அரைமணி நேரமாய் பொருமிக் கொண்டிருந்த மகளிடம் பொறுமை இழந்த மயில்சாமி.. ‘இப்போ என்ன கீதா.? உன்னை விட்டு போய் சம்பந்தமா பேசிட்டோம்.? கலை ஒரு பொண்ணை விரும்பறன்றான்.. உனக்கு பிடிச்ச வாழ்க்கை அமைச்சி கொடுக்கிறேன்னு சொல்லிருக்கேன்.. இதுல என்ன தப்பிருக்கு.? இரண்டு வாரம் கழிச்சி இன்னைக்கு வந்திருக்க.. வந்ததும் ஆசையா சொல்றேன்.. சந்தோச படாம எதுக்கு இப்படி ஆர்பாட்டம் பண்ற.?
அன்னைக்கும் கல்யாணம் செய்யனும்னு அவன்கிட்ட பேசிட்டிருக்கேன்.. அவனுக்கு முன்ன இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு நீ கேக்குற.. அப்போ நான் சொல்றதுக்கு நீ என்ன மரியாதை கொடுத்த.?
படிக்கிற வயசுல தனியா இருந்தது பிரச்சனையில்ல.. இப்போ நல்ல வேலைல இருக்கான் கை நிறைய சம்பாதிக்கிறான்.. எல்லாம் இருந்தும் எதுக்கு தனியா கஷ்டப்படனும்.? என் மகனுக்கு எப்போ என்ன செய்யனும்னு எனக்கு தெரியாதா.?” என தானும் கடுகடுக்கவே..
சற்று அடங்கினாலும்.. ‘கலை கல்யாணத்துல நான் தலையிடக்கூடாதாப்பா.?” என்றாள் மனத்தாங்கலாய்.
‘நான் அப்படி சொன்னேனா.? நீயும் செல்வியும் கல்யாணத்துல எல்லா விசயமும் முன்னயிருந்து நடத்துங்க.. ஆனா கட்டிக்க போற பொண்ணை அவன்தான் செலக்ட் செய்யனும்.. இதுல மருமகன் கோவிக்க என்னயிருக்கு..? கலை விசயம் கேள்விபட்டதும் சின்ன மாப்பிளையெல்லாம் சந்தோசம்தான் பட்டார்..” என்றார் உள்ளடக்கிய கோபத்தோடு.
இதற்குமேல் பேசினால் தம்மோடு சேர்ந்து கணவனின் மரியாதையும் குறையும் என வேறு வழியின்றி அமைதியானாள். ஆனால் இப்படி சமுகத்தில் உயர்ந்த இடத்திலிருக்கும் தங்க தம்பியை யாரோ ஒருத்திக்கு விட்டு கொடுக்கிறோமேயென மனம்தான் ஆறவேயில்லை. ஏதேனும் செய்து தம்பியை தன் மகளிற்கு தக்க வைத்துக்கொள்ளவே உந்தியது மனம். கலையரசன் என் தம்பி.. என் மகளிற்கில்லாதது என்னவென்ற உரிமையும் திடமாக, தம்பியின் மனதை யோசியாமல் சுயநலமாகவே சிந்திக்கலானாள்.
—- —– ——
கலையரசன் குறித்து தாய்தந்தையரிடம் முதலில் பேசி அவர்கள் சம்மதித்து பிறகு நிலாவிற்கு விருப்பமில்லையென்றால் தாய் தந்தையரின் விருப்பத்திற்காக தன் விருப்பத்தை மனதிற்குள் புதைப்பாள் என தங்கையை உணர்ந்தவனாய்.. ஒரு வாரம் யோசனைக்கு பிறகு நிலாவை தனதறைக்கு அழைத்து வந்தான்.
ம்.. எப்பொழுதும் ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகம் கிளம்பிடும் அண்ணன் இன்று இன்னும் ரெடியாகாமல் இருக்கவே உடல் நிலையேது சரியில்லையோ என்ற கவலையோடு.. ‘என்னண்ணா.. ஜூரமேது அடிக்குதா..?” என கதிரவனின் நெற்றி தொட.. ‘நான் நல்லாத்தான் இருக்கேன்.. உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்.. அதான்..” என தங்கையை அருகமர்த்தினான்.
ம்.. இன்னமும் வீட்டினர் யாரும் சுவாதி வீட்டிற்கு செல்ல நாகராஜ் அனுமதிப்பதில்லை.. குழந்தைகள் இங்கு வருவார்கள்.. தன்னை கண்டாலே முகம் திருப்பும் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பாமல் சுவாதியும் முடிந்தவரை தந்தையில்லாத நேரத்தில்தான் தாய் வீடு வருவது.. ஆனால் நிலவழகி மட்டும் குழந்தைகள் இரண்டு நாள் வரவில்லையென்றாலும் அக்காள் வீட்டிற்கு சென்றிடுவாள்.
இரண்டு வருடத்திற்கு முன்பானால் வீட்டிற்குள் செல்லமாட்டாள்.. தற்போது வீட்டிற்குள் செல்வாள் என்றாலும் சுவாதி வீட்டில் உண்பதெல்லாம் கிடையாது. கவிப்பிரியாவும் பார்த்திபனும் இவளின் தோழிகளாவே மாறியிருக்க.. மாலையில் சிறிது நேரமாவது சிறிவர்களோடு தினமும் விளையாடுவாள். நேற்று முன்தினம் குழந்தைகள் வராமலிருக்க.. நேற்று மாலை சுவாதி வீடு சென்று வந்தது தெரிந்து தந்தை கோபமடைந்தாரோ என்ற பதட்டத்தை அப்பட்டமாய் காட்டிக்கொடுத்தது நிலவழகியின் முகம்.
‘பார்த்திக்கு என்ன பார்க்கலன்னா காய்ச்சல் வந்திடுதாம்ண்ணா..” என செல்லமாய் முகம் சுருக்கி சொல்ல.. ‘ம்.. நீ பெரிய டாக்டர்.. உன்ன பார்த்ததும் நல்லாகிடுவானாக்கும்..” என பெருமை பேசி.. ‘அப்பால்லாம் ஒன்னும் சொல்லல.. இது வேற விசயம்.. நான் சொல்றேன்.. உன் மனசுல என்ன படுதோ அதை மறைக்காம சொல்லனும்.. சரியா..?” என்றான் தன்மையாக.
நல்லகாலம்.. நம்ம நினைச்ச மாதிரி ஒன்னும் இல்ல என்ற நிம்மதியோடு.. ‘ம்..” என்றாள் ஆர்வமாக.
‘ப்ச்.. நான் சொல்றதை முழுசா கேளு..” என மென்மையாய் அதட்டி.. ‘மாப்பிள்ளை எனக்கு ரொம்ப தெரிஞ்சவர்.. இவரை மாதிரி எங்க தேடினாலும் கிடைக்காது.. உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னதும் வேற யாராவதா இருந்திருந்தா சின்ன பொண்ணை பொண்ணு கேட்குறிங்களான்னு நல்லா திட்டி விட்டுருப்பேன்.. ஆனா இவர்கிட்ட அப்படி பேச முடியல..” என்றதும்..
‘அண்ணா என் படிப்பு..” என்றாள் பதட்டத்தோடு.
‘ம்.. கல்யாணம் முடிஞ்சாலும் நீ விரும்புற வரைக்கும் படிக்க வைப்பாராம்.. படிப்பு முடிஞ்சதும் வேலைக்கு போறதும் போகாததும் உன் விருப்பம்தானாம்..” என்க.. ‘இப்போ அப்படி சொல்வாங்க.. ஆனா கல்யாணத்துக்கப்புறம்..” என இடைபுகுந்தாள் மீண்டும்.
‘நம்ம கலையரசன் அப்படில்லாம் பேச்சு மாறமாட்டார் நிலா..” என்க.. ‘யாரு..?” என பேரதிர்ச்சியோடு கேட்டவளின் கண்கள் தன்போல் கதிரவன் அறையிலிருந்த கலையரசனின் ஆளுயர போட்டோவைப் பார்க்க.. ‘ம்.. கலையரசன்தான் கேட்டார், அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்.. உன் படிப்பு முடிஞ்சதும் என்கிட்ட சொல்லி பொண்ணு கேட்கலாம்னு இருந்தாராம்..
ஆனா அவங்கப்பா.. கை நிறைய சம்பாதிச்சும் மெஸ்சுல சாப்டுட்டு தனியா எதுக்கு கஷ்டப்படனும்னு இந்த வருசமே கல்யாணம் செய்தாகனும்னு சொல்றாராம்..” என்றான்.
இத்தனை நேரம் திருமணமா என்ற அதிர்ச்சியிலிருந்தவளின் மனம் தற்போது.. நல்லா படிக்கலன்னா நீ முத்தம் கொடுத்தது எனக்குதான்னு கதிரிடம் சொல்லிடுவேனென அன்று கலையரசன் மிரட்டியது நியாபகம் வர.. ம்.. இவங்க நம்மளை படிக்க வேணாம்னு சொல்லமாட்டாங்க என்ற நம்பிக்கை வலுப்பெற.. திருமணம் வேண்டாம் என்ற நினைப்பை மொத்தமாக மறந்தவளாய்.. சிறு படபடப்போடு.. ‘நான் என்ன சொல்றது.? எனக்கு எது சரியோ நீங்களே முடிவெடுங்கண்ணா..” என்ற நிலா.. கதிரவன் அறையிலிருந்து நில்லாமல் ஓடினாள்.
நிலவழகியின் பதில் கதிரவனிற்கு பெருத்த சந்தோசம் தர.. தாய் தந்தையரிடம் பேசினான். அம்பிகாவின் மனம் ஆனந்த கூத்தாட உடனே சம்மதித்தார்.
‘ஆறு மாசத்துல பெரியவளாகிடுவாளா.? சின்ன பொண்ணுடா நிலா.. கல்யாணத்தைப் பத்தி என்ன தெரியும் அவளுக்கு..? இப்போதைக்கு அந்த பேச்சே கூடாது..” என மறுத்தார் நாகராஜன்.
தந்தையை தனியே அழைத்துச் சென்றவன்.. ‘நிலா சின்ன பொண்ணுன்ற விசயம் கலைக்கே உறுத்தலாதான் இருக்கு.. கல்யாணம் ஆனாலும் நிலா படிக்கட்டும்ன்னுதான் சொன்னார்.. ரெண்டு வருசமா மனசுல நினைச்சிட்டிருந்திருக்கார்.. ஆனா ஒருநாளும் நிலாவை பார்க்கவோ அவகிட்ட இதுபத்தி பேசவோ செய்ததில்ல.. கலை நிலாவை நல்லா பார்த்துப்பார்ன்றதுக்கு இது ஒன்னு போதும்.. ஆறு மாசம்ன்றது இன்னும் கொஞ்ச நாள் கூட டைம் கேட்டுக்கலாம்.. ஆனா கலை மாதிரி ஒருத்தர் கிடைக்கமாட்டார்..” என்றான்.
ம்.. நாகராஜனின் மனம் மாறியது.. ஆனால் அது கதிரவனின் பேச்சால் மட்டும் அல்ல.. வேறிடம் என்றால் சுவாதியின் திருமணம் மீண்டும் விமர்சிக்கப்படும்.. இந்த தம்பிக்கு சுவாதியைப் பற்றி அனைத்தும் தெரியும்.. தவிர யாரென பாராமலும்.. பிற்பலனை எதிர்பாராமலும் உதவி புரியும் குணமிருக்கு என்பதற்கும் சுவாதி விசயமே ஆதாரம்..
மகன் மனைவியென அனைவருக்கும் பிடித்திருக்க தான் மட்டும் மறுப்பு சொல்லி நல்ல வரணை இழந்திடக்கூடாதென்ற எண்ணமும் தோன்ற.. ‘சின்ன பொண்ணு கதிர்.. கல்யாணத்துக்கப்புறம் எதுவும் தப்பாய்ட்டா மனசுல வெம்புவாளே தவிர நம்மள்ட்ட சொல்லமாட்டா.. அப்படியெதுவும் ஆகிடாதில்ல..” என்றார் தவிப்பாக.
‘ஆகாதுப்பா.. எனக்கு கலைமேல அளவுக்கதிகமான நம்பிக்கையிருக்கு..” என்றான் நம்பிக்கையான குரலில்.
‘நிலாகிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோ..” என்றவர் கதிரின் பதிலுக்கு முன் வெளியேறினான். கலையரசனிற்கு அழைத்தான் கதிரவன்.. அழைப்பை ஏற்றதும்.. ‘நிலா என்ன சொன்னா..?” என்றான் தவிப்பாக.
‘கல்யாணம்னதும் அதிர்ந்தா.. ஆனா உங்களை சொல்லவும் நீங்க பார்த்து என்ன சொன்னாலும் சரின்னுட்டு ஓடிட்டா..” என்றான் சந்தோசமாக.
காதில் தேன் பாய்ந்தது போலிருக்க.. நிலவழகியை பார்க்கும் ஆவலை தடுக்க முடியவில்லை கலையரசனால்.. ‘எப்போ வரட்டும்..?” என்றான் தன்போல்.
‘கலை.. சரியா கேக்குல.. என்ன சொன்னிங்க.?” என்றான் கதிரவன்.
தன்னை நிலைப்படுத்தி..‘ ம்.. நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி..” என பெருமையோடு சொல்ல.. ‘என் ரோல் மாடலே எனக்கு மச்சானாகிருக்காங்க.. நான்தான் அதிர்ஷ்டசாலி..” என்றான் பெருமையோடு.
‘அப்பா.. அப்பாம்மா என்ன சொன்னாங்க..?” என்றான்.
‘அம்மாக்கு பயங்கர சந்தோசம்.. ஆனா அப்பாதான் சின்ன பொண்ணாயிருக்கான்னு ரொம்ப யோசிச்சார்.. இப்படியொரு மாப்பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்கமாட்டார்ன்னு சொல்லவும் அவரும் சம்மதிச்சிட்டார்.. அதான் கால் செய்தேன்..” என்றான் சந்தோசத்தோடு.
மேலும் சற்று நேரம் வரை பேசியிருந்து.. ‘சரிங்க கதிர்.. அடுத்து நேர்ல பார்க்கலாம்..” என இணைப்பை துண்டித்ததும் ..” நிலவழகி முகமே கண்முன் வந்தது. ம்.. கடந்த இரண்டு வருசத்துல நண்டு கொஞ்சமாச்சம் வளர்ந்திருப்பாளா.? என இன்பமாய் யோசித்திருந்தான்.
——— ——- —— ——
கலையரசன் தந்தையிடம் கதிர் வீட்டினர் சம்மதத்தை சொல்ல.. அதன்பின் ஒரு மாதத்திற்கு நல்லநாள் இல்லையென்றும் அடுத்த மாதத்தில் போலாம் என்றும் மயில்சாமி சொல்ல.. ஒன்றரை மாத காத்திருப்பு பின் இன்று நிலவழகியை காண செல்லும் சந்தோசத்தில் இருந்தான்.
லோகேஷ் இறுகிய முகத்தோடு வர.. ஆனந்தன்.. ‘அப்பாம்மாவை பார்க்க வர நேரமிருக்காது.. ஆனா லவ் பண்ண நேரமிருக்கும்..” என கலையரசனோடு வம்பிளுக்க.. ‘அச்சோ மாமா.. இப்படி எண்ணத்தோட ஒத்த வார்த்தை அவகிட்ட பேசினதில்ல.. என்னை நம்புங்க..” என கலையரசன் கெஞ்ச.. இருவரும் சந்தோசமாய் பேசிக்கொண்டே பயணித்தனர்.
ம்.. பெண் பார்ப்பதற்கு இத்தனை பேர் எதற்கு..? அடுத்து விருந்திற்கு வருகிறேன் என ஆனந்தன் வரவில்லையென்றுதான் சொன்னான்.. கீதாவும் மாமாவும் ஏதேனும் சதி செய்தால் அதனை சமாளிக்க நீங்கள் வேணுமென செல்வராணி பிடிவாதம் செய்து கணவனை அழைத்து வந்திருந்தாள்.
—- ——- ——- ——-
எதுவும் அதிகப்படியாகிடக் கூடாது.. அதே நேரம் மங்களகரமாக இருக்க வேண்டுமென மகளை பார்த்து பார்த்து தயார் செய்திருந்தார் அம்பிகா. நிலவழகியும் அலட்டாமல் அன்னை விருப்பத்திற்கேற்ப்ப தன்னை அலங்கரித்துக்கொண்டாள். பெரிதாய் முகப்பூச்செல்லாம் இல்லை.. ஆனால் இளமஞ்சள் பட்டு சாரியும்.. சன்ன கரைகேற்ப அடர்நீல பிளெசும் அணிந்திருந்தாள்.
ராசிபுரம் எல்லைக்குள் வந்ததும் போன் செய்யுங்கள் என கதிரவன் சொல்லியிருக்க.. இன்னும் கால்மணி நேரத்தில் வந்திடுவோமென கலையரசன் கதிரவனிடம் சொல்ல.. கதிரவன் அன்னையிடம் சொல்ல.. இத்தனை நேரம் சிறு எதிர்பார்ப்போடிருந்த நிலவழகியின் மனம் தற்போது படபடப்பிற்குள்ளானது.
மகளிற்கு மல்லிகை சூடிவிட்ட அம்பிகா.. ‘நான் போய் பலகாரம் எடுத்து வச்சிட்டு டீ வைக்கிறேன்.. முதல் முறையா சாரி கட்டியிருக்க.. கூப்பிடும்போது மெல்ல நடந்து வா.. இல்ல தட்டிவிட்டுடும்..” என கண்டித்து கிச்சன் சென்றார் அம்பிகா.