Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 6

Advertisement

இந்த கேள்வி நிச்சயமாய் கமலியை பாதிக்கும் என்றும் தெரியும். ஆனால் அவனுக்கும் வேறு வழியில்லை.. அவன் எப்படியானதொரு மனநிலையில் அங்கிருந்து இங்கே வந்தான் என்பது அவனுக்கே தெரியும்.. மனதினுள்ள அப்படியொரு பதற்றம்.. அதை சும்மாகூட வெளிக்காட்டாது அப்படியே தனக்குள்ளே அமிழ்த்தி வந்தவர்களோடு இன்முகமாய் பேசி அனுப்பிட, இவளோ அவனின் ஒவ்வொரு தவிப்பையும் ரசிக்கும்விதமாய் நமட்டு சிரிப்போடு இருக்க அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ஒருப்பக்கம் அவனின் தங்கையின் வாழ்வு.. எப்போது வேண்டுமானாலும் கமலி எதுவேண்டுமானாலும் செய்வாள் என்ற எண்ணத்தில் நிச்சயம் இந்தத் திருமணம் சந்தோசமாய் நிகழ்ந்தேறாது.

கமலி அப்படி செய்வாளா என்ற யோசனை இருந்தாலும், ஒருவேளை செய்துவிட்டால்?? பின் வந்தனாவிற்கு அவன் என்ன பதில் சொல்வான்.. யாரைவிடவும்.. எதனை விடவும் அவனுக்கு அவனின் தங்கை முக்கியமில்லையா.. ஆக இந்த விசயத்தில் கமலியை அடக்கிவைக்க அவனும் இப்படியான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டிய நிலை..

ஆனால் அவன் நினைத்ததற்கும் மாறாய் கமலி, முதலில் அதிர்ந்துபோனாலும், முகத்தினில் வலியைக் காட்டினாலும், அடுத்த நிமிடமே சுதாரிதுவிட, தன் பார்வையை மாற்றிகொண்டாள் வேகமாய். இவ்வளவு நேரமிருந்த அந்த நமட்டு சிரிப்பு காணாது போய், கண்களை இடுக்கி அவனைப் பார்த்தவள்,

“ம்ம் அப்புறம்..” என்றுமட்டும் சொல்ல,

“என்ன கதை கேட்கிறயா?? நானும் இதை சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா சொல்ல வச்சிட்ட.. சிவகாமி அத்தை சம்மதம் சொல்லாமையா மாமாக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சாங்க?? அவங்க வேணாம்னு ஒருவார்த்தை சொல்லிருந்தா மாமா கடைசி நிமிசத்துல கூட அந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பார்.. ஆனா வீட்ல இருக்கவங்களுக்கு ஒரு காரணம் இருந்தாலும் அத்தைக்கும் அதுல சம்மதம் இருந்தது.

அப்புறம் அம்மா பண்ணது, இந்திரா அத்தை பண்ணது எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும்.. அத்தை ஏன் அங்க இருந்து கிளம்பினாங்க?? அதுக்கான பதில் அவங்கக்கிட்ட மட்டும் தான் இருக்கு.. நீ பிறக்குறதுக்கு முன்னையும் சரி, அடுத்தும் சரி மாமா எத்தனை தடவை அத்தைக்கிட்ட வீட்டுக்கு வான்னு சொன்னாங்கன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். இப்போ நீயும் அத்தையும் அனுபவிக்கிறதுக்கு பாதி காரணம் அம்மாவும் இந்திரா அத்தையும்னா மீதி காரணம் சிவகாமி அத்தையும் தான்..” என்று வனமாலி வேகமாய் பேசிக்கொண்டே போக போக,

“போதும் ஸ்டாப் இட்..” என்று கைகளை நீட்டி கத்திவிட்டாள் கமலி..

அவளால் இதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. என் அம்மாவை இவன் குற்றம் சொல்வதா?? அதற்கு யாருக்குமே தகுதி இல்லையே.. அப்படியிருக்க, இவன்.. இந்த வனமாலி.. அதுவும் இங்கே வந்து அமர்ந்துகொண்டே என் அம்மாவின் மீதும் தவறு இருக்கிறது என்று சொல்வதா என்ற ஆங்காரம் எழ, அதற்குமேல் அவளால் அவன் பேசுவதை கேட்க முடியவில்லை..

கமலியின் அறை கதவிற்கு வெளியே இருந்த சங்கிலிநாதனோ கமலி போட்ட சத்தத்தில் என்னானதோ என்று உள்ளே வர, இருவருமே உஷ்ன மூச்சுக்களை வெளிவிட்டு ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க,

“கமலிம்மா என்ன இதெல்லாம்??” என்றார் அவர் சங்கடமாய்..

“தாத்தா.. இவரை போக சொல்லுங்க..” என்று வனமாலியைப் பார்த்து பல்லைக் கடிக்க,

“ஏன்?? உண்மையை சொன்னதும் பொறுக்கலையோ....” என்று எழுந்தவன், “நீ சொல்லி நான் கிளம்பிட்டேன்னு நினைச்சுக்காத..” என்றுவிட்டு சங்கிலிநாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகரப்போக,

“உங்களை இங்க வர வச்சதே நான் தான்..” என்றாள் கண்களில் சீற்றம் காட்டி..

நின்று ஒருமுறை அவளை திரும்பிப் பார்த்தவன் “உனக்கு இன்னும் என்னைப்பத்தி தெரியலை போல.. தாத்தா சொல்லி வைங்க..” என்றுவிட்டு விடுவிடுவென சென்றுவிட்டான்..

இருவருமே ஒருவரை ஒருவர் தெரிந்தே வார்த்தைகளால் காயப்படுத்திட, சங்கிலிநாதனோ ‘சின்னவங்களாவது ஒத்துமையா இருப்பாங்கன்னு பார்த்தா இந்த பொண்ணு வனாக்கிட்டயே வம்பு வைக்குதே..’ என்று வருத்தமாய் பார்த்தார்..

இங்கே நடந்தது எதுவுமே அறியாத மணிராதாவோ “இந்திரா.. வந்தனா கல்யாண வேலை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் நம்ம வனாக்கும் அடுத்து பொண்ணு பார்க்க ஆரம்பிக்கணும்.. இப்படியே அவன் சொல்லுவான்னு விட்டா அது நமக்குதான் பாதகம்..” என்றார் தீவிரமான முக பாவத்தோடு.

“என்ன அண்ணி சொல்றீங்க?? என்ன திடீர்னு..”

“சிலது திடீர்னுதானே செஞ்சாகனும்.. நான் அவனை கூப்பிட போறப்போவே இந்த முடிவை எடுத்துட்டு தான் போனேன்.. ஏன்னா அந்த சிவகாமியும் அவ பொண்ணும் எந்த நேரத்துல என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது.. அதுக்குள்ள இவனுக்கு ஒரு பொண்ண பார்த்து முடிச்சு வைக்கணும்..”

“அண்ணி.. அப்.. அப்போ அவங்க பிரச்சனை செய்வாங்கன்னு சொல்றீங்களா??” என்று இந்திரா பயந்து போய் கேட்க,

“ம்ம்ச் நீ ஒருத்தி எது எதுக்கு பயந்துக்கிறதுன்னு இல்லை. என் தம்பி இருக்கப்போவே அவளை வெளிய அனுப்ப தெரிஞ்ச எனக்கு இப்போ அவளை சமாளிக்கத் தெரியாதா நீ சும்மா இரு.. உன் பக்கத்துல ஏதாவது பொண்ணு இருக்கான்னு விசாரி.. ரொம்ப பெரிய இடமெல்லாம் வேணாம்.. நம்ம சொல்பேச்சு கேட்டு இருக்கிறவளா இருக்கணும்.. அப்போதான் வனாவும் நமக்குள்ள இருப்பான்...” எனும்போதே வனமாலி உள்ளே வந்திட, அடுத்தநொடி இரு பெண்களும் கப்சிப் என்றாகிவிட்டனர்.

வனமாலியோ இருவரையும் பார்த்துக்கொண்டே அவனின் அறைக்குள் நுழைந்திட, அவனின் மனதோ அடங்கவே மறுத்தது..

“ச்சே.. இருந்திருந்து இவ ஏன் இப்படி பீகேவ் பண்றா.. அம்மா பேசினது தப்புதான்.. ஆனா.. கமலியோடு குணமே மாறிட்டு இருக்கே..” என்று ஒருபுறம் அவளை எண்ணி வருத்தமாக கூட இருந்தது..

இதே வருதம்கொண்ட இன்னொரு ஜீவன் சிவகாமி.. சங்கிலிநாதன் அச்சகத்தில் நடந்த அனைத்தையும் சிவகாமியிடம் சொல்லிவிட, அவருக்கோ மகளின் போக்கு கண்டு மனம் வருந்தத் தொடங்கியது.

‘கடவுளே என்ன இது.. என் பொண்ணு குணம் இப்படியில்லையே.. ஒரு கல்யாணத்தை வச்சு விளையாட நினைக்கிறாளா?? அது தப்பில்லையா..’ என்று இறைவனிடம் முறையிட்டு, மகளின் வரவுக்காய் காத்திருந்தார் இன்று அவளோடு பேசியே ஆகவேண்டும் என்ற முடிவில்.

கமலியும் மாலை எப்போதும் வருவது போல் வர, சிவகாமியோ “கமலி இங்க வா..” என்றார் அவரின் அறையில் இருந்தபடி. அவளுக்குத் தெரியும், எப்படியும் அம்மாவிற்கு விஷயம் வந்திருக்கும், தன்னோடு இதைப் பற்றி பேசுவார் என்று..

பதிலே சொல்லாது அவரின் முன் போய் அமர்ந்தவள், ‘என்ன??’என்று பார்க்க, சிவகாமியோ இம்முறை கோவம் எதுவுமில்லாது மகளின் கரங்களை பிடித்துக்கொண்டு,

“உனக்கு என்னாச்சு கமலி?? என் பொண்ணு இப்படி இருக்கமாட்டாளே..” என்றார் பாவமாய்..

கமலியோ தலையை சரித்து, அவரின் முகம் பார்த்து, “நான் எப்படி இருந்தாலும் உன் பொண்ணுதானே ம்மா..” என,

“கண்டிப்பா.. ஆனா என் பொண்ணால யார் வாழ்க்கையும் பாதிக்கப்பட கூடாது. யாரும் அவளால பாதிக்கப்படக்கூடாது..” என்றார் சிவகாமியும் வேகமாய்..

“ம்மா.. நான் அப்படி செய்வேனா??” என்ற கமலியின் கேள்வி, அவருக்குள் ஒரு நிம்மதியை கொடுத்தது.

“ஆனா நீ ஏன் வனாக்கிட்ட இப்படி நடந்துக்கிற?? அவனும்தான் என்ன செய்வான்..”

“நானா எதுவும் செய்யலை.. வந்தனா கல்யாணத்தை நான் நிறுத்துவேன்னு சொன்னதுகூட ஒரு கோவத்துலதான். ஆனா அவங்களும் அதையே நினைச்சிட்டு இருந்தா நான் எதுவும் செய்ய முடியாது..” என்றவள், பின் லேசாய் சிரித்து “ஆனா அம்மா இதுக்கூட நல்லாருக்குல நம்மளை பார்த்து ஒருத்தர் பயப்படுறது..” என்றாள் இன்னும் சத்தமாய் சிரித்து..

“கமலி...!!!!”

“சரி சரி.. கண்டிப்பா நான் எதுவும் தப்பா செய்யபோறதில்லை.. ஆனா அதுக்காக நான் சும்மா இருக்க போறதுமில்லை.. அட்லீஸ்ட் கொஞ்சமாது எல்லாரும் அவங்கவங்க பண்ணதை உணரனும் இல்லையா..” என்றவள் “நான் நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகப் போறேன்..” என்று சிறுபிள்ளை போல் இரு புருவமும் தூக்கி கண்களில் ஒரு கேலிப் பார்வை பார்த்து சொல்ல,

“எ.. என்ன சொல்ற?? யார் வீட்டுக்கு..” என்றார் சிவகாமி.. இது அவருக்குத் தெரியாதே.. வனமாலிக்கும் கமலிக்கும் சண்டை என்பதுமட்டும் தானே தெரியும்..

“அதான்.. வனமாலி வீட்டுக்கு...”

“அடி... உன்னைவிட பெரியவன்.. நீ ஏன் கமலி அப்பாவையும் அப்பான்னு சொன்னது இல்லை.. அவங்க யாரையும் உறவுமுறை சொல்றதுயில்ல.. இதெல்லாம் தப்பு..”

“ஹா ஹா உறவுமுறை சொல்லாட்டி அவங்கெல்லாம் வருத்தப்படுறாங்களா??”

“அப்பா எவ்வளோ வருத்தப் பட்டார் தெரியுமா??” என்று சிவகாமி கேட்கவும், அடுத்தநொடி அவளுள் வனமாலி கேட்ட கேள்வியே ஒலித்தது..
Nice Ep
 
Top