்துல மத்த தொழில் போக, ஆள் வச்சு வெள்ளாமையும் பார்த்துட்டு இருந்தாரு!!” என்றார் அவர்.



“அப்பறம் என்னாச்சு சித்தி?”



“ஒவ்வொரு வருஷ தீபாவளிக்கும் எங்கப்பா எல்லாருக்கும் ஏதாவது பரிசு கொடுப்பாரு! அந்த வருஷம் எங்க எல்லா கடைலயும் லாபம் எதிர்ப்பார்த்ததை விட அதிகமா வர, எங்க சொத்துல இருந்து, ஆளுக்கு ஒரு இடத்தை அவங்க பேருக்கே ரெஜிஸ்டர் செஞ்சு குடுக்க முடிவு பண்ணாரு!!”



“....”



“அதுப்படி எல்லாருக்கும் ஒவ்வொரு இடத்தை எழுதி கொடுத்த அப்பா, இன்பனுக்கு ஐஞ்சு வயசு தான் ஆகிருந்ததால, அவனோட பதினெட்டு வயசானதும் ‘சோளக்காட்டு’ நிலம் அவன் பேருக்கு போறமாறி பத்திரம் போட்டாரு! இதுல அண்ணனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை”



“சத்தியராஜ் மாமாக்கா?”



“ம்ம்ம்... ஆமா!! இன்பனோட நேரமா இல்ல விதியான்னு தெரியல! அறுவடைக்கு செழிச்சு நின்ன பயிரெல்லாம் ராவோட ராவா எரிஞ்சு சாம்பலா போச்சு!! எப்படி தீ பிடிச்சுதுன்னே யாருக்கும் தெரியல!! ஆனா, அண்ணனுக்கு மட்டும், இந்த நிலம் இன்பனுக்கு வந்ததால தான் உருப்படாம போச்சுன்னு எண்ணம்!! அதுக்குபிறகு அங்க விவசாயங்குற பேச்சே இல்லை, ராசியில்லாத நிலம்னு முத்திரை குத்திட்டாங்க” என்றார் அவர்.



கேட்டவளின் உதடுகள், ‘புல்ஷிட்’ என்றது ஆத்திரமாய்.



“எது நடந்தாலும் அதுக்கு இன்பன் தான் காரணமா? எல்லாத்தையும் தட்டிக்கேக்குற தாத்தா எப்படி இதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லாம இருக்காங்க?” என்றாள் கோவத்துடன்.



“செல்லம் ஓடி போனது, என் கல்யாணம் நின்னது, அண்ணி இறந்தது, என் புருஷன் இறந்தது எல்லாம் அடுத்தடுத்த அடி!! சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்குற மனநிலைல யாருமே இல்லை! நடக்குறதை கவனிச்சப்போ எல்லாம் கை மீறி போய்டுச்சு! என்ன சொல்லியும் சரிப்பண்ண முடியல கோக்கிமா!” என்றார் இயலாமையுடன்.



அவர் சொன்னதை அவளால் முழுதாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனும்போதும் அப்பேச்சை மேலும் தொடராது, “அப்போ அந்த நிலம் இன்பன் பேருல தான் இருக்கா?” என்று கேட்டு, ‘ஆம்’ என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள்.



ங்கிருந்தோ கோகிலாவின் கைபேசி ஒலி மெதுவாய் கேட்க, “சித்தி, என் போன் ரிங் ஆகுது, நான் போய் பார்த்துட்டு வரேன்!!” என்று நறுக்கிக்கொண்டிருந்த காய்களை அவர் பொறுப்பில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றாள் கோகிலா.



அறைக்குள் மெத்தையின் மேல் கிடந்த கைபேசியை அவள் எடுக்க, திரையில் மின்னியது, ‘அம்மா’ என்ற எழுத்துக்கள்.

பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றாள். அழைப்பை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற பெருந்தயக்கம்.



அதற்குள் அழைப்பு ஒலி நின்றுவிட, “எதுக்கு கூப்புடுறாங்கன்னு தெரியலையே!?” என்று குழம்பினாள்.



மீண்டும் அவரிடம் இருந்து அழைப்பு வர, ‘போன் எடுக்காம இருக்கக்கூடாது! என்னனு கேட்டுடுவோம்!’ என்ற எண்ணத்தோடு அழைப்பை இயக்கி காதுக்கு கொடுத்தாள் கோகிலா.



“ஹலோ, கோகிமா!! எங்க என்கிட்டே பேசாம போய்டுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்டா!” செல்லம் பரிதவிப்பாய் பேச, அவர் உணர்வுகள் புரிந்தாலும் அது அவளை பெரிதாய் தாக்கிடவில்லை.



“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க” என்றாள் நேரிடையாய்.



சில நொடிகள் நிலவிய அமைதியின் பின்னே, “நீ போன் எடுத்ததே எனக்கு சந்தோஷம், இதுக்கு மேல நாங்க உங்கிட்ட பெருசா எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாது! அதுக்கு எங்களுக்கு தகுதியும் இல்லை!!!” என்றார் செல்லம் விரக்தியுடன்.



“....”



“சொல்ல வந்ததை சொல்லிடுறோம் கோகிமா!! பெத்தவங்க மேல நம்பிக்கை வச்சு மாப்பிள்ளை தேர்ந்தெடுக்குற பொறுப்பை நீ எங்கக்கிட்ட விட்ட, ஆனா நாங்க உனக்கு பாத்த மாப்பிள்ளை இப்படி ஒரு கேடுகெட்டவன்னு தெரியாம போச்சு... கடவுளா பார்த்து தான் இன்பனை உனக்கு அனுப்பிவச்சுருக்காரு”



“....”



பெருமூச்சு விட்டவர், “கிஷோர் மேல இருந்த கேஸ் இன்னைக்கு ஹியரிங் வந்துச்சு! போலிஸ் அவன்மேல சுமத்துன எல்லா குற்றமுமே உண்மைன்னு நிரூபணமாகி அவனுக்கும் அவன் கூட்டாளிங்களுக்கும் பத்து வருஷ ஜெயில் தண்டனைன்னு சொல்லிட்டாங்க!!” என்றார்.



“....”



“லலிதா தான் ரொம்ப பாவம்! அழுது அழுது ஒரு வழி ஆகுறா! அவளுக்காக மேல்கோர்ட்ல திரும்பி அப்பீல் பண்ணலாம்ன்னு சிவகுரு அண்ணன் வக்கீல்க்கிட்ட பேசிட்டு இருக்காரு! எத்தனை மேல்முறையீடு செஞ்சாலும் தண்டனை குறையவோ, ஜாமீன் கிடைக்கவோ வாய்ப்பே இல்லன்னு பேசிக்குறாங்க!” என்றார்.



“இப்போ எதுக்கு இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்க?” வெகு அமைதிக்கு பின் வாய் திறந்தாள் கோகிலா.



“சொல்லனும்ன்னு தோணுச்சு கோகிலா! ஒருவேளை இன்பனை நீ சந்திக்காம இருந்துருந்தா இந்நேரம் இவனை தான் உனக்கு நாங்க கட்டி வச்சுருப்போம்! அப்படி மட்டும் நடந்துருந்தா உன் வாழ்கை என்ன ஆகிருக்கும்? நினைக்கும்போதே அடிவயிறு சுருக்குன்னு இழுக்குது!!” என்றவர், “மன்னிச்சுடும்மா!! நிறைய தப்பு பண்ணிட்டோம்! மன்னிச்சுடு!!” என்றபோது அவர் குரல் அழுகையின் சாயலை அப்பட்டமாய் காட்ட,



“விடுங்க, நான் நல்லா தானே இருக்கேன்” என்றாள் கோகிலா.



“நல்லா இருக்கனும்டா, நீ ரொம்ப நல்லா இருக்கணும்! கல்யாணத்தன்னைக்கு இன்பன் இருக்கக்கூடாதுன்னு உங்க அப்பா தான் ஆள் வச்சு அவனை கடத்தினாரு! எங்க பொண்ணு வாழக்கையை நாங்களே குழிதோண்டி புதைக்க பார்த்துருக்கோம் பாத்தியா? இதுக்கெல்லாம் எங்களுக்கு மன்னிப்பே கிடையாது!!” செல்லம் அழுகையோடு பேச,



‘அப்பாவா இப்படி செய்தது?’ என அதிலேயே கோகிலாவின் எண்ணம் தடைப்பட்டு நின்றுபோனது. அதன் பின்னே செல்லம் பேசியதோ, அவளிடம் இருந்து பதில் வராததால் அவர் அழைப்பை துண்டித்து விட்டதோ அவளை அசைக்கவில்லை.



‘அப்பாவா மாமாவை கடத்துனது?’ என்றது மட்டுமே அவளை சுற்றியது. வெகு நேரம் அதே நினைவிலேயே இருந்தவள், “கடத்திட்டு போக அவன் ஒன்னும் குழந்தை இல்லையே? பத்து பேரு வந்து நின்னாலும் அவங்களை எதிர்த்துட்டு என்னை தேடி வந்துருக்கனும்ல? தம்பிக்கு ஒன்னுன்னதும் என்னை அம்போன்னு விட்டுட்டு கிளம்புனவன் தானே? அவன் மேல இருக்க கோவம் எனக்கு போகவே போகாது!!” என வாய்விட்டே சொல்லிக்கொண்டவள், அவளை விட்டு விலகி ஓடத்துடித்த கோபத்தை இறுக்கி முடிந்துக்கொண்டாள்.


“எனக்கு அவன் மேல கோவம் தான்!!!” என அழுத்தமாய் சொல்லிக்கொண்ட பின்பே அவளால் இயல்பாய் அடுத்த வேலையை பார்க்க முடிந்தது.



‘இக்கட்டான நிலையில் கரம்பிடிக்க வேண்டியவளை கைவிட்டு செல்லுமளவு அப்படி என்ன தம்பியின் மீது பாசம்? என்னைவிட அவனுக்கு வேறொருவர் தான் அதிமுக்கியமானவரா?’ என்ற உரிமை எண்ணம் அவளுக்கு...



இன்பனிடம் தன் சினத்தின் காரணத்தை அவள் வாய்மொழியாய் சொல்லிவிடவில்லை என்றாலும் அவனால் அதை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. அதில் நியாயமும் இருப்பதாய் தோன்றியதாலேயே இன்பன் கோகிலாவை வார்த்தைகளால் சமாதானம் செய்யாமல் சீண்டிக்கொண்டிருக்கிறான்.



விவசாய ஆபிஸில் இருந்து குறிப்புகளை பெற்றுக்கொண்ட இன்பன், மில்லை நோக்கி சென்றான். மதிய நேர உணவு இடைவெளி என்பதால், அவனது கிளிகள் எப்படியும் அவர்களின் ஆஸ்த்தான அரசமரத்தடியில் தான் இருப்பர் என்பதை அறிந்து நேரே அங்கே சென்றான்.



அவன் எண்ணம் போல, மரத்தடியில் சுகமாய் படுத்து காற்று வாங்கிக்கொண்டே, “அண்ணன் இல்லாம நேரமே போக மாட்டுது, இல்லடா?” என்றான் வெட்டுக்கிளி.



“க்கும் டா! அண்ணனை பார்க்காம நாளே நகரமாட்டிங்கு! பேசாம அவர் வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்கலாமா?” என்றான் பச்சைக்கிளி.



“என்னத்துக்கு? காண்டண்ணன் ரெண்டு நாளு நம்மளை கட்டிவச்சு டின்னு கட்டுனது போதாதா?” என்றான் வெட்டுக்கிளி. பச்சைக்கிளியின் கைகள் தன்னை போல வீங்கியிருந்த கன்னத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டது.



“நேத்து, இந்த கனகா புள்ள எங்க வீட்டுப்பக்கம் வந்துச்சுடா! சரி நூலைவிட்டுப்பாப்போமேன்னு ஆசையா ஒரு பாட்டு பாடுனேன்டா, ரெண்டே வரிதாண்டா பாடுனேன்! கன்னாப்பின்னான்னு சிரிச்சுட்டு போற! அநேகமா ஆவணில எனக்கு கல்யாணம் முடிஞ்சுடும்ன்னு நினைக்குறேன்!” வெட்டுக்கிளி கனவில் பறந்துக்கொண்டே சொல்ல,



“அப்படி என்னடா பாடுன? எனக்கும் சொல்லேன்!!” என மிக ஆர்வமாய் கேட்டான் பச்சைக்கிளி.



‘க்கும் க்கும்’ என குரலை செருமிக்கொண்ட வெட்டுக்கிளி, தன் காந்த குரலில்,

சிரிக்காதே.... சிரிக்காதே.... செருப்பாலே அடிக்காதே!!!” என பாட, ‘நொச்’சென அவன் பின்னந்தலையில் விழுந்தது ஓர் அடி.



“அது, செருப்பால அடிக்காத இல்லடா, சிரிப்பாலே அடிக்காதே!” என்றபடியே அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் பேரின்பன்.



பச்சைக்கிளி, “ஹை! அண்ணே, வந்துட்டியா?” ஆர்ப்பரிக்க, “அதான், அவ நான் பாடுனதும் சிரிச்சாளா?” என நொந்தான் வெட்டுக்கிளி.



“அண்ணே! ஒரு ஒருவாரம் கண்ணுல படலன்னதும் கல்யாணம் வரைக்கும் முடிவு பண்ணிட்டீங்காளாடா?” என்றான் இன்பன் சத்தாய்ப்பாய்.



“நாங்க கல்யாண பேச்சு தான் பேசுனோம்! ஆனா நீங்க கல்யாணமே முடிச்சுட்டு வந்து நிக்குறீங்களேன்னே?” என கிண்டலாய் வெட்டுக்கிளி சொல்ல, “பார்ரா!! விஷயம் அதுக்குள்ள பரவிடுச்சா?” என்றான் இன்பன்.



“உங்க தம்பியோட மாமனாரு தான் ராவோடு ராவா ஊருக்கே தம்பட்டம் போட்டுட்டாரே! எங்களுக்கு தெரியாம போகுமா?” என்றான் பச்சைக்கிளி.



“எப்படியோ தெரிஞ்சா சேரி!!” என்ற இன்பன், “காண்டீபன் ரொம்ப அடிச்சுட்டானோ?” என்றான் வீங்கியிருந்த அவர்கள் கன்னத்தை வருடியபடியே!!



“ஆமாண்ணே! உங்களுக்கு தெரியாம அவன் எங்கயும் போயிருக்க மாட்டான்! உண்மையை சொல்லுங்கன்னு கேட்டு, செம்ம அடி!!” என்ற வெட்டுக்கிளியை தொடர்ந்து, “நாங்க ஒரு வார்த்தை சொல்லலையே!!” என்றான் பச்சைக்கிளி பெருமையாய்.



‘நன்றி’யோ, ‘மன்னிப்பையோ’ சொல்லி அவர்களை தூர நிறுத்தாமல், “அண்ணனுக்காக இத்தனை அடி தாங்கிருக்கீங்களேடா! உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு!!” என்றான் சிரித்தபடி விளையாட்டு போல்...



“விடுண்ணே! விடுண்ணே!!” கிளிகள் சிரிக்க, மதிய நேர உணவுக்காக வெளியே வந்த காண்டீபனின் கழுகு கண்களில் சிக்கியது, தூரத்தில் கிளிகளிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கும் இன்பனின் உருவம்!



‘இன்பன் எங்க போனான்?’ என கேட்டதற்கு சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாய் ‘எங்களுக்கு தெரியாது’ என மறுத்த கிளிகள், இன்று இவனோடு சிரித்துக்கொண்டு நிற்பதை கண்டு துணுக்குற்று வேகமாய் காண்டீபன் அவ்விடம் செல்ல, அவர்களை நெருங்கும் சமயம், அவன் வருவதை கண்டுக்கொண்ட இன்பன், அத்தனை அவயங்களிலும் கிளிகளுக்கு சிக்னல் கொடுக்க, அதை சரியாய் கேட்ச் செய்தன கிளிகள்.



“எங்கண்ணே போன எங்களை விட்டு? உன்னை பார்க்காம சோறு தண்ணீ இறங்கலை தெரியுமா?”



“உன்னை காணோம்ன்னு தெரிஞ்சதும் எனக்கு நெஞ்சே நின்னுப்போச்சு!!!” ஹைடெசிபலில் கத்திக்கொண்டே குலுங்கினான் வெட்டுக்கிளி.



“டேய், இவ்ளோ பர்பாமென்ஸ் வேணாம்டா! கண்டுபுடிச்சுடுவான்!” பல்லிடுக்கில் இன்பன் எச்சரிக்க, குலுங்களை சற்றே குறைத்துக்கொள்ள,



“காடு மேடு திரிஞ்சாலும் உன் நினைப்பு ராசா,

கல்லு தடுக்கி விழுந்தாலும் கண்ணுல நிக்குறியே லேசா!” எதுகை மோனையோடு பச்சைக்கிளி பாட, “டேய், ஒப்பாரி வைக்காதீங்கடா! லூசுங்களா” என்றான் இன்பன்.



‘இவனுங்ககிட்ட போய் நடிப்பை எதிர்ப்பார்த்தோம் பாரு’ என தலையில் அடித்துக்கொண்டான்.



நடக்கும் கூத்தை பார்த்துக்கொண்டே அங்கே வந்த காண்டீபன் மூவரையும் முடிந்தமட்டும் முறைத்துவிட்டு, “இவன் எங்க போனானே உங்களுக்கு தெரியாது? ஒரு வாரத்துக்கு பிறகு இன்னைக்கு தான் இவனை பார்க்குறீங்க... அப்படிதானே?” என்றான் கிளிகளை நோக்கி.



“அதேதாண்ணா....” என்றன உற்சாகமாய். தங்கள் நடிப்பு பாஸ் ஆகிவிட்ட மகிழ்வில்.



இன்பனிடம் திரும்பி, “உன் வாயை திறக்கவே மாட்டல்ல? இன்னும் நல்லா அழுத்தி மூடிக்கோ!! உன்னால எல்லாருக்குமே தொல்லை தான் டா!!” என்றவன், “ச்சை” என வெறுப்போடு அவ்விடம் விட்டு செல்ல, செல்லும் அவனையே பார்த்தபடி நின்றான் இன்பன்.



அவனை நெருங்கிய கிளிகள், “ப்ச்!! சொல்லிடுன்னே!! உன்னை ஆள் அனுப்பி கொல்லப்பார்த்தது உன் அப்பா தான்னு எல்லார்ட்டயும்
சொல்லிடுன்னே” என்றனர் கோவம் கலந்த விரக்தியுடன்!!



-வருவான்...!!


வணக்கம் மக்களே!!

என்னடா இந்த பொண்ணு ஒழுங்காவே ud போட மாட்டேங்குதுன்னு நிறைய பேரு என்னை திட்டிட்டு இருப்பீங்க!! நீங்க கேட்டு கேட்டு நான் ud குடுக்குறது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு... வாரம் மூணு ud போடணும்ன்னு நினைக்குறேன்... ஆனா உடல்நிலை அதுக்கு ஒத்துழைக்க மாட்டேங்குது!!

'மசக்கை' எனும் மர்ம நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டு வாஷ்பேசினுக்கு ஓடவே நேரம் சரியா இருக்கு!! ஹிஹி!!! this is my first pregnancy!! த்ரீ மந்த்ஸ் முடிஞ்சதும் சொல்லலாம்ன்னு இருந்தேன்!! எல்லாரும் நான் பொறுப்பில்லாம இருக்குறதா நினைச்சுடக்கூடாதேன்னு தான் இப்போவே சொல்லிட்டேன்!!
முடிஞ்சவரைக்கும் ud சீக்கிரம் குடுக்க பார்க்குறேன்!! அப்படி முடியாத பட்சத்துல யாரும் இந்த சின்ன புள்ளையை வையாதீங்க!!!
Congratulations for your happy news
 
சூப்பர்ப் நியூஸ் சொல்லியிருக்கீங்க,
பிரியா டியர்
உங்களிடம் அப்டேட் எப்போ வரும்ன்னு இனிமேல் கேட்க மாட்டேன்ப்பா
உங்களையும் குழந்தையையும் நல்லாப் பார்த்துக்கோங்க
அது போதும்
உங்களால் முடியும் பொழுது வந்து அப்டேட் கொடுங்க
நாங்கள் வெயிட் பண்ணிப் படிப்போம், பிரியா டியர்
 
Last edited:
வாழ்த்துகள் பிரியா dear உடம்பை நல்லா கவனிச்சுக்கோங்க
 
வாழ்த்துக்கள் பிரியா மா உடம்பை பார்த்துங்க ரெஸ்ட் எடுத் துங்க நேரம் இருக்கும் போது யூடி கொடுங்க போதும்
 
Top