‘என்ன.? இரண்டு வருசமாவா.?” என அதிர்ந்தவள்.. ‘என்கிட்ட கூட சொல்லல..” என கோபித்தாள்.
‘இன்னும் அவகிட்டயே சொல்லல..” என்றான்.
செல்வராணி புரியாமல் விழிவிரிக்க.. ‘ரொம்ப சின்ன பொண்ணுக்கா..” என்றவன் கீதாராணி உள்ளே வரவும் அமைதியானான்.
கீதா.. ‘யார் சின்ன பொண்ணு.? கலை யாரைப் பத்தி பேசுறான்..?” என்றாள் ஆர்வமாக.
‘ம்.. அவன் காப்பாத்தின நித்தியா பொண்ணு ஃபோன் செய்து தேங்க் பண்ணுச்சி.. அதைப் பத்திதான் பேசிட்டிருந்தான்..” என்றாள் செல்வராணி.
பேச்சை மாற்றுகிறாள் என நன்குணர்ந்த கீதாராணியின் முகம் வாடிட.. ‘கலை.. அப்பாம்மாவோட நீ இங்கயிருந்தா உன் விருப்பப்படி இன்னும் இரண்டொரு வருசம் பொருத்து செய்துக்கலாம்னு அப்பாவும் விட்டுருவார்.. நீ அங்க தனியா இருக்கிறதாலதான் உனக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார்..
உன்னால இங்கயிருக்க முடியாதுதான்.. உன்வேலை அப்படி அது எங்களுக்கும் புரியுது.. அதேநேரம் அவர் ஆசையில தப்பேதும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.. தேவையில்லாத உன் பிடிவாத்தை விட்டுட்டு அப்பாம்மா நிம்மதிக்காக கல்யாணம் செய்யப்பாரு.. ” என கண்டிப்போடு சொன்னவள்.. ‘என்ன கீதா நான் சொல்றது சரிதான.?” என்றாள்.
‘ம்.. சரிதான்.. ஆனா கலைக்கு விருப்பமில்லாம கல்யாணம் எப்படி செல்வி..?” என தம்பி மீதான தன் அக்கறையை காட்டினாள்.
‘கல்யாணம்தான் அப்பாம்மாக்காக.. பொண்ணு கலை விருப்பத்துக்குத்தான்.. அவனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா பார்த்தா ஓ.கே சொல்லப்போறான்.. ஆமாதான கலை..?” என்றாள் சின்ன சிரிப்போடு.
அச்சோ இந்த செல்விக்கா அழகி வயசு தெரியாம பேசுதே என மனதில் நினைத்து.. ‘அக்கா.. என்னன்னாலும் இன்னும் இரண்டு வருசமாவது ஆகனும்க்கா..” என்றான் மன்றாடலாய்.
‘அதெல்லாம் முடியாது.. பொண்ணை நீ பார்க்குறியா.? இல்ல அப்பாவை பார்க்க சொல்லட்டுமா.? இது மட்டும்தான் உனக்கான சாய்ஸ்..” என்றாள் கறாராய்.
‘ஷப்பா..” இந்த செல்விக்கா நமக்கு நல்லது செய்யிறதா நினைச்சி உயிரை வாங்குது என தலையில் கை வைத்து அமர்ந்தான் சலிப்பாக.
கீதா.. ‘நீ ஏன் செல்வி அவனை கட்டாயப்படுத்துற.?” என்றாள் எரிச்சலை உள்ளடக்கி.
‘நீ ஏன் இவனுக்கு சப்போர்ட் செய்யிற.? அப்பாம்மா நிம்மதியை விட இவன் பிடிவாதம் முக்கியமா.? விளையாட்டு படிப்புன்னு எல்லாம் இவன் இஷ்டத்துக்குதான நடந்துகிட்டான்.. இது ஒன்னாவது அவங்களுக்காக செய்யலாமில்ல.? இப்போ என்ன பிடிக்காத பொண்ணை பார்த்து இவளைதான் கட்டியாகனும்னா சொல்லிட்டாங்க.. கல்யாணம் செய்யலாம்னுதான சொல்றாங்க.. பொண்ணு அவனுக்கு பிடிச்சாதான் கல்யாணம்.. “ என்றாள் உயர்ந்த குரலில்.
தற்போதுதான் பதினொன்னாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு என்னவென்று கல்யாணம் பேச என மனதால் வெம்பி.. மகள் மேஜராகும் வரை எந்த பொண்ணும் அமையாத மாதிரி செய்ய வேண்டியதுதான் என முடிவெடுத்து.. ‘கலைக்கு பிடிச்ச மாதிரி கல்யாணம்னா எனக்கும் சந்தோசம்தான்..” என்றாள் கீதா.
உன் சந்தோசத்தை யார் கேட்டா என நினைத்து.. ‘வெளிய வா..” என கலையரசனை ஹாலுக்கு அழைத்து வந்த செல்வராணி.. ‘அப்பா.. கலை கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்..” என்றாள் செல்வராணி.
‘க்கா..” என்றான் அதிர்வாக.
‘பதறாத.. கை சரியானதுக்கப்புறம்தான் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறோம்..” என்றாள் சிரிப்போடு.
கலையரசன் திருமணத்திற்கு சம்மதித்தான் என்றதும் லோகேஷின் முகம் சுருங்கிட.. முயன்று சற்று நேரம் அமைதி காத்து.. ‘கிளம்பலாமா கீதா..?” என்றான்.
கணவனின் மனமறிந்தவளாய்.. ‘அப்பா நாங்க போய்ட்டு வரோம்..” என்றவள்.. இரண்டு நாள் கழிச்சி வரேன் என கலையரசனிடமும் சொல்லி கிளம்பினாள் கீதா.
ரமணனிடமிருந்து கலையரசனிற்கு அழைப்பு வரேவே.. ‘இப்போ பெயின் குறைஞச்சிருக்கு சார்.. இன்னும் இரண்டு வாரத்துல திருச்சி வந்திடுவேன்..” என பேசிக்கொண்டிருக்க.. தன் தாய் தந்தையரை வெளியே அழைத்து சென்றாள் கீதா.
தந்தையின் பார்வை புரிந்தவளாய்.. ‘அப்பா.. சின்ன பொண்ணுன்னு கூட யோசிக்காம மதுவை கலைக்கு பார்க்கனும்னு லூசுத்தனமா கீதா நினைக்கிறா.. மது இப்போதான் பதினொன்னாவது படிக்கிறா.. கீதா நினைப்பு அவளுக்கு தெரிஞ்சா அதுக்கப்புறம் படிப்புல கவனம் இருக்காது.. படிக்கிற பொண்ணை நாமே கெடுத்த மாதிரி ஆகிடும்.. எனக்கு மதுவோட படிப்பும் முக்கியம்.. அதே நேரம் கலையும் முக்கியம்..
எல்லாம் போக கலைக்கு மட்டும் கீதா நினைக்கிறது தெரிய வந்தது.. அவ உறவையே கட் பண்ணிடுவான்.. எங்களுக்குள்ள பிரச்சனை வரும் முன்ன கலைக்கு பொண்ணு பார்த்திடலாம்..” என்றாள்.
‘அம்மாடி.. கீதா நினைப்பு தெரிஞ்சதாலதாண்டா கலைக்கு இப்பேவே கல்யாணம் முடிக்க நினைக்கிறேன்.. என் பேத்தி பெரியவளா இருந்தாலுமே கலை கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான்.. மது குணத்துக்கும் கலை குணத்துக்கும் ஒத்தே போகாதுடா.. அது புரியாம கீதா ஆசைப்படுறா.. பொண்ணுங்க மனசு புண்படக்கூடாதுன்னுதான் என் மகனுக்கு பிடிக்கலன்னாலும் பரவால்லன்னு அவனுக்கு கல்யாணம் செய்ய நினைக்கிறேன்.. எங்க மூச்சு இருக்கும் வரைக்குமாவது நீங்க மூனுபேரும் ஒற்றுமையா இருக்கனும்..” என்றார் மனத்தாங்கலாய்.
செல்வராணி.. ‘உங்க மகனுக்கு கல்யாணம் பிடிக்கலன்னு சொன்னானா.? இன்னும் இரண்டு வருசம் போகட்டும்ன்னுதான சொன்னான்.?” என்றாள் சின்ன சிரிப்போடு.
‘கலை அப்படில்லாம் இருக்க மாட்டான்.. அவனுக்கு அதெல்லாம் பிடிக்காது.. நீ எதோ தப்பா புரிஞ்சிட்டிருக்க..” என்றார் மயில்சாமி.
தற்போதுதான் செல்வியின் பேச்சு புரிந்தவராய்.. ‘ஆமாமாம்.. பொண்ணுங்களை கிண்டல் பண்றவங்களை கண்டாலே என் மகனுக்கு பிடிக்காது.. இதுல அவன் எங்க அப்படி செய்ய போறான்..?” என்றார் கலா.
செல்வராணி.. ‘ம்.. நீங்க சொல்றதும் கூட கொஞ்சம் சரிதான்..” என பீடிகை போட.. மகன் மீது நம்பிக்கையிருந்தாலும் மகளும் தவறாக சொல்லமாட்டாளே என உணர்ந்த மயில்சாமி.. ‘செல்விமா.. சொல்ல வந்ததை முழுசா சொல்லுடா..” என்றார்.
‘கலை ஒரு பொண்ணை லவ் பண்றான்ப்பா.. ஆனா இன்னும் அவகிட்டயே அதை சொல்லலையாம்.. மேற்கொண்டு விசாரிக்கிறதுக்குள்ள கீதா வரவும் அமைதியாகிட்டேன்.. வாங்க என்ன ஏதுன்னு விசாரிப்போம்..” என்றாள்.
பெரிதாய் அதிர்ந்த கலா.. ‘இதுல விசாரிக்க என்ன இருக்கு.? அவங்க என்ன குலமோ.? என்ன இனமோ.? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா.?” என புலம்பினார்.
‘அம்மா.. நம்ம கலை மனச ஜெய்க்கிறது அவ்வளவு சுலபமில்ல.. அவனே விரும்பறான்னா கண்டிப்பா நல்ல பொண்ணாதான் இருப்பா.. நீ தேவையில்லாம புலம்பாத..” என எடுத்துரைத்தபடி தாய்தந்தையோடு கலையரசனிடம் வந்தாள் செல்வராணி.
கலையரசன் இன்னமும் போன் பேசிக்கொண்டிருந்தான்.. மயில்சாமியும் கலாவும் பதட்டத்தோடு மகனை பார்த்திருக்க.. செல்வராணி மட்டும் குறுகுறுவென பார்த்திருந்தாள் தம்பியை.
பேசி முடித்தவன்.. என்ன.? மூனுபேரும் ஆளுக்கொரு திணுசா பார்க்கிறாங்க..? என யோசிக்க.. அச்சோ அக்கா அம்மாப்பாகிட்ட போட்டு கொடுத்திடுச்சி எனப் புரிந்தவன் தன் பதட்டம் மறைத்து.. ‘என்னம்மா.?” என்றான்.
‘செல்வி சொல்றது உண்மையா.?” என்றார் பரிதவிப்பாக.
செல்வியை முறைத்தாலும்.. அன்னையின் தவிப்பறிந்து.. ‘உண்மைதான்ம்மா.. ஆனா கல்யாணம் இரண்டு மூனு வருசம் கழிச்சிதான் செய்துக்குவேன்..” என மென்மையாகவே சொன்னான்.
மகனிடம் இப்படி பதிலை எதிர்பாராத கலா.. ‘கலை.. இதெல்லாம் உனக்கு தெரியாதுடா.. அப்பாம்மாக்கு தெரியாம காதலிக்கிற புள்ளைங்களெல்லாம் நல்ல புள்ளைங்களா.?” என்றார் கோபத்தோடு.
சிறுவனுக்கு போல் எடுத்துரைக்கும் அன்னையின் பேச்சில் சிரிப்பு வந்தது கலைக்கு. ‘ம்மா நான்தான் விரும்புறேன்.. அவ இல்ல..” என்றான் சிரிப்போடு.
‘இப்போவே அவளுக்கு சப்போர்ட் பண்றியா.? ரெண்டு பேரும் பேசி வைக்கப் போய்தான இரண்டு வருசம் கழிச்சி கல்யாணம் செய்துக்கிறன்ற.?” என்றார் கோபமாக.
‘ம்மா.. இரண்டு வருசத்துக்கப்புறம் இன்னைக்குத்தான் முதல்முறையா அவகிட்ட இரண்டு வார்த்தை பேசினேன்.. நான் லவ் பண்றதே அவளுக்கு தெரியாது..” என்றான்.
கலா நம்பாமல் பார்க்க.. ‘ஏய் நீ கொஞ்சம் அமைதியா இரு..” என மனைவியை அமைதிப்படுத்தி.. ‘அந்த பொண்ணு யாரு என்னன்னு விபரம் சொல்லு.. எல்லாருமா போய் பார்த்துட்டு வரலாம்..” என்றார் மயில்சாமி.
மயில்சாமி..‘சின்ன பொண்ணை எதுக்குடா லவ் பண்ற.?” என்றார் கோபமாக.
‘கோபப்படாதிங்கப்பா..” என தகப்பனை அமைதிப்படுத்திய செல்வராணி.. ‘உன் அழகி என்ன படிக்கிறா.?” என்றாள்.
‘இப்போதான்க்கா காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்..” என்றான்.
‘அப்போ.. அவ பதினொன்னாவது படிக்கிறப்போலயிருந்து லவ் பண்ற..” என முறைத்து.. ‘போகட்டும் விடு.. யாரு.? எந்த ஊரு..? உனக்கெப்படி பழக்கம்ன்னு விபரம் சொல்லு..” என்க.. நிலவழகியை சந்தித்ததிலிருந்து அனைத்து விபரத்தையும் சொன்னான்.
மனைவிக்கு உடன்பாடில்லை என கலாவின் முகத்தை வைத்தே புரிந்திருந்தார் மயில்சாமி.. ‘இரண்டு வருசமா லவ் பண்றன்றானே.. எங்க போலீஸ்கார பொண்ணையேது சொல்லிடுவானோன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்ல காலம் அப்படியெதுவும் இல்ல.. போலீஸ் வேலை செய்யிற பொண்ணு பிரச்சனையில்ல.. ஆனா இவன் வீட்ல இருக்கும்போது அந்த பொண்ணு டியூட்டிக்கு போய்டும்.. அந்த பொண்ணு வீட்ல இருந்தா இவன் கிளம்பிடுவான்.. போலீஸ் வேலைன்னு இல்ல.. எந்த வேலைக்கு போற பொண்ணா இருந்தாலும் கூட்டு குடும்பம்னா சமாளிச்சிடலாம்.. ஆனா இவன் நம்மளோட இருக்க வாய்ப்பே இல்ல.. நமக்கும் இங்க விட்டு எங்கையும் செட்டாகாது..
மெஸ்சுல சாப்டுட்டு தனியா கஷ்டப்படுறானேன்னு இவனை கவனிச்சிக்கத்தானே கல்யாணம் செய்ய நினைக்கிறோம்..? நம்ம எதிர்பார்ப்புக்கு இந்த பொண்ணு செட்டாகும்னுதான் தோணுது.. எல்லாம் போக இரண்டு வருசமா மனசுல நினைச்சிட்டிருந்திருக்கான்.. யாருக்கு பிடிக்கலன்னாலும் உன் மகன் கேக்க மாட்டான்.. அவனுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழட்டும்.. அவன் சந்தோசம்தான் நமக்கு முக்கியம்..” என எடுத்துரைக்க வேறு வழியின்றி அமைதியானார் கலா.
கலையரசன் சொன்னதிலேயே செல்வராணிக்கு நிலவழகியை பிடித்திட.. இதில் தந்தைக்கும் சம்மதம் என்றதும்.. ‘இப்போ பேசி முடிச்சிக்கலாம்.. ஆறு மாசம் கழிச்சி கல்யாணம் செய்துக்கலாம்.. கல்யாணம் முடிச்சிட்டு அவ விருப்பத்துக்கு படிக்க வை..” என்றாள்.
‘செல்வி சொல்றதும் சரிதான்..” என்றார் மயில்சாமி.
‘இத்தனையும் சொல்லி திரும்பவும் இப்பவே பேசனும்னா எப்படிப்பா.? நீங்க என்னை புரிஞ்சிக்கிற அளவுக்கு நிலாவோட அப்பா எதையும் புரிஞ்சிக்க மாட்டார்.. காதல் கல்யாணம்ங்கிறதால இப்போ வரைக்கும் அவங்க பெரிய பொண்ணுகிட்ட பேசறதில்ல.. அவங்கப்பாக்கு பிடிக்காத எதையும் நிலா செய்யமாட்டா.. எடுத்து சொன்னா புரிஞ்சிக்கிற பக்குவமும் அவளுக்கில்லை..” என்றான் தவிப்பாக.
‘புரிஞ்சிக்கிற மாதிரி நீ எடுத்து சொல்லு.. லவ் பண்றல்ல..?” என்றாள் செல்வராணி.