“என்னை உங்க மூத்த பையனா ஏத்துக்கிட்டா, உங்க மருமகளும் பேத்தியும் காருக்குள்ள” என்று வழிவிட்டு நின்றான்.
வேகமாக வெளியே வந்தார் விமலா. கார் நின்றதுகூட தெரியாமல் மகளை அணைத்துத் தூங்கும் விழிகள். தூக்கத்திலும் புன்னகைக்கும் இதழ்கள் நான் நிறைவாக வாழ்கிறேன் என்பதைப் பரைசாற்றியது. தாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலனாக நினைத்தவர் எழுப்ப மனமில்லாமல் நிற்க…
“என்னம்மா எழுப்ப மனசு வரலையா? நானும் அதான் எழுப்பலை” என்றவன் போனை எடுத்து, தாரமே தாரமே வா ரிங்டோனை திரும்பத்திரும்ப ஓடவிட… தொடர்ந்த சத்தத்தில் மெல்ல கண்திறக்க கார் நின்றிருப்பதை உணர்ந்தாள் சூர்யோதயா. வேகமாக அருகே பார்க்க டிரைவர் இருக்கை காலி. ‘எங்க போனாங்க?’ என்று திரும்பியவள் தன்னருகில் கதவிற்கு வெளியே கணவனிருப்பது தெரிய புன்னகைத்து, கதவைத் திறந்த கணவனிடம் குழந்தையைக் கொடுத்தபடி காரிலிருந்து இறங்கினாள்.
கையைக் காலை உதறியபடி, “அண்ணி வீடு வந்திருச்சா மச்சான்? அதென்ன கையால எழுப்பாம ரிங்டோன் விடுறது? அத்தை சொன்னாங்க உங்களுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு. அதுக்குத்தான் தொடாம எழுப்புனீங்களா?” என்றவாறு கழுத்தை அசைத்துவிட…
“அடிப்பாவி! அது கல்யாணம் முடிக்கக்கூடாதுன்னு பொண்ணு வீட்டுல சொன்ன பொய். அதுவும் நான் சொல்லலை. உன் புருஷனுக்காக உன் மாமியார் சொன்னது. எங்கம்மா உன்கிட்ட போட்டுக் கொடுத்துட்டாங்களா?”
“அதெல்லாம் தெரியாது மச்சான். இனிமேல் என் பக்கத்துல வராதீங்க” என்றாள் சிரிப்பை அடக்கியபடி.
“வருவேன்னு சொன்னா என்னடி பண்ணுவ?” என்றான் வேகமாக.
[the_ad id=”6605″]
இச்சென்ற முத்தம் அவன் கன்னத்தில் வைத்ததும் அவன் வியப்பாய் அவளை ஏறிட, ‘ம்ம்…’ என தோளைக்குலுக்கி, “என்ன மிஸ்டர்.ஓனர் ப்ரீஸாகிட்டீங்க? இனி என் பக்கத்துல வருவீங்க” என்று கண்சிமிட்டினாள்.
“அடிப்பாவி! மெட்ரோ சிட்டி வந்ததும் மெட்ரோ ரயில் ஸ்பீடுக்கு வேகமாயிருக்க வெள்ளச்சி. இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்” என்று செல்லமாகக் கடிய…
“அதெல்லாம் நல்லாயிருக்கும் மச்சான். இன்னும் நல்லாவே விடியலை. இவ்வளவு சீக்கிரம் யாரும் எழுந்துக்க மாட்டாங்கன்ற தைரியம்தான். அண்ணியை எழுப்பிட்டீங்களா? எங்க ஆளைக்காணோம்?” அவனைத் தாண்டி பார்க்க அவ்விடம் பழகியது போல் தெரிந்தது.
சென்னையை விட்டு ஒருவாரம் சென்று திரும்பினாலே கிணற்றைக் காணோம் எபக்ட் இருக்கும். இவளோ ஒரு வருடம் கழித்து வருகிறாள். நிறைய வித்தியாசங்கள் அங்கே.
சபரி அப்பொழுதுதான் அருகிலிருந்த விமலாவைத் தேடிப் பார்த்தான். அவரோ கண்கலங்க அவளையே பார்த்தபடி, சபரியிடம் தான் இருப்பதை அவளிடம் சொல்லாமல் வீட்டிற்குள் அழைத்துப் போகச் சொன்னார்.
“நீ வந்து பார். நமக்கு வேண்டப்பட்டவங்க வீடுதான்” என்று அவள் முன் மறைத்தபடி இல்லாமல் நகர, வாசலில் நின்றிருந்த விக்னேஷின் குடும்பம் தெரிந்தது.
சட்டென்று முகம் மாற, “இங்க எதுக்கு கூப்பிட்டு வந்தீங்க? வாங்க போகலாம்” என்று கோபமாக காருக்குள் உட்காரப்போக, அவளின் கை பிடித்து, “எனக்காக வா உதயா. உன் சபரி மச்சானுக்காக!” என்று வாசல் வர… அவர்களை அப்படியே நிற்கச் சொன்ன விக்னேஷை சூர்யா இன்னும் முறைக்க… அதற்குள் விமலா ஆரத்தியுடன் வர, எதற்கென்று இருவரும் கேள்வி எழுப்பினார்கள்.
“மூத்த மகனும், மருமகளும் பேத்தியோட முதல்முறையா சேர்ந்து வர்றப்ப ஆரத்தி எடுக்கிறது முறை” என்று ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்ப, கணவனின் சொல்லுக்காக உள்ளே சென்றாள்.
“எப்படியிருக்க விக்னேஷ்?”
“ந..நல்லாயிருக்கேன். உங்களுக்கெப்படி?” என்று திணற… அதற்குள் காவ்யா காஃபியுடன் வர, சபரியின் கையிலிருந்த குழந்தையை வாங்கி அறையில் படுக்கவைத்தார் விமலா.
சூர்யாவின் அமைதியைக் கண்ட சபரிக்கு அவளின் அமைதியில், ‘ஒருவேளை இவளுக்கு விக்னேஷ் பற்றிய உண்மை தெரிந்திருக்கிறதோ?’ என்ற சிறு சந்தேகம் எழுந்தது. மனைவியிடமிருந்து பார்வையை திருப்பி, “சாரி விக்னேஷ். அன்னைக்கு கை நீட்டிட்டேன்” என்றான் குற்றவுணர்வுடன்.
“பரவாயில்ல சார். சூர்யாமேல உள்ள அக்கறையில்தான அடிச்சீங்க. அதை அப்பவே மறந்துட்டேன்.”
“ஆனா, நான் அடி கொடுக்கணும்” என்று அமைதியாக அழுத்தமாக விக்னேஷைப் பார்த்தவாறு சொன்னாள் சூர்யோதயா.
“ஆளுக்காள் அடிச்சி விளையாட அவங்க என்ன பந்துன்னு நினைச்சீங்களா?” என்று கணவனுக்காக காவ்யா இடையிட்டாள். அன்று சபரி அடித்த பொழுதும் வலித்தது அவளுக்கல்லவா. சூர்யா என்ற ஒருத்திக்காக அவன் சுமக்கும் பழிகள் ஏராளமாகிற்றே! கணவனின் சூர்யா மீதான காதலுக்கு மரியாதை செலுத்தத் தோன்றியவளுக்கு, வரும் பழிகளை ஏற்கத்தான் முடியவில்லை.
“காவ்யா விடு. அடிக்கிறதால மனசுல உள்ள பாரம் குறையும்னா அடிச்சிக்கட்டும்” என்று நின்றான்.
“ஏன் சார்? உங்க எதிர்ல நிற்கிறேன். அன்னைக்குக் கேட்டக் கேள்வியை இப்ப கேட்கத் தோணலையா?”
“பிறன்மனை நோக்குதல் தப்புன்னு அன்னைக்கே சொல்லிட்டேன் சூர்யா” என்றான் நிமிர்வாக.
“ஓ… கேரக்டர் மெய்ன்டெனன்ஸ் பண்றீங்களாக்கும்? அப்ப சபரி மச்சானுக்கு என்னை மனைவியாக்குறதுக்காகதான்… இது எல்லாமே இல்ல?”
“சூர்யா!”
“அதான்பா. அந்த ஹாஸ்பிடல்ல நடிச்சி டைவர்ஸ் வாங்கினதைச் சொன்னேன்” என கேலியாகக் கேட்டவள், “உங்க மேல தப்பில்லைன்ற எண்ணம் எனக்கு எப்பவும் உண்டு. அதுதான் உண்மையும் கூட இல்லையா?” என்று அவனை கூர்மையாகப் பார்த்து மென்மையாக வார்த்தையை வெளியிட்டாள்.
“எ…எப்படித் தெரிஞ்சது? நான் யார்கிட்டேயும் சொல்லலையே?” விக்னேஷ் வேகமாகக் கேட்க…
காவ்யாவை நோக்கிக் கை நீட்டி, “தன் புருஷன் மேல தப்பில்லைன்னு நான் புரிஞ்சிக்கணும்ன்றதுக்காக உங்க ஒய்ஃப் உங்க வாயிலிருந்து வரவைத்த உண்மை. அம்மா இறந்ததுக்க மறுநாள் நைட் உங்களுக்குப் பிடித்தபடி சொல்லணும்னா, எங்க கல்யாணம் முடிந்த மறுநாள் தெரியும்” என்றாள்.
அன்று சூர்யா எதற்கோ தாங்கள் நின்றிருந்த அறை நோக்கி வருவதைப் பார்த்த காவ்யா, “ஏன் விக்னேஷ் சூர்யாவுக்காக இழந்ததெல்லாம் போதாதா? இதோ நீங்க ஆசைப்பட்டபடி கல்யாணமும் நடந்திருச்சி. இனிமே இங்க நமக்கென்ன வேலை?” என்ற ஆரம்பிக்க…
“சத்தமா பேசாத காவ்யா. யாராவது வந்திரப்போறாங்க” என்றான் பதற்றமாக.
“ப்ச்… இங்க யாருமில்லைங்க. இப்ப உங்களுக்கு நிம்மதிதான?”
“ரொம்பவே நிம்மதியா மூச்சுவிடுறேன் காவ்யா. எனக்குப் பிடிச்சி காதலிச்ச முதல் பெண் சூர்யா! அவளோட அம்மாகிட்ட உங்க பொண்ணு என் பொறுப்புன்னு இங்கயிருந்து கூட்டிட்டுப் போனேன். நான் யார்? எப்படின்னு முன்னப்பின்ன அவங்களுக்குத் தெரியாது. இருந்தும் என்னை முழுசா நம்பி பொண்ணைக் கொடுத்தாங்க. அந்த நம்பிக்கை அவளை நல்லா வாழ வைக்குறதுலதான் இருக்குன்றது நான் எடுத்துக்கிட்ட உறுதி.”
“அப்புறம் ஏன்ங்க டைவர்ஸ் பண்ணுனீங்க?”
விக்னேஷிற்கு பூவரசியின் இறப்பில் ஒருவித குற்றவுணர்ச்சி இருந்ததால், மனைவியிடம் தானே பேசுகிறோம் என்று தன் மனபாரத்தை இறக்கி வைக்க நினைத்தவன், என்ன காரணத்திற்காகக் கேட்கிறாள் என்பதை ஆராயாமல் சொல்ல ஆரம்பித்தான்.
“அவள் மனசுல உள்ளதை வெளிக்கொண்டு வந்து அவளுக்கு பிரச்சனை எதுவுமிருந்தா சரிபண்ணிடலாம்னுதான் ஹிப்னாடிஸம் சிகிச்சை முறையை செய்யச் சொன்னேன். அவள் விவரம் தெரிந்து நடந்த அனைத்தையும் சொல்லச்சொல்ல… ஐயோன்னு அலறணும் போலிருந்தது” எனும்போது சூர்யாவின் கண்களிலும் கண்ணீர் வர, தன் அந்தரங்கம் பகிரப்படுவதை வேதனையோடு கேட்டிருந்தாள்.
“அப்பதான் தெரிஞ்சது அவளே அறியாத சபரி மீதான அவளோட காதல். அதுக்காக என்னால கோபப்பட முடியலை. அது அவளோட தப்பில்லையே! உடனே டாக்டர்கிட்ட பேசி டைவர்ஸ்தான் பெஸ்ட்னு முடிவெடுத்தேன்.”
“ஏன்ங்க?”
“எத்தனை காலம் காத்திருந்தாலும் அவளால என்னை ஏத்துக்க முடியாதுன்னு கூடயிருந்த அத்தனை நாள்ல தெரியாமலிருக்குமா என்ன? அவளுக்கு மும்பையில் வேலை ரெடி செய்து, இல்லாத பொல்லாத பழியெல்லாம் ஒரு சின்னப் பொண்ணுமேல போட்டு நோகடிச்சி, இவன் வேண்டவே வேண்டாம்னு ஓடவச்சேன். சபரியும் அவளைத்தேடி வர்றதுவரை காத்திருந்தேன். டாக்டர் பெயரைச் சொல்லி அவரைக் கோபப்படுத்தி சூர்யா மேல உள்ள அன்பை வேற லெவல்கு கொண்டு போக டாக்டர்கிட்ட அனுப்பினேன். அவங்க மேலோட்டமா நடந்ததைச் சொல்லி அவர் மீதான அவளோட காதலைச் சொல்ல, அதை உணர்ந்து சூர்யாவை மனைவியாக்குற முடிவோட மும்பை போனார்.”
“நானும் சரியா அந்த முத்துகுமாரை மும்பை ரெட்லைட் ஏரியா ஆசைகாட்டி பார்சல் கட்டச் சொல்ல அது சரியா நடந்தது. சூர்யாவை முத்துகுமார் வம்பிழுக்கிறது சபரி முன்ன நடக்கணும்னு நினைச்சேன். எங்க ப்ளான்படி சபரி அவனை அடி பின்னி எடுத்துட்டார். நான் எதிர்பார்க்காதது லாட்ஜ்கு ரெண்டு பேரும் சேர்ந்து போனதுதான்.”
“அதை முத்துகுமார் சொல்லவும், அடுத்த ப்ளானா போலீஸ் ஃப்ரண்ட் மூலமா அவங்க ரெண்டு பேர் பெயரையும் தவறான விஷயமாயிருந்தாலும் சரியா சேர்த்தேன். சபரி தன்னோட வக்கீல் வச்சி வெளியில வந்துட்டார். அந்த முத்துகுமாரை இரண்டு நாள் உட்கார வச்சி தோலை உரிக்கச் சொல்லிட்டேன். இரண்டுங்கெட்டான் வயசுல உள்ள பொண்ணுகிட்ட அவன் செய்த செயலுக்கான தண்டனை அது.”
“மும்பையில அவளோட உழைப்பை யாரோ ஒருவன் யூஸ் பண்றதா கேள்விப்பட்டதும், ஸ்ரீகர் அங்கிள் மூலமா ஏற்கனவே அதை எம்.டிக்கு தெரியப்படுத்தியிருந்தேன். எப்படியும் அவள் இருக்கப்போறது சபரியோட… சபரி கேரளாவுல இருக்கிறது சூர்யாவுக்குத் தெரியாது. சோ, கேரளா ப்ராஞ்ச் போடச்சொல்லி, அதுவும் சபரி வந்த பொழுது அவருக்குப் பயந்து ஓடுவாள்னு தெரிஞ்சே ப்ரமோஷனோட அங்க அனுப்பினோம்.”
[the_ad id=”6605″]
“ஒரே இடத்துல இருந்தாலும் இரண்டு மாதம் கழித்துதான் அவங்களை சந்திக்க வச்சேன். சபரியும் அவளை காதலிக்க ஆரம்பிச்சார். அது தெரிஞ்சும் சூர்யா கல்யாணத்துக்கு சம்மதிக்கலை. பூவரசி அத்தை வந்து கேட்டும் மாறலை. அதான் அப்படிப் பேசினேன். அதுக்கும் அசராமல் பதிலடிக்கிறா. அட சூர்யாதானா இதுன்னு இருந்தது. அவளோட அந்த மாற்றத்துல மனசுல ஒரு சந்தோஷம்தான்.”
“இதோ கல்யாணம் முடிஞ்சிருச்சி. எதோ என்னோட கடமை முடிஞ்ச ஒரு ஃபீல். இங்க உன்னோட வந்ததுக்குக் காரணம், சூர்யாவை தப்பானவள்னு யாரும் கைநீட்டிக் கேள்வி பேசிரக்கூடாதுன்னுதான். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சின்றதைக் காட்டினால் ஊர் வாய் அடங்கும். இப்ப சூர்யாவை யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க. வேணும்னா என்னை சபிப்பாங்க. நீ என் மனைவின்றதால உனக்கும் சம பங்கு உண்டு.
“பாதி என்ன முழுசையும் வாங்கிக்கறேன். சில் ப்ரோ” என்றாள் புன்னகையுடன்.
“ஹேய்! என்ன ப்ரோ சொல்ற?”
“எஸ் ப்ரோ. எனக்கு ஆல்ரெடி விக்னேஷ்னு ஒருத்தர் இருக்கார். என்ன அவரோட எக்ஸ் ஒய்ஃப் கல்யாணம் முடிச்சதும் சேர்ந்து வாழ்வோம்னு சொல்லிட்டார்.”
“அப்புறம்?”
“அந்தப் பொண்ணுக்கு அவர்கிட்ட ஃப்ரண்ட்லியா இருக்க மட்டும்தான் பிடிச்சிருக்கு. எனக்கு அப்படியில்லைபா. அவரை லவ் பண்ணக் கிடைச்ச டைமா எடுத்துட்டிருக்கேன்.”
“தேங்க்ஸ் காவ்யா” என்றான் மனதார.
“தேங்க்ஸ்கு பதில் லவ் யூ சொல்லலாம்” என்று முறுக்கிக் கொள்ள… “கண்டிப்பா சொல்றேன். இப்பயில்ல வீட்டுக்குப் போனதும்” என்றான் நிம்மதிப் புன்னகையுடன்.
ஒரு பெண்ணின் மனதில் தன் கணவன் தப்பானவனாக இருப்பதை விரும்பவில்லை காவ்யா.
இதை அனைத்தையும் கேட்டிருந்த சூர்யாவிற்கு அவனின் நல்ல மனது புரிந்தது. அவன் செய்தது தனது நல்லதற்குத்தான் என்று உணர்ந்தாலும், தன் வாழ்க்கையில் தனக்குத் தெரியாமல் இப்படி ஒருவர் விளையாடியது பிடிக்கவில்லை. அவன்மேல் கோபமும் ஆத்திரமும் வந்தது.
[the_ad id=”6605″]
அதேபோல் ப்ரித்வியின் கல்யாணத்தில் பிரம்மசக்தி சபரியிடம் பேசிச் சென்ற பொழுது பார்த்து மடக்கிவிட்டாள். அவளை நிறுத்தி என்ன ஏதென்று அனைத்தையும் வலுக்கட்டாயமாகக் கேட்க… மறுத்த சக்தியிடம் “நான் என் ஹஸ்பண்டோட சேர்ந்து வாழணும் நினைக்கிறேன். விக்னேஷ் சொன்னது உண்மையா? முழுசா தெரிந்தால்தான் என்னால என் மச்சானோட வாழ முடியும். அதுக்காவாவது சொல்லுங்க” என்று மிரட்டி தெரிந்து கொண்டிருந்தாள். அனைத்தும் தெரிந்த பின்பே எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் கணவனுடன் வாழ ஆரம்பித்திருந்தாள்.
விக்னேஷ் சொல்லி முடிக்க… வேகமாக போனை எடுத்த சபரி, “மாப்ள எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று ராமனிடம் கேட்க…
“என்ன வேணும்னு சொல்லுங்க மச்சான்? செஞ்சிரலாம்?” இதுவரை தனக்கென்று என்றும் எதுவும் கேட்காத சபரி கேட்டதில் மகிழ்ந்து சொன்னான்.
“உங்க ஊர்த் தலைவர் பையன் முத்துகுமாரை அரை உயிராக்கி போட்டோ எடுத்து எனக்கு அனுப்பணும். அதோட சேர்த்து இன்னும் சிலருக்கு என் சார்புல தண்டனை கொடுக்கணும்” என்று ஒரு பட்டியலே வாசித்தான்.
மனம் திக்கென்றடித்தாலும் ‘தன் தங்கையிடம் வம்பு செய்திருப்பார்களோ? அதனால்தான் மச்சான் அவர்களை தண்டிக்கச் சொல்கிறாரோ?’ என நினைக்கையிலேயே ‘அண்ணனாக நான் என் தங்கைக்கு என்ன பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்’ என தன் மீதே கோபம் வந்தது. ‘இனியாவது சரி செய்வோம்’ என்றெண்ணி, “அதுக்கென்ன மச்சான் வீடியோவே போட்டுருவோம்” என்று வாக்குக் கொடுக்க…
“உங்களை நம்பி எத்தனை மலை வேணும்னாலும் ஏறலாம் ராம்” என்றான் புன்னகையுடன்.
பிரம்மசக்தி வீடியோ காண்பித்த அன்றே அனைத்தையும் முடிக்க நினைத்திருந்தான். ஆனால், மனைவி அருகில் வரவும் அனைத்தும் மறந்து அன்றிரவு தங்களின் வாழ்க்கை ஆரம்பிக்க, தொடர்ந்த நாட்களில் மனைவி மட்டுமே மனதிலிருக்க அவர்களை மறந்திருந்தான். இதோ அதற்கும் சேர்த்தே செய்துவிட்டான்.
சூர்யாவைத் தொட்ட, உயிரோடிருந்த அத்தனை பேரும் காரணமே இல்லாமல் அடிவாங்கி முகம் வீங்கி கைகால் ஒடிந்திருந்தனர் ராமனின் கைங்கர்யத்தால்.