24
“உனக்கும்… பரத், ரவிக்கும் என்ன சம்பந்தம் விக்னேஷ்?”
“எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணினது அவங்கதான். சூர்யாவைப் பார்க்க அவங்க வீட்லயிருந்து யாரையும் வரவிடாமல் செய்தது பரத். ஸ்கூல் படிக்கிற சின்னப் பையன்தான் இருந்தாலும் அக்கா பாசத்துல எல்லாத்தையும் செய்தான். என்ன அவனைக் கன்வின்ஸ் பண்ண நானும் சதீசும் கொஞ்சம் கஷ்டப்பட்டோம்.”
“அடுத்து ரவி சார்! முதல்ல திட்டித் தீர்த்தாலும், உங்க சைடுல இருந்து எனக்கு ஹெல்ப் பண்ணினார். நீங்க சென்னையில ப்ராஞ்ச் ஆரம்பிக்கிறது விஷயமா அப்பப்ப வந்துட்டு போயிருவீங்க. நீங்களா சூர்யாவைத் தேடி வருவீங்க பார்த்தா வரலை. சொந்தம்னு சொல்லி அடிக்கடி வரவேண்டாம்னு நீங்க நினைச்சிருக்கலாம். சரி கொஞ்ச காலம் சூர்யாவும் உலகத்தைத் தெரிஞ்சிக்கட்டும்னு டைம் கொடுத்தோம். ஓரளவு அவள் மேல நம்பிக்கை வந்த பிறகு, நீங்க சென்னை வர்ற டைம் ரவி சார் அவங்க அம்மாவைத் தூண்டிவிட்டு அவங்க சூர்யாவைப் பார்த்துட்டு வரச்சொல்லி உங்களை இங்க அனுப்பினாங்க. சூர்யா பற்றிய உண்மையை முழுசா சொல்லாம, முதல் முறையா அவளைப் பற்றின தேடலை உங்களுக்குள்ள உண்டாக்கினோம்.”
“கேரளாவில் சூர்யாவையும் உங்களையும் மீட் பண்ண வைக்கிறதுக்காக, ஸ்ரீகர் அங்கிள் சூர்யாவை சபரி கலக்ஷன் அனுப்பிட்டு எனக்கு மெசேஜ் செய்தார். நான் ரவி சாருக்கு மெசேஜ் செய்யவும் உங்களை சபரியிலிருந்து போகவிடாமல் செய்தார்.”
அன்று செல்லில் ரவியிடமிருந்து வந்த மெசேஜ் ‘நல்ல காலம் பிறக்குது. நல்ல காலம் பிறக்குது’ என்றிருக்க… ‘பிறக்கட்டுமேடா. நல்லதுதான!’ என்று புன்னகையுடன் பதிலுக்கு மெசேஜ் அனுப்பிய நினைவு வந்தது சபரிக்கு.
“நல்ல ப்ளான்தான்.”
“ப்ளான் சக்சஸாச்சிதா… இல்லையா? அதைப் பாருங்க முதல்ல” என்று புன்னகைத்து, “சூர்யா மேடம்கு அங்க வரவேற்பென்ன, நடிகை அர்ச்சனாகிட்ட என் ஒய்ஃப்னு சொன்னதென்ன! செம கலக்கல்தான் அன்னைக்கு” என்று சிரித்தபடி சொன்னான் விக்னேஷ்.
“அடப்பாவிங்களா! க்ளோஸா வாட்ச் பண்ணுனீங்களா?”
“யா..யா ஒவ்வொரு மூவ்மெண்ட்சும் தெரியும். பூவரசி அத்தை வந்தும் எதுவும் நடக்காமல் போகவும்தான், போன் செய்து கொஞ்சம் வரைமுறையில்லாம பேசினேன். அப்பவும் உங்க மேடம் அசரவேயில்லை. போன்லயே பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க” என்றான்.
விக்னேஷ் சொன்னதும்தான் அவன் மனைவி பற்றிப் பேசியது நினைவு வர, மன்னிப்பு கேட்கவில்லை என்ற எண்ணத்தில், காவ்யாவிடம் வந்த சூர்யா, “ரொம்ப சாரிங்க. மனசார எதுவும் சொல்லலை. இருந்தாலும் அப்படிப் பேசினது தப்புதான்” என்றாள்.
[the_ad id=”6605″]
“பரவாயில்லை. நல்லதுக்காக சில தவறும் செய்யலாம். உங்க சார்பா என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு, சூர்யா கொஞ்சம் நிதானத்துக்கு வந்ததும் உன்கிட்ட மானசீகமா ஏகப்பட்ட மன்னிப்பு கேட்பாள்னு சொன்னாங்க. என் ஹஸ்பண்ட் உங்க பார்வையில தப்பாயிருக்கக் கூடாதுன்னுதான், நீங்க வர்றதைப் பார்த்து இவங்களும் ரொம்ப டிஸ்டர்பா இருக்கிறதை யூஸ் பண்ணி உங்களுக்கு உண்மை தெரிய வச்சேன். இப்பவும் எனக்கு அது தப்புன்னு தோணலை.”
“நிஜமாவே தப்பில்லைங்க” என்று காவ்யாவிடம் சொல்லி விக்னேஷை நோக்கி, “அம்மாவுக்கு எப்படி உங்களைத் தெரியும்?” அன்று தாய் அவர்களை ஆசீர்வதித்ததை வைத்துக் கேட்டாள்.
“அவங்களுக்கு உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடல்ல சேர்த்திருந்தப்ப, மகள் வாழ்க்கை பாழானதுக்குக் காரணம் நான்தான்னு நிறைய பேசியிருப்பாங்க போல. அது ஒரு தாயோட ஆதங்கம். அதைத் தப்புன்னு யாராலும் சொல்ல முடியாது. டாக்டர் அவங்க உடல்நிலை பற்றிச் சொல்லவும் கடைசி நேரத்துல என்மேல் தப்பான அபிப்ராயத்தோட போகக்கூடாதுன்னு பரத் எல்லா உண்மையையும் சொல்லிட்டானாம். உடனே என்னைக் கிளம்பி வரச்சொல்லி சொன்னாங்க. என்னோட கல்யாணம் நடந்தது தெரிஞ்சா, உங்க கல்யாணத்துக்கு பிரச்சனை இருக்காதுன்னு அவங்களும் நினைச்சிருக்கலாம்” என்றான்.
“உங்க கல்யாணம் முடிஞ்சதும்தான் எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கக் காத்திருந்தோம்” என்று விக்னேஷ் சொல்ல…
“தெரியும்” என்று டாக்டர்.பிரம்மசக்தியை கேரளாவில் பேசி தெரிந்து கொண்டதைச் சொன்னான். “அதன் தொடர்ச்சியே இங்கே வந்தது. உதயாவுக்கு முன்னமே எல்லாம் தெரிஞ்சிருக்குன்னு இங்க வந்ததும்தான் புரிந்தது” என்று மனைவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் சபரி.
‘அதான் தெரிஞ்சிருச்சில்ல அப்புறமென்ன?’ என ஒரு பார்வை பார்த்து, “பழையதை விடுங்க மச்சான்” என்றவள் விக்னேஷிடம் திரும்பி, “நீங்க செஞ்சது சரியா தப்பான்னு வாதிடத் தயாராயில்லை. உங்களோட இருந்திருந்தா ரெண்டு பேருக்குமே நரகம்ன்றது மாற்ற முடியாத உண்மை. இத்தனை வருஷத்துல நான் ஆர்வமா ஒரு ஆணைப் பார்த்திருக்கேன்னா அது என் சபரி மச்சான் மட்டும்தான். அப்பவும்! இப்பவும்! எப்பவும்! நீங்க என் ஃப்ரண்ட் மட்டும்தான். ஃப்ரண்டா ஏத்துப்பீங்கள்ல?”
“உன் சபரி மச்சான்ற உண்மை எப்ப தெரிஞ்சதோ, அந்த நிமிடத்திலிருந்து ஃப்ரண்டா மட்டும்தான் சூர்யா பார்க்கிறேன்.”
“தேங்க்ஸ். அத்தை மாமாவை எப்படி சமாளிச்சீங்க?”
“ஆரம்பம் முதல் இப்பவரை உள்ள எல்லாம் எல்லாருக்கும் தெரியும்” என்று தாய் தகப்பனைப் பார்த்தான்.
“எங்க வீட்ல அடியெடுத்து வச்ச முதல் பெண் நீதான்மா. மூணு பையன்களைத் தாண்டி நாலாவதா ஒரு பெண் வீட்டுல நடமாடினதே ஒரு நிறைவு. அதனால உன்னை எங்க எல்லாருக்கும் பிடிக்கும். ஒரு மகள் இல்லையேன்னு இருந்த எனக்கு மருமகளா வந்த பொண்ணு மேல தனி பாசம் உண்டு. இப்பவும் அந்த பாசம் அப்படியேதான் இருக்கு” என்றார் விக்னேஷின் தந்தை நாராயணன்.
அவர் வீட்டிலிருக்கும் சமயம், அங்கு நடப்பதை புன்னகையுடன் பார்த்திருப்பாரே தவிர எதிலும் தலையிடமாட்டார். என்ன தேவையோ அதை கேட்காமலே செய்வார். அதுவே அவரின் குணம்.
“காவ்யா பார்த்துக்கோங்க. இதுக்கு நான் பொறுப்பில்லை. சொந்த மருமகள் உங்க மேல பாசம் இல்லையாம். தத்து மகனோட பொண்டாட்டி மேல இருக்காம். என்னன்னு கேட்கிறதில்லையா?”
“பத்த வச்சிட்டியே பரட்டை” என்று விக்னேஷின் பெரிய தம்பி தினேஷ் கௌண்ட் கொடுக்க…
“அண்ணி திடீர்னு எப்படி இப்படி ஒரு அறிவாளியானீங்க?” என்றான் சின்னவன் அபினேஷ்.
“சேர்க்கை சரியில்லை மச்சினனே!” என்று கணவனைக் கைகாட்டினாள்.
சபரி அவள் கையைப் பிடித்து மடக்க, “ஐயோ! அம்மா காப்பாத்துங்க” என்ற அலறலில்… “அப்பா அம்மாவை அடிக்காதீங்க” என்றாள் அப்பொழுதுதான் எழுந்து வந்த ஹரிணி.
“அம்மாதான்டா என்னை அடிச்சாங்க. நான் அடிக்காதன்னு தடுத்தேன்” என்று சாந்தமாகச் சொல்ல… ஹரிணியோ சந்தேகப் பார்வை ஒன்றை தாய்மீது செலுத்த, “ம்கூம் செல்லம்” என்றாள் சூர்யோதயா.
அவர்கள் சரிவர மாட்டார்கள் என்றெண்ணினாளோ, சுற்றிலும் பார்த்து, “அம்மா இது யார் வீடு?” எனக்கேட்க…
[the_ad id=”6605″]
“உன் தாத்தா வீடுமா. நான் உன் தாத்தா நாராயணன். இவங்க உன் பாட்டி விமலா. உனக்கு விக்னேஷ், தினேஷ், அபினேஷ்னு மூணு சித்தப்பா இருக்காங்க. இதோ இவங்க உன் சித்தி காவ்யா” என்றதும் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்தினார்கள்..
“அப்பாவும் அம்மாவும் சண்டை போடல தாத்தா. சும்மா விளையாடினாங்க. நீங்க சண்டை போட்டதா நினைக்காதீங்க.” அவர்கள் தன் தாய் தகப்பனை தவறாக எண்ணக்கூடாதென்று சொல்ல… சட்டென்று குழந்தையை கட்டிக்கொண்ட விமலா, “உன் அப்பா அம்மாவை எப்பவும் தப்பா நினைக்கமாட்டோம்டா செல்லம்” என்றார்.
மகளின் முன் வந்து மண்டியிட்டவள் கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூடா பாப்பு” என்றாள் கண்கள் கலங்க.
“ஆஹ்!” என்ற குரல் கேட்டு சத்தம் வந்த திசையை அனைவரும் பார்க்க… சபரிநாதன் இதயத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான்.
கணவனை அக்கோலத்தில் கண்டவள், “மச்சான் என்னாச்சி?” என்று பதறியடித்து வேகமாக வந்து நெஞ்சை நீவிவிட… ஒருவர் தண்ணீர் எடுக்கப்போக, தினேஷ் டாக்டரிடம் போக ஆட்டோ கூப்பிட்டு வருவதாகக் கிளம்பினான்.
அவனை வேண்டாமென தடுத்தவன் மனைவியைப் பார்த்து, “என்னைக்காவது எனக்கு ஒரு ஐ லவ் யூ சொல்லியிருக்கியா? கழுத்திலிருக்கிற என் செயினுக்குச் சொல்ற. நம்ம பொண்ணுக்கு சொல்ற. கட்டின புருஷனுக்கு… அதான் ஹார்ட் உடைஞ்ச சத்தம் கேட்டது” என்று நெஞ்சோடு அவள் கையை அழுத்தியபடி சொல்ல…
“மச்சான் ஒரு நிமிஷம் கையை விடுங்களேன்” என்று புன்னகையுடன் மறு கையை அடிக்க வருவதுபோல் செய்ய… “அம்மா நோ” என மகள் நிற்க… அச்செயலில் மற்றவர்களும் சிரிக்க… தன்னைத் தூக்க வந்த விக்னேஷிடம், “ஆம்பளைங்க கூப்பிட்டா போகக்கூடாது அம்மா சொல்லியிருக்காங்க” எனச் சொல்லி செல்ல மறுத்தாள்.
அச்சொல் எதனால் என புரிந்தவனோ, “தூக்கக்கூடாது… தொடக்கூடாது ஓகே. பக்கத்துல உட்காரலாம்ல?” என்றான்.
“தள்ளி உட்காரலாம்.” பெரிய மனதாக விட்டுக்கொடுத்தாள் உதய ஹரிணி.
“இரண்டு நாள் இங்க எங்களோட இருக்கலாமே சபரி?” என்று விமலா தயங்கியபடி கேட்டார்.
“நீங்க வேறம்மா. இங்க மூணு நாள். தங்கச்சி வீட்டுல மூணு நாள். அடுத்த நாள் உங்க எல்லாரோடவும் சேர்ந்து புது வீடு பால் காய்ச்சிறோம்” என்றவன் மனைவியை அருகில் வரவழைத்து பெரியவர்களிடம் ஆசி வாங்கினான்.
இங்கும் அங்குமாய் ஆறு நாட்கள் முடிய புது வீடு பால் காய்ச்சினார்கள். சுற்றிலும் ப்ளாட் வீடுகள் இல்லாது தனித்தனி வீடுகளே!
விக்னேஷ் பற்றித் தெரிந்த இசக்கி அவனுக்கு நன்றி தெரிவிக்க, சரளாவிற்கு முழுதாக அவர்களுடன் ஒட்ட முடியவில்லை என்றாலும் விக்னேஷ் குணம் பிடித்துப்போக நின்று பேசினார்.
‘சபரி கலக்ஷன் இப்பொழுது சென்னையிலும். விரைவில்’ என்ற வாசகத்துடன் டிவியில் அவ்வப்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அவ்விளம்பரம்.
கடைத்திறப்பு நாளன்று சினிமா, அரசியல் இரண்டிலும் பிரபலமான ஒருவரை வைத்து ரிப்பன் கட் செய்ய… சூர்யோதயா! உதய ஹரிணி! இருவரும் சேர்ந்தாற்போல் விளக்கேற்ற… அதை வீடியோவிலும், புகைப்படத்திலும் பதிவாக்கிக் கொண்டார்கள்.
சூர்யோதயாவின் உடன் பிறப்புகள் குடும்பத்துடன் வந்திருக்க, விக்னேஷ்-காவ்யா தமிழ் பிரபலமாகவும், அர்ச்சனா மலையாள பிரபலமாகவும் வர, சபரி கலக்ஷனில் மக்களின் பார்வை அதிகரித்தது. வியாபாரத்தின் முதல் படி விளம்பரம். அதை அனைவரையும் சேரச் செய்திருந்தான் சபரிநாதன்.
“என்ன மயினி உங்க பையன் என் பொண்ணையும், அவளோட பொண்ணையும் வச்சி விளக்கேத்துறான். உரிமைச் சண்டை போடாம நிற்குறீங்க?” இசக்கி தன் விளையாட்டை ஆரம்பிக்க…
“நாத்தனாரே! முதல்ல அவங்க என் மருமகளும், என் பேத்தியும். அவங்க விளக்கேத்தாம யாரு ஏத்துவாங்களாம்? உதயாமா உன் அம்மா என்னவோ சொல்றா பாரு. எனக்கு ஒண்ணும் புரியலை” என்று இசக்கியை மருமகளிடம் மாட்டிவிட்டார்.
“என்னம்மா?” எனக்கேட்டு வந்த மகளிடம், “ஒண்ணுமில்லைடா. நானும் மயினியும் பேசிட்டிருந்தோம். என்ன பார்த்துட்டிருக்கீங்க விமலாண்ணி. எடுத்துச் சொல்லுங்க” என்று அவரையும் பேச்சினுள் இழுக்க… புரியாது விழித்த விமலாவின் தலை நாலாபுறமும் ஆடியது.
[the_ad id=”6605”]
“அம்மா! விமலா அத்தை ரொம்ப ஷாஃப்ட். உங்க அளவுக்கெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது.”
“அப்ப என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது” என்று முறைக்க…
அவரின் இருபக்கக் கன்னம் கிள்ளி, “என் அம்மான்னு தெரியுது. இந்த உலகத்தில் பார்த்த முதல் முகம் இந்த என் அம்மான்னு ரொம்ப நல்லாவே தெரியுது. வேறென்னம்மா தெரியணும்?” என்று புன்னகைத்தாள்.
“என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் அதிகமாகிருச்சி தெரியுது. பிறந்தப்ப இருந்த கொழுகொழு வெள்ளச்சி ஜாடை உனக்கு வருதுன்னு தெரியுது.”
“ஆரம்பிச்சிட்டாங்கய்யா கொஞ்சல்ஸை. ஒண்ணு அம்மாவைக் கொஞ்சுறா. இல்ல பொண்ணைக் கொஞ்சுறா.”
“ஏன்மா அவனை மட்டும் கொஞ்சலையா? ஓவர் கம்ப்ளைண்டா இருக்கு?”
“அச்சோ! இல்லம்மா. மச்சானை நான் ரொம்பவே கொஞ்சுறேன்” என்றாள் பட்டென்று.
“எப்படி?”
“இதோ இப்படித்தான்” என்று கண்கள் கணவனை ரசித்து நெருங்க…
‘பப்ளிக்ல ரொமான்ஸ் பண்றளவு இந்த வெள்ளச்சி நல்லவள் இல்லையே.’ சபரிநாதன் மண்டைக்குள் யோசனை ஓடினாலும், அவளிடம் ஆசையாய் பார்வையை செலுத்தத் தவறவில்லை.