Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
தடையில்லை நதியே பாய்ந்தோடு

நதியோட்டம் – 2

பரமேஷ்வரன் தன் அறையில் தூங்காமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே படுக்கையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பரணியை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டார். அவரால் அதை மட்டும் தானே செய்ய முடியும். பரணியால் மகளை கண்டிக்க முடியும் போது தன்னால் மட்டும் முடியவில்லையே என்ற ஆதங்கம் கூட அவ்வப்போது சிறிது தலைதூக்கி பார்க்கும். மகள் எப்போது வருவாளோ அப்போதுதான் அவருக்கு தூக்கமே வரும்.

தப்பி தவறி மகள் வரும் நேரத்தில் பரணி முழித்துக்கொண்டால், மகளுக்கும் மனைவிக்கும் இடையே தான் சிக்கிக்கொண்டால் தன் பாடு திண்டாட்டமாகிவிடுமே. அவர் கவலை அவருக்கு. அதை நினைத்தால் பொட்டு தூக்கம் கூட கண்களை அண்டவில்லை. மகளையும் கண்டிக்க முடியாமல் மனைவியையும் சமாளிக்க முடியாமல் அவர் அவஸ்தையை மனதிற்குள்ளே சொல்லி சொல்லி மாய்ந்துபோனார்.

வாசலில் கேட் திறக்கும் சத்தம் மிக மிக குறைவாகவே கேட்டது. பின்னே மகள் வந்ததும் கேட்டை முக மெதுவாக திறந்துவிடுமாறு வாட்ச்மேனிடம் உத்தரவிட்டது சாட்சாத் பரமேஷ்வரனே. அந்த சத்தத்திலும் பரணியிடம் தென்பட்ட அசைவு தான் பரமேஷ்வரனை பதட்டத்திற்குள்ளாக்கியது.

“அய்யயோ!!! இந்நேரம் பார்த்து இவ வேற முழிச்சுக்குவாளோ?...” என்ற பரிதவிப்போடு கைகளை பிசைந்துகொண்டே அறையை விட்டு வெளியே வந்தவர் கதவை சாற்றிவிட்டு மகளை நோக்கி வேகவேகமாக நடைபோட்டார்.

அங்கே அவர் பார்த்த காட்சி ஏற்கனவே பயத்தில் இருந்தவருக்கு மேலும் அழுத்தத்தை கூட்டியது.

“ஒழுங்கா உள்ள வரப்போறையா?... இல்லை அம்மாவை கூப்பிடட்டுமா?...” என நிஷாந்த்தோடு ரகளையில் ஈடுபட்டிருந்தாள் ஹர்ஷிவ்தா. அதை பார்த்த பரமேஷ்வரன், “இவளே பரணியை எழுப்பிவிட்டு என்னை வச்சு ஆடுபுலி ஆட்டம் ஆடிருவா போலையே. என் நிலைமை இப்படியா ஆவனும் கடவுளே?...” என நொந்துகொண்டே,

“ஹர்ஷூம்மா என்னடா இது இந்த நேரத்துல வாசல்ல வச்சு வம்பு பண்ணிட்டு இருக்க. நிஷாந்த் காலையில வருவான் அவனை விடு...” என்றவரது முகத்தில் கெஞ்சலும் குரலில் பதட்டமும் குடியிருக்க பரிதாபமாக கேட்டவர்,

“நிஷாந்த் நீ கிளம்புடா. நேரமாகுது பாரு. மணி இப்போவே மூணாகிடுச்சு. போ, போய் தூங்கு. காலையில ஹர்ஷூவை பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரியும் தானே?... இங்க நேரத்துக்கு நீ வரனுமே...”என கண்களால் சைகை காட்டி அவனை கிளம்பி விடுவதில் குறியாக இருந்தார்.

ஹர்ஷூ செய்த அலப்பறையில் இன்றும் எங்கே பரணி முழித்துகொள்வாரோ என்ற கவலை தான் அவருக்கு. அவரது பெண்ணரசி தான் அவரது நிலையை புரிந்துகொள்ளவே இல்லையே? ஆனால் அவரின் கண்ணசைவிலேயே அதை புரிந்துகொண்டு நிஷாந்த் கிளம்ப முற்படும் போது அவனை மறித்துக்கொண்டு வந்து நின்றாள் ஹர்ஷூ. இடுப்பில் கைகளை ஊன்றி அவனை முறைத்தவள்,

“இப்போ நீ மட்டும் உள்ள வரலை...” என சுட்டுவிரலை நீட்டி எச்சரித்துக்கொண்டிருக்கும் போதே நிஷாந்தின் மொபைல் சிணுங்கியது. யாராக இருக்குமென எடுத்து பார்த்தவனது முகம் பேயறைந்தது போல் ஆனது. அழைத்தது பரணியாகிற்றே.

மொபைலில் வந்த அழைப்பை கட் செய்தவன் ஹர்ஷூவை முறைத்துக்கொண்டே உள்ளே நடக்க ஆரம்பித்தான். அவனை தொடர்ந்த ஹர்ஷூ, “ம்ம்!!! அந்த பயம் இருக்கட்டும்...” என்று தன்னையே மெச்சிக்கொண்டு அசால்ட்டாக சென்றாள். பரமேஷ்வரனின் நிலைதான் பரிதாபமாக போயிற்று.

“இன்னைக்கும் ஒரு பஞ்சாயத்தா? ஒரு நாளைக்கு எத்தனை பஞ்சாயத்தை தான் சமாளிக்கிறது?...” என உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே முகத்தை முறைப்பாகவும் உடலை விறைப்பாகவும் வைத்துக்கொண்டு வேகமாக உள்ளே வந்தவர் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து நிஷாந்த்தை பார்த்து தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பிக்கும் முன்னே பரணி கைகளில் காபி கோப்பைகளோடு வந்து சேர்ந்தார்.

பரணியை குற்றஉணர்ச்சியோடு நிஷாந்த் பார்த்தால் ஹர்ஷூ அதற்கு நேர்மாறாக குதூகலத்தோடு பார்த்து,

“வாவ்!!! சு-னா பா-னா சூப்பர் போங்க. இந்நேரம் காபியோட ஒரு என்ட்ரி. மகளின் மனம் புரிந்த மகாலட்சுமி மாம் நீங்க. கலக்கிட்டீங்க...” என்றவள் பரணியின் கைகளில் இருந்த கோப்பைகளில் ஒன்றை தான் எடுத்துக்கொண்டு மற்றொன்றை நிஷாந்த் புறம் நீட்டி,

“நிஷூ இந்தா உன் காபி. இதை போய் மிஸ் பண்ணிட்டு போறேன்னுதான் உன்னை கூப்பிட்டேன். பார்த்தியா மாம் ரெடியா காபியோட காத்திட்டு இருக்காங்க. நீ வராம போனா அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் தானே?...” என்று வியாக்கியானம் பேசியவளை முறைத்த நிஷாந்த்,

“ஹரி, கொஞ்சம் அமைதியா இரு. லொடலொடன்னு பேசாதன்னு எத்தனை தடவை தான் சொல்றது. அதுவுமில்லாம எப்போ பாரு அதென்ன சு-னா ப-னா? ராஸ்கல், ஒழுங்கா அம்மான்னு கூப்பிடு. புரியுதா?...” என அதட்டல் போட பரமேஷ்வரனின் கண்கள் மின்னியது.

“ஆஹா நாம என்ட்ரி கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு...” என நினைத்துக்கொண்டே நிஷாந்தின் முன்னால் வந்து நின்றவர்,

“டேய், எத்தனை தடவை தான் சொல்றது அவளை ஹரின்னு கூப்பிடாதேன்னு. ஒருதடவை சொன்னா நீயும் தான் புரிஞ்சுக்கனும். ஆம்பள புள்ளையை கூப்பிடறது போல எப்போ பாரு ஹரி ஹரின்னுட்டு. இன்னொருக்க அப்டி கூப்பிட்ட தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை...” என்று ஆவேசமாக பேச,

“ஏன் பெரியப்பா உங்க பொண்ணு கூடதான் என்னை நிஷூன்னு பொம்பளை புள்ளையை கூப்பிடறது போல கூப்பிடறா. அவளையும் இதே போல என்னை அப்டி கூப்பிட கூடாதுன்னு கண்டிச்சு சொல்லுங்களேன்?...” என அவரை கார்னர் செய்தான்.

“பயபுள்ள நேரம் பார்த்து எப்டி நேக்கா கோர்த்து விடுத்து பாரு?... அதுவும் என் பொண்டாட்டி முன்னாடியே...” என எண்ணிக்கொண்டே பரணியை பார்க்க அவரோ இவரை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார்.

“தேவையில்லாம பேசி தானா போய் சிக்கிட்டியே ஈஷ்வரா. கம்முனு கிடைச்ச இடத்துல உட்கார்ந்திருக்க வேண்டியது தானே. இப்போ இவ என்ன நினைக்கிறா அப்டின்னு ஒண்ணுமே தெரியலையே...” என்று பரணியின் முகத்தை கூர்ந்து நோக்க அப்போதும் அப்படியே அமர்ந்தவரே அவரும் ஈஷ்வரனை தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ம்ஹூம், ஒன்னும் கண்டு பிடிக்க முடியலை. என்னமோ நமக்கு இன்னைக்கும் இப்படித்தான் விதிச்சிருக்கு போல...” என்று நினைத்துக்கொண்டே மகளை பார்க்க அவளோ கருமமே கண்ணாக காபியை குடித்துக்கொண்டே மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள். வெறுத்துப்போனார் பரமேஷ்வரன். அவரின் நிலை பார்த்து எழுந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே மென்றுகொண்டு கிளம்ப ஆயத்தமானான் நிஷாந்த்.

“ஓகே பரணிம்மா. நான் கிளம்பறேன்...” என்று சொல்லியவனை ஒரு கண்டனப்பார்வை பார்த்த பரணியிடம், “சாரி பரணிம்மா. ஆனாலும் இதை என்னால தவிர்க்கமுடியாது...” என்று ஒரு தீவிர பாவத்தோடு கூறியவனை இயலாமையோடு பார்த்த பரணி,

“ம்ம். சரி நிஷாந்த். போனதும் போன் பண்ணு. நாளைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரமே அம்மாவை கூட்டிட்டு வா...” என்றவர் பரமேஷ்வரனை பார்த்துக்கொண்டே,

“நாளைக்கு வீட்டுக்கு வரவங்க காலையிலேயே பார்க்க வராங்களாம். உன் பெரியப்பா சொன்னார். புரியுதா?...” என்றதும் நிஷாந்த் மனதுக்குள் கொஞ்சம் அமிழ்ந்திருந்த குற்றஉணர்வு மீண்டும் மேலெழும்ப ஆரம்பித்தது.

அவன் ஹர்ஷூவை பார்க்க அவளோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கொட்டாவியை விட்டுக்கொண்டு அப்பாவியாக அமர்ந்திருந்தாள். அவளை முறைத்தும் பிரயோஜனமில்லை என எண்ணியவன் பரணியிடம் தலையாட்டிவிட்டு பரமேஷ்வரனை ஒரு பார்வை தயக்கமாக பார்த்துவிட்டே சென்றான்.

அவன் சென்ற மறுநொடியே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ஹர்ஷூவும் தன் அறை நோக்கி ஓட்டமெடுத்தாள். அங்கேயே நின்றுகொண்டிருந்தால் தன் மனம் பெற்றோருக்காக இளகிவிடுமோ என்று எண்ணி பயந்தவள் அதை தவிர்க்கவே அவ்வாறு சென்றுவிட்டாள்.

அவள் சென்ற வேகத்திலிருந்தே பரணிக்கு தெரிந்துவிட்டது. இத்திருமண ஏற்பாட்டை நிறுத்த தன் மகள் ஏதோ திருகுதாளம் செய்துவிட்டாள் என்பது அவருக்கு நிச்சயம் ஆகிற்று.

அவள் சென்ற திசையை பார்த்துகொண்டிருந்தவர் தூக்கத்தை தொலைத்தவராக பூஜையறைக்குள் சென்று மறைந்தார். இதையனைத்தையும் தடுக்கமுடியாமல் கையாலாகாதனத்தோடு சோகமே உருவாக அமர்ந்துவிட்டார் பரமேஷ்வரன்.

நிஷாந்த் அங்கிருந்து புறப்பட்டாலும் அவனின் மனம் ஹர்ஷூவின் வீட்டையே சுற்றிக்கொண்டிருந்தது. பரமேஷ்வரன் எல்லா நாட்களும் இப்படி அமைதியாக இருப்பவர் அல்ல. சிலநாள் அவனுக்கு பெரிய மண்டகப்படியும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் பேசி பேசியே கதறடித்து தான் விடுவார். அவருக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது. ஆனால் அவரை போல யாராலும் கோபப்படவும் முடியாது என்பதை எத்தனையோ முறை கண்கூடாக பார்த்தவனாகிற்றே.

மகள் விஷயத்தில் மட்டும் அவரால் சட்டென்று எதையும் செய்யமுடியாத சூழ்நிலை கைதி போல ஆகிவிட்டார். அதற்கு தானும் ஒருவகையில் காரணமாகிவிட்டோம் என்று நிஷாந்த் பலநாள் வருந்தியதுண்டு.

நிஷாந்த் பரமேஷ்வரனின் அண்ணன் செல்வத்தின் மகன். செல்வம் தன் தம்பி போல் இல்லாமல் அவரளவில் சூப்பர் மார்கெட் வைத்து நடத்திக்கொண்டிருப்பவர். ஆனாலும் அண்ணன் தம்பி இருவரிடையேயும் அப்படி ஒரு ஒட்டுதல்.

நிஷாந்த் ஹர்ஷூவோடு ஒன்றாக வளர்ந்தவன். அவளோடே பள்ளி கல்லூரி என ஒன்றாக படித்தவனும் கூட. அவனை விட ஹர்ஷூவின் மனதினை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. அதனாலேயே அவன் ஹர்ஷூவின் அடாவடிக்கு தடைபோட முடியவில்லை. இப்போது அதை தவறென்று உணர்கிறான். பரணியின் கவலை தேங்கிய முகமே நிஷாந்தின் கண்முன் நிழலாடியது.

நாளை நடக்கவிருக்கும் விசேஷத்தில் பரணிக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை என்றாலும் அவரது இதயத்தின் மூலையில் ஒரு ஆவல் இருக்கத்தான் செய்தது. நாளை நடப்பவை நல்லவையாக அமைந்து தன் மகளை மணக்கோலத்தில் பார்த்துவிடமாட்டோமா என்ற எண்ணவோட்டத்தினை அவரது கண்ணோரத்தில் சிறு துடிப்பு பிரதிபலிக்கத்தான் செய்தது.

ஆனால் ஹர்ஷூ செய்துவிட்டு வந்திருக்கும் காரியம்?... அது தெரிந்தால் நாளை மாப்பிள்ளை வீட்டார் வரவே மாட்டார்கள் என்னும் விஷயத்தை பரணிம்மா தாங்குவார்களா என்ற வருத்தம் அதிகரிக்க கனமான மனதோடு இரண்டு தெரு தள்ளி இருக்கும் தன் இல்லம் நோக்கி சென்றான் நிஷாந்த்.

காலையில் அம்மாவிடம் சொல்லிக்கொள்ளலாமென நினைத்துக்கொண்டே தன்னிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறக்க அங்கே இவனது பைக் சத்தத்தில் கண் விழித்த சரஸ்வதி தன் அறையை விட்டு வெளியே வந்தவரிடம்,

“நீங்க ஏன்மா இந்நேரம் உங்க தூக்கத்தை கெடுத்துட்டு எழுந்து வந்தீங்க? போய் தூங்குங்க...” என்றவனை கனிவாக பார்த்தவர்,

“ஹர்ஷூவை வீட்ல விட்டாச்சா? நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டீங்களா?...” என்று அதிமுக்கியமான கேள்வியை கேட்டார்.

“அவரை கேலியாக பார்த்தவன், “நல்லா கேட்டீங்கம்மா. இவ்வளோ நேரம் சாப்பிடாம இருக்கமாட்டோம்னு உங்களுக்கும் தான் தெரியுமே? அதை விடுங்க எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பரணிம்மா உங்களை சீக்கிரமே வர சொன்னாங்க. நானும் ரெடியாகிடறேன். ரெண்டுபேருமா போவோம். சரியா?...” என கூறிவிட்டு பரணிக்கும் அழைத்து வீடு வந்துவிட்டதை சொல்லிவிட்டு மாடி ஏறிவிட்டான்.

சரஸ்வதியோ அப்போதிருந்தே நாளை நடக்கும் பெண் பார்க்கும் படலம் நல்லவிதமாக முடியவேண்டும் என்று கடவுளுக்கு வேண்டுதல் வைத்துவிட்டு உறங்க சென்றார்.

---------------------------------------------------

தினம் தினம் விடியும் விடியலில் ஒவ்வொருவருக்குமான கனவுகள் நனவாக வேண்டுமென்ற எதிர்பார்பார்ப்புகளுடனே விடிகிறது.

பரணி மட்டுமல்லாது ஹர்ஷூவை தவிர அக்குடும்பத்தினர் அனைவருக்கும் அவளது வாழ்க்கை பிரகாசிக்கக்கூடிய விடியலாக இந்த விடியல் அமைந்துவிடாதா என்ற பேராசை தான் அவ்வீட்டினரை நொடிக்கு நொடி ஆட்கொண்டிருக்கிறது. இன்றைய விடியல் அத்தகையதுதான் என்பது ஹர்ஷிவ்தாவையும் சேர்த்து ஒருவரும் அறியாத ஒன்று.
 
ஆனால் நிஷாந்தின் மனம் மட்டும் ஒருவிதமாக உணர்வுகள் மரத்துப்போய் இருந்தது. அவனுக்குதான் மாப்பிள்ளை வீட்டார் இன்றைக்கு வரப்போவதில்லை என்பது தெரியுமே!!!.

விடிந்ததிலிருந்து பரமேஷ்வரன் வீட்டையே ரெண்டு பண்ணிக்கொண்டிருந்தார். அவருக்கு இன்றைக்கு தன் பெண்ணின் திருமணம் முடிவாகிவிடும் என்பது உறுதியாக தெரிந்தது. வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாரின் மீது அந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தார்.

பரமேஷ்வரனின் அளவிற்கு பரணி எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் இயல்பாகவே ஆகவேண்டிய வேலைகளை பார்த்துகொண்டிருந்தார் சரஸ்வதியின் துணையோடு. செல்வத்தால் வரமுடியாத காரணத்தால் அவர் வரவில்லை.

பரணியை பொறுத்தவரையில் வீட்டிற்கு வருகிறவர்களுக்கு எந்தவிதமான மரியாதை குறைவும் இல்லாமல் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் எண்ணம். அதனாலேயே அமைதியாக இருந்தார். அவரது எண்ணவோட்டம் அறியாதவரா சரஸ்வதி?

“பரணி ஸ்வீட்ஸ், டிபன் எல்லாம் ரெடியா?...” என்று கேட்டுக்கொண்டே சமையலறை வாயிலிற்கு வந்தவர் சரஸ்வதியை பார்த்து, “சரோ, நீ போய் ஹர்ஷூ கிளம்பிட்டாளான்னு பாரேன். இன்னும் அரைமணி நேரத்துல மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்திடுவாங்க. ம்ம். சீக்கிரமா போ...” என்று அவரை துரிதப்படுத்தினார். சரஸ்வதி பரணியை விட வயதில் இளையவள் தான். பரணிக்கு சொந்தமும் கூட. அவரை ஒருமையில் அழைத்து தான் பரமேஷ்வரனுக்கு பழக்கம்.

சரஸ்வதி அகன்றதும் பரணியை பார்த்து புன்னகை புரிந்தவர், “ எல்லாம் ரெடி தானே?... நீயும் போ பரணி. முகத்தை கழுவிட்டு தயாராகு...” என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு நகல அவரை எண்ணி மனம் கனத்துப்போனார் பரணி.

“கடவுளே!!! எங்களுக்காக, என் புருஷனுக்காக கொஞ்சம் மனம் இறங்க கூடாதா?...” என மனதிற்குள் கடவுளுடன் மனதோடு மன்றாடியவாறே தானும் தயாராக சென்றார்.

ஹர்ஷிவ்தாவின் அறையிலோ சரஸ்வதி சந்தோஷத்தில் மயக்கம் போடாத குறையாக நின்றிருந்தார். பின்னே!! அவரை ஆச்சர்யப்படுத்தும் விதமாக தானே மணப்பெண் கோலத்தில் சமத்தாக தயாராகி முகம் முழுவதும் சிரிப்போடு கொள்ளை அழகாக இருந்தவளை காண தெவிட்டவில்லை சரஸ்வதிக்கு.

“ஹர்ஷூ குட்டி. நீயே ரெடியாகிட்டயா? என்னால நம்பவே முடியலைடா. உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிடுச்சுன்னு நினைக்கேன். அதான் நீயே மனசை மாத்திக்கிட்ட. அப்டித்தானே?...”என வெள்ளந்தியாக கேட்டவரை குறுகுறுக்கும் உள்ளத்தோடு பார்த்து புன்முறுவல் பூத்தாள்.

சரஸ்வதியின் ஆச்சர்யத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் வரும் ஒவ்வொரு முறையும் ஹர்ஷிவ்தாவை தயார் செய்வதற்குள் அனைவருக்கும் மூச்சுமுட்டிப்போகும். அந்தளவிற்கு பாடாய் படுத்திவிடுவாள். அப்படிப்பட்டவள் இப்போது தானே ரெடியாகி நின்றாள் அந்த அன்னை உள்ளம் வேறு எப்படி எண்ணும்?

சந்தோஷத்தோடு கீழே சென்ற சரஸ்வதி அனைவரிடமும் இதை கூற பரமேஷ்வரன் தான் முதலில் ஆவலோடு மகளின் அறையை நோக்கி ஓடினார். பரணியின் பார்வையோ சந்தேகத்தோடு நிஷாந்தை துளைத்தது. ஆனால் அதனை முழுதாக செய்யவிடாமல் சரஸ்வதி பரணியின் கையை பிடித்துக்கொண்டு மாடியேற ஆரம்பித்துவிட்டார். அவரை தொடர்ந்து நிஷாந்தும்.

கண்ணாடிக்கு முன்னால் பதவிசாக அமர்ந்திருந்த மகளை கண்டு உள்ளம் பூரித்துப்போனார் பரமேஷ்வரன். அவரின் அளவற்ற மகிழ்ச்சி கண்களை மறைக்க கணவனின் விழிகளுக்கு தட்டுப்படாத மகளின் கள்ளத்தனம் அவளது கண்களின் வழியாக பரணிக்கு தென்பட்டுவிட்டது.

அதே துளைக்கும் பார்வையொன்றை நிஷாந்தை நோக்கி வீச அவனோ அவரது பார்வையை உணந்து குனிந்த தலை நிமிராமல் மரமாக நின்றிருந்தான். இந்த சம்பந்தம் கைகூடபோவதில்லை என்று உறுதிபட கணவனை தேற்றவேணும் தான் திடமாக இருக்கவேண்டுமென்று அவர் எதற்கும் தயாராகி விட்டார்.

“அம்மாடி ஹர்ஷூ. எனக்கு உன் மனசு புரிஞ்சிடுச்சும்மா. உனக்கு இந்த சம்பந்தம் புடிச்சிருக்குன்னு. இது ஒன்னும் போதும்டா. அப்பாக்கு மனசே நிறைஞ்சு போச்சு...” என்று தளுதளுத்துகொண்டே கூறியவர் சந்தோஷத்தில் கலங்கிய கண்களை மகளுக்கு காட்டாதவாறு சென்றுவிட்டார்.

தந்தையின் பேச்சில் தனக்குள் இறுகிக்கொண்டிருந்தவள் அவரின் பாசத்தில் திணறினாள். மெல்ல தாயை நிமிர்ந்து பார்க்க அவரோ அவளை பார்க்காமல் விருட்டென்று வெளியேறிவிட்டார். ஆனாலும் தன்னை தன் கோலத்தை பார்த்த தாயின் ஒரு நொடி பார்வையில் தெரிந்த ஆசையே அவளை குத்தி கிழித்தது.

மனம் கலங்கி விழிகளை விட்டு வெளியேறத்துடித்த கண்ணீருக்கு அணைபோட்டவள் வழிய பழைய நினைவுகளை நினைவடுக்கிலிருந்து உருவி மனதிற்குள் உருப்போட்டுகொண்டாள். நொடியில் அவளது முகம் பாறையாக மாறியது. அவளது முகத்தில் தெரிந்த பாவங்களிலேயே அவளது இதயத்தை அறிந்தவன் தாயை அழைத்துக்கொண்டு தானும் கீழே சென்றுவிட்டான்.

நிஷாந்த் சிறிது நேரத்தில் மீண்டும் மேலே வரும் போதும் வழக்கமான ஹர்ஷிவ்தாவாக அவள் மாறியிருக்க அவளது அலங்காரத்தால் விளைந்த கோவம் மீண்டும் உருவெடுத்தது நிஷாந்திற்கு.

“உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா ஹர்ஷூ?...” என காட்டமாக கேட்டவளை கேள்வியாக பார்த்தவள்,

“இல்லைனே வச்சுக்கோ. ஐ டோன்ட் கேர்...” என்றாள் திமிராக.

“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு நல்லாவே தெரியும். மாப்பிள்ளை வீட்டாளுங்க வரமாட்டாங்கன்னும் தெரியும். தெரிஞ்சும் இப்படி கல்யாண பொண்ணாட்டம் ட்ரெஸ் பண்ணிக்கிட்டு மேக்கப் போட்டுட்டு தயாராகி நின்னு பெத்தவங்க மனசுல ஆசையை குடுத்து இப்படி ஏமாத்த உன்னால எப்படி முடியுது? உனக்கு அப்படி ஒரு கல்மனசா? கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம எப்படித்தான் உன்னால இருக்க முடியுதோ?...” என தன்னால் முடிந்தளவுக்கு கோவமாக பேசியும் அசராமல் அமர்ந்துகொண்டு வேலை பார்க்கும் லட்சுமி அம்மா கொண்டுவந்த டிபனை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதற்குமேல் பொறுமை இழந்தவன் கீழே தன் தாய் அழைக்கும் குரல் கேட்டு சென்றுவிட்டான். அவன் சென்றதும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உணவை குப்பையில் கொட்டியவள் கை அலம்பி விட்டு மறுபடியும் வந்து அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து விட்டாள்.

அவளது கவனத்தை திசைதிருப்பும் விதமாக அவளது மொபைல் சிணுங்க அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததும் வேகமாக எடுத்து அழைப்பை ஏற்றாள். அதில் பேசியவர் என்ன சொன்னாரோ இவளது முகத்தில் குரூரமான வெற்றி சிரிப்பு.

“அதுங்களுக்கு பெயில் இந்த ஜென்மத்துல கிடைக்கவே கூடாது புரியுதா? எனக்கே தெரியாமலா தப்பிக்க பார்க்குதுங்க. வாழ்க்கை முழுதும் ஜெயில்லையே கிடந்து சாகட்டும். நீ கவனமா இரு...” என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தவளின் முகத்தில் கொஞ்சம் திருப்தி வந்து ஒட்டியது.

சிறிது நேரத்திலேயே கீழே அழைத்துப்போக சரஸ்வதி வரவும் முகத்தை சிரித்தது போல வைத்துக்கொண்டவள், “என்னாச்சு சித்தி? வந்துட்டாங்களா?...” என குரலில் எந்த பேதமும் இல்லாமல் சாதாரணமாக கேட்கவும்,

“அடடா என்ன ஒரு அவசரம் பாரு ஹர்ஷூக்கு. அதுக்குதானே வந்திருக்கேன். அவங்க வந்து பத்து நிமிஷம் ஆச்சு. இப்போதான் டிபன் எல்லாம் சாப்ட்டு முடிச்சாங்க. பேசிட்டு இருக்காங்க. அதான் உன்னை அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன்...” என ஹர்ஷிவ்தாவின் தலையில் பெரிய இடியாக நோகாமல் இறக்கினார்.

ஹர்ஷூவால் நம்பவே முடியவில்லை. கீழே செல்ல செல்ல மனம் சண்டிக்குதிரையாக அடம் பிடித்தது. கீழே போகாதே என கூக்குரலிட்டது. வேறு வழியில்லையே. நிஷாந்தை தான் முறைத்துப்பார்த்தாள். அவனுக்குமே இது எப்படி சாத்தியமானது என்று புலப்படவில்லை.

மாப்பிள்ளையை பார்த்தான். வெள்ளை மைதாமாவில் செய்த அமுல்பேபி போல மொழுமொழுவென்று இருந்த மாப்பிள்ளையாகப்பட்டவனை ஹர்ஷூவோடு ஜோடியாக ஒரு ஷணம் கூட நினைத்து பார்க்க முடியவில்லை.

இருவரது அதிர்ந்த முகத்திலிருந்தே இதில் ஏதோ விஷயமிருக்கிறது என்று உணர்ந்து கொண்டார் பரணி. இப்போதைக்கு எதையும் கேட்க வேண்டாம் என நினைத்துகொண்டு வந்தவர்களை கவனிப்பதில் முனைப்பாக இருந்தார்.

வந்தவர்களை நமஸ்கரிக்க சொல்லிய சரஸ்வதியின் பேச்சை தட்டமுடியாமல் வேண்டா வெறுப்பாக வணங்கியவள் மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்தப்பட்ட அவினாஷ். வழிசலோடு தன்னை பார்த்தவனது முகத்தை பார்க்க சகியாமல் கோவத்தை தனக்குள் அடக்கி கொண்டிருந்தவளிடம் தானாக போய் வகையாக மாட்டினான் அந்த அமுல்பேபி.

குரலில் வெட்கத்தை தாராளமாக வார்த்தைகளில் கசியவிட்டு, “மாமா, எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சுப்போச்சு. நான் உங்க பொண்ணுக்கிட்ட தனியா பேசனும். அலோவ் பண்ணுங்க ப்ளீஸ்...” என்றதுமே மாப்பிள்ளை வீட்டாரை தவிர்த்து மற்ற அனைவருக்குமே கலவரம் ஆகிவிட்டது.

அதை கேட்டதும் ஹர்ஷிவ்தாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அவினாஷை பார்த்து தன் இதழ்களில் இருந்து சிரிப்பை சிதறவிட அதை பார்த்தே சொக்கிவிட்டான்.

அவனின் முகத்திலிருந்தே அவன் பின்வாங்க போவதில்லை என்று அறிந்து இனி விதி விட்ட வழி என்று, “ ஹர்ஷூ மாப்பிள்ளையை அழைச்சிட்டு போமா...” என சரஸ்வதி கூறவும் அவளும் அமைதியாக பக்கத்திலிருந்த விருந்தினர் அறையை நோக்கி சென்றாள்.

முடிவு என்னவாக இருக்குமென்பது ஹர்ஷிவ்தாவை சேர்ந்தவர்களுக்கு ஓரளவிற்கு புலப்பட்டாலும் காலையில் அவளாக தயாராகி நின்றது இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் நட்பாசையை வெளியேறவிடாமல் கட்டி வைத்திருந்தது. அவினாஷை பரிதாபமாக பார்த்த நிஷாந்த மட்டும் ஒன்று இரண்டு என நொடிகளை கணக்கிட்டு கொண்டிருந்தான்.

தன் முன்னால் நடந்து சென்ற ஹர்ஷிவ்தாவின் அழகை ரசித்தவாறு அறைக்குள் சென்றவன் அறைக்கதவு சாற்றப்படவும்,

“வாவ்!!!...ஹர்ஷிவ்தா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. எனக்கு உங்களை போட்டோல பார்த்ததுமே பிடிச்சுப்போச்சு. எப்போ நேர்ல பார்ப்போம்னு ரொம்ப ஆவலா இருந்தேன். இன்னொன்னும் கண்டிப்பா சொல்லனும். உங்களோட முடி எவ்வளோ நீளமா, சில்கியா இருக்கு. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. உங்களை விட உங்க கூந்தல் அழகுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...” என படபடவென பிதற்றலாக சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் வடித்த ஜொள்ளில் துளியளவு இருந்த பொறுமையும் பொசுக்கென்று பதறியடித்து பறந்தோட, “முடிதானே பிடிச்சிருக்கு. இந்தா வச்சுக்கோ...” என்று தன் பின்னலை முன்னால் விட்டு வெக்கென்று ஒரு இழு இழுத்ததும் அது கையோடு வந்துவிட அதை அவினாஷின் கைகளில் திணித்துவிட்டு தோளில் படர்ந்த தன் கூந்தலை சிலுப்பியவள் பேயறைந்தது போல அதிர்ந்து நின்றவனின் முன்னால் வந்து,

“ஏண்டா ஆறுமுகம்!... சொக்கட்டான் கொளுத்த கட்டிவச்ச வைக்கோல் போர் மாதிரி இருந்துட்டு உனக்கு பேரு அவினாஷா?... சொல்லு உன் பேர் என்ன?... அவினாஷா?... ஆறுமுகமா?...” என அவனை பார்த்து அதட்டலாக கேட்டதும் அவினாஷின் உடல் உதறலெடுத்தது. பயத்தில் கண்ணீர் வேறு சுரக்க ஆரம்பிக்க,

“என் பேரு ஆறுமுகம் தானுங்க. அந்த பேரு பிடிக்கலைன்னு அவினாஷ்ன்னு நானா தான் மாத்திக்கிட்டேன்...” என்று கொஞ்சம் தேம்பலோடு உளற,

“ஒரு முகமே இவ்வளோ பெரிய சைஸ்ல இருக்கு. உனக்கு ஆறுமுகம்ன்ற பேரே அதிகம். இதுல உனக்கு அந்த பேரு புடிக்கலையோ? இன்னைக்கு உங்கப்பாம்மா வச்ச பேரு பிடிக்கலைன்னு சொல்லுவ. நாளைக்கு உங்கப்பாம்மா கட்டிவச்ச என்னை பிடிக்கலைன்னு சொல்லமாட்டன்னு என்னடா நிச்சயம்?...” என்று அவனை கேட்டவள்,

“எவ்வளோ தைரியம் இருந்தா நான் அவ்வளோ தூரம் சொல்லியும் நீ என்னை பார்க்க வந்திருப்ப? ஹ்ம் உயிர் மேல பயமில்லாம போய்டுச்சோ...” என தான் நேரில் போய் கத்தியோடு மிரட்டியும் கொஞ்சமும் அதனை மதிக்காமல் தன்னை பார்க்க வந்துவிட்டானே என்ற கோவத்தில் அவனை உலுக்க அவினாஷ் என்னும் ஆறுமுகம் இன்னும் மிரண்டான்.

அவனுக்கு ஏற்கனவே போன் செய்து தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று கூறியபோது கொஞ்சம் தயங்கிய தயக்கத்தை பரமேஷ்வரனின் சமாதானம் குறைத்ததென்றால் ஹர்ஷிவ்தாவின் அழகு முகம் மீதி தயக்கத்தையும் துடைத்தெறிந்தது. இப்போது அவள் அதை பற்றித்தான் கூறுகிறாள் என எண்ணியவன்,

“இல்லைங்க உங்கப்பாதான்...” என இழுத்தவனின் பேச்சை தட்டியவள்,

“என்ன அப்பா ஆட்டுக்குட்டின்னு? நாளைக்கே உனக்கொரு ஆபத்துனா எங்கப்பாவா உன்னை வந்து காப்பாத்துவாரு?... ம்ம்...சொல்லு?...” என அவனுக்கு மரணபயத்தையே காண்பிக்கும் திட்டத்தில் இவள் பேச பேச அவனுக்கு பீதியில் நா வறண்டுவிட்டது.

விட்டால் போதுமென்ற எண்ணத்தில் கதவை அரக்கபரக்க திறந்தவன் தன் மீசையில் மண் ஒட்டவில்லை என்னும் கதையாக பரமேஷ்வரனிடம், “இங்க பாருங்க சார் உங்க பொண்ணு ஒட்டு முடி வச்சு என்னை ஏமாத்திட்டா. அதனால எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. வாங்கப்பா போகலாம்...”என கையிலிருந்த முடியை காண்பித்துவிட்டு உளறிக்கொட்டியவன் நொடியும் தாமதிக்காமல் விடுவிடுவென வெளியேறிவிட்டான். அவனை புரியாமல் பார்த்த அவனது பெற்றோரும் அவனை தொடர்ந்து இடத்தை காலி செய்துவிட்டனர்.

நொடிந்துபோய் தொப்பென்று சோபாவில் அமர்ந்த பரமேஷ்வரனை யாராலும் தேற்ற முடியவில்லை. தகப்பனின் நிலை பார்த்த ஹர்ஷூவோ கவலை கொண்டாலும் இப்போதைக்கு தான் எதுவும் பேசினால் தவறாகிவிடும் என்று எண்ணி இப்போதைக்கு தான் நினைத்ததை நடத்திவிட்டோம். அது போதும் என்ற மமதையில் தன் அறை நோக்கி சென்றாள்.

காலையில் நடக்கவிருந்த சாதாரண பெண்பார்க்கும் படலத்தை நிறுத்திய ஹர்ஷிவ்தாவால் மாலை தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நிறுத்தமுடியாமல் போனது அவளது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

ஆம். அன்று மாலையே கௌரவ் ஷக்திவேலுக்கு நிச்சயம் செய்யப்பட்டு அவனின் மனைவியாக போகிறவள் என்று உறுதி செய்யப்பட்டு அந்த அந்தஸ்தும் அங்கீகாரமும் அவள் விருப்பமில்லாமல் அவளை வந்தடைந்தது. நடந்த அனைத்தையும் தடுக்கமுடியாமல் பரிதவித்து நிற்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டாள்.

அவினாஷிடம் காட்டிய தன் வாய்ஜாலத்தை கௌரவ் ஷக்தியிடம் காட்டமுடியுமா? அவனை சிறிய மீன் என்று நினைத்து நசுக்க பார்க்க அவனோ எதிலும் சிக்காத திமிங்கலமாக இருந்தான். அவனிடம் ஹர்ஷிவ்தாவின் திமிர் எடுபடுமா?


நதி பாயும் ...
 
Top