அந்த நாளுக்குப் பிறகு லவாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருந்தது. இப்போதெல்லாம் மாலையில் வீட்டிற்கு வரும் வேளையிலே அவன் முகத்தில் ஒரு பொலிவும் உற்சாகமும் நிரம்பி இருக்கிறது. எட்ட நின்றே பேசுபவன் இப்போது ஒட்டி உரசிச் செல்கிறான். அது போக எதிர்பார்க்காத வேளையில் எதிர்பார்க்காத முத்தம் திடீர் அணைப்பு என்று அனுவிற்கு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஒன்றை வாரி வழங்கினான். அவனுடைய நடவடிக்கை முதலில் குழப்பமளித்தாலும் சமயங்களில் அவனையும் மீறி அவன் முகத்தில் தெரியும் தேஜஸும் அதனூடே அவள் மீதான அவனது காதலும் அவளுக்கு நிறைவை அளித்தது.
அன்று மாலை வீட்டிற்கு வந்தவனுக்கு சர்ப்ரைஸாக 'ப்ளம் புட்டிங்' காத்திருக்க அதைக் கண்டவன் ஆச்சரியத்தில் கண்கள் விரிய சுவைத்தவன்,"நீயே செஞ்சயா புஜ்ஜு? அப்படியே உன் கன்னம் மாதிரியே பொப்னு இருக்கு என்று அவள் கன்னத்தைக் கிள்ளி புட்டிங்கை சுவைத்தான்.
"இதை ஏன் செஞ்சேன்னு கேக்க மாட்டியா?" என்றவளுக்கு, புரியாமல் யோசித்தவன் பின் புரிந்தவனாக,
"ஹே அனு சொல்லவேயில்லை? கன்பார்மா?" என்று அர்த்தமாய்ப் பார்க்க,
"எஸ்..." என்றவள்
"இன்னைக்குத்தான் கன்பார்ம் ஆச்சு"
"வீட்ல சொல்லிட்டயா?" என்றவனுக்கு,
"இல்ல இனிமேல் தான் சொல்லணும்... ஒரு மாதிரி எக்ஸைட்டா இருக்கு லவா..."
"அட இருக்காதா பின்ன... அதெல்லாம் அப்படித்தான் என்ஜாய் பண்ணனும்..." என்றவன்,
"எப்போ போகணும்?" என்றதும்,
"மண்டே வரச் சொல்லியிருக்காங்க..." என்றவளுக்கு,
"எல்லாம் ஓகே அதெப்படி முத்தம் மட்டும் தானே கொடுத்தேன்... அதுக்குள்ள எப்படி நீ ப்ரெக்னன்ட் ஆன? ஒருவேளை என் யூகம் சரியோ?" என்று விஷமமாய்ச் சிரிக்க,
அப்போது தான் அவன் முகத்தில் தெரிந்த பரிகாசம் புரிந்தவள் கண்கள் விரிந்து,
"ஏய் நான் வேலை கிடைச்சிடுச்சினு தான் சொன்னேன்... நீ என்ன நெனைச்ச?" என்றவளுக்கு,
"வாட் வேலையா? நான் நீ ப்ரெக்னென்ட்னு இல்ல நெனச்சேன்? அப்போ இந்த புட்டிங் அதுக்கில்லையா?" என்று அப்பாவியாய்க் கேட்க,
"என்னையவே கலாய்க்குற அளவுக்கு நீ முன்னேறிடியா? உன்னை இன்னைக்கு என்ன பண்றேன் பாரு..." என்றவளுக்கு ஏனோ வெட்கமும் சிரிப்பும் ஒரு சேர வர அவனோ அவளிடம் சிக்காதவாறு வளைந்து நெளிந்து ஓடினான்.
சிறிது நேரம் அவளிடம் சிக்காமல் போக்குக்காட்டியவன் பின்பு அந்த பால்கனிக்கு செல்ல இவளும் அவன் பின்னே சென்று அவன் கைகளைப் பிடித்து,
"ஆனாலும் சும்மாவா சொல்லியிருக்காங்க பெரியவங்க... குஷா மாதிரி தடாலடி ஆளுங்களைக் கூட நம்பலாம் ஆனா உன்னை மாதிரி அம்மாஞ்சியா வேஷம் போடுறவங்களை மட்டும் ஒரு போதும் நம்பவே கூடாது..." என்று அவனை அடிக்க பொறுக்க முடியாமல் அவளிடம் இருந்து விலகியவன் அவளை தன்னுடைய கைவளைவுக்குள் கொண்டு வந்தான்.
முதலில் சாதாரணமாக இருந்த அனு அவனது பிடி இறுகுவதிலும் அவனது மூச்சுக்காற்று அவள் காது மடல்களை உரசி கன்னத்தைத் தீண்டுவதிலும் சிலிர்த்தவள் அந்த மாலை நேர வாடைக்காற்று தீண்டலிலும் சொக்கித்தான் போனாள்.
"ஹே அனு கண்ணைத் தொறந்து பாரு..." என்று கிசுகிசுப்பாக அவள் காதில் மொழிந்தவன் அவளிடமிருந்து எந்த ரியாக்சனும் வராமல் போக,
"நாளைக்கு ஈவினிங் நீ ப்ரீயா?" என்றான்.
அவனது குரல் அவளை மேலும் கிறங்கவைக்க இது வேலைக்காகாது என்று அறிந்தவன் அவளை விட்டு விலகி அவள் எதிரில் நின்றான். பின்பு மெல்ல கண்களைத் திறந்தவள் அவனைக் கண்டு நாண,
"ஏ அனு உனக்கு வெட்கமெல்லாம் படத் தெரியுமா? சொல்லவேயில்ல?" என்று அவளை மேலும் வெட்கத்தில் மூழ்கடித்தவன்,
"என் கொலீக் கிஷனுக்கு குழந்தை பிறந்திருக்கு..." என்றவன் அவளது முகத்தில் எதையோ கண்டுகொண்டவன் போல,
"அவனுக்கில்லை அவன் வைஃப்கு தான் பிறந்திருக்கு..." என்றதும் லவாவின் இந்தத் தடுமாற்றத்தைக் கண்டு பக்கென்று சிரித்தாள்.
"உன்னால பாரு வாய் குழறுது... அவங்க நார்த் இந்தியன்... ஆனாலும் அவன் ஜாபுக்காக இங்கேயே பிரசவம் பார்த்துட்டாங்க... இந்த வீக் ஊருக்குக் கூட்டிப்போறாங்க... நம்மை ஒரு நாள் விருந்துக்குக் கூப்பிட்டாங்க... நான் பாப்பாவை ஏற்கனவே பார்த்திருக்கேன்... இருந்தாலும் நீயும் வந்தா போய் ஒரு எட்டு பார்த்துட்டு அப்படியே விருந்தையும் முடிச்சிட்டு வரலாம்... என்ன ஓகே வா?" என்று நிறுத்த,
"எனக்கொண்ணும் பிரச்சனை இல்ல... பெண்கொழந்தையா?"
"ஆமா... அப்படியே சின்ன வயசுல நீ எப்படி இருந்தையோ... இல்ல இல்ல இப்பயும் நீ அப்படித்தானே இருக்க... அதே பொசு பொசு கன்னம்..." என்று அவளையும் ஒரு வாரு வாரினான்.
வழக்கத்திற்கும் மாறாக இன்று தன்னை கலாய்க்கும் லவாவை வார எண்ணிக் காத்திருந்தவள் அவன் நகரும் வேளையில்,"உன் ப்ரெண்டுக்கும் முத்தம் கொடுத்ததால் தான் குழந்தை பிறந்துச்சா?" என்றதும் திரும்பியவனுக்கு,
"இல்ல உன் ப்ரெண்டாச்சே... ஒரு வேளை நீ ஏதாவது ஐடியா கொடுத்திருப்பையோ?" என்று யோசிக்க,
"உன் டௌட்டை கூடிய சீக்கிரமே தீர்த்து வெக்குறேன்..." என்று அவன் சென்றுவிட முதலில் அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் இருந்தவளுக்கு அவன் சொன்னதன் மறைபொருள் உணர்ந்து,'சரியான ஊமை குசும்பன் டா நீ...' என்று தன்னவனை மெச்சினாள்(?).
அதன்பின் மறுநாள் சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு விருந்தும் முடித்து வீடு திரும்பியவர்கள் ஞாயிறு அன்று அவளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்றனர். திங்களன்று முதல் நாள் வேலைக்கு தயாராகி வந்தவளை டிராப் செய்தவன்,
"அனுமா, ஈவினிங் வந்து நான் பிக் அப் பண்ணிக்குறேன்... லேட் ஆகிடுச்சினா நீ நம்ம காஃபீ ஷாப்ல இரு..." என்றவனுக்கு,
"பிக் அப் பண்ணிடுவ?" என்றாள்.
"கண்டிப்பா அஞ்சு மணிக்கெல்லாம் வந்து..." என்றவன் அவள் உதட்டில் இருந்த கிண்டலைக் கண்டு,
"என்ன ஆனாலும் சரி பிக் அப் பண்றது பிக் அப் பண்றது தான்... அதுல மாற்று கருத்தே இல்ல... ரெட்டியைத் தாக்குறோம் குட்டியைத் தூக்குறோம்... அசால்ட் ஆக்சனுக்கு ரெடி ஆகிட்டான்..." என்று பஞ்ச் வசனம் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
***************
அங்கே குஷா சொன்னவாறே அடுத்த மூன்றாம் நாள் மாலையில் ஜானகியை அழைத்து வந்தார் ரகு. ரகு இங்கு வந்து சென்ற பிறகே ஜானகியிடம் வீட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைச் சொல்லியிருந்தார். அதிலும் அவருக்கு மொட்டுவின் சுறுசுறுப்பும் சுத்தமும் மிகவும் பிடித்திருந்தது. அதை ஜானகியிடம் மெச்சுதலாகச் சொன்னவரை முறைத்த ஜானகி,
"யாரோ கொஞ்ச நாளுக்கு முன்ன வரை மொட்டுவை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வரவே கூடாதுனு சொன்னாங்க..." என்று சற்று காட்டமாகவே சொன்னார்.
"தப்பு தான் ஜானு... டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர்னு சொல்லுவாங்களே அது போல ஆயிடுச்சு என் நிலை... அண்ட் உன் பிள்ளையைப் பத்தி சொல்லணுமே? வீட்ல அவளுக்குப் பிடிச்சதா வாங்கி நிரப்பியிருக்கான். ஸீவிங் மெஷின் என்ன பூனைக்குட்டி என்ன அவளுக்குப் படிக்க புக்ஸ் என்ன? ஆனாலும் ஹேப்பியா இருக்கு... என்ன ஒரே கோவம்னா இவங்க இதைப் பத்தி முன்னமே சொல்லியிருந்தா அனுவையும் லவாவையும் முன்னமே சேர்த்திருக்கலாம்..." என்றார் ரகு.
"நான் தான் பசங்க கிட்ட ஒரு ஒப்பினியன் கேளுங்கன்னு சொன்னேன்... இல்ல நானாச்சு கேட்டிருப்பேன்..." என்ற ஜானுவிற்கு,
"நீ கேட்டிருக்க வேண்டியது தானே? நான் ஊர்ல அவங்க போட்டோ எல்லாம் பார்த்து தான் அந்த முடிவுக்கு வந்தேன்... நீயும் அதெல்லாம் பார்த்திருக்கனும்... எல்லாத்திலும் லவாவும் மொட்டுவும் தான் ஒன்னா இருந்தாங்க. ஏன் நான் குஷா கிட்ட தான் மொட்டுவைப் பத்தி விசாரிச்சேன். அப்போ கூட அந்தப்பையன் என்கிட்ட வாயைத் திறக்கல..."
"சரி நடந்ததைப் பேசி என்ன பண்ண? இந்தக் குழப்பத்தால் தான் அவங்க ரெண்டு ஜோடியையும் தனியா விட நெனச்சேன்... நம்ம குடும்பத்துல யாரையும் கொஞ்ச நாளுக்கு அவங்க கூட விட வேண்டாம்னு யோசிச்சேன்... தனியா இருப்பதுல இதுதானே நல்லது? எப்படியும் அவங்க மனசுவிட்டுப் பேசியாகணும்... எப்படியோ அனுவும் வேலையில ஜாயின் பண்ணிட்டா... சோ எல்லாம் ஓகே ஆகிடும்... ஆகிடும் தானே?" என்று கலங்கினார் ஜானு.
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது... படிச்ச பசங்க... அவங்களுக்குத் தெரியாதா என்ன?"
"இருக்கட்டும் இருக்கட்டும் இந்த வாட்டி இந்த குஷாவையும் மொட்டுவையும் சும்மா விடப்போறதில்லை..." என்றார் ஜானு.
அவர் சொன்னதைப்போலவே வீட்டிற்கு வந்தவர் மொட்டுவிடம் வழக்கமான குசல விசாரிப்பை நடத்தி உள்ளே சென்றார். ஜானகியிடம் கூட மொட்டு சகஜமாகப் பேசமாட்டாள். நிர்மலா உமா ஆகியோரிடம் சிரித்து கலகலவென்று உரையாடும் மொட்டு ஜானகியிடம் எப்போதும் பட்டும் படாமல் பேசி ஒதுங்கிக்கொள்வாள்.
ஜானகி நினைத்திருந்தால் எப்போதோ ரகுவை வைத்தியுடன் பேசவைத்திருக்க முடியும் என்று மொட்டுவும் அறிவாள் தான். அதும் போக அவர்மீது உயிரையே வைத்திருக்கும் வைத்திக்கு ஜானகி நியாயம் சேர்க்கவில்லை என்பதும் அவள் வாதம்.
அன்று மாலை வீட்டிற்கு வந்த குஷாவிற்கு தன் அன்னை மற்றும் மனைவியைப் பார்த்த போதே எதுவோ சரியில்லை என்று புரிந்து தன் தந்தையிடம் என்னவென்று விசாரிக்க அவரோ தெரியாது என்பது போல் சைகை செய்தார்.
அன்றிரவே மொட்டுவிடம் நடந்ததை விசாரிக்க அவளும் தெரியாது என்று சொல்லிவிட்டாள். பின்னே தனிக்குடித்தனம் வைத்ததிலிருந்து தினமும் தவறாமல் பத்து நிமிடமெனும் தன்னுடன் பேசிவிடும் தன் அத்தை இன்று நேரில் பேசாமல் போனது அவளுக்கு அதிர்ச்சி தானே? ஆனால் குஷாவுக்கு அன்னையிடம் கேட்காமலே அவருடைய கோவத்திற்கானக் காரணம் புரிந்து விட்டது. சிறு வயதிலிருந்தே ஜானகிக்கு லவா என்றால் சற்று அதிக பிடித்தம். அதற்கு இரண்டு காரணங்கள். முதலில் லவாவிற்கு இருக்கும் இதயக் கோளாறு. இரண்டாவது லவாவின் அமைதி மற்றும் கூச்சசுபாவம்.
இந்தக் காராணத்தால் ஜானுக்கு தன் மீதும் மொட்டு மீதும் கோவம் இருக்குமென்று அவனும் அறிந்தான். இது போக ஒருவேளை லவாவும் மொட்டுவை விரும்பி இருந்தால் குஷாவிற்காக அவளை விட்டுக்கொடுத்திருக்கவும் கூடும் என்றும் ஜானகி வருந்தினார். இதனாலே சில நாட்களுக்கு லவாவையும் குஷாவையும் பிரித்து வைக்க நினைத்தார். அன்னையின் இந்த எண்ணமெல்லாம் குஷாவுக்கும் புரிய தான் செய்தது.
மறுநாள் காலை எழுந்ததும் நேராக அன்னையிடம் சென்றவன்,"உனக்கு கோவம் வந்தாலோ இல்ல தண்டிக்கணும்னு நெனைச்சாலோ என்கிட்ட அதைக் காட்டும்மா... மொட்டு மேல வேண்டாம். நான் ஈவினிங் வருவேன், அதுக்குள்ள நீ மொட்டுகிட்டப் பேசி இருக்கனும்..." என்று குஷா பேசியது மொட்டுவின் காதுகளிலும் விழுந்தது.
இதைக் கேட்ட ஜானுவிற்கு ஏனோ தான் ஓவர் ரியாக்ட் செய்து விட்டோமோ என்று தோன்றியது. அதே நேரம் குஷாவும் மொட்டுவும் சந்தோசமாக வாழ்வதாக நினைத்தவர் இப்போதே இதற்கொரு முடிவுகட்ட எண்ணி மொட்டுவிடம் மனம் விட்டுப் பேசினார்.
"சாரி டா... கடைசியில நானும் வழக்கமான மாமியார் மாதிரியே நடந்துகிட்டேன் இல்ல? குஷா சின்ன வயசுல இருந்தே பயங்கர சுட்டி, வாலும் கூட. அதேநேரம் ரொம்பவும் பொறுப்பானவன். ஆனா லவா அப்படியில்ல... ரொம்ப பயந்த சுபாவம். சாப்ட் கேரக்டெர். இன்னும் சுருக்கமாச் சொல்லனும்னா உன் புருஷன் என்னை மாதிரி... தடாலடி. ஆனா லவா உன் மாமா மாதிரி. அவனுண்டு அவன் வேலையுண்டு. நீயும் குஷாவும் லவ் பண்றத பத்தி ஒரு வார்த்தை என்கிட்டச் சொல்லியிருந்தா நாங்க எல்லாம் சரி பண்ணியிருப்போமில்ல? எனக்கு உன்னைக் காட்டிலும் உன் புருஷன் மேல தான் செம கோவம்... சரி விடு பழசெல்லாம் எதுக்கு? உங்க வாழ்க்கை எப்படிப் போகுது? நல்ல படியா உன்னைப் பார்த்துக்கறானா? அப்பாக்கு வேற உங்க நாலு பேரை நெனச்சும் ரொம்ப கவலை. அதிலும் உன் மேல அதிகம் கவலை. பேசுறயா அவர்கிட்ட?" என்றதும் மொட்டு யோசனைக்குச் சென்றாள். முதலில் தன்னிடம் பேசவே தயங்கிய அவள் தாத்தா பத்து நாட்கள் கழித்து அவளுக்கு அழைத்தார். அழைத்தவர் நடந்தை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னார்(குஷா மொட்டுவை விரும்புவதைத் தவிர) எல்லாம் தெரிந்தும் அன்று அவளுக்கு ஆதரவாக இல்லாமல் போன தன்னுடைய நிலையை விளக்க அதன் பின் தான் மொட்டுவுக்கும் குஷாவின் செய்கையில் சிறிதேனும் நம்பிக்கை பிறந்தது. பிறகு வழக்கம் போல் தன்னுடைய பேரப்பிள்ளையான குஷாவுக்கு வக்காலத்து வாங்கி அவர் பேச தன்னுடைய கோவம் ஏமாற்றம் எதையும் அவரிடம் காட்டிக்கொள்ளாமல் மறைத்தாள் மொட்டு.
இப்போது நினைக்கையில் குஷாவின் மீது இந்த ஒரு காரணத்திற்காகவே நன் மதிப்பு ஏற்பட்டது. குஷாவின் மீது அவளுக்கு எத்தனை மாற்றுக்கருத்து இருந்தாலும் லவாவுக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக நிற்பவன் குஷாவே! அதை பல சம்பவங்களில் அவளே கண்கூடப் பார்த்திருக்கிறாள். இந்த ஒரு விஷயத்தில் குஷாவை எப்போதும் அவளுக்குப் பிடிக்கும்.
அன்று மாலை வீட்டிற்கு வந்தவன் ஹாலில் தன் பெற்றோர்களுடன் அமர்ந்து கதைபேசும் மொட்டுவைக் கண்டதும் தான் மனம் சற்று இலகுவானது. பின்னே இத்தனை நாட்களில் அவளுக்குப் பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் போனதை எண்ணி அவன் வருந்தியிருக்கிறான். மொட்டு ஒரு 'பழமை' விரும்பி என்று குஷா அறியாததா? ஊரில் தினமும் வீம்புக்கென்றே கனகாவிடமும் சித்ராவிடமும் வம்பிழுப்பதை அவனும் கண்டிருக்கிறான். அப்படிப்பட்டவளை இங்கே ஒரு அடைத்துவிட்டோமோ என்ற வருத்தமும் அவனுக்கு இருந்தது.
ஏதும் பேசாமல் ரெஃப்ரெஷ் ஆகி வந்தவனுக்கு சூடாக டீ கொடுத்தாள் மொட்டு. இது தினமும் நடக்கும் நிகழ்வு தான். குஷா மீது எவ்வளவு கோவமிருந்தாலும் அவனை சாப்பாட்டு விஷயத்தில் பழி வாங்கவே மாட்டாள். பின்னே கடந்த கால அனுபவம் அப்படி! இன்றளவும் அவனிடம் அவள் பணம் வாங்கியதை எண்ணி வருந்துகிறாள் தான். குஷாவுக்கோ இப்படியாவது தன்னிடம் நெருங்குகிறாளே என்ற ஆனந்தம்!
அவர்களின் நடவடிக்கைளை மெளனமாக கவனித்த ஜானகியும் ரகுவும் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர்.
"டேய் இதென்ன புது பழக்கம்?" என்ற ஜானகிக்கு,
"ம்மா நான் வேண்டாம்னு தான் சொன்னேன்... இவ தான் கேக்குறதில்ல..." என்ற குஷாவையும் ஜானகியையும் புரியாமல் பார்த்தாள் மொட்டு.
"அது ஒண்ணுமில்ல மா... இங்க நம்ம வீட்ல எப்பயும் எல்லாமே செல்ப் சர்விஸ் தான்... யாரும் யாருக்கும் எதையும் செய்யக்கூடாது. சின்ன வயசுல இருந்து பழகின பழக்கம். அதான் இப்போ மாறிடுச்சோன்னு கேக்குறாங்க உங்க அத்தை..." என்றார் ரகு.
"உனக்கெல்லாம் சமையல்ல ஹெல்ப் பண்றானா இல்லையா?" என்ற ஜானகிக்கு,
"ம்மா நான் கேட்டாலும் வேணாம்னு சொல்லிடுறா..." என்று பதிலளித்தான் குஷா. உண்மையும் அது தானே? அவன் உள்ளே சென்றாலே அவள் பார்வை மாறிவிடும். ஆனால் குஷா உதவிக்கு எல்லாம் போக மாட்டான்! அவன் எண்ணமே வேறு!
'நீ எதுக்கு உள்ள வரேன்னு எனக்குத் தெரியாதா? ஹெல்ப் பண்றேன் பேர்வழினு என்னை உரசிட்டே இருப்ப...' என்று மொட்டு மைண்ட் வாய்ஸில் பேச அதைப் புரிந்துகொண்டவனோ இளித்தான்.
இருவரின் முகபாவத்தை வைத்தே ஏதோ இருக்கிறதென்று அவர்கள் சிரித்தனர்.
"அதெல்லாம் இருக்கட்டும் உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க கேப்போம்..." என்றார் ஜானகி.
அதைக் கேட்டு இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
"டேய் அன்னைக்கு இந்த வீட்ல தானே மொட்டுவ பத்தி உன்கிட்டக் கேட்டேன். நீ ஓகே சொன்னதால் தானே நானும் மேரேஜுக்கு ஏற்பாடு பண்ணேன்? நீ தானே அவ அக்ரி படிச்சிட்டு தனி ஆளா விவசாயம் பார்குறா ரொம்ப சுறுசுறுப்பானவனு சொன்ன?" என்றதும்,
"ஆனா நீங்க லவாவுக்கு இவளைக் கேட்கறேன்னு சொல்லவேயில்லையே?" என்று அவரை மடக்கினான். இதைக் கேட்ட மொட்டுக்கு ஆச்சரியம் பிடிபடவில்லை. தன்னைப் பற்றி அதும் அவன் தந்தையிடம் நல்ல முறையில் சொன்னானா? என்று விழிக்க குஷாவோ எவ்வித உணர்வையும் காட்டாமல் இருந்தான்.
"சரி எல்லாம் பேசி முடிச்ச பிறகாவது சொல்லியிருக்கலாமில்ல?"
"சொல்லியிருக்கலாம் தான்..." என்று அவன் மழுப்ப,
"சரி அதெல்லாம் விடு... கதையைச் சொல்லு... யாரு முதல ப்ரபோஸ் பண்ணது?" என்றதும் மொட்டு குஷாவின் பெயரைச் சொல்ல முந்துவதற்குள்,
"அதான் அன்னைக்கே சொன்னேனே... இவ தான் எனக்கு ப்ரபோஸ் பண்ணா..." என்றான். அங்கே மொட்டுவோ கொலைவெறியில் அவனை முறைத்தாள்.
"எங்க எப்போ ஆரமிச்சது உங்க லவ் ஸ்டோரி? தெளிவாச் சொல்லுடா..."
இப்போது குஷா மொட்டுவைப் பார்க்க அவளோ,'எப்படியும் ஒரு ரீல் உடப்போற... அதையும் நீயே சொல்லித்தொல...' என்பது போல் ஒரு பார்வை பார்க்க,
"அம்மா, அது அம்மாச்சி தாத்தாவோட வெட்டிங் அன்னிவெர்சரிக்கு போனோமில்ல? அப்போ லாக் டவுன்ல மாட்டிகிட்டோமே? சும்மா இல்லாம லவா எனக்கும் இவளுக்கும் ஒரு போட்டி வெச்சுட்டான்..." என்று பாதி உண்மையில் தொடங்கியவன்
"அன்னைக்கு ஒரு நாள் காய்கறி லோட் இறக்க நானும் இவளும் தஞ்சாவூர் போனோமா, அப்போ சாயுங்காலம் ஆனதும் இவளுக்கு ஒரே தலை வலின்னு சொன்னா... அப்போ ஒரு காஃபீ ஷாப்புக்கு போனோம். அப்போ பார்த்து வெளியில தூறல் விழ உள்ள காபியோட நானும் இவளும் எதிர் எதிர் இருக்கையில உட்கார்ந்து இருக்கும் போது குஷானு தயங்கி தயங்கி ஆரமிச்சவ பட்டுனு நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டா..." என்றவன் அருகில் அமர்ந்திருந்த மொட்டுவைப் பார்க்க அவளோ இன்னதென்று சொல்லமுடியாத ஒரு ரியாக்சனை கொடுத்தாள்.
'ஆஹா இன்னைக்கு க்ரைம் ரேட் கூடுறதுனு முடிவாகிடுச்சு. பரவாயில்ல நங்கூரத்தை நச்சுனு போட்டுட வேண்டியது தான்' என்றவன் கதையைத் தொடர்ந்தான்.
"இவ திடீர்னு இப்படிக் கேட்டதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல... ஏன்னா நான் இவளை ஒரு நாளும் அப்படி நெனைச்சதே இல்ல. அதும் போக நம்ம குடும்பத்துக்கும் இவங்க குடும்பத்துக்கும்..." என்னும் போதே ரகு பழைய கசப்பான நினைவுகளை யோசிக்க,
"அதான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்குப் பிறகு இவ மூஞ்சே தொங்கிப் போச்சு. அப்போ தான் லாக் டௌன் முடிஞ்சு ஊருக்கு வந்துட்டோம். அப்ப அப்ப மெசேஜ் செஞ்சிக்குவோம். அப்போ எனக்கும் இவமேல இன்ரெஸ்ட் வந்த சமயத்துல தான் நீங்க இவளைப் பத்தி கேக்க நானும் நம்பி சொன்னேன். ஆனா இப்படி ஜோடியை மாத்துவீங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்?" என்று கதையை நிறைவுசெய்தான்.
இதைக் கேட்டதும் பெரியவர்கள் தாங்கள் செய்யவிருந்த அபத்தத்தை எண்ணி வருந்த குஷாவோ அடுத்து எழும் பூகம்பத்தை எவ்வாறு சமாளிக்கலாம் என்று யோசித்தான்.(நேரம் கைகூடும்...)