நாய் குரைக்கும் சத்தம் கேட்டதுமே கண்விழித்த மயில்சாமி.. ‘கலா.. நாய் விடாம குரைச்சிட்டிருக்கு.. மாட்டுக்கு எதுனா தொந்தரவான்னு பார்த்துட்டு வரேன்..” என எழ.. வெளியே அழைப்பு மணி ஒலித்தது.
‘யாருங்க இந்நேரத்துல..” என கலாவும் எழவே.. ‘நீ இங்கயே இரு.. மது பயந்துடப் போறா..” என்று மயில்சாமி ஹாலுக்கு வர.. உள்ளே அவரின் மொபைல் அடிக்க.. அழைப்பை ஏற்ற கலா.. ‘கலை.. என்ன இந்த நேரத்துல.? உடம்பேது சரியில்லையா.?” எனப் பதற.. இங்கே மயில்சாமி கதவைத் திறக்கவும்.. ‘என் உடம்பு எப்படியிருக்குன்னு வந்து பாருங்கம்மா..” என்றான் சிரிப்போடு.
நள்ளிரவில் வந்தபோதும் மகனின் சிரித்த முகத்தில் நிம்மதியடைந்தவராய்.. ‘என்ன கலை இந்த நேரத்துல.? இந்த பக்கம் எதுனா வேலையா வந்தியா.?” என சந்தோசத்தோடு கேட்க.. பின்னே வெளியே வந்த கலாவும் அதனையே கேட்டு.. ‘ரொம்ப சோர்ந்துருக்க.. சாப்பிட்டியாடா..?” என அக்கறையாக கேட்டு பக்கத்தில் வரவே..
‘அங்கையே இருங்கம்மா.. முதல்ல போய் குளிச்சிட்டு வந்திடறேன்..” என்று தனதறைக்குள் புகுந்தான்.
‘என்னவாங்க இருக்கும்.? இந்த நேரத்துக்கு வந்திருக்கான்.. மதுவேற உள்ள இருக்கா.. காலைல எழுந்தா எல்லாத்தையும் கலைகிட்ட சொல்லிடுவாளே..” எனப் பதறினார் கலா.
‘மது சொல்லலைன்னாலும் கீதாவே சொல்லி கலைகிட்ட வாங்கி கட்டிக்கத்தான்போறா.. எத்தனை சொன்னாலும் அவ புத்தியில ஏறாம இருக்கப்போய்தான சின்ன புள்ள இருக்கான்ற கவனம் கூட இல்லாம மதுமிதா காது படவே இதுபத்தி பேசியிருக்காங்க..” என்று கடுப்போடு சொன்ன மயில்சாமி..
‘இவன் என்ன காரணத்துக்காக வந்திருக்கானோ.? முதல்ல அதை தெரிஞ்சிக்கலாம்.. அவசரப்பட்டு நீயேது உளறி வச்சிடாத..” என்று அரைமணி நேரம் வரை பேசிக்கொண்டிக்க.. கலையரசன் குளித்து வெளியே வந்தான்.
‘இந்த நேரத்துல துணிய எதுக்குடா துவைச்ச.? காலைல நான் துவைச்சிருப்பனே..” என கலா அக்கறையோடு அதட்ட.. ‘நாளைக்கு பத்து மணிக்கெல்லாம் நான் கிளம்பனும்.. போட்டுக்க யூனிபார்ம் வேணும்.. காலைல துவைச்சா காயாது அதான் இப்போவே துவைச்சேன்.. நீங்க போய் டீ வைங்க.. நான் இதை காயப்போட்டுட்டு வரேன்..” என வெளியேறினான்.
‘தோசை ஊத்தறேன்.. இரண்டு சாப்டுட்டு டீ குடிக்கிறியா.?”என கலா கேட்க.. ‘வர வழில சாப்டுட்டுதான் வந்தேன்.. டீ மட்டும் வைம்மா..” என்றவாறு துணியை உலர்த்தி உள்ளே வந்தவன் சோபாவில் ஆயாசமாக அமர்ந்தான்.
கலா.. ‘காலைல பத்து மணிக்கெல்லாம் போறதுக்குத்தான் நடுராத்திரி பனெண்டு மணிக்கு வந்தியா..?” என முறைத்தவாறு டீ கொடுக்க.. வாங்கியவன் அமைதியாக பருகிக்கொண்டிருந்தான்.
மயில்சாமி..‘காரணமில்லாம வரமாட்டியே.. அதுவும் இந்த நேரத்துல..” என்றார் சந்தேகத்தோடு.
‘காரணத்தோடதான்ப்பா வந்தேன்.. ஆனா அதுபத்தி காலைல பேசிக்கலாம்..” என்று தன் மொபைலை எடுத்தவன் அதனை பார்த்தவாறு.. ‘மது உள்ள இருக்காளாம்மா..? வெளில அவ சைஸ்க்கு சிலிப்பர் இருந்ததே..?” என்றான்.
‘ஆமாம் கலை.. உள்ள தூங்கிட்டிருக்கா..” என்றார் கலா.
ம்க்கூம்.. இது ரெண்டுமே மதுக்கு பிடிக்காதுன்னு கலைக்கு நல்லாவே தெரியும்.. நான் நினைச்ச மாதிரியே உளறிட்டியே கலா என மயில்சாமி சலிப்போடு நினைக்க.. அன்னை சொல்வது பொய்யென தெரிந்தபோதும்.. ‘ம்..” என ஆமோதித்தவன்.. ‘சரிம்மா.. போய் படுங்க காலைல பார்க்கலாம்.. எனக்கும் ரொம்ப டையர்டா இருக்கு..” என தனதறைக்குள் புகுந்தான்.
——- ——- ——-
இரவு ஒருமணிக்கு தனதறைக்கு வந்தவன் நிலவழகி நினைவில் மேலும் ஒருமணிநேரம் உழன்று இரண்டு மணிக்கு மேல் தூங்கியபோதும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்தான் கலையரசன். தான் வெளியே வந்தால் தன்னை கவனிக்க அம்மா வெளியே வருவார்கள் என்பதால் தனதறையிலேயே இருந்தான்.
மதுமிதா ஏன் இங்கிருக்கிறாள்.? அக்கா வராம இப்படி வந்து தங்கமாட்டாளே என நினைத்தவன்.. கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் கிளாஸ்க்காக மாணவர்களுக்கும் தனித்தனியே மொபைல் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்க.. எத்தனை குழந்தைகள் அதனை படிப்பிற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்..? எத்தனை பெற்றோர் தன் குழந்தைகள் மொபைலில் என்ன பார்கிறார்கள் என கண்காணிக்கிறார்கள்..? என்ற யோசனை பலமானது.
சிறுபெண்.. பனிரெண்டாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருக்கிறாள் என நினைப்பதற்கில்லையே.. ஒருவேளை காதல் கீதல் என விழுந்துட்டாளோ..? அக்காவிற்கு தெரிந்து கண்டித்து இங்கே அனுப்பியிருப்பார்களோ என நினைக்க என சிறு பயம்கூட வந்தது கலையரசனிற்கு.
கலையரசனின் பள்ளிப் பருவத்தில் மதுமிதா என்றால் கொள்ளை பிரியம். இரு அக்காள்களும் திருமணமாகி சென்றிருக்க.. தாய் தந்தை இருவரும் பணியிலிருந்து மாலைதான் வருவது. அதிலும் அன்னை வீடு வந்ததும் துவைப்பது சமைப்பது என வீட்டு வேலையில் மூழ்கிடுவார்.. தந்தை டியூசனில் அமர்ந்திடுவார்..
மாதம் ஒருமுறை எப்பொழுதாவது சனி ஞாயிறுகளில் கீதா வந்தாளென்றால் நடை பயிலத் தெரியாத மழலை மதுமிதாவை கொஞ்சி மகிழ்வான் கலையரசன். பின்னே மதுமிதா வளர வளர அவளின் அப்பாவின் உபயத்தால் தன் மாமன் சரிவர படிக்கமாட்டான்.. எதற்கும் லாய்க்கில்லை என்ற உதாசினம் மேலோங்க, அது அவளின் நடத்தையிலும் தெரிய கலையரசனும் மதுவோடு பழகுவதை நிறுத்தியிருந்தான்..
மதுமிதா மரியாதையின்மையாக நடந்து கொண்டாலும்.. சிறுபெண்ணை குறை சொல்வதை விடுத்து.. இவர்களின் வளர்ப்பு அப்படியென தன் அக்காவை சாடுவான்.
இத்தனை வருடங்களில் மதுமிதா இப்படி தனியே வந்தும் இருந்ததில்லை.. தன் மாமாவும் அதற்கு ஒப்புகொள்ளமாட்டார்.. அதோடு மது விசயத்தில் அம்மாவும் பொய் சொல்கிறார்கள் எனப்புரிய கலையரசனிற்கு மது மீது தவறாகவே எண்ணங்கள் வலம் வர.. தன் தந்தை குரலோடு மாடு கத்தும் சத்தமும் சேர்ந்து அவனின் கவனத்தை கலைத்தது.
பால் கரக்க வந்திருப்பார்கள் என யூகித்தவனாய் தனதறையிலிருந்து வெளியே வந்தான். மாட்டை பிடித்து வேறு இடத்தில் கட்டி சாணம் எடுத்து கூடையில் போட்டுக்கொண்டிருந்த மயில்சாமி.. மகனைக் கண்டதும்.. ‘என்ன கலை அதுக்குள்ள எழுந்துட்ட..? இன்னும் கொஞ்சநேரம் தூங்கியிருக்கலாமில்ல..?” என்றார். இவர்களின் பேச்சரவத்தில் உள்ளிருந்த மதுவும் எழுந்திருந்தாள்.
‘தூக்கம் வரலப்பா..” என்றவன் துடைப்பம் எடுத்து மாட்டுத் தொழுவம் பெருக்க ஆரம்பிக்க.. ‘டேய்.. அதெல்லாம் நான் செய்துக்கிறேன்.. நீ போய் உக்காரு..” என பாசத்தோடு அதட்டினார் தந்தை.
‘என் அப்பாவே வேலை செய்யும்போது நான் செய்யக் கூடாதா.?” என சிரிப்போடு கேட்டவாறு தன் வேலையில் கவனம் செலுத்த.. ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள் மதுமிதா.
ம்.. கடந்த ஒரு வருடமாக கலையரசனின் புகழை மகளிடம் பேசுவதை கீதா வழக்கமாக்கியிருக்க.. கலையரசன் மீதான தவறான எண்ணங்களை மாற்றியிருந்த மதுமிதா.. மாமா எப்படி செப்பல்கூட போடாம சாணியில கால வச்சாங்க..? உவ்வேக்.. என முகம் சுழித்தாலும்.. ம்.. எத்தனை கம்பீரமான வேலையில இருக்காங்க.. இவங்க பாக்ஸிங்க்கு எவ்ளோ பேன்ஸ் இருக்காங்க.. அந்த அலட்டல் கொஞ்சமும் இல்லாமல் கட்டுத்தரையை பெருக்கிட்டிருக்காங்களே என வியப்போடு பார்த்திருந்தாள்.
தரணி சொன்னது போல மாமா ரொம்ப நல்லவங்கதான் போல என மெச்சியவள்.. சீக்கிரம் பல் தேய்த்து வரலாம்.. மாமா போலீஸ்தான.? அம்மா பத்தி மாமாகிட்டயே கம்ப்ளைன் செய்யலாம்.. என பாத்ரூம் விரைந்தாள்.
மயில்சாமி மறுத்தும் கேளாமல் தானே மொத்தமும் பெருக்கி முடித்தவன் கைகால் கழுவி உள்ளே வந்தான். ‘இந்த வேலையெல்லாம் முடிக்கவே எட்டு மணியாகிடும்.. நீ கால்மணி நேரத்தில முடிச்சிட்ட..” என மகனை மெச்சியவாறு உள்ளே வந்த மயில்சாமி.. பூஜையறையில் இருந்த மனைவியிடம்..‘சாமி கும்பிட்டது போதும் கலா.. வந்து டீ போடு..” என்றார்.
‘அதுக்குள்ள முடிச்சிட்டிங்களா.?” எனத் திரும்ப.. ‘கலை.. நீயும் எழுந்துட்டியா..? இரு டீ வச்சிட்டு வரேன்..” என சமையலறை புகுந்தார் கலா.
‘எதோ விசயமாத்தான் வந்திருக்க.. என்னன்னு சொல்லு கலை.. உங்கம்மாகிட்ட என்னால முடியல..” என்றார்.
‘ஆமாம்ப்பா ரொம்ப முக்கியமான விசயம்ன்றதாலதான் மிட்நைட்ன்னு கூட பார்க்காம ராசிபுரத்திலயிருந்து நேரா இங்க வந்தேன்..” என்றான்.
மயில்சாமி..‘ராசிபுரத்திலயிருந்தா..?” என அதிர்வாக.. ஆமாம் என்பதாய் தலையசைத்தவன்.. ‘எனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைங்க..” என்றான்.
‘என்னடா இது.?” என இன்ப அதிர்ச்சியோடு பார்த்தவர்.. ‘உங்கக்கா சம்மதம் இல்லாம கல்யாணம் செய்துக்கமாட்டன்ன..? இப்போ இப்படி சொல்ற..? ஏதும் பிரச்சனையாகிடுச்சா..?” என்றார் பதட்டமாக.
பல் தேய்த்து வந்தவளுக்கு கலையரசனின் கடைசி வரிகள் மட்டும் காதில் விழ.. அச்சோ.. அம்மாப்பா நினைச்ச மாதிரியே மாமாக்கு நம்மளை கட்டி வச்சிடுவாங்களா..? தாத்தா பாட்டியும் இதுக்கு சம்மதிச்சிட்டாங்களா.? என்ற பயத்தோடு வெளியே வந்த மதுமிதா.. ‘மாமா..” என கலையரசன் காலில் விழப்போக.. ‘ஏய்.. மது..” என தடுத்து சோபாவில் அமர வைத்தான்.
‘மாமா.. ப்ளீஸ் நான் படிக்கனும்.. எனக்கு கல்யாணம் வேணாம்.. அம்மாப்பாதான் புரிஞ்சிக்காம பேசுறாங்கனா.. நீங்களுமா..?” என்றாள் கண்ணீரோடு.
‘என்ன மது சொல்ற.? உனக்கு கல்யாணமா.?” என கலையரசன் அதிர்வாய் கேட்க.. ‘மது.. நீ உள்ள போ.. அப்படி எதுவும் நடக்காதுன்னு நான்தான் சொல்லியிருக்கேன்ல..?” என கலா பேத்தியை அதட்டி கண்ஜாடை செய்ய..
மதுவிடமிருந்து இப்படி பேச்சை சற்றும் எதிர்பாராத கலையரசன்.. ‘என்னப்பா இதெல்லாம்..?” என்றான் உச்சபட்ச கோபத்தோடு.
மயில்சாமி.. ‘கலை.. கீதா புத்தி கெட்டுப்போய் எதோ உளறிட்டிருக்கா.. நீ டென்சன் ஆகாத..” என அமைதிப்படுத்த.. ‘நான் டென்சன் ஆகுறது இருக்கட்டும்.. சின்ன பிள்ளை மனசை இப்படி படுத்திருக்காங்களே.. உங்க கேடுகெட்ட மாப்பிள்ளையையும் மகளையும் என்ன பண்ணலாம்..?” என்றான் பல்லை நெறித்து.
‘மாமா.. அப்போ நீங்க என்னை கல்யாணம் செய்துக்கப் போறதில்லையா..?” என சந்தோசத்தோடு மதுமிதா கேட்க.. ‘அப்படியே போட்டேன்னா..” என கோபத்தோடு கையை உயர்த்தியவன்.. ‘இப்படி பேச்சு பேசுன.. கொன்னுடுவேன்..” என மிரட்டினான் முகம் சிவக்க.
கலையின் மிரட்டலில் பயந்து ஒடுங்கி அமர்ந்தாள் சோபாவில். பள்ளி படிக்கும் பெண்ணென்றும் பாராமல் பணம் புகழுக்கு மயங்கி திருமணம் குறித்து பேசியிருக்கிறார்களே.. அதுவும் தன்னை வைத்து.. என கலையரசனிற்கு மனதே அடையவில்லை. ‘நான் யாரை கல்யாணம் செய்துக்கனும்னு முடிவு செய்ய அவங்க யாரும்மா..?” என்றான் ஆத்திரமாக.