சந்தோசமடைந்த செல்வராணி.. ‘ம்.. காலைலயே உங்க பெரிய பொண்ணு அக்கப்போர் கட்ட வந்துட்டா.. பசியோட இங்க வந்தா உனக்கு சம்பந்திப் புராணம் பேசவே சரியா இருக்கு.. எப்பதான் எனக்கும் என் புருசனுக்கும் வயித்துக்கு கொடுப்பிங்கன்னு பார்க்கிறேன்..” என்றாள் சிரிப்போடு.
‘அச்சோ.. மன்னிச்சிடு தம்பி..” என ஆனந்திடம் சொல்லி கிச்சன் செல்ல.. ‘ம்மா.. வந்து உக்காரு.. நான் பரிமாறிக்கிறேன்.. என்னவோதான் சின்ன பிள்ளையாட்டமா ஓடுற..” என அக்கறையோடு அதட்டி கணவனை அழைத்து பரிமாறி தானும் உண்ண ஆரம்பித்தாள்.
‘பிளொஸ் நிலா தைச்சிடுவாளாம்.. நமக்கும் அவசரத்துக்கு டைலர் கிடைக்கலன்னா கலைகிட்ட அளவு பிளொஸ் கொடுத்துவிட சொன்னாங்க.. நான்தான் கல்யாணப் பொண்ணுக்கு சிரமம் கொடுக்க வேணாம்னுட்டேன்..” என்றார் பெருமையாக.
உள்ளே வந்தமர்ந்தவள்.. ‘எல்லாமும் நீங்களே முடிவெடுக்க அவர் எதுக்கும்மா.? வந்து அவமானப்படவா.?”என்றாள் ஆற்றாமையாக.
எதோ சிறு பிள்ளையை மிரட்டுவதுபோல் அலட்சியமாய் அன்னையிடம் கேள்விகேட்கும் அக்கா மீது அத்தனை கோபம் வந்தபோதும் பல்லை நெறித்தவாறு அமைதியாகவே அமர்ந்திருந்தான் கலையரசன்.
மயில்சாமி.. ‘இன்னும் ஒன்னுமே ஆரம்பிக்கல கீதா.. கலையோட வேலை நேரத்துக்கு தோதா இனிதான் எல்லாம் முடிவு செய்யனும்.. முடிவு செய்ததுக்கப்புறம் மாப்பிள்ளைக்கும் சம்பந்திம்மாக்கும் முறைப்படி வந்து சொல்றேன்.. இதுல அவமானப் பட என்னயிருக்கு..?”என்றார் தன்மையாகவே.
கீதா.. ‘அங்க எல்லாருக்கும் என் தம்பிதான் மருமகன்னு சொல்லியிருக்கேன்ப்பா..” எனும் போதே.. ‘வாயை மூடுக்கா..” என ஆத்திரத்தோடு எழுந்தான் கலையரசன்.
‘நான் ஏண்டா வாய மூடனும்.?” என மல்லுக்கு நிற்க.. அவளருகே வந்தவன்.. ‘யாரை கேட்டு என்னை உன் மாப்பிள்ளைன்னு சொன்ன.?” என்றான் முறைப்போடு.
‘எனக்கந்த உரிமை இல்லையா..?” என்றாள் உரிமையாக.
‘உன் பொண்ணுக்கு நான்தான்னு என்னையும் கேட்காம நீ முடிவு செய்வ.. ஆனா எனக்கு யார் பொண்டாட்டியா வரனும்னு நான் முடிவு செய்ய கூடாது.. என் ஆசையை நிறைவேத்தனும்னு என் அப்பாம்மா நினைக்க கூடாது.. இதுதான் உன் உரிமையா.?” என்றான் அழுத்தமாக.
‘அம்மாப்பா முடிவு செய்தாலும் எங்க சந்தோசத்தையும் யோசிச்சிதான முடிவு செய்யனும்..?” என்றாள். ம்.. அழுவது ஆர்பாட்டம் செய்வது இல்லை கெஞ்சுவது என எதேனும் செய்தாவது தம்பியை தன் மகளுக்கு பேசி முடிக்க வேண்டும் என இன்னமும் நம்பிக்கையோடு வந்திருக்கும் கீதா.. தற்போது பாசத்தை கையிலெடுத்தாள்.
எல்லாம் இவளால் வந்தது.. எத்தனை கம்பீரமா இருக்கான் என் தம்பி.? இவனை கட்டிக்க கசந்துட்டு இங்க வந்து என்னை விட்டுக்கொடுத்து பேசவும்தான எல்லாரும் நம்மளை பேசுறாங்க.? திருமணம் செய்துகொண்டு கூட படித்திடலாம்.. ஆனால் தம்பிபோல் மாப்பிள்ளை அமைவானா.? என மகளை முறைத்தாள் கீதா.
கீதாவின் பார்வை உணர்ந்தவனாக.. ‘மது.. என் ரூம்க்குள்ள போ..” என்றான் கட்டளையாக. கலை சொன்னது போல் மது செய்ய.. அவளின் பின்னே சென்றவன் டி.வி. யை ஆன் செய்து.. நான் சொல்லும் வரை ரூமை விட்டு வெளில வரக்கூடாது..” என்று அறைக் கதவை அடைத்து கீதாவிடம் வந்தவன்..
‘உன் புருசனும் நீயும் படிச்சவங்கதான.? ஸ்கூல் படிக்கிற சின்ன புள்ளைகிட்ட கல்யாணத்தை பத்தி பேசியிருக்கிங்களே அறிவில்ல..?” என்றான்.
‘கல்யாணம் முடிச்சிட்டு படிச்சிட்டா போகுது..” என்க.. ‘வாய மூடுக்கா..” என கர்ஜித்தவன்.. ‘மது கல்யாணத்தைப் பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின நடக்கிறதே வேற..” என்றான்.
‘என்னையே மிரட்டுறியா.? என்னடா செய்திடுவ..?” என கீதா முறைக்க..
கீதா அமர்ந்திருக்கும் சோபாவின் மேல் ஒரு காலை ஊன்றி அவளின் முகத்தை தனதால் நெருங்கியவன்.. ‘சின்ன புள்ளைய மேரேஜ்க்கு கம்ப்பல் செய்யிறிங்கன்னு கேஸ் ஃபைல் செய்வேன்..” என்றான்.
போலீஸ் வேலையை தன்னிடமே காட்டுவான் என சிறிதும் எதிர் பாராததோடு.. கலையரசன் சொன்னவிதம் நிச்சயம் செய்வான் என்பதை பறைசாற்ற கீதாவிற்கு கண் கலங்கியது.
எத்தனை கோபமிருந்தும் கீதா கண்கலங்கியதும் சற்றே இலகியவன். ‘மாமா சொல்லுன்னு அம்மா எத்தனை சொல்லிக் கொடுத்தாலும்.. சொல்ல மாட்டேன்ற பாவனைல வேகமா தலையாட்டி.. மழலைப் பேச்சுல கல்லா கல்லான்னு என்னையே சுத்தி சுத்தி வந்த மதுக்குட்டியைப் போய்..” என சிறு இடைவெளிவிட்டு.. ‘உன்னால எப்படிக்கா இப்படி யோசிக்க முடிஞ்சது.?” என்றான்.
கலை சற்று இறங்கியதும்.. ‘குழந்தைல எல்லாரும் அப்படித்தாண்டா இருப்பாங்க.. இப்படி யோசிச்சா உறவை எப்படி நீட்டிக்கிறது.? எத்தனை பேர் தாய்மாமனை கட்டிக்கிறாங்க.. நியாயமா பார்த்தா நம்ம பேத்தி இருக்கும் இடத்துல கண்டவ எதுக்குன்னு அப்பாம்மா யோசிச்சிருக்கனும்..” எனும்போதே..
‘போதும் நிறுத்துக்கா..”என கத்தினாலும்.. ’நான் நிலாவை காதலிக்கலன்னாலும் மதுவை கல்யாணம் செய்துக்க மாட்டேன்க்கா.. என்னால அது முடியவே முடியாது என்னை புரிஞ்சிக்கோ..” என்றான் மன்றாடலாக.
அப்பொழுதும் விடாமல்.. ‘கலை உனக்கு விபரம் பத்தல..” என ஆரம்பிக்க.. ‘எனக்கு விபரம் பத்தலயா..?” என முறைத்தவன்.. ‘உனக்கும் நம்ம தாய்மாமாக்கு கேட்டாங்கதான.? நீ ஏன் சம்மதிக்கல.?”என்றான் முறைப்போடு.
தடுமாறினாலும்… ‘சிங்கம் மாதிரி எத்தனை கம்பீரமா இருக்க.? அவரும் நீயும் ஒன்னாடா.?”என்றாள் பாசமாக.
‘நம்ம மாமா என்னை விட கம்பீரம்.. நீ உங்கம்மா வகையரா.. உன் மாமாவோட சாயல்தான் உனக்குன்னு நம்ம சொந்தத்துல சொல்லாத ஆளில்ல.. அப்பாக்கும் மாமாமேல தனி மரியாதையும் பாசமும் இருந்தது.. ஆனாலும் உனக்கு மாமாவை பிடிக்கலன்னதும் நம்ம அப்பாம்மா உன் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்தாங்க.. ஆனா நீ..?”என முறைத்தவன்..
‘மது சின்ன பொண்ணு.. அவ எட்ட வேண்டிய உயரத்துக்கு துணையா இருக்க வேண்டிய நீயே பள்ளத்துல தள்ளலாமா.?” என்றான்.
ம்.. கீதாவை அடிக்க கையை ஓங்கியிருந்தவன் அவளின் கன்னம் வரை வந்து நிறுத்தி.. அருகிருந்த மரத்தாலான மேசை மீது கோபத்தை திருப்ப அது சம்மட்டியால் அடித்தது போல் ஐந்தாறாய் நொறுங்கியிருந்தது.
டேபிள் உடைந்த சத்தத்தில் மதுமிதாவும் வெளியே வந்திருக்க.. பதறி ஓடி வந்த செல்வராணி.. ‘கலை..” என கைப்பிடித்து அவனறைக்கு அழைத்து செல்ல முயல.. ‘ப்ச்.. விடுக்கா..” என்று கையை உதறியவன்..
‘வேற ஒருத்தரா இருந்திருந்தா நடக்கிறதே வேற.. கூடப் பிறந்த உறவு விட்டுப் போய்டக் கூடாதுன்னு நானும் எத்தனை பொறுமையா எடுத்து சொல்றேன்.. திரும்பத் திரும்ப அதுலயே வந்து நிக்கிறாங்க.. வயித்துக்கு சோறுதான திங்கிறாங்க..?” என்றான்.
அடிக்க துணிந்ததோடு சோறுதான திங்குறாங்கன்னு எத்தனை கேவலமாய் பேசுகிறான் என்ற கோபத்தில்.. ‘கூடப் பிறந்தவளுக்காக பார்க்கிறவன்தான் லட்டாட்டம் என் பொண்ணு இருக்க கண்டவளை கல்யாணம் செய்துக்கிறன்றியா.? கல்யாணத்துக்கு முன்னவே அடிக்க துணிஞ்சிட்டல்ல..? அந்தளவுக்கு உன்ன மயக்கி வச்சிருக்காளா அவ.?” என்று ஆத்திரத்தையெல்லாம் நிலா மீது திருப்பினாள் கீதாராணி.
எங்கே அடிதடி ஆகிடுமோ என்ற பதட்டத்தில்.. ‘வாய மூடு கீதா..” என்று செல்வராணி சொல்ல.. ‘சும்மா வாய் பேச்சுக்குத்தான் மதுவை உன் பொண்ணுன்னு சொல்லிருக்கன்னு இப்பத்தான புரியுது.? மது உன் பொண்ணா இருந்திருந்தா கலையை கண்டவளுக்கும் விட்டு கொடுத்திருப்பியா.? யார் கண்டா.? மதுவை கட்டிகிட்டா எங்க உறவு பலமாய்டும்ன்ற பொறாமையில நீயே கலைக்கு சொல்லி கொடுத்தாலும் கொடுத்திருப்ப..” என செல்விமேல் பாய்ந்தாள்.
கலை.. ‘இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன..” எனும்போதே..’வா கலை..” என மயில்சாமி கைப்பிடிக்கவும் தந்தைக்கு மதிப்பளித்து கோபத்தை உள்ளடக்கி சோபாவில் அமர்ந்தான் அமைதியாக.
‘கலா.. கீதாக்கு முதல்ல சாப்பிட கொடு..” என மனைவிக்குப் பணித்து.. ‘கலை நாளைக்கு நலங்கு ஆரம்பிச்சிடலாமா.?” என்றார் மயில்சாமி.
அக்காவிற்கு தனது முடிவை சொல்கிறார் எனப் புரிந்தாலும்.. ‘இன்னைக்கே முக்கியமான வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்ப்பா.. லாக்டவுன் ஆரம்பிச்சதுலயிருந்து ப்ராக்டிஸ் செய்ய கூட டைம் இல்ல.. மதியம் சாப்பிட்டதும் கிளம்பனும்..” என்றான்.
‘கல்யாணத்துக்கும் முந்தின நாள் சாய்ங்காலம் வந்துடறேன்.. அப்போயிருந்து அடுத்த நாள் வரைக்கும் எத்தனை சாங்கியம்ன்னாலும் செய்துக்கோங்க..” என்றான்.
எத்தனை நடந்தபோதும் தனக்கு மதிப்பளித்து அமைதியாய் அமர்ந்திருக்கும் ஆனந்தன் மீது பெருமை கொண்டவராய்.. ‘உன் மாப்பிள்ளைக்கு கொஞ்சம் சொல்லுங்க மாப்பிள்ளை..” என மருமகனை துணைக்கழைத்தார் மயில்சாமி.
‘கலையோட ஒர்க் சுட்டிவேஷன் நமக்கு தெரிஞ்சதுதான மாமா..? அவன் டைம்க்கு தகுந்த மாதிரி முடிவெடுங்க..” என வழக்கம்போல் ஆனந்தன் கலையின் பக்கமே நின்றான்.
கீதாவைப் பார்க்க.. ‘ஏ.சி.பி தம்பின்னு அந்த பீத்து பீத்தினா.? இப்போ என்னாச்சின்னு என் வீட்ல என்னை கேவலப்படுத்துவாங்கம்மா..” அன்னையிடம் அழுது கொண்டிருந்தாள்.
ஆறுதல் சொன்னால் மீண்டும் ஆரம்பிப்பாள் என மகளைப் புரிந்தவராய்.. ‘சம்பந்திகிட்டயும் மாப்பிள்ளைகிட்டயும் முறைப்படி சொல்ல நாளைக்கு வீட்டுக்கு வரேன் கீதா.. நாளைலயிருந்து கல்யாணம் முடியும் வரைக்கும் இங்கயே இருக்கிற மாதிரி வா..” என இதுதான் தன் முடிவு என்பதை தெரிவித்து..
செல்வியிடம்.. ‘நீயும்தான் செல்வி.. மாப்பிள்ளையே வேலைக்கு போய்ட்டானேன்னு நாமும் கல்யாணத்துக்கு வந்தா போதும்னு இருந்திடாத.. பேரனை கூட்டிட்டு நாளைக்கே வந்திடு.. கீதா வீட்ல சொல்லிட்டு உன் மாமனார் மாமியாருக்கும் வந்து சொல்லிட்டு வரேன்..” என்றார்.
எத்தனை போராடியும் தான் நினைத்ததும் நடக்கவில்லை.. மகன் தன்னை அடிக்க வந்ததையும் கண்டிக்கவில்லை.. இவர்கள் நினைத்தது போல் இன்னும் ஐந்து நாளில் திருமணத்தையும் நடத்தப் போகிறார்கள் என உள்ளுக்குள் பொங்கியவள்.. ‘வாடி.. போலாம்..” என மதுவைப் பிடித்து இழுக்க.. ‘பேத்தி இங்கையே இருக்கட்டும்..” என மயில்சாமி சொல்ல.. ‘இப்போதான் பேத்தின்னு கண்ணுக்கு தெரிஞ்சதா..?” என மீண்டும் கீதா ஆரம்பித்தாள்.
மதுவை கலை மனைவியாக ஒருகாலமும் நினைக்க மாட்டான் என இரண்டு மாதமாக எத்தனையோ சொல்லியும் கேட்காமல்.. தற்போது கலையே இத்தனை கோபப்பட்டும் மீண்டும் ஆரம்பிக்கும் மகளிடம் இனி எது சொன்னாலும் வேலைக்காகாது என ஓய்ந்த மயில்சாமி.. ‘சரி உன் பொண்ணை நீ கூட்டிட்டு போ.. என் பையன் கல்யாணத்துக்கு உன் வீட்டுக்கு முறைப்படி சொன்னதுக்கப்புறம் கூட்டிட்டு வா..” என்றார்.
‘மாமா கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம்தான் நான் வருவேன்..” என்றாள் மதுமிதா.
‘இது உன் வீடில்லைன்னு எத்தனை தெளிவா உன் தாத்தா சொல்றார்.. அது புரியலையா உனக்கு..? வாடி..” என மகளை கோபத்தோடு இழுத்தாள் கீதா.
‘மாமா..” என மதுமிதா கலையை கெஞ்சலோடு பார்க்க.. தன்னிடமே இத்தனை பேசுறாங்க.. தன்னை திருமணம் செய்ய சொல்லி மதுவிடம் எத்தனை பேசியிருப்பாங்க..? இவர்களின் பேச்சில் இவளின் மனம் மட்டும் தடுமாறியிருந்தால் அது இன்னும் கொடுமையாகியிருக்கும்.. நல்லகாலம் அப்படியேதும் நடக்கவில்லை என நிம்மதியடைந்து மதுமிதாவைப் பெருமையோடு பார்த்தவன்.. ‘மது கையை விடுக்கா..” என்றான்.
தற்போது கலையும் மகளும் ராசியாகியிருக்கிறார்கள் எனப் புரிந்த கீதா.. கோபம்போல் மகளின் கையை விடுத்து வேறொரு யோசனையோடு கிளம்பினாள்.
‘நீங்க ஒரு வார்த்தை சொன்னதும் அம்மா கேட்டுட்டாங்க..” என ஆச்சர்யத்தோடு கலையிடம் வர.. உங்கம்மா அடுத்த திட்டத்தோட போயிருக்காங்க என மனதில் நினைத்து.. ‘அவங்க பேசுறதெல்லாம் யோசிக்காம நல்லா படிக்கனும்.. சரியா..?” என்றான் அன்போடு.