கலையை காணப்பிடிக்காமல் நிலா முகம் திருப்ப.. மகளருகே அமர்ந்த நாகராஜன்..‘என்னை பார்க்க கூட பிடிக்காத அளவுக்கு அப்பா உனக்கு என்னடா செய்துட்டேன்..?” என வேதனையோடு கண்ணீர் வடிக்க..
‘அச்சோ.. ஏன்ப்பா இப்படி சொல்றிங்க..? என்னை மன்னிச்சிடுங்கப்பா..” என தானும் அழுதாள்.
இவளின் அழுகையை காண சகியாமல்.. ‘ஏய் ச்சு.. வாயமூடு..” என கலையரசன் அதட்ட.. ‘எங்கப்பாவோட நான் பேசுவேன்.. முதல்ல வெளில போங்க..” என்றாள் கோபமாக.
நான் வெளிய போகனுமா என பல்லை நெறித்தவன்.. ‘உங்கப்பம்மாவை அரஸ்ட் செய்ய வந்திருக்கேன்.. அவர் கையை விடு நான் கூட்டிட்டு போகனும்..” என்க.. மிரண்டு விழித்த நிலாவோடு நாகராஜனும் அரண்டார்.
இவளின் தற்கொலை முயற்சிக்கான காரணம் தற்போதே தெரிந்தாக வேண்டி.. நாகராஜிடம்.. ‘உங்க பொண்ணை தற்கொலைக்கு தூண்டியிருக்கிங்க.. என்ன ஏதுன்னு விசாரிக்கனும்..” என்றான் இரக்கமின்றி.
‘இல்ல.. எங்கப்பாம்மா அப்படி செய்யல..” எனப் பதறினாள் நிலவழகி.
‘அதை நான் விசாரிச்சி தெரிஞ்சிக்கிறேன்..” என முறைத்தவன்.. ‘நீ உயிரோட இருக்கவும்தான் இப்படி விசாரணை.. ஒரு வேளை செத்துருந்தின்னா உங்கப்பாவை கொலைகேசுல உள்ள தள்ளியிருப்பேன்..” என மிரட்ட.. அச்சோ.. இப்படில்லாம் இருக்கா என அதிர்ந்தவள்.. கதிரவனின் முகம் பார்த்தாள் கண்ணீரோடு.
‘உங்கண்ணனோட நண்பனா நான் இங்க வரல.. ஏ.சி.பி யா வந்திருக்கேன்.. யார் சொன்னாலும் இதை நான் சும்மா விடப்போறதில்ல..” என மிரட்டி கதிரைப் பார்க்க.. கதிர் புன்முறுவல் பூக்க.. கடுப்பான கலையரசன் கதிரை முறைத்தான்.
கலை அர்த்தமாய் பார்க்க.. நிலா.. ‘அண்ணா..” எனப்பதற.. ‘விசாரணை இருக்கட்டும்.. உனக்கெதாவது ஆகியிருந்தா அதுக்கப்புறம்..” என கண்ணீர் விட்டவர்.. ‘மொத்த குடும்பத்தையும் மறந்து சாகத் துணியிற அளவுக்கு அப்படி என்ன நடந்தது நிலா..?” என்றார் நாகராஜன்.
இம்முறை நாகராஜன் குரல் சற்று கடுமையைக் காட்ட.. ‘தாத்தா.. நிலாவ திட்டாதிங்க.. அவளே பாவம்.. ஊசி போட்டிருக்கு..” என கையிலிருந்த வெண்ஃபிளானைக் காட்டிவள்.. ‘சித்தப்பா.. எதோ புக்கு படிச்சாளாம்.. அதை பார்த்ததும் தாங்க முடியலயாம்.. அதான் மாத்திரை சாப்பிட்டாளாம்..” என ஒப்புவித்தாள் கவிப்பிரியா.
ம்.. இதுக்குத்தான கவிம்மாவை என்னோட அனுப்பி வச்சிங்க..” என்று கதிர் கலையிடம் நகைக்க.. ‘அச்சோ..”என கண்மூடினாள் நிலவழகி.
‘என்ன புக்கு.? உயிரை போக்கிக்கிற அளவுக்கு அதுல என்ன பார்த்த..?” என்றார் நாகராஜன்.
‘அது நீங்கதான வாங்கி வந்திங்களாம்.. எல்லாம் உங்களாலதான் தாத்தா..” என்றாள் கவிப்பிரியா.
‘நான் என்னடாம்மா செய்தேன்.? வழக்கமா வாங்குற குங்குமம் புக்குதான வாங்கி வந்தேன்..” என்க.. கலை..‘அண்ணா.. வெளில போய்ட்டு ஒரு குங்குமம் புக் வாங்கி வரிங்களா.?” என்றான் குமாரிடம்.
‘அதெல்லாம் எதுக்கு கலை..?” என கதிர் சிரிப்போடு சொல்ல.. ‘அண்ணா..” என நிலவழகிப் பதற.. ‘கவிம்மா பாதி செல்லிட்டா.. புக்கை பார்த்தா மீதி தெரிஞ்சிடப் போகுது.. இனி எதையும் மறைக்க முடியாது நிலா.. அதோட என்னவோ ஏதோன்னு அப்பாம்மா எப்படி அழறாங்க பாரு..” என்றான் கதிரவன்.
தன் ரகசியத்தை உடைத்தால் கோபம் வரவே.. ‘நான் உங்கள்ட்ட பொய் சொன்னேன்.. நான் ஒன்னும் அதுக்காக மாத்திரை குடிக்கல..” என்றாள் கதிரிடம்.
‘இதெல்லாம் நீங்க எதுக்கு விசாரிக்கிறிங்க..? நீங்க என்ன எங்க ஊர்லயா சார்ஜ் எடுத்திருக்கிங்க.. உங்க ஊருக்கு போய் உங்க வேலை என்னவோ அதைப் பாருங்க..” என்றாள் கோபமாக.
கலை..‘லா..பாயின்ட்லாம் கரெக்ட்டாத்தான் பேசுற..” என முறைக்க.. ‘இங்க கீழயே ரிசப்பன்லயே இருந்தது.. இந்தாங்க குங்குமம் புக்..” என குமார் சிரிப்போடு கொடுக்க.. கலை வாங்கி பார்க்க.. ‘உள்ள என்னயிருக்குன்னு பார்க்கிற அளவுக்கு கூட பொறுமை பத்துல.. அட்டைப் படத்தை பார்த்ததுமே மேடம் சாகத் துணிஞ்சிட்டாங்க..”என கதிர் துப்பு கொடுத்தான்.
புத்தகத்தை மூடி முன் அட்டையைப் பார்த்த கலையரசன் இன்ப அதிர்ச்சியோடு நிலாவை பார்க்க.. கதிரவன்.. ‘ஆமாம் கலை.. நீங்க முன்னால் வீரரா.? இல்ல இந்நாள் வீரரா..?” என்றான் சிரிப்போடு.
அச்சோ அப்போ அது இவன் இல்லையா.? நாமதான் சரியா பார்க்காம விட்டுட்டோமா.?போச்சி.. எல்லாம் போச்சி.. என வெக்கி முகம் திருப்பினாள் சுவற்றுப்புறம்.
தற்போது காப்பாத்தியிருந்தாலும் மீண்டும் இதுபோல் செய்திடுவாளோ என்ற பயத்தில்.. ‘கதிர் அந்த புக்குல அப்படி என்தாண்டா இருக்கு.?” என அம்பிகா பதட்டத்தோடு கேட்க.. புத்தகத்தில் உள்ளதை சொல்லி.. ‘அது நம்ம கலைன்னு நினைச்சிட்டு இந்த வேலையைப் பார்த்திருக்காம்மா..” என்றான் கதிரவன்.
அம்பிகா..‘அடிப் பைத்தியமே.. உனக்கு கலையை பிடிக்கலன்னு இல்ல நினைச்சிட்டிருந்தேன்..” என தலையில் அடித்துக்கொண்டவர்.. ‘அப்படியேன்னாலும் இப்படியாடி செய்வ..? ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிருந்தா என்னாகுறது.? என் பேத்தி சொல்லவும் ஆச்சு..” என்றார் பதைப்பாக.
மகளின் முகத்தை தன்புறம் திருப்பிய நாகராஜன்.. ‘அப்படியாடா..?” என்றார்.
‘ப்பா..” என நிலவழகி தடுமாற.. ‘அப்படியேன்னாலும் கதிர்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல.? உங்கக்கா, அப்பாம்மா வேணாம்னு ஓடிப்போனா.. நீ யாருமே வேணாம்னு சாகப்போயிருக்க.. பொண்ணுங்களை எப்படி வளர்த்தனும்னு எனக்குத்தான் தெரியலபோல…” என்றார் வேதனையாக.
‘ப்பா.. அப்படியில்லப்பா..” என நிலவழகி குற்றவுணர்வோடு கண்ணீர் விட்டாள்.
நிலாவும்தான் காதலிக்கிறாள், ஆனால் தன்னை போல் தன் வாழ்வே பெரிதென எண்ணாமல் தந்தைக்காக திருமணத்தை வேண்டாம் என்றதோடு கடைசியில் உயிரை விடவும் துணிந்திட்டாளே.. இவளின் வயதில்தானே பெற்றோர் வேண்டாம் எனப் போனோம்.. ?
தனக்கு பிடித்தவனை மனம் முடிக்கிறோம் என்பது மட்டும்தானே அந்த வயதில் தெரிந்தது.. அதனால் பெற்றோர் எத்தனை அவமானத்திற்குள்ளாவார்கள் என தங்கையை போல் யோசிக்கவில்லயே.. ஊரார் முன் அவமானப் பட்டதோடு எத்தனை வருந்தியிருப்பார்.. அன்று காவல் நிலையத்தில் தன்னோடு வரும்படி கெஞ்சியது நினைவு வர.. பத்து வருடம் கடந்தபோதும் தான் உதாசினப்படுத்தியதை நினைத்து இன்றும் கண்ணீர் விடுவதோடு தன் வளர்ப்பு சரியில்லை என்கிறாரே என மிகுந்த வேதனையடைந்தாள் சுவாதி.
கலையரசனின் இன்ப அதிர்வெல்லாம் ஒரு நொடிதான், என்னை பிடிச்சிருந்தாலும் செத்தாலும் சாவா.. ஆனா என்னை கல்யாணம் செய்துக்க மாட்டாளா என்ற கோபத்தில் இருந்தவன்… ’உதவி செய்யிற பொண்ணுங்ககிட்டல்லாம் பல்லை காட்டுவன்னு என்னை பத்தி நல்லா நினைச்சிருக்கா உன் தங்கை..” என கதிரவனிடம் கடுகடுத்து..
நாகராஜிடம்.. ‘இவ்ளோநாள் உங்க பொண்ணு மனசுல நான் இல்லைன்றதாலதான் கல்யாணத்தை தள்ளி போட்டேன்.. இனி அதுக்கு அவசியமில்ல.. இந்த மாசத்துலயே ஒரு நல்ல நாள் பாருங்க அங்கிள்..” என்றான்.
‘தம்பி.. வீட்ல அம்மாப்பாகிட்ட சொல்லுங்க.. எதுன்னாலும் அவங்க முடிவு பண்ணட்டும்..” என்றார் நாகராஜன்.
‘உங்க மனசு புரியுதுங்க அங்கிள்.. என் பெரியக்காக்கு இதுல விருப்பம் இருக்காதுதான்.. அதை நான் பார்த்துக்கிறேன்.. ஆனா எங்கப்பாம்மா என்சின்ன அக்கா எல்லாரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க.. முடிந்தவரை கல்யாணத்தை சீக்கிரம் வைக்கப் பாருங்க..” என்றான்.
‘தம்பி.. என் சின்ன பொண்ணுக்காவது நல்லபடியா கல்யாணம் செய்யனும்..” என நாகராஜன் தடுமாற.. ‘லாக்டவுன்னால கல்யாணம் ரொம்ப சிம்ப்பிளாதான் வச்சாகனும் அங்கிள்.. இப்போதைக்கு நெருங்கின உறவுகளோட கோவில்ல வச்சி கல்யாணம் செய்துட்டு.. லாக்டவுன் முடிஞ்சதுக்கப்புறம் ரிஜிஸ்தர் செய்துக்கலாம்..”என்றான்.
நாகராஜின் முகம் அப்பொழுதும் தெளிவில்லாமல் இருக்க..‘உங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுக்கிறதுல உங்களுக்கு ஒன்னும்..” எனும்போதே.. ‘எனக்கு சந்தோசம்தான் தம்பி.. ஆனா இவ்வளோ சீக்கிரம் இத்தனை சிம்ப்பிளா ஏன் பண்ணனும்.? லாக்டவுன் முடிஞ்சதுக்கப்புறம் நல்லா விமரிசையா வச்சிக்கலாமே..” என்றார் நாகராஜன்.
‘லாக்டவுன் தளர்வு செய்தாலும் நீங்க நினைக்கிற அளவுக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்ய முடியாது.. குறிப்பிட்ட பேர்வரைக்கும்தான் அலவ் பண்ணுவாங்க.. கொரோனா கட்டுக்குள்ள வரதுக்குள்ள இன்னும் எத்தனை கிசுகிசு பத்திரிக்கையில வருமோ தெரியாது.. உங்க பொண்ணு பத்திரிக்கையில போடுறதெல்லாம் நம்புவா.. ஆனா என்னை நம்ப மாட்டா.. இனி இவ எப்போ என்ன செய்வான்னு என்னால தவிச்சிட்டிருக்க முடியாதுங்க அங்கிள்.. வர முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிக்கலாம்..” என்றான் முடிவாக.
பே..வென வழித்தபடி தந்தையையும் கலையரசனையும் நிலவழகி மாறிமாறிப் பார்க்க.. இவன் அவள்புறம் திரும்பவேயில்லை.. ‘நான் எங்கப்பாகிட்ட பேசுறேன், அப்பா நாளைக்கு உங்ககிட்ட பேசுவாங்க.. எங்க கல்யாணம் வச்சிக்கலாம்னு இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுங்க..” என நாகராஜிடம் சொன்னவன்..
‘நான் கிளம்பறேன் கதிர்..” என்று வெளிறே.. கலையரசன் திருமணம் பற்றிய முடிவெடுத்ததில் மிகுந்த சந்தோசமடைந்த கதிரவன்..‘கலை ரொம்ப நாள் கழிச்சி பார்க்கிறோம்.. இருங்க கொஞ்ச நேரம் பேசிட்டிருந்துட்டு சாப்டுட்டு போவிங்க..” என்றான்.
‘உங்க தங்கை மனசுல எனக்கான இடம் தெரிஞ்சதுமே வயிறு மனசு எல்லாம் நிறைஞ்சிடுச்சி.. ” என அழுத்தத்தோடு சொன்னவன், ‘வேலையிருக்கு கதிர்.. நாளைக்கு கால் பண்றேன்..” என கிளம்பினான் கலையரசன்.