Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 29:

“என்னாச்சு மதி..? ஏன் அமைதியா இருக்க..?” என்றார் பார்வதி.

“ஒண்ணுமில்லை..!”

“உடம்புக்கு பரவாயில்லையா..?”

“ம்ம்..வினோதினி எங்க...?” என்றாள்.

“அவ ஸ்கூலுக்கு போய்ட்டா...அடுத்த வாரம் வர்றதா சொல்லியிருக்கா..!” என்றார் பார்வதி.

அவள் இப்படி உர்ரென்று வந்திருப்பது கண்டு பார்வதிக்கு உள்ளே சிறு பயம் இருக்கத்தான் செய்தது.

“முகிலன் தம்பி எங்க..?”

“எனக்குத் தெரியாது..!” என்றவள், அறைக்குள் சென்று விட்டாள்.

“என்னாச்சு இவளுக்கு..?” என்று பார்வதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே....

“சித்தி, உள்ள வரலாமா..?” என்ற குரலில் நிமிர்ந்தார்.

“தனபாண்டி,குணபாண்டி வாங்கப்பா..!” என்றார் சந்தோஷமாய்.

“சித்தப்பா இல்லையா சித்தி...!” என்றனர் இருவரும்.

“வெளிய போயிருக்கார்,வாங்க உட்காருங்க...காபி போடவா..?” என்றார் பார்வதி.

“அதெல்லாம் வேண்டாம் சித்தி. புதன் கிழமை நிச்சயம் பண்ண போறோம் சித்தி. நீங்களும், சித்தப்பாவும் கண்டிப்பா வந்துடனும்...!” என்றனர்.

“ரொம்ப சந்தோசம்ப்பா....நடக்குறது எல்லாமே நல்லதாத்தான் நடக்குது. ஆனா நாங்க வரதுனால உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துடாதா..?” என்றார்.

“என்ன வந்தாலும் பரவாயில்லை. நீங்க திலகா சித்தியை சொல்றிங்கன்னு புரியுது. அவங்களுக்கு பயந்து, நாங்க ஒவ்வொன்னையும் செய்ய முடியாது. அப்பாவும், அம்மாவும் டவுனுக்கு போயிருக்காங்க...இல்லைன்னா அவங்க தான் வந்திருப்பாங்க...! நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம, நாளைக்கு சாயந்தரமே வீட்டுக்கு வந்துடுங்க..!” என்றனர் இருவரும்.

“சரிப்பா..!” என்று பார்வதி சொல்ல,

“மதி எங்க...? முகிலன் வீட்டுக்கு போயிட்டதா கேள்விப்பட்டோம். இனியாவது சந்தோஷமா இருக்கட்டும் சித்தி..!” என்றனர் இருவரும்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, மதி உள்ளே இருந்து வர,

“வா மதி..! எப்ப வந்த...? நீயும்,முகிலன் மச்சானும் ஜோடியா பங்க்ஷனுக்கு வந்துடனும்..!” என்றனர்.

“சரிண்ணா..!!!” என்பதோடு முடித்துக் கொண்டாள்.அவர்கள் சென்றவுடன், மதியும் ஒரு பேக்குடன் வந்தாள்.

“என்னதிது மதி..!” என்றார் பார்வதி.

“அம்மா..! என்னோட திங்க்ஸ் கொஞ்சம் எடுத்துருக்கேன்..! நான் கிளம்புறேன்..!” என்றாள்.

“இந்தா இருக்கு அடுத்த வீடு..! அதுக்கு இவ்வளவு அக்கப்போறா..?” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட பார்வதி,

“ம்ம் சரிம்மா..!” என்றார்.

மதி வந்த வேகத்தைப் பார்த்து, கொஞ்சம் பயந்து தான் போயிருந்தார். எங்கே கோபத்தில் வந்து விட்டாளோ என்று. ஆனால் மதியோ வந்த அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டாள். பார்வதியும் அவளிடம் எதையும் தோண்டித் துருவிக் கேட்கவில்லை. ஆனால் அவளின் முகத்தைப் பார்த்தே, ஏதோ சரியில்லை என்று தோன்றியது.எதுவாக இருந்தாலும், முகிலன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை, இப்போது அவருக்கு முழுமையாய் இருந்தது. இனி மதியின் வாழ்க்கையைப் பற்றி அவர் கவலை கொள்ளத் தேவையில்லை.

மதி வீட்டிற்குள் நுழையும் போதே, பெரியசாமியும், மலரும் பரிதவிப்புடன் வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

மதியைப் பார்த்தவுடன் தான் அவர்களின் முகத்தில் நிம்மதி வந்தது.

“எல்லாரையும் ரொம்பப் படுத்துறோமோ...?கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ...?” என்று தனக்குள் யோசித்துக் கொண்டே, சென்றாள்.

“என்னம்மா மதி...? சட்டுன்னு போய்ட்ட. அதுவும் கோவமா வேற...? முகிலன் வேற கோவமா வெளிய போய்ட்டான்... என்ன பிரச்சனை உங்களுக்குள்ள...?” என்றார் மலர்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை...சும்மா சின்னதா ஒரு வாக்குவாதம்.அவ்வளவு தான்..!” என்றாள் மதி.

பெரியசாமியும் அமைதியாக இருந்தார்.மதியும் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவரிடம், அவள் பேசுவதே இல்லை. அதுவே அவருக்குக் குற்ற உணர்ச்சியாய் இருந்தது. அவர் அமைதியாய் உள்ளே செல்ல,

“மாமாவுக்கு உடம்புக்கு முடியலையா அத்தை..?” என்றாள் எதுவும் அறியாதவள் போல்.

“இவளை எந்த வகையில் சேர்ப்பது..” என்று எண்ணிய மலர்,

“உனக்கு புரியலையா மதி. அவர் உன்கிட்ட பேசத் தயங்குறார். நீயாவது சகஜமா பேசலாம்ல..!” என்றார்.

“அவருக்கே அந்த தயக்கம் இருக்கும் போது, எனக்கு மட்டும் எப்படியத்தை உடனே தயக்கம் இல்லாமப் போகும். உங்க புள்ளைகிட்டையே நான் இன்னும் சரியா பேசலை..! எனக்கு மாமா மேல கோபம் இருந்தது உண்மைதான் அத்தை. ஆனா, அவரே எப்ப எங்க வீடு தேடி வந்தாரோ...அப்பவே நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்..! அவரை பீல் பண்ண வேண்டாம்ன்னு சொல்லுங்க..!” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.

பெரியசாமியின் காதுகளிலும், அவள் சொன்னது நன்றாகவே விழுந்தது. மதியைப் பற்றிய அவருடைய கணிப்புகள் எல்லாம் அப்படியே சரிந்து விழ, ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது அவருக்கு.

அப்போது வேகமாக வந்த ஒருவர்,

“மலரு...திலகா மக துர்கா மருந்தைக் குடிச்சுட்டாளாம்...முகிலன் தம்பி இருந்தா வர சொல்லு..!” என்று சொல்ல,

“முகிலன் இல்லையேக்கா...அவன் இப்பதான வெளிய போனான்..!” என்று மலரும் பதறிக் கொண்டு அவருடன் சென்றார். பெரியசாமிக்கும் அதிர்ச்சி. அவரும் செல்ல,

“எதுக்கு எல்லாரும் இப்படி ஓடுறாங்க...?” என்று புரியாமல் அவர்களின் பின்னே மதியும் சென்றாள்.

அலறியடித்துக் கொண்டு ஊரே திலகா வீட்டின் முன்பு கூட, பார்வதியும், மனோகரும் கூட வந்துவிட்டிருந்தனர்.

“பாவி மக...இப்படி அரளிக்காயை அரைச்சுக் குடிச்சுட்டாளே..!” என்று துர்காவை தன் மடியில் போட்டுக் கத்திக் கொண்டிருந்தார் திலகா.

“இப்படியே பார்த்துட்டு இருந்தா எப்படி...தூக்குங்க ஆஸ்பத்திரிக்கு..!” என்று சிலர் சொல்ல,

“அதுக்குள்ள,ஒன்னுகெடக்க ஒன்னு ஆகிடுச்சுன்னா..?” என்று சிலர் பயமுறுத்தினர்.

பார்வதி யாரையும் சட்டை செய்யாமல் உள்ளே சென்றவர், துவைக்க வைத்திருந்த சோப்பை நன்கு கரைத்துக் கொண்டு வந்தார்.

“சோப்புத் தண்ணிய ஊத்துவோம்...! உள்ள போன அரளி விதையெல்லாம் உடனே வந்துடும்...!” என்றபடி, துர்காவின் வாயைப் பிடித்து, சோப்புத் தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தனர். வயிற்றுக்குள் சென்ற சில நிமிடங்களில், அவள் தின்ற அரளி விதையெல்லாம், போன வேகத்திற்கு வெளியே வந்தது. துர்கா வாந்தி எடுத்துக் கொண்டிருக்க, அப்போது வந்தான் முகிலன்.

“விலகுங்க..! கொஞ்சம் காத்து வரட்டும்..!” என்றவன், அவளைப் பரிசோதிக்க, அவளின் நல்ல நேரம், எல்லாமே வெளியே வந்திருந்தது.

“பிராப்ளம் இல்லை. எதுக்கும் ஹாஸ்பிட்டல் போய், ஸ்டொமக் வாஷ் பண்ணிட்டா...எப்பவும் பயப்படத் தேவையில்லை..!” என்றான்.

“நீங்க டாக்டரு தானா...என்ன பண்ணணுமோ நீங்களே பண்ணிடுங்க..!” என்றார் திலகாவின் கணவர் கணபதி.

“அந்த வசதியெல்லாம் இங்க இல்லை மாமா. வீட்டில் வச்சு பண்ற விஷயம் இல்லை. நான் ஒரு இன்ஜெக்ஷன் போடுறேன். பக்கத்து ஊர்ல இருக்குற ஜிஹெச்ல கூட போய் அட்மிட் பண்ணுங்க..!” என்றான்.

“அதை நீ சொல்லாத...! உன்னால தான் என் மக இப்படிக் கெடக்குறா..?” என்று திலகா ஆங்காரமாய் கத்தத் தொடங்கினார்.

அதற்குள் விஷயம் கேள்விப் பட்டு துரையும் அங்கு வர, துர்காவை மறந்து, அங்கு சண்டையே வந்தது. மனைவியை வெறுப்புடன் பார்த்த கணபதி, யாரையும் கண்டு கொள்ளாமல், துர்காவை அழைத்துக் கொண்டு அவர் ஆஸ்பத்திரி செல்ல, அது கூட தெரியாமல் சண்டையில் இறங்கியிருந்தார் திலகா.

“என்ன சொல்றிங்க மதினி..! பார்த்துப் பேசுங்க...? உங்க மக மருந்தைக் குடிச்சதுக்கு, என் மகன் எப்படி காரணமாவான்..?” என்றார் மலர்.

“கட்டிக்கிறேன், கட்டிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திப் புட்டிங்க. அதான், அவ மனசு தாங்கம அரளி விதையை அரைச்சுக் குடிச்சுட்டா..!” என்றார் திலகா.

“நம்புற மாதிரி இல்லையே...?” என்றாள் மதி.

“ஏண்டி பேசமாட்ட...? என் மக வாழ்க்கையைக் கெடுத்துட்டு...நீ மட்டும் நல்லா இருந்துடுவியா..?” என்று கத்த,

“கண்டிப்பா நல்லா இருப்பேன். உங்களை மாதிரி யார் வாழ்க்கையையும் கெடுக்கணும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது கிடையாது. அதுக்காகவே நான் நல்லா தான் இருப்பேன். அப்பறம், நீங்க மாப்பிள்ளை பார்த்தது, மலர் அத்தை மகன் முகிலனை இல்ல. மதியோட புருஷன் முகிலனை. அடுத்தவ புருஷனை, தாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குற தாயை எங்கையாவது பார்த்திருக்கிங்களா...?” என்று மதி கத்த, அவளின் கத்தலில் அந்த இடமே அமைதியாகியது.

முகிலன் மதியைப் பார்க்க, அவளோ அவனைக் கண்டு கொள்ளவில்லை.
 
“விடு மதி..! அங்க துர்காவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை...இந்த நேரத்துல பேசுற பேச்சா இது..!” என்றார் பார்வதி.

“உங்களுக்குத் தெரியுது..! பெத்த தாயி இவகளுக்குத் தெரியலையே மதினி..!” என்றார் மலர்.

“எப்படிப் பெரியம்மா தெரியும். அரளிக் காயைப் பிடுங்கி, அரைச்சுக் கொடுத்ததே அவுக தானே..?” என்று சொன்னபடி வந்தான் முத்து. அனைவரும் அவனைத் திரும்பிப் பார்க்க,

“நீ என்ன சொல்ற முத்து...?” என்றார் மலர்.

“ஆமா பெரியம்மா..! இன்னைக்கு காலைல தோட்டத்துக்குப் போகும் போது தான் பார்த்தேன்...இவங்க நாடகத்தை...” என்றான்.

“நாடகமா..?” என்றனர் புரியாமல்.

“ஆமா..! நாடகமே தான். மதி வாழ்க்கையை கெடுக்க நினைச்சாங்க, அது நடந்திடுச்சு ஒரு காலத்தில். முகிலனை எப்படியாவது அவங்க மாப்பிள்ளை ஆக்கணும்ன்னு முயற்சி பண்ணினாங்க....அது நடக்கலை.யாரும் எதிர்பாக்காத திருப்பமா, முகிலனும்,மதியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. அது அவங்களுக்குப் பொறுக்கலை. இப்போ துர்கா மருந்தைத் தானா குடிக்கலை. இவங்க தான் குடிக்க வச்சிருப்பாக. யாருமில்லன்னு நினைச்சுகிட்டு, காலையில இவக பேசினது எல்லாமே என் காதில் விழுந்துச்சு...!” என்றான் முத்து.

“என்னடா கதை சொல்ற..? நீ சொல்றதுக்கு என்ன ஆதாரம்..?” என்று சிலும்பிக் கொண்டு வந்தான் துரை.

முத்து அவனை முறைத்துக் கொண்டு நிற்க,

“என்ன திலகா இதெல்லாம்..? எது எதுல விளையாடுறதுன்னு இல்லை. ஒருவேளை விபரீதமா ஏதாவது நடந்திருந்தா...? உசுரு போனா திரும்ப வருமா..?” என்று அரசி சத்தம் போட்டார்.

“உசுரு போயிருந்தா, அதுக்கும் என் மகன் தான் காரணமுன்னு சொல்லி, ஜெயிலுக்கு அனுப்பலாம்ன்னு நினைச்சிருப்பாங்க... இல்லையா மதினி...?” என்றார் மலர் கோபமாய்.

“ஏற்கனவே அனுப்பினவக தான...? மறுபடியும் அனுப்பலாம்ன்னு நினைச்சிருப்பாங்க..!” என்றான் முத்து.

“நீ என்ன சொல்ற முத்து...?” என்று மலர் புரியாமல் கேட்க,

“ஆமா, இப்ப வந்து கேளுங்க. எத்தனை தடவை சொல்ல வந்தேன். யாராவது சொல்ல விட்டிங்களா...? என்னமோ மதி பக்கத்துல வந்தாலே, அவளையும் என்னையும் வச்சு எப்படிப் பேசுனிங்க..? அப்பல்லாம் எங்க போனிங்க...? முகிலன் கல்யாணத்தன்னைக்கு, போலீஸ்க்கு சொன்னது நான்தான் அப்படின்னு தான நினைச்சிங்க..? கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திங்களா பெரியம்மா...?

உங்க வீட்ல தான் போனே இருந்துச்சு.உங்க வீட்டுக்குள்ள சர்வ சாதரணமா நான் நடமாடிக்கிட்டு இருந்தேனா..? இல்லை திலகா அத்தை நடமாடிக்கிட்டு இருந்தாங்களா..? இதைக் கூட யோசிக்கத் தோணலையே உங்களுக்கு...!” என்றான் வெம்பிப் போன குரலில்.

“முத்து சொல்றது உண்மையா திலகா மதினி..?” என்றார் மலர் ஆக்ரோஷமாய்.

உண்மை வெளிப்பட்டு விட்டதால், திலகா பயப்படவெல்லாம் இல்லை.

“ஆமா..! நான் தான் பண்ணுனேன். துரை தான் பேசுனான். இப்ப என்னாங்குற..?” என்று திலகா திமிறிக் கொண்டு வர,

“ச்சை..இப்படிப் பேச வாய் கூசலை உங்களுக்கு. ஒரு நல்ல காரியத்தை கெடுத்தோம்ன்னு மனசு கிடந்தது அடிக்கலை. எதுவுமே தெரியாத மாதிரி எப்படிப் பேசி நடிச்சிங்க. பண்றதையும் பண்ணிட்டு, என் மகனையே உங்களுக்கு மாப்பிள்ளை ஆக்கணும்ன்னு வேற நினைச்சிருக்கிங்க..? உங்களுக்கு பார்வதி மதினி குடும்பத்தை தான் ஆகாது. நான் என்ன பண்ணினேன். என் புருஷன் என்ன பண்ணார்..? இல்லை என் மகன் தான் என்ன பண்ணான்...?” என்று கத்தியவர் அழுதே விட்டார்.

“அம்மா..! பேசாம இருக்கிங்களா..? உங்க அழுகைக்கு எல்லாம் இவங்க அருகதையே இல்லாதவங்க. இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். இவ்வளவு யோசிக்காமையா இருந்திருப்பேன். போனதைப் பேசி என்ன ஆகப் போகுது. உங்களுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவிங்கன்னு தான் சொல்லலை..!” என்றான் முகிலன்.

“எப்படி முகிலா...இப்படி இருக்காங்க...?” என்று மலர் அழுக,

“இது மட்டுமா பண்ணியிருக்காங்க...? என் பொண்டாட்டி செத்ததுக்கு காரணமே இவங்க தான் பெரியம்மா. அவகிட்ட, என்னையும் மதியையும் பத்தி, தப்புத் தப்பா சொல்லி, எங்களுக்குள்ள சண்டையை வர வச்சு, என் வாழ்க்கையையும் சேர்த்தே அழிச்சுட்டாங்க..!” என்றான் வேதனையுடன்.

“என்ன சொல்ற முத்து..?” என்று மதி அதிர்ந்து கேட்க,

“ஆமாம் மதி..! அவளும் இப்படி அரளிக்காயை சாப்பிட்டு தான் செத்தா. சும்மா அரைச்சுக் குடிக்கிற மாதிரி குடி. அப்போதான் உன் புருஷன் உன் வழிக்கு வருவான்...அப்படி இப்படின்னு அவளை உசுப்பேத்தி விட்ருக்காக. இவங்க ஒரு விஷம்ன்னு தெரியாம, அவளும் என்னை பயமுறுத்துறதா நினைச்சு மருந்தைக் குடிக்க, எவ்வளவு முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியலை. சாகப் போற கடைசி நிமிஷத்துல, என்கிட்டே சொல்லிட்டு தான் செத்தா.

அப்போ கூட, அவ சாவுக்கு நான் தான் காரணம்ன்னு சொல்லி, போலீஸ்கிட்ட ஏத்தி விட்டதும் இவங்க தான். அப்போ இருந்த மனநிலையில் நானும் ஒன்னும் செய்ய முடியலை.ஆனா அப்போவே நினைச்சேன், இவங்களால உனக்கு இனி எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு.

நீயும் இந்த ஊருக்கு வந்ததுல இருந்து, இதைத்தான் சொல்ல முயற்சி பண்ணேன். ஆனா, முடியலை..” என்றான் முத்து வேதனை நிறைந்த குரலில்.

“முத்து...!!!!!!” என்று அவனின் கையைப் பிடித்த மதி, கதறி அழுதே விட்டாள்.

“என்னால தான் உனக்கு இவ்வளவு பிரச்சனையும்...! என்னால உன்னோட வாழ்க்கையே போய்டுச்சே முத்து..!” என்று அவள் கதறி அழ,

“என்னை மன்னிச்சுடு முத்து..! நான் கூட தப்பா நினைச்சுட்டேன்..!” என்று மலரும் சொல்ல,

“யார் என்ன நினைச்சிங்கன்னு எனக்குக் கவலை இல்லை. ஆனா கடைசி வரைக்கும் மதி என்னை நம்புனா பாருங்க. அது தான் நட்பு. முகிலனுக்கு மதியைப் பேசி முடிச்சப்ப, சின்னதா ஒரு பொறாமை வந்தது உண்மைதான். அந்த வயசுல அதுக்கு அர்த்தம் தெரியலை.நீ பெருசா, நான் பெருசான்னு பார்க்குற வயசு. ஆனா, மதி வாழ்க்கை கெட்டுப் போகணும்ன்னு நான் எப்படி நினைப்பேன்..! யாரு என்ன சொன்னாலும், ஏன் முகிலனே கோபப் பட்டப்பக் கூட, மதி என்னை விட்டுக் குடுக்கலை...இதுல இருந்து தெரியலையா...எங்க உறவு முறை.

இப்பன்னு இல்லை..இனி எப்பவுமே, மதிக்கு ஒரு பிரச்சனைன்னா...இந்த முத்து நிப்பான். எவன் என்ன வேணுமின்னாலும் பேசிக்கோங்க..!” என்றபடி சென்று விட்டான் முத்து.

முகிலன், தனக்கு இதெல்லாம் தெரியும் என்ற ரீதியில் நின்றிருக்க, பெரியசாமியும் தலை குனிந்தார்.

“நீ இந்த அளவுக்கு வக்கிரம் பிடிச்சுப் போய்ருப்பன்னு நான் நினைக்கவேயில்லை திலகா..!” என்ற அரசி, மதியுடன் சென்று,

“உன்கிட்ட மன்னிப்பு கேட்கிற தகுதி கூட இல்லை மதி. என் பொண்ணையே நான் தப்பா பேசிட்டேன்..!” என்றார் அரசி வருந்தி.

“விடுங்க பெரியம்மா...! பழசெல்லாம் பேச வேண்டாம்..!” என்றாள் மதி.

“எல்லாரும் ஒன்னு கூடிட்டிங்க...!!!” என்று திலகா ஆங்காரமாய் கத்த,

“கொஞ்சம் விட்டிருந்தா, உன் பொண்ணு செத்திருப்பா..இப்பக் கூட பார்வதி தான் உன் மகளைக் காப்பாத்தியிருக்கா..! இன்னமும் நீ திருந்தலைன்னா...நீயெல்லாம் மனுஷியே கிடையாது..!” என்றார் அரசி.

“நான் இப்படித்தான்..! யாரோட தயவும் எனக்குத் தேவையில்லை..!” என்றார் திலகா.

“எப்படியோ போய்த் தொலை..!” என்று அரசி சொல்ல,

“இனி எங்க வாழ்க்கையில, கலகம் பண்ணனும்ன்னு நினைச்சிங்க... அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை.நீங்க இதுவரைக்கு செஞ்சதுக்கே..., நாங்க நினைச்சா பல வருஷம் உள்ள தள்ள முடியும். கணபதி மாமா முகத்துக்காக சும்மா விடுறேன்..!” என்றான் முகிலன் கோபமாய்.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய, ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றைப் பேசிக் கொண்டு சென்றனர். எல்லோரும் சென்ற பிறகு,

“அந்த முத்துப் பய சொன்னது எல்லாம் உண்மையாம்மா...?” என்றான் துரை.

“ஆமா துரை..! ஆனா ஏன் பன்னுனேன்னா...?” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரை அறைந்திருந்தான் துரைப் பாண்டி.

“துரை..!”

“துரை தான்..! நீ செஞ்ச எல்லாத்துக்கும் துணையா இருந்தேன் பாரு...இப்ப கூட உன்மேல தப்பு இருக்காதுன்னு சண்டைக்குப் போனேன் பாரு...என்னைச் சொல்லனும். எப்படிம்மா உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. துர்காவுக்கு ஏதாவது ஆகியிருந்தா...? என்ன பண்ணியிருப்ப...அப்படி என்ன உனக்கு பழி வாங்குற எண்ணம்.இதை எல்லார் முன்னாடியும் நான் செஞ்சிருக்க முடியும். என்ன பண்றது..? என்னை பெத்தத் தாயே போய்ட்டியே...?

நான் இப்ப துர்காவைப் பார்க்க போறேன். எல்லாத்தையும் விட்டுட்டு, எங்களுக்கு அம்மாவா மட்டும் இருக்குறதுன்னா வா. இல்லைன்னா, தயவு செஞ்சு இப்படியே எங்கயாச்சும் போய்டு..!” என்றபடி, தங்கையையும், தந்தையையும் நாடிச் சென்று விட்டான் துரை. திலகாவின் பழி உணர்ச்சி, அவரை நடுரோட்டில், தனி ஆளாய் நிறுத்தியிருந்தது.

வீட்டிற்கு வந்த மதி, முத்துவை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். இப்படி வேதனையுடன் முத்து பேசி, இன்று தான் கேட்கிறாள் மதி. எப்போதும் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்ள கூடியவன். இத்தனையும் மனதில் போட்டுக் கொண்டிருந்தானா..? பத்து வருடங்கள் கழித்து வந்த பின்பும், உனக்கு நான் இருக்கிறேன் என்று சொன்னதன் அர்த்தம் இது தானா..? என்று நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள்.

அவள் அழுது கொண்டிருப்பாள் என்று முகிலனுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், இப்போது தான் காய்ச்சலில் இருந்து தேறியிருக்கிறாள்.மறுபடியும் வந்துவிட்டால்...என்று யோசித்தவன், மதியைத் தேடிச் செல்ல,

மதிக்கோ, முகிலன் வந்தது எதுவும் கருத்தில் படவில்லை.

“மதி..!!!!” என்றான் முகிலன் ஆறுதலான குரலில்.அவன் குரல் கேட்ட மதி,

“மணி மாமா...!!!!!” என்ற கதறலுடன், ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.தானும் அவளை அணைத்துக் கொண்டவன்,

“மதி அழாத..!!!” என்றான்.

“முத்து பாவம் மணி மாமா..!! என்னால தான்...எல்லாமே என்னால தான்..!” என்று அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள். முகிலனுக்கும் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை. அவளை அணைத்தபடியே நின்றிருந்தான்.









 
சூப்பர் ஸ்டோரி, உமா டியர்
பத்து வருஷங்களுக்கு முன்னாடி அன்னிக்கு திலகாதான் போன் செஞ்சு முகிலனை போலீசில் மாட்டி விட்டிருப்பாள்ன்னு நினைத்தேன்
அதே போலே திலகாதான் இந்த
வேலையை செஞ்சிருக்காள்
 
Last edited:
Top