அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவிரனுக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்து முடித்து இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்துவிட திருவண்ணாமலைக்குச் செல்ல நவிரனுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அவனுடைய சித்தி வீட்டிலே பவியும் குமாரசாமியும் தங்கிக்கொண்டனர். முதல் நாளில் எதைப் பற்றியும் யோசிக்காதவன் மறுநாளில் மெர்ஸியைப் பற்றிய நினைவு வந்ததும் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஊருக்கு அனுப்பி வைத்தான். என்ன தான் பலமுறை இங்கு தங்கியிருந்தாலும் தற்போது அவனுக்கு இங்கே தங்குவதில் அசௌகரியத்தை உணர்ந்தவனுக்கு அவளைப் பற்றிய நினைவு வர அவள் இருந்த இடத்திற்குச் சென்று வர முடிவெடுத்தான். அவளுடன் இங்கு கழித்த நாட்கள் சொற்பமென்றாலும் அதைப் போல் அவன் மனதைக் களவாடிய பொழுதுகள் பிறிதில்லை. அணையப்போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும் என்ற பழமொழிக்கு அவன் வாழ்க்கை ஒரு உவமையாகும் என்று அவன் மட்டும் என்ன கனவா கண்டான். தன்னுடைய சாதூர்யத்தால் நலனின் வாழ்க்கையில் அவன் நிகழ்திய மாயத்தை ஏனோ அவன் வாழ்க்கையில் அவனால் நிகழ்த்தமுடியாமல் போனது. இது தான் விதி என்பதோ?
தன் சித்தியிடம் பெயருக்காகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியவன் மனம் போன போக்கில் நடந்தான். அவன் எண்ணமெல்லாம் அவளிடமே இருந்தது. காதலிக்க ஆரமித்த சில நாட்களிலே அவனிடம் அவள் கேட்ட அந்தக் கேள்வியை இறுதி வரை அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
"நவிமா நம்ம லவ்வுக்கு உங்க வீட்ல இருந்து க்ரீன் சிக்னல் விழுந்திடுமா? எனக்கென்னமோ அதைப் பற்றி நெனச்சாலே லேசா இதயம் பதறுது..." என்று அவள் கேட்கும் போதெல்லாம் அவள் குரலில் ஒலிக்கும் பதற்றத்தைக் காட்டிலும் அவள் கண்களும் உதடுகளும் அவ்வளவு துடிக்கும். அவளது அந்தப் பதற்றத்தை ஒருநாளும் அவன் சீரியசாக எடுத்துக் கொண்டதே இல்லை.
"எந்தப் பிரச்சனையும் இல்லாம அதைச் சுமூகமா முடிக்க நீ கொஞ்சம் அதிகமா செலவு செய்யணுமே? எங்க உன்னால முடியுமான்னு கொஞ்சம் சேம்பல் காட்டுப் பார்க்கலாம்..." என்று அவள் இதழின் திறமையை கொஞ்சம் சோதித்துப் பார்ப்பான்.
நம்ம ஊர் அரசியல்வாதிகள் போல் அவளுக்கு அளித்த நம்பிக்கை விதைகள் எல்லாம் துளிர்விட்டு அதன் வேரூன்ற தொடங்கிய வேளையில் பிடுங்கி எறியும் படியான சூழல் அமையும் என்று அவனுக்கு மட்டும் தெரியுமா என்ன?
பவித்ராவுடனான அவனது உறவு துண்டிக்கப்பட்டதும் அதனால் தான். அவன் வாழ்வில் அவன் அதிகம் நேசித்த இருவரையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்தான்.
கடந்த கால நினைவுகளில் இருந்தவன் தன்னையும் அறியாமல் சாலையைக் கடக்க முயல அவனைத் தாக்க வந்த வண்டியிலிருந்து இரு கரம் அவனைக் காப்பாற்றியதும் தான் அவன் நிகழ்காலத்திக்கே வந்தான்.
"அறிவில்லை? இப்படியா ரோடு க்ராஸ் பண்ணுவாங்க? கொஞ்சத்துல போய்ச் சேர்ந்திருப்ப?" என்றவரின் குரலில் தான் அவனுக்கு நிகழவிருந்த அசம்பாவிதமே புரிந்தது.
"சாரி சார். ஏதோ யோசனையில் இருந்தேன்..." என்று சமாளித்தவனின் முகத்தில் எதையோ கண்டவர்,
"என் ஃப்ரண்ட் ஒருத்தன் வரேன்னு சொன்னதை நம்பி நான் ட்ராமாவுக்கு ரெண்டு டிக்கெட் எடுத்தேன். இப்போ என்னால அதுக்குப் போக முடியாத சூழ்நிலை. நீ எனக்கு ஏதாவது செய்யணும்னு நெனச்சா இந்த டிக்கட்ட வெச்சிக்கிட்டு எனக்கு பணம் கொடுக்க முடியுமா? என்னடா நமக்கு நடக்கவிருந்த விபத்தைக் காப்பாத்திட்டாங்கறதுக்காக இப்படித் தொல்லை கொடுக்கறனேன்னு தப்பா எடுத்துக்க வேணாம். என் சூழ்நிலை அப்படி..." என்று அவர் தயங்கினார்.
"எவ்வளவு?" என்று இவன் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு எல்.இ.டி பல்பையே பார்த்தவன் அவர் கொடுத்த டிக்கட்டுகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தான்.
மனம் நிறைய சஞ்சலத்துடன் தான் அந்த அறைக்குள் நுழைந்தான் நவிரன். பின்னே தெரியாத கதை என்றால் கூட முயன்று அதன் மீது கவனம் செலுத்தியிருப்பான் தான். ஆனால் இதுவோ அவனறிந்த கதையாயிற்றே! ஒரு முறையா இரு முறையா ஐந்து முறை திகட்டத் திகட்ட படித்தாயிற்றே! எட்டாவது முடித்து விடுமுறையில் இருந்தவனுக்கு அறிமுகமானது தான் அது. புத்தகப்புழு என்பார்களே அது போலொரு நபர் தான் நலன். வாசிப்பு அவர்கள் ரத்தத்தில் ஊறியது. பிரபல நாவல் எழுத்தாளர் பவித்ரா குமாரசாமியின் வாரிசுகள் ஆயிற்றே! நலன் அளவிற்கு இல்லையென்றாலும் நவிரனும் ஓரளவுக்கு வாசிப்பான். சிறுவர் மலர் தங்கமலர் முதலிய காமிக்ஸ் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவனுக்கு கிடைத்த முதல் நாவல் அமரர் கல்கியின் ஆகச் சிறந்த படைப்பான 'பொன்னியின் செல்வன்' அவனுள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. என்ன தான் எழுத்து வடிவத்தில் பலமுறை சோழ ராஜ்ஜியத்திற்குள் சென்று வந்திருந்தாலும் முதன் முறையாக இதைக் காட்சி வடிவில் காண்கிறான். ஐந்தருவியென அவளுள் எழுந்த ஆர்வத்தை முயன்று கட்டுப்படுத்தி மேடையை நோக்கினான். ஒருபக்கம் நேற்றைய பாரங்களும் ஏமாற்றங்களும் அவனை வாட்ட மறுபக்கம் நாளையை எண்ணிய பயம் அவனைத் தாக்க தன்னை முடிந்த அளவுக்கு இன்றைய எதார்த்தங்களோடு வாழப் பழக்கிக் கொண்டிருக்கிறான்.
வந்தியத்தேவனின் அறிமுகத்தில் மெல்ல மெல்ல கதைக்குள் மூழ்கத் தொடங்கிவிட்டான் நவிரன். இடையிடையே ஆழ்வார்க்கடியானின் கிண்டல் நந்தினியின் வஞ்சம் பழுவேட்டையர்களின் சதி குந்தவையின் சாதுர்யம் வானதியின் காதல் ஆதித்தனின் விசித்திர சிரிப்பு பூங்குழலியின் பாடலோடு கூடிய வீரம் அருள்மொழி வர்மனின் வசீகரம் என்று தன்னையே ஒரு பத்தாம் நூற்றாண்டின் சோழ பிரஜையாகவே பாவித்துக்கொண்டான் நவிரன்.
"கோமகனே! அதற்கு பரிகாரம் ஒன்றும் கிடையாது. இறந்தவர்கள் இறந்தவர்கள் தான். இறந்தவர்களைப் பிழைக்கச் செய்யும் சக்தி இந்த உலகில் யார்க்கும் கிடையாது. கதைகளிலே காவிங்களிலே சொல்கிறார்கள். நாம் பார்த்ததில்லை!" என்றாள். (கல்கி...)
அடுத்த காட்சிக்கு கதை நகர்ந்தாலும் நவிரனின் எண்ணமெல்லாம் மேற்சொன்ன வாக்கியங்களிலே உறைந்து நிற்க அடுத்த சில நிமிடங்களில் அந்த அரங்கமே கரகோஷத்தில் நிரம்பி அதிர சுயம் பெற்றவனின் கண்களில் அப்போது தான் அந்தப் பரிட்சயமான முகம் தென்பட்டது. அதை உறுதிப்படுத்தும் முன்னரே மேலிருந்து விரிந்த ஒரு திரை அந்த மேடையை தன்னுள் விழுங்கிக்கொண்டது.
வெளியே சென்றவனை இன்னும் காணவில்லை என்று அவன் சித்தி அவனுக்கு அழைத்துக்கொண்டிருக்க பயந்தவர் விஷயத்தை குமாரசாமியிடம் தெரிவித்துவிட்டார். அவரோ பவித்ராவுக்குத் தெரியாமல் தன் மேனேஜர்களை விட்டு அவனைத் தேடச்சொல்லி தகவல் அனுப்ப அப்போது தான் மெர்ஸிக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கும் படியானது.
உள்ளே செல்லும் வரை அவனிருந்த மனநிலை வேறு. இப்போது அவனுக்குள் ஒரு இதம் பரவியிருக்க அப்போது தான் தன் அலைபேசியைக் கண்டவன் செய்தியறிந்து வீட்டிற்கு விரைந்தான். பாலைவனம் என வறண்டிருந்தவனின் மனதில் பெய்த அடைமழையென விழுந்தது நிலனின் வருகை.
தங்களது நிறுவனத்திற்கென்று ஒரு விளம்பரத்தை தயாரிக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்க அதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சு எழுந்த சமயத்திலே அவன் மனதில் ஒரு முகம் வந்து போனது. கிட்டதட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன் பார்த்த முகம் அது. அதே முகத்தை இன்றைய நாடகத்திலும் அவன் கண்டுவிட பிளே முடிந்ததும் அவளிடம் பேசலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
இங்கே வாழ்க்கையில் ஜெய்த்துக்கொண்டிருக்கும் பலரும் ஏதோ ஒரு சூழலில் யாரையோ எவற்றையோ நிச்சயம் இழந்திருக்க கூடும்.
"எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு விடுவது என்பது எப்போதும் புத்திசாலித்தனமான காரியம்தானே?
பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டதன் விளைவுதானே?
இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும் கடவுளுக்கு முகமூடியும் உண்டு.
இழந்தும் பெற்றும் தான் வாழ முடியும் போலிருக்கிறது.
நெருக்கடியில், சோதனை காலத்தில், தன்னில் சிறிது இழந்து, மற்றொன்றில் சிறிது பெற்று, பெற்றதையும் தன்னில் சீரணம் செய்து கொண்டு அழிந்து போகாமல் நிலைத்துவிடும் காரியம், மதங்களுடைய காரியமாகவும் நாகரீகங்களுடைய காரியமாகவும் பாஷைகளுடைய காரியமாகவும் இருந்து வந்திருக்கிறது அல்லவா?
அது தான் இயற்கையின் நியதி போலும்!"
என்று 'ஒரு புளியமரத்தின் கதை' என்னும் நூலில் சுந்தர ராமசாமி எழுதியது அவன் சிந்தையில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.
தன்னுடைய தனிப்பட்ட இழப்புகளுக்கு எல்லாம் தன் தொழிலின் வளர்ச்சி மூலம் ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனொரு இயந்திரமென வாழத் தொடங்கிவிட அவனை இயல்புக்குக் கொண்டுவர பவித்ரா தொடங்கி அவன் குடும்பமே முயன்று கொண்டிருக்கிறது.
தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்பது நியதி. ஆனால் நான் வேறு இடத்தில் தான் தேடுவேன் என்று முரண்டு பிடிக்கும் நபர்களே இங்கு ஏராளம். அது அறியாமையால் விழைந்தது இல்லை. எங்கே தொலைத்த இடத்தில் தேடும் முயற்சியில் மற்றதையும் தொலைக்க நேரிடுமோ என்ற அச்சமே அவர்களை அவ்வாறு முரண்டு பிடிக்க வைக்கிறது.
குழந்தையைப் பார்க்க வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் தான் அகல்யாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
"சொல்லு அகல்"
"நான் நெக்ஸ்ட் வீக் இந்தியா வரேன் டா. நீ எங்கயும் போயிடாத..."
"நல்ல டைமிங்கில தான் கூப்பிட்டிருக்க. அண்ணிக்கு குழந்தை பிறந்திருக்கு. ஜஸ்ட் நவ். பையனாம். ஆமா என்ன விஷயம்?"
"அது உன்கூட நான் கொஞ்சம் பேசணும். நேர்ல வந்து சொல்றேன். அப்பறோம்..."
"என்ன இழுக்குற?"
"சுதர்சன் அங்கிள் உன்கிட்டப் பேசணும்னு சொன்னாரே நீ அவர்கிட்டப் பேசுனியா?"
"...."
"நவி, உன்னைத்தான் கேக்குறேன். எஸ் ஆர் நோ"
"எப்படிப் பேசச் சொல்ற?"
"இனிமேல் நீ நெனச்சாலும் முடியாது" என்றவளின் கூற்றைப் புரிந்துகொள்ளவே அவனுக்கு சில வினாடிகள் பிடித்தது. அதைக் கேட்டதும் அவனுக்கு சப்த நாடியும் அடங்கியதைப்போல் ஒரு உணர்வு.
இப்போது தான் நிலனின் வருகை அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்க முயல அதற்குள் சுதர்சனின் இறப்பு வாழ்க்கையின் எதார்த்தத்தை அவனுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்திவிட்டது.
"நவி, ஆர் யூ ஆல்ரைட்?"
"அகல் சின்ன வயசுல நீ புத்தரோட வாழ்க்கையைப் பத்தித் தெரிஞ்கிட்டதும் உனக்கு முதல தோன்றுன எண்ணம் என்ன? உன்னால ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா?"
"நோ ஐடியா!"
"நான் என்ன நெனச்சேனு சொல்லட்டா? அவ்வளவு பெரிய ராஜ குடும்பத்துல பிறந்து ராஜபோகமா வாழ்ந்த அந்த ஆள் எல்லாத்தையும் விட்டுட்டு துறவறம் போனார்னு தெரிஞ்சதும் அவருக்கென்ன பைத்தியமானு நெனச்சு திட்டி இருக்கேன்..."
அவன் கூற்றில் எதையோ புரிந்துகொண்டவள்,
"இப்போ எதுக்கு இதைச் சொன்ன?"
"சொல்லணும்னு தோணுச்சு. மத்தபடி ஒண்ணுமில்லை. இந்தியா வா மீட் பண்ணலாம்..."
"டேய் நவி..." என்று அகல்யா அழைக்க அதைப் பொருட்படுத்தாது அழைப்பைத் துண்டித்தான். முதன் முதலாக சுதர்சனை நேரில் சந்தித்த நிகழ்வு அவன் கண்முன்னே விரிந்தது.
ஒரு வேளாண் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப் பட்டவரை நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் ஒரு மாட்டுப் பண்ணையில் கண்ட நிமிடங்களை நினைக்கையில் இப்போதும் அவனுக்கு சிரிப்பு வரும். இணை சேர்க்கைக்கான முயற்சியில் இருந்தவரைக் காணச் சென்றவனைக் காத்திருக்க சொல்ல ஐவியின் கரம் கோர்த்து அந்தப் பண்ணை முழுவதும் உலாவிய நிமிடங்கள் புதைப்படிமமாய் (fossil- தொல்லுயிர் எச்சம்) என்றும் அவனுள் இருக்கும்.
பழைய நினைவுகளில் மிதந்தவன் மருத்துவமனைக்குச் சென்று நிலனை கையில் ஏந்திய நொடி பிறப்பு இறப்பு என்னும் இரு மலை முகடுக்கு இடையில் ஓடும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒத்தையடி கயிற்றுப் பாலமாய் உணர்ந்தான் நவிரன்.
காதலால் நிறைப்பாள்...