காதலால் நெய்திடு..
அத்தியாயம்.. 17
பத்து மணிபோல் செல்வராணியும் ஆனந்தனும் வந்திருந்தனர். ‘நல்லாயிருக்கிங்களா மாமா.?” என மயில்சாமியிடம் விசாரித்து.. கலையரசனின் வாட்ட முகம் கண்டதும்.. ‘இப்போதைக்கு கல்யாணம் வேணாம்.. நிலா சின்னபொண்ணு.. படிப்பு முடியட்டும்னு யாரோ சொன்னாங்க.. அவங்களை எங்க காணோம்..?” என்றான் ஆனந்தன்.
‘மாமா..” என சின்ன சிரிப்போடு ராகமிழுத்தான் கலையரசன்.
இரண்டு மணிநேரம் பழகியதிலேயே மதுமிதாவிற்கு கலையை அத்தனை பிடித்திருக்க.. கலையின் கையை தன் மடிமீது இழுத்து பிடித்தபடி அமர்ந்திருந்த மதுவை பார்த்த ஆனந்தன்..‘ம்.. புது ஃபிரண்டு கிடைச்சிட்டாங்க போல..” என்றான்.
‘ஆமாம் மாமா..” என சிரித்தவன்.. ‘கூடவே புது எதிரியும் கிடைக்கப் போறாங்க..” என்றான்.
செல்வராணி.. ‘ம்.. அப்படில்லாம் நினைக்காதன்னு சொல்லத்தான் ஆசை.. ஆனா கீதா நடந்துக்கிறதை நினைச்சா இது எங்க கொண்டுபோய் விடுமோ தெரியல..” என்றாள் கவலையாக.
’உங்க வீட்லதான இருந்தாங்க..? அவங்களை எங்க காணோம்.?” என்றான்.
‘உங்கக்கா எங்களையும் இங்க போகக் கூடாதுன்னாங்க.. என் மச்சான் கூப்பிடறான் நான் போறேன்.. உங்களுக்கு விருப்பமில்லன்னா நீங்க போகாதிங்கன்னு சொல்லவும், என்கிட்டயும் கோவிச்சிக்கிட்டு டீ கூட குடிக்காம கிளம்பிட்டாங்க..” என்றான் ஆனந்தன்.
‘உங்களையே கோபப்பட வச்சிட்டாங்கனா எப்படி பேசியிருப்பாங்கன்னு புரியுது மாமா.. வரட்டும் பேசிக்கிறேன்..” என்றான் இறுகிய முகத்தோடு.
கலையை இலகுவாக்கும் பொருட்டு.. ‘அப்புறம் மாப்பிள்ளை.. முக்கியமான காரணமில்லாம இத்தனை அவசரமா கல்யாணம் செய்யமாட்ட.. அது அப்புறம் பேசிக்கலாம்.. நிலாவோட பேசறதே இல்லன்ன.? அப்புறம் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச.?” என்றான் சந்தேகப் பார்வையோடு.
கலை.. ‘இப்பவும் அவகிட்ட பேசல மாமா..” என்க.. ‘பொய்..பொய்..” என கோசமிட்டு.. நிலாவின் தற்கொலை முயற்சியை விளக்கிய மதுமிதா.. ‘பேசாமலா தற்கொலை வரைக்கும் போயிருக்காங்க.. மாமா சொல்றதை நம்பாதிங்க சித்தா..” என்றாள்.
மதுவின் மண்டையில் செல்லமாய் கொட்டியவன்.. ‘எல்லாத்தையும் ஒட்டு கேட்டியா..?” என்றான் பொய் முறைப்போடு.
செல்வராணி.. ‘ஹே.. நிஜமாவா கலை.? உயிரைன்னாலும் தரேன்.. கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு அன்னைக்கு அப்படி பேசினா.?” என்றாள் ஆச்சர்யமாக.
கலை.. ‘எனக்கே ஆச்சர்யம்தான்க்கா..” என்க.. ‘ஆனாலும் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிருந்தா..? இப்படியா முட்டாள்தனம் செய்யறது..?” என்றான் ஆனந்தன்.
‘கவிப்பாப்பாவைத்தான் மாமா பாராட்டனும்.. அவ பார்த்து கதிர்கிட்ட சொல்லவும்தான் ஆச்சு.. பத்து மாத்திரைக்கு மேல முழுங்கிருக்கா.. சரியான நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் போகலைன்னா ரொம்ப கஷ்டமாகிருக்கும்.. எல்லாரையும் கலங்கடிச்சிட்டா.. அதனாதான் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துட்டேன்..” என்றான் சிறு கோபத்தோடு.
கலையை இலகுவாக்க.. ‘ம் இன்னும் ஐந்து நாட்களில் கல்யாணம் வச்சிகிட்டு கண்டதையும் நினைச்சி உழலாம.. நடந்தது நல்லதுக்கேன்னு நினைச்சி சந்தோசமா இரு மாப்பிள்ள..” என்றான்.
‘என்னத்தை சந்தோசமா இருக்கிறது மாமா.. அவதான் அப்படி செய்துட்டாளேன்னு டென்ஷனை குறைக்கலாம்னு இங்க வந்தா.. இங்க அதுக்கு மேல இருக்கு..” என்றான் கடுப்பாக.
ஆனந்தன்.. ‘அட.. விடு மாப்பிள்ளை பார்த்துக்கலாம்..” என கலையின் முதுகில் தட்டியவன்.. ‘ஆனாலும் என் பொண்ணு சொல்ற மாதிரி தங்கச்சிகிட்ட பேசாமலே எப்படி இப்படி..?” என்றான் சந்தேகத்தோடு.
எப்பொழுதும் தன் சந்தோசத்தை மட்டுமே நினைக்கும் மாமாவை பெருமையோடு பார்த்தவன்.. ‘ம்.. நான் என்ன சொன்னாலும் நீங்க நம்ப போறதில்ல.. நடத்துங்க நடத்துங்க..”என்றான் இலகுவாக.
மதுமிதா.. ‘அக்காகிட்ட பேசுறேன்னு கேட்டா மாமா நம்பர் இல்லன்றாங்க.. நீங்க சொல்லுங்க சித்தா.. நான் அவங்ககிட்ட பேசனும்..” என்றாள்.
ஆனந்தன் கலையைப் பார்க்க.. ‘நிஜம்மா அவ நம்பர் என்கிட்ட இல்ல மாமா.. கதிர் நம்பரும் கவிபாப்பா அம்மா நம்பரும்தான் இருக்கு..” என்றான்.
‘சரி கதிருக்கு போன் செய்.. நான் நிலாவை விசாரிக்கனும்..” என்றாள் செல்வராணி.
திருமணம் என்றதும் தன் பெரிய அக்காவை நினைத்து நாகராஜ் கவலைப்பட்டதை யோசித்த கலையரசன்.. செல்விக்கா பேசினா அவங்களும் கொஞ்சம் பெட்டரா ஃபீல் செய்வாங்க என நினைத்து கதிருக்கு அழைக்க.. கதிரவன் ஏற்கவும்.. ‘கதிர் எங்கக்கா பேசனுமாம்..” என கொடுத்தான் செல்வராணியிடம்.
‘ஹலோ..” என்ற கதிரின் குரல் சன்னமாய் ஒலிக்க.. ‘நான் கதிரோட சின்ன அக்கா செல்வராணி பேசுறேன்.. எல்லாரும் நல்லாயிருக்கிங்களா.?” என்றாள்.
‘நல்லாயிருக்கோம்.. நீங்க நல்லாயிருக்கிங்களா.?” என்றான்.
‘சூப்பரா இருக்கோம்.. நிலாகிட்ட கொடுங்க..” என்றாள்.
நிலாவைப் பார்த்தவன் உன்கிட்ட பேசனும்ங்கிறாங்க என செய்கை செய்ய.. நான் மாட்டேன் என மறுப்பாய் தலையசைக்க.. சற்று நேரம் பதில் வராமலிருக்கவே அங்கு நிலையை கணித்தவளாய்.. ‘நிலா பேசமாட்டேன்றாளா.? அதெல்லாம் முடியாது பேசித்தான் ஆகனும்னு சொல்லுங்க.. இல்ல அவ நம்பர் தாங்க..” என்றாள்.
கதிர்.. ‘கலையோட அக்கா உன்னத்தான் கேக்குறாங்க.. பேசு..”என கொடுத்தான் தங்கையிடம். ‘அண்ணா.. நான் என்ன பேசுறது..?” என நிலா முனகுவது கேட்கவும்..
‘என்னம்மா.? நிலாம்மா.? இப்படி செய்திட்டிங்களேம்மா..?” என செல்வராணி நகைக்க.. சங்கடத்தோடு இவள் தடுமாற.. ‘கலையோட சின்ன அக்காதான் பேசுறாங்க.. பேசு..” என கதிர் ஊக்கினான்.
‘கிண்டல் பண்றாங்கண்ணா..” என முகம் நாணினாள் நிலவழகி.
தங்கையின் நலம் விசாரிக்கிறார்கள் என சந்தோசமடைந்தவன்.. ’நீ செய்த வேலைக்கு கிண்டல் செய்யாம என்ன செய்வாங்க..? எதுனா பேசு..” என்றான்.
‘நிலா…” என செல்வராணி அழைக்க.. ‘அது.. நான் தெரியாம முழுங்கிட்டேன்..” என்றாள் பெருத்த சங்கடத்தோடு.
‘ஆனாலும் இப்பதான் எங்களுக்கு உன்ன தெரிஞ்சது..” என செல்வராணி சிரிக்க.. ‘ண்ணா..” என கதிரவனிடம் நிலா சிணுங்க.. இதற்கு மேல் சங்கடப்படுத்த வேணாம் என நினைத்து.. ‘இப்போ உடம்பு பரவால்லையா.?” என்றாள் அக்கறையாக.
‘ம்.. நல்லாயிருக்கேன்..” என்றாள்.
‘இதென்ன யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுற.? சித்தின்னு சொல்லனும்.. சரியா..?” என்றாள் கண்டிப்போடு.
‘ம்..” என்றாள் சன்னக் குரலில். ‘சித்தி.. நான் பேசனும்..” என மதுமிதா நச்சரிக்க.. ‘என் பொண்ணு பேசனுமாம் கொடுக்கிறேன்..” என மதுவிடம் கொடுத்தாள்.
‘ஹலோ அக்கா.. “ என்க.. ‘ம்..” என்றாள் நிலா.
‘எனக்கு உங்களைப் பார்க்கனும்.. வீடியோ கால்ல வரேன்..” என கட் செய்தவள் அதே போல் அழைக்க.. கதிரவன்தான் அழைப்பை ஏற்றான்.
‘மாமா.. இதென்ன இவங்களையா கல்யாணம் செய்துக்க போறிங்க.?” என்றாள் சிரிப்போடு.
முகத்தை அஷ்ட கோணலாக்கி கிண்டலோடு மதுமிதா கேட்ட தோரணையில் கதிரவன் பக்கென சிரித்திட.. ‘யார்கிட்ட பேசுற.?” என கலையரசன் மொபைலை வாங்க.. அங்கே கதிரவனைக் கண்டதும்.. ‘உன்ன..” என மதுவை பொய்யாய் மிரட்டிய கலைக்கும் சிரிப்பு எட்டிப் பார்க்க.. ‘என்னை மிரட்டுறதை விட்டுட்டு அக்காகிட்ட மொபைல் கொடுக்க சொல்லுங்க.. நான் பார்க்கனும்..” என்றாள்.
‘இவ மதுமிதா.. என் பெரிய அக்கா பொண்ணு கதிர்..” என்றவன்.. சற்று இடைவெளி விட்டு.. ‘உன் தங்கையை பார்க்கனும்னு காலைலயிருந்து கேட்டுட்டிருக்கா.. அவகிட்ட கொடுங்க..” என்றான்.
கதிர்.. ‘பேசு..” என மொபைலை நிலாவிடம் நீட்ட.. தலைவாரி ஆரஞ்சு நிற டாப்சில் பளிச் தோற்றத்தில் இருந்தவளிடம் சில நொடி மயங்கித் தெளிந்தவன்.. ‘சின்ன பொண்ணு ஆசையா பேசறங்கிறா.. பேச மாட்டியா.?” என கடுகடுத்து மதுவிடம் மொபைலை கொடுத்தான்.
நிலாவைப் பார்த்ததும்.. ‘ஆ…” என விழிவிரித்து.. ‘மாமா.. உங்க செலக்ஷன் சூப்பர்..” என்றவள்.. நிலாவிடம்.. ‘உங்கள்ட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. ஆனா எதுனா பேசனும் போல இருக்கு.. நீங்க எதுனா என்கிட்ட கேளுங்களே..” என்றாள்.
‘ம்.. என்ன படிக்கிறிங்க.?” என்றாள்.
‘அதுக்கு முன்ன என் பேரு மதுமிதா.. டுவல்த் படிக்கிறேன்..”
பெயரோடு படிப்பும் சேர்த்தே சொல்லவும் அடுத்து என்ன கேட்கவென நிலவழகி அமைதியாகிட.. என்ன பேசன்னு தெரியலை என்ற மது அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கி நிலாவை கால்மணி நேரம் வரை படுத்திய பின்னே..
’எங்க சித்திகிட்ட கொடுக்கிறேன்..” என செல்வராணியிடம் கொடுக்கவும்.. செல்வராணியைப் பார்த்ததும்.. கீதாவின் நினைவில் ஓ.. மதுமிதா அவங்க பொண்ணா.. என நினைத்தவளின் முகம் சற்றே கடினமாக.. அதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான் கலையரசன்.
‘சாப்பிடியா நிலா.?” என்றாள் செல்வராணி.
‘ம்..” என்றவள் பின்னர்.. ‘சாப்பிட்டேன் சித்தி..” என உடனே திருத்திக்கொள்ள.. ‘ம்..” என மெச்சியவள்.. ‘சரி கலைகிட்ட கொடுக்கிறேன்..”என கலையிடம் மெபைலை கொடுக்க.. ‘சரி வைக்கிறேன்..” என்கவே.. ‘டேய் இங்க கொடுடா..” என கேட்ட மயில்சாமி.. ‘நல்லா இருக்கியாம்மா..?” என்றார்.
‘ம்..” என தலையசைக்க.. ‘ஏங்க இங்க கொடுங்க..” என வாங்கிய கலா நலம் விசாரித்து.. அம்பிகாவிடம் கொடுக்க சொல்ல.. `அம்பிகா மாடில இருக்காங்கம்மா.. ” என நாகரான் சொல்ல..
‘கல்யாணத்துக்கு நலங்குக்கெல்லாம் புதுதான் கட்டனும்.. இப்போ கடையெல்லாம் சாத்தியிருக்கே.. என்ன செய்விங்க.?” என்றார் கவலையாக.
ஆமாம்.. நாம இதை யோசிக்கலயே.. பெண்களின் சந்தோசமே இதில்தானே இருக்கிறது.. மற்ற விசேசமானால் கூட பரவாயில்லை.. தனது திருமணம் என வரும்போது.. வீட்டு பெண்களின் பிடித்தத்தை யோசிக்காமல் அவசர முடிவு செய்துட்டனோ.? என கலையரசன் மனதில் வருந்த..
‘அப்படிங்களா..?” என ஆச்சர்யமாய் சொன்ன கலா.. ‘ரொம்ப நல்லதா போச்சி..” என்று சந்தோசமடைய.. ‘அச்சோ.. நீங்க கேட்டதே சந்தோசம்.. மருமகளை ரொம்ப படுத்த வேணாம்.. அவளுக்கு மட்டும் தைச்சிக்க சொல்லுங்க.. கல்யாணப் பொண்ணுக்கு எந்த குறையுமில்லாம இருந்தா போதும்..” என்றார் சந்தோசமாக.
‘அப்படிங்களா..? உங்க தோதெதுவோ அப்படியே செய்ங்க அண்ணா..” என்றார் கலா.
கலாவின் அண்ணா என்ற அழைப்பில் சந்தோசமடைந்த நாகராஜ்.. ‘ரொம்ப சந்தோசமுங்க.. தம்பி அவசரமா கல்யாணத்துக்கு சொல்லுதேன்னு கொஞ்சம் உறுத்துச்சி.. இப்போ உங்கள்ட்ட பேசினதும் மனசு ரொம்ப நிறைஞ்சிடுச்சி.. கல்யாணத்துக்கு ஐஞ்சி நாள்தான் இருக்கு.. இனி ஆகவேண்டியதை ஜரூரா ஆரம்பிச்சிட வேண்டியதுதான்..” என சந்தோசமாய் பேசி இணைப்பை துண்டித்தார் நாகராஜன்.
‘என்ன சொன்னாங்கம்மா.. உங்க முகம் அப்படி ஜொலிச்சது..?” என்றாள் செல்வராணி.
‘நெசவுதான் சம்பந்திக்கு தொழிலாம்.. நாளைக்கு நாள் நல்லா இருக்காம்.. அதனால நிலாக்கு நாளைக்கு சாரி நெய்யிறாராம்.. நமக்கும் வேணுமான்னு கேட்டார்.. வேணாம்னேன்.. இருபத்தைஞ்சாயிரத்துக்கு மேல பட்டு சாரி நெய்யிறதில்லையாம்.. தெரிஞ்சவங்க ஏது ஆர்டர் கொடுத்தா மட்டும் நெய்வாங்ளாம்.. பதினைஞ்சாயிரம் வரைக்கும் நிறைய சாரி முன்ன நெய்தது இருக்கு.. நமக்கு கொடுத்து விடவான்னு கேட்டார்.. அவர் கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோசமாகிடுச்சி செல்வி..
அவங்க பெரிய பொண்ணு அப்படி செய்து போலீஸ் கேசாகிருக்கே.. இப்படி குடும்பத்துல பொண்ணெடுக்கனுமான்னு முன்ன கொஞ்சம் உறுத்தலாதான் இருந்தது.. இப்போ அந்தண்ணா பேசவும் எனக்கு மனசு நிறைஞ்சிடுச்சி.. ரொம்ப மரியாதையா கனிவா பேசுறார்..” என்றார் நிறைந்த சந்சத்தோடு.