குஷா மாட்டின் அருகே சென்றதும் அவனைக் கண்ட செந்தில்,"தம்பி அது கிட்டப் போகாதீங்க. அது மொட்டு பாப்பாவைத் தவிர யார் கிட்டப்போனாலும் பாயும்..." என்று எச்சரிக்க ஏனோ இப்போது தான் அதை நெருங்க வேண்டும் என்று தீர்க்கமாக எண்ணியவன் அருகே செல்ல அதுவோ அவனை விட்டு விலகிச் சென்றது. அப்போது அங்கே வந்த மணவாளன்,"ஐயோ அத்தான் என்ன பண்றீங்க?" என்றதைக் காதில் வாங்காமல் அருகே சென்று பால் கறக்க ஏதுவாய் அமர்ந்து அதன் மடியைத் தொட அதுவோ தன்னுடைய வாலைக் கொண்டு அவனைத் தீண்டியது. இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மொட்டு,"டேய் மனோ(மணவாளன் அலைஸ் மனோ) அது பாயும் காலைக் கூடக் கட்டல..." என்று முடிக்கும் முன்னே அவன் அதன் மடியைத் தொட அது எட்டி ஒரே உதை உதைக்க கையில் இருந்த பால் பாத்திரத்துடன் குஷா கீழே விழுந்தான். அந்தச் சத்தத்தில் வெளியே வந்த லவா அனு இருவரும் சிரிக்க ஏனோ என்ன ஆனாலும் இன்று அந்த மாட்டிலிருந்து பால் கறந்தே தீரவேண்டும் என்று எண்ணியவனாக அவன் நெருங்க அவன் மனதை அறிந்த மொட்டு அவன் மேலும் அடி வாங்காமல் இருக்க அருகில் சென்று நிற்கவும் அவன் பால் கறக்க முயற்சிதான். உண்மையில் இதுவே அவனது முதல் முயற்சி என்பதால் அவனால் சரிவர செய்யமுடியாது போக நேரமாவதை உணர்ந்த மொட்டு,"லவா சொசைட்டிக்கு டைம் ஆச்சு. லேட்டா போனா பால் வாங்க மாட்டாங்க..." என்று சொன்னவாறு குஷாவின் அருகில் வர அவர்களுடைய இந்த ஊடல் போக்கை அறிந்த லவா அவர்களை மேலும் சீண்ட எண்ணி,
"அதை என்கிட்ட ஏன் சொல்ற மொட்டு? உன்னோட இன்னொரு அத்த பையன் கிட்டச் சொல்ல வேண்டியது தானே? ஊர்காவலன் படத்துல ராதிகா ரஜினியை எழுப்புற மாதிரி,'அத்தான் அன்புள்ள அத்தான் கொஞ்சம் நகருங்கனு' சொன்னா அவன் நகரப் போறான். என்னடா குஷா சரி தானே?" என்று ஒரண்டை இழுத்தவனை கொலை வெறிகொண்டு முறைத்தான் குஷா.
"ஏன் குஷா நீயேன் நம்ம ராமராஜன் டெக்னீகை கையாளக்கூடாது? 'செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே...' பாட்டுபாடுனா ஒருவேளை மாடு பால் கறக்குமோ என்னவோ?" என்று அனுவும் தன் பங்கிற்கு குஷாவைக் கலாய்த்தாள். அங்கே குஷாவோ இருவருடைய இந்த எள்ளல் பேச்சில் கடுப்பாகி அங்கிருந்து கோவமாக நகர்ந்தான்.
"ஏன் லவா இப்படிப் பண்ண? உன் வாயை வெச்சிட்டு சும்மாவே இருக்கக்கூடாதா?" என்று முதன் முதலாய் குஷாவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மொட்டுவை லவா விந்தையாகப் பார்த்தான். அப்போது பார்த்து அங்கே வந்த வைத்தி மற்றும் கனகா இருவரின் செவியிலும் இவ்வார்த்தை தவறாமல் விழுந்ததும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய்ப் பார்த்துக்கொண்டனர்.
"பார்ரா எப்போல இருந்து இது நடக்குது? ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..." என்று இறுதியில் லவா அதே ராகத்துடன் இழுக்க சுற்றியிருந்த பாரி இசை முதலியவர்களுக்கும் இது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அன்றிரவு மீண்டும் அனு தன்னுடைய லேப் டாப்பை உயிர்ப்பிக்க அப்போது அந்தப் பக்கமாக வந்த லவா அவளைக் கண்டு,"என்ன ஆச்சு ஈவினிங்கே வேலை முடிஞ்சதுனு சொன்ன? வாட் ஹேப்பண்ட் பூசணி?" என்று அவளைக் கிண்டல் செய்தவாறு லவா வந்து அமர்ந்தான்.
"குஷா என்ன சொல்றான்?" என்று கேட்டவளுக்கு,
"அவனுக்கென்ன அவனை படுக்கவெச்சு மேல பாத்திரத்துல அரிசி வெச்சா சோறே பொங்கலாம் போல... அவ்வளவு கடுப்பு..." என்று லவா சொன்ன தொனியில் அனு கிளுக்கென்று நகைக்க,
"ஆமா நீ ஏன் இப்படிச் சிரிக்குற? அங்க உன் கேங் லீடர் ஃபீல் பண்ணா நீயும் கூடச் சேர்ந்து ஃபீல் தானே செய்யணும்? வை கெக்க பெக்க லாஃபிங்?" என்ற லவாவிற்கு,
"இதென்ன வம்பா இருக்கு? அவன் கூடப் பிறந்த நீயே அவனை நல்லாப் பழி வாங்கும் போது நான் என்ன செஞ்சேன். அது போக எனக்கு வேலையில்லைனா கூட அவனுக்கு ஹெல்ப் பண்ணியிருப்பேன். அண்ட் அன்னைக்கு உன்னோட பிளான் எனக்கு அரைகுறையாப் புரிஞ்சது. நீ என்னமோ திட்டம் போட்டுடனு தெரிஞ்சு அவனை நான் எவ்வளவு வார்ன் பண்ணேன் தெரியுமா? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு சும்மாவா சொன்னாங்க? நாமெல்லாம் உடம்பு நோகாம வளர்ந்தவங்க... இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு தெரிய வேண்டாமா?" என்று அனு சொல்ல அவளுடைய இந்தத் தெளிவான பேச்சையும் யதார்த்த உரையாடலும் அவனுக்கு வியப்பைத் தந்தது. பின்ன அவன் அனுவிடம் அதிகம் நெருங்கிப் பழகியதில்லை. உபயம்: மொட்டு - குஷா ஈகோ சண்டைகள். இங்கே வரும் சொற்ப நாட்களில் எல்லாம் மொட்டுவை மோட்டிவேட் செய்வதிலும் அவளிடம் மனம் விட்டுப் பேசுவதிலுமே அவன் பொழுது கழியும். அது போக மொட்டுவுடன் இணைந்து இவன் அனுவை நெருங்கினாள் குஷா கோவித்துக்கொண்டு சென்று விடுவான். இதனாலே விளையாடும் பொழுது மட்டும் அவர்கள் கதைப்பதுண்டு. மொட்டுவிடம் அவன் மனம் விட்டுப் பேசியதைப் போல் அனுவிடம் செய்ததில்லை. அதனால் அனுவை ஒரு 'மொக்கை ஜோக்' சொல்பவளாகவும் எதையும் டேக் இட் ஈசியென்று எந்நேரமும் வாயில் எதையாது மென்றபடியே உலாவும் பேதையாவதுமே அவன் எண்ணியிருந்தான்.
தன்னுடைய எண்ணங்களுக்கு மாற்றாக எதையும் தெளிவாகப் பேசும் முடிவெடுக்கும் இந்த அனு... அதனூடே கடந்த இரண்டு தினங்களாக தன்னை ஈவு இரக்கம் காட்டாமல் கலாய்க்கும்(எல்லாம் அதே கல்யாண சமையல் சாதம் டாபிக்கை வைத்து தான்...) அனு அவனுக்கு முற்றிலும் மாறுபட்டவளாகவே தெரிந்தாள்.
இன்றும் அவனிடமிருந்து பதில் ஏதும் வராமல் போக நிமிர்ந்தவள் அவனுடைய யோசனை படிந்த முகத்தைக் கண்டு,"லவா நீ ரொம்ப மோசம் தெரியுமா..." என்று கண்களில் குறும்புடன் சொன்னவளின் பேச்சில் நினைவுக்கு வந்தவன்,
"ஏன்... ஏன்?" என்று பதற்றமடைய,
"என்னையவே நீ இந்த அளவுக்கு சைட் அடிக்கிறானா அப்போ காலேஜ்ல நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருந்திருப்ப? அது போக இப்போ வேலை செய்யுற இடம்..." என்று முடிப்பதற்குள் அவளுடய இந்த வெளிப்படையானப் பேச்சில் அதிர்ந்தவன்,
"ஏய் நிறுத்து நிறுத்து... நீ சொல்றதைப் பார்த்த என்னை என்னவோ வீமனைசேர் போல நெனச்சிட்டு இருக்க போலயே? நான் வெறும் பிள்ளை பூச்சு தான் தெரியுமா... குஷாவுக்கு கூட காலேஜ்ல கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாம் இருந்தாங்க ஆனா நான் அப்படி இல்ல..." என்றதும் இன்னும் சுவாரசியம் கூடியவளாய்,
"ஓ மை காட்! இப்போ தான் எனக்கு உன்னைப் பற்றி எல்லாம் புரியுது லவா..." என்று ஆச்சரியங் கொண்டவளை அதிர்ச்சியுடன் நோக்கியவன்,
"என்ன தெரியுது?" என்ற லவாவுக்கு வாய் தந்தியடிக்க,
"நீ பொண்ணுங்க கிட்டயே பேசாம ஆனா பொண்ணுங்க கிட்டப் பேசணுங்கற அர்ஜ்(தூண்டல்) கொண்டு அதே நேரம் அவங்களை நெருங்க முடியாத ஏக்கத்துல உனக்குள்ள மல்டிப்ல் ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி வந்து உள்ள ரெமோவா இருக்கணும்னு ஆசைப்பட்டு முடியாம வெளிய அம்பியா நடிச்சு கூடிய சீக்கிரம் அந்நியனா அவதாரம் எடுத்து சைக்கோ படத்துல வர வில்லன் மாதிரி பெண்களைக் கடத்தி கொலை பண்ணி பின்னாடி உன்னை ஒரு ஹீரோ கண்டு பிடிச்சு இல்லைனா காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி யாரையாவது நீ கடத்திட்டுப் போய் வெச்சு உன்னை ஹீரோ கண்டு பிடிச்சு இல்ல இன்செப்சன் படத்துல வர டி கேப்ரியோ மாதிரி கனவெது நிஜம் எதுன்னு தெரியாம ஒரு ஹலுசினேஷன்ல வாழ்ந்துட்டு இருக்கலாம்... நீ உடனே ஒரு டாக்டரை பாரு இல்லைனா நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்துல வர விஜய் சேதுபதி மாதிரி சின்னதா ஒரு பால் பட்டாலே 'என்னாச்சு...'னு கேள்வி கேட்டு சுத்தற நிலை வரும்..." என்று நிறுத்தியவள் தற்போது லவாவைப் பார்க்க அவனோ இவள் சொன்னதில் எல்லாம் உறைந்து உண்மையிலே பயத்தில் இருந்தான்.
அவனுடைய அந்தப் பார்வை கொடுத்த லயிப்பில் அவளும் மர்ம புன்னகையுடன் உறைந்து இருக்க,
"உன்கிட்ட இன்னும் ஒரு பத்து நிமிஷம் பேசுனேன்னு வெய் உண்மையிலே என்னை ஒரு சைக்கோ கொலைகாரனாவோ இல்ல சேது பட விக்ரம் மாதிரியோ ஆக்கி விட்டு இது தான் நான்னு என்னையவே நம்ப வெச்சிடுவ போலயே? இப்போ எனக்கே ஒரு மாதிரி பயமா இருக்குடி. உன்ன..." என்று லவா குரல் உயர்த்த,
"பாரு உனக்குக்குள்ள இருக்க அந்நியன் வெளிய வரான்..." என்றவள் ஓடத் தயாராக இருக்க,
"உன்னை என்ன பண்ணப் போறேன் பாரு டி பூசிணிக்கா..." என்று அவளைத் துரத்தினான் லவா. அவர்கள் இருவரும் அந்த இரவு வேளையில் வெளியே ஓட மேலே தத்தம் அறையில் இருந்த மொட்டுவும் குஷாவும் அவர்கள் இருவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
மொட்டு தன்னுடைய கற்பனையில் உழன்றாள். பின்னே ஆரம்ப நாட்களில் குஷா மீது அவளுக்கு ஒரு கோவம் இருந்தது உண்மை தான். அது இப்போதும் இருக்கிறது தான். அதும் இம்முறை தங்கள் தாத்தா பாட்டியின் திருமண நாளுக்கு அவருடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மருமகன்கள் மருமகள்கள் என்று எல்லோரையும் இங்கு வரவழைத்து அவருக்கு ஒரு நிம்மதியை பரிசாகக் கொடுக்கலாம் என்று எண்ணி தான் இந்த செலிபிரேசனுக்கு அவள் திட்டமிட்டாள். ஆம் இந்தத் திட்டத்தை உருவாக்கியது அவளே. ஆனால் லவாவிடம் ஏன் ஜானகியிடம் கூட அவ்வளவு சொல்லியும் அவர்கள் மட்டும் இங்கு வராமல் போனதன் காரணமாகவே அன்று குஹாவிடம் வாக்குவாதம் செய்ய நேர்ந்தது. அப்போது ஏதோ ஒரு எண்ணத்தில் வாய்தவறி பணத்தைப் பற்றி அவள் பேசிவிட அதன் பின் நிகழ்ந்த எதிலும் அவளுக்கு துளியும் உடன்பாடில்லை. அது இன்று பெரிய ஈகோ க்ளஷாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. எங்கே இந்த ஈகோ இந்த இடைப்பட்ட நாட்களில் கோவமாய் வார்த்தையாய் செயல்களாய் வெளியேறிவிடுமோ என்றும் ஏற்கனவே வைத்திக்கு ஏற்பட்ட மயக்கத்தைப் போல் மீண்டும் ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்து விடக்கூடாது என்று தான் அவள் அடக்கி வாசிக்கிறாள். இதில் அவளுடைய பயமே எங்கே அவனிடம் தான் வாங்கிய பணத்தைப் பற்றிய செய்தி தன் தாத்தாவுக்கோ இல்லை லவாவுக்கோ தெரிந்து விடுமோ என்றது தான். அதனாலே கடந்த சில தினங்களாக குஷாவை வெறுப்பேற்றாமலும் கோவப்படுத்தாமலும் இருக்கிறாள். இதேதும் புரியாமல் லவா மற்றும் அனு இருவரும் அவனைத் தூண்டி விட்டு விடுவார்களோ என்று எண்ணி பயம் கொள்கிறாள். உண்மையில் மொட்டுக்கு இந்தப் போட்டியில் துளியும் விருப்பமில்லை. சொல்லப்போனால் இன்றைய நிலையில் குஷாவுடன் போட்டிபோடுவதைக் காட்டிலும் அவனுடன் ஒரு சுமூக உறவைப் பேணவே அவள் எண்ணுகிறாள். ஆனால் இதற்கு மேல் அவன் பால் அவளுக்கு எந்த விருப்பமும் இல்லை.
குஷாவோ எப்படியாவது இந்தச் சவாலில் வென்று தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க காத்திருக்கிறான். இரு துருவங்களாகவே இருக்கும் இவர்களை ஒன்றிணைத்து இந்தக் குடும்பத்தில் மீண்டும் நிம்மதியைக் கொண்டு வர வேண்டி வைத்தி காத்திருந்தார். அதற்கான முதல் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது.
***************
அன்று செந்திலுக்கு சற்று உடல் நலம் சரியில்லாமல் போக அவரும் வேலைக்கு வராமல் இருந்துவிட்டார். காலையில் எழுந்து மாடு, கோழி, தோட்டம் முதலிய வேலைகளை குஷா, பாரி, மணவாளன், அபி ஆகியோர் செய்துகொண்டிருந்தனர்.
இதர வேலைகளை எல்லாம் முடித்துவிட குஷா மாடுகளை எல்லாம் காட்டிற்குள் ஓட்டிச் செல்ல துணைக்கு வேறு யாரும் இல்லாததால் வைத்தியே மொட்டுவை அவனுடன் அனுப்பினார். இவர்கள் இருவருமாக ஏதும் பேசுமால் உள்ளே சென்றனர். ஆனால் இருவரின் மனக்கண்ணிலும் கடந்த கால நினைவுகளே படமாய் ஓடியது.
ஒரு முறை அவர்கள் விடுமுறைக்கு வந்திருக்க அப்போது எல்லோருமாகச் சேர்ந்து அந்தக் காட்டிற்குள் ட்ரெக்கிங் செல்லலாம் என்று முடிவெடுத்தனர். முன்பு சொன்னதைப் போலே அதொரு பராமரிப்பில்லாத வனம். அதற்கு பல நுழைவுகள் இருந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு ஊற்று இருக்கும். அதன் மறுபக்கம் இருக்கும் குறுக்கு வழியில் வந்தால் இவர்களுடைய தோட்டத்தின் பின் பக்கம் வந்து விடலாம். அன்று காலை இவர்கள் எல்லோரும் தங்களுடைய ட்ரெக்கிங் பயணத்தைத் தொடர ஆளுக்கொரு வழியில் பிரிந்து நடந்தனர். யார் முதலில் அந்த ஊற்றுக்கு வருகிறார்களோ அவர்களே வின்னர் என்று சொல்லி அந்தப் போட்டி நடைபெற்றது. மொட்டுவுக்கு இந்தக் காட்டின் அனைத்து வழிகளும் அத்துப்படி என்று அறிந்தவர்கள் அவளை இந்தப் போட்டியின் நடுவராக மட்டும் இருக்குமாறு சொல்லிச் சென்றனர்.
லவா முதலியவர்கள் ஆளுக்கொரு வழியைத் தேர்ந்தெடுக்க இறுதியாகச் சென்ற மொட்டுவின் கண்களில் குஷா மட்டுமே தெரிந்தான். குஷாவுக்கு இந்த அட்வென்சரில் எப்போதும் தீரா மோகம். அந்த வனத்தின் ஒரு பகுதியை மோகினி வனம் என்றும் அங்கு வன மோகினி இருக்கிறாள் என்றும் ஊரில் பரவலாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாய்க் காத்திருந்தவனுக்கு இன்று கிடைத்த இந்த நல்ல வாய்ப்பைப் பயன் படுத்த எண்ணி அந்தப் பகுதியை நோக்கிச் சென்றான். ஏனோ அவனுடைய இந்தச் செய்கை மொட்டுவிற்கு அச்சத்தைக் கொடுத்தது. ஒன்றைச் செய்யாதே என்றால் அதைத் தான் செய்வேன் என்று இடக்கு மடக்கு செய்யும் குஷாவை என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள் மொட்டு. மேலும் இந்த வனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அவளே தனியாகச் சென்றதில்லை என்னும் பொழுது அவனை மட்டும் தனியாக அனுப்பி பிறகு ஏதேனும் நிகழ்ந்தால் தாத்தாவுக்கு யார் பதில் சொல்வதென்று எண்ணிக் குழம்பியவள் அதே நேரம் அவனுடன் கடந்த முறை ஏற்பட்ட சண்டையின் காரணமாகப் பேசாமல் தான் இருக்கிறாள் என்றதும் எப்படி அவனுடன் பேசுவது என்று குழம்பியவள் வேக நடையிட்டு அவனைப் பின்தொடர்ந்தாள். சிறிது தூரம் சென்றவனுக்கோ தன்னைப் பின் தொடர்வது மொட்டு என்று தெரிந்து திரும்பிக் கூடப் பார்க்காமல் சென்றான்.
அவனுடைய கவனத்தை ஈர்க்க தனக்கு காலியில் ஏதோ அடிப்பததாகச் சொல்லி அலறலுடன் அமர அந்தச் சப்தத்தில் திரும்பியவன் தூரம் அமர்ந்திருக்கும் அவளை நோக்கி வந்தான். வந்தவன் ஏதும் பேசாமல் அவளருகில் நிற்க அவளோ தன்னுடைய நடிப்பை கன்டினியூ செய்து அவனை வேறு இடத்திற்குக் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்க,
"என்ன ஆக்டிங் குயீன் திரும்ப உங்க பெர்பார்மென்ஸை ஆரமிச்சாச்சா? அன்னைக்கு என் அப்பா மேல பழிப் போட்ட இன்னைக்கு நானா?" என்று குத்தல் நிறைத்த பேச்சையே அவன் கையாள,'இவனுக்காகவா நாம் கவலைப்பட்டோம்?' என்று அவளுக்கு உண்மையிலே எரிச்சலாக இருந்தது. அதே நேரம் இன்றும் தான் நடிக்கிறோம் என்று தெரிந்தால் நிச்சயம் இவன் தன்னை அவமானப் படுத்துவான் என்று அறிந்தவள் அங்கே சுற்றிப்பார்க்க அருகில் யாரோ குடித்து உடைத்திருந்த காலி பாட்டில் இருக்க அவன் பேச பேச அவன் அறியாமல் தன்னுடைய காலில் அதை மிதித்தவள் உண்மையிலே ஏற்பட்ட வலியில் அலற அப்போது தான் அவளைக் கண்டவன் அவள் பாதத்தில் இருந்து வழியும் ரத்தத்தைக் கண்டு,
"உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? மூளை தான் இல்லைனா கண்ணும் கூடவா இல்ல? இப்படியா வருவ..." என்று அவன் பாட்டிற்கு கத்த ஏனோ தனக்கு ஏற்பட்ட வலி அவனுக்காகத் துடித்து அவனுக்காகவே தன்னையும் காயப் படுத்திக்கொண்டு அவன் முன் தோற்காமல் இருக்க ஏற்படாத காயத்தை ஏற்படுத்திக் கொண்டு இதெல்லாம் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமல் ஆனால் அவனை அந்த நிமிடம் அளவில்லாமல் சபித்து அவன் மீதான வெறுப்பு பலமடங்கு உயர்ந்து இனி அவன் அங்கே செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை வந்தவளாக திரும்பி நடக்க ஆரமித்தவள் வலியால் தடுமாறி கீழே விழப்போக ஏனோ தன்னைத் எந்தச் சூழலிலும் தாங்காது என்று எண்ணி பூமி மாதாவிடம் தஞ்சம் கொள்ள நினைக்கையில் அவளைத் தாங்கியவன் அவளை பத்திரமாக வீட்டிற்கும் கொண்டு வந்து சேர்த்ததை இன்றைக்கும் ஒரு ப்ரமையாகவே எண்ணிக் கொண்டிருக்கிறாள் மொட்டு. ஆனால் அவனுக்காக இவள் ஏன் கவலைகொள்ள வேண்டும் என்று யோசித்து யோசித்து பார்த்தாலும் அதற்கான விடை மட்டும் அவளுக்குத் தெரியவே இல்லை.
அந்த பழைய நினைவுகளோடு இருவரும் காட்டிற்குள் சென்று மாடுகளை விட்டுத் திரும்பினார்கள். ஆனால் இருவரும் அந்த நாளின் நினைவுகளில் தான் மூழ்கியிருந்தனர்.
*********************
இப்படியாக இருவரும் தங்களுக்குள் ஏதும் பேசிக்கொள்ளாமல் அதே நேரம் புதிய வாக்குவாதங்களையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அடுத்தடுத்த நாட்களை நகர்த்தினார்கள்.
அன்று மாலை எல்லோரும் வழக்கம் போல் கார்ட்ஸ் விளையாடிக்கொண்டு கதையளக்க வைத்தியை அழைத்தார் ஜானகி. அவர்களின் பேச்சு வழக்கமாகப் போக ஏனோ தன்னுடைய திட்டத்தின் முதல் படியை செயல்படுத்த எண்ணிய வைத்தி லவா குஷா ஆகியோரின் திருமணத்தைப் பற்றிப் பேசினார்.
"அப்பா எங்களுக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? இதோ வர பதிமூணாம் தேதி அவங்களுக்கு பர்த் டே வேற வருது. வயசும் கூட்டிட்டு தான் இருக்கு. போன வருஷமே அவங்க அப்பா பொண்ணு பார்க்கவான்னு கேட்டார். இவனுங்க தான் பி. எச்.டி முடிஞ்சிடும். முடிஞ்சதும் செஞ்சிக்குறோம்னு இருக்கானுங்க..." என்று ஒரு சராசரி தாயாக அவர் வருத்தப்பட,
"அப்போ பொண்ணு பார்த்தாச்சா?" என்றவருக்கு,
"அதெல்லாம் இல்லப்பா. இனிமேல் தான். ஜாதகம் எழுதி வெக்கலாம்னு அவங்க அப்பா சொன்னாரு. இந்த பர்த் டே முடியட்டும்னு ஜோசியர் சொன்னாராம். அநேகமா சித்திரை ஒன்னு அன்னைக்கு எதாவது செய்வார்..." என்று பேசிய ஜானகியிடம்
"பொண்ணு நான் பார்க்கலாமா மா?" என்றவருக்கு,
"இதென்ன ப்பா கேள்வி? நல்ல இடமா இருந்தா சொல்லுங்க பார்க்கறது தான்..." என்று சொல்ல,
"என்கிட்ட ரெண்டு பேரோட ஜாதகம் வந்து இருக்கு..." என்று முடிக்கும் முன்னே,
"யாருப்பா அது? சொல்லவே இல்ல?"
"சொல்றேன். ஆனா இப்போயில்ல... இதெல்லாம் நேர்ல பேச வேண்டிய விஷயம். இந்த லாக் டௌன் முடியட்டும் ஊருக்கு வரேன்..."
"அப்போ அவனுங்க கூடவே கிளம்பி வந்திடுங்க... அண்ட் அவர் எதுவும் சொல்ல மாட்டார் நீங்க உங்க பொண்ணு வீட்டுட்டு தாராளமா வரலாம்..." என்றார் ஜானகி.
இவர்களின் இந்த உரையாடலை அரசல் புரசலாகக் கேட்ட அபி,"ஹே அத்தான்ஸ் கங்கிராட்ஸ்... ரெண்டு பேருக்கும் சீக்கிரமே மேரேஜ் ஆகப் போகுதாம். அத்த கிட்டத் தான் தாத்தா பேசுறார். அப்போ இந்த வருஷம் நமக்கு இன்னொரு கெட் டுகெதர் இருக்கு..." என்று ஆர்பரித்தான்.
*****************
அன்று மாலை எல்லோரும் மொட்டுவின் ஆர்கானிக் தோட்டத்தைப் பார்க்கச் சென்றிருந்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த மரங்களில் இருந்து பழங்கள் அறுவடைக்குத் தயாராகி இருந்தது. மாங்காய் எல்லாம் தொங்க அதில் இருந்தவற்றை பறித்து சாப்பிட்டவாறு கதையளந்தனர். அப்போது அங்கே இருக்கும் மற்றொரு கிணற்றின் அருகில் அமர்ந்து கதை பேசினார்கள். வீட்டு கிணற்றைப் போல் தடுப்புகள் ஏதும் இல்லாமல் வெட்ட வெளியில் இருக்கும் அக்கிணற்றின் அருகில் அமர்ந்து கதை பேச,
"ஏன் மொட்டு இந்தக் கிணத்தோட ஆழம் என்ன இருக்கும்?" என்று லவா வினவ,
"இரு தள்ளி விடுறேன் நீயே போய்த் தெரிஞ்சிக்கோ..." என்று விளையாட்டாக அவள் லவாவைத் தள்ள பொதுவாக இது போன்ற இடங்களை நுனியில் இருந்துப் பார்க்கும் போது நமக்கிருக்கும் அந்த திகில் உணர்வுடன் லவா எட்டிப்பார்க்க அவன் மீது விளையாட்டாக கை வைக்க ஏனோ நிலை தவறிய லவா உண்மையிலே அக்கிணற்றில் விழுந்தான்.
அதுவரை இலகுவாக இருந்த எல்லோரும் திடுக்கிட, அனுவுடன் உரையாடியவாறு இருந்த குஷா இதைக் கண்டதும் எங்கிருந்து வந்ததென்று தெரியாத கோவத்தில் மொட்டுவை அறைந்திருந்தான். நொடிப்பொழுதில் நிகழ்ந்த இதை யாரும் சுதாரிக்கும் முன்னே கிணற்றில் விழுந்து தத்தளித்த லவாவைக் காப்பாற்ற குதித்தான் குஷா. பிறகு நீந்த சிரமப்படும் லவாவைத் தூக்க முடியாமல் குஷா சிரமப்பட அதற்குள் பாரி, மணவாளன், நந்தா என்று எல்லோரும் குதித்து அவனை மீட்டெடுத்தார்கள். விழுந்த பதட்டத்தில் மயங்கியிருந்த லவாவை எல்லோரும் எழுப்ப முயற்சிக்க சிறிது நேரத்தில் லவா கண்விழித்ததும் தான் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
"அறிவில்லையாடா உனக்கு? உன்னை யார் எட்டிப் பார்க்கச் சொன்னா? உனக்கேதாவது ஆகியிருந்தா அப்பா அம்மாக்கு நான் என்ன பதில் சொல்வேன்?" என்ற குஷாவின் கர்ஜனையில் தான் லவாவுக்கு chd எனப்படும் பிறப்பிலிருந்து இருக்கும் சிறு இதயக்கோளாறு இருக்கிறது என்பதே அவர்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வந்தது.
அப்போது தான் அது மொட்டின் சிந்தையிலே உதிர்த்தது. நீச்சல் தெரிந்திருந்தும் ஏன் அவனை மீட்க இவ்வளவு சிரமப்பட்டார்கள் என்றும் அப்போது தான் நினைவில் வந்தது.
"எல்லாம் இவளைச் சொல்லணும்... கொஞ்சம் கூட அறிவுங்கறதே இல்லாதவ..." என்று குஷா மொட்டுவைச் சுட்டியதும் தான் அவளுக்கு விழுந்த அறையைப் பற்றியே எல்லோரும் நினைத்தார்கள். (நேரம் கைகூடும்...)