சுவாதியின் ருது விழாவிற்கு பின்னே நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு நாகராஜனின் வீட்டில் விசேஷம்.. திருமணத்திற்கு அதிகம் அழைக்க முடியாதென்பதால் நலங்கு வைக்கும் வைய்பவத்தை அமர்க்களப்படுத்தியிருந்தார் நாகராஜன்.
ஒரு வேளைக்கு என்பதிலிருந்து நூறு பேர்வரை சாப்பிடும் அளவிற்கு விருந்திற்கு ஏற்பாடு செய்து கடந்த நான்கு நாட்களாக மூன்று வேளையும் விருந்தளித்தும்.. திருமணத்திற்கு அழைக்க முடியாததை தன்மையோடு விளக்கியும்.. அத்தனை சொந்தபந்தங்கள் மனதையும் நிறைத்திருந்தார் நாகராஜன்.
எத்தனை விருந்தளித்தும் அம்பிகாவிற்குதான் மனமே அடையவில்லை.. ‘ம்.. இந்த கொரோனோ எப்பதான் ஒழியுமோ.. நாமளும் மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கல.. அவங்களும் நிலாக்கு நலங்கு வைக்கல.. ஒரு சம்பந்தம் கலக்கல.. ஒரு பத்திரிக்கை அடிக்கல..” என வருந்தியவாறே துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தார்.
‘அடி கிடக்குது விடுடி.. கண் நிறைஞ்ச மாப்பிள்ளைக்கு பொண்ணை குடுக்குறோம்ன்ற சந்தோசத்துல இருக்குறேன்.. சும்மா தொணதொணத்துகிட்டு.. இப்பவே மணி மூனாய்டுச்சி.. இன்னும் ஒரு மணி நேரத்துலயாவது கிளம்பப்பாரு..” என சந்தோசத்தோடு அதட்டிய கணவனை அதிசயமாய் பார்த்தார் அம்பிகா.
‘என்ன அப்படி பார்க்கிற.?” என நாகராஜன் கேட்க.. ‘ரொம்ப வருசம் கழிச்சி அடி புடின்னு வார்த்த வருதேன்னு பார்த்தேன்..” என அம்பிகா சந்தோசமாய் நொடிக்க.. சிறு வெக்கத்தோடு சிரித்தவர்..
‘இந்த கொரோனால எத்தனையோ குழந்தைகள் பெத்தவங்களை இழந்திருக்காங்க.. பெத்தவங்க புள்ளைங்களை இழந்திருக்காங்க.. கடவுள் கருணையில நமக்கு அப்படியேதும் நடக்காத இருக்கிறதே பெரிய நிம்மதி.. இதுல பத்திரிக்கை அடிக்கில.. அது செய்யில இது செய்யிலன்னு எல்லாத்துலயும் குற்றம் கண்டுபிடிச்சிட்டிருக்க..?” என அதட்டி..
‘இப்போ இருக்கிற சூழல்ல யாருக்கும் எந்த தொற்றும் வந்திடாம நல்லபடியா கல்யாணம் முடிஞ்சி வரனும்னு கடவுள்கிட்ட வேண்டிட்டு.. எதையும் மறக்காம எடுத்து வை..” என்றவர் மகளிடம் சென்றார்.
‘அக்கா.. எல்லாத்துலயும் இரண்டு செட் இருக்கு.. இது கல்யாணத்துக்கு போட்டுக்க.. இது இன்னைக்கு நைட் போட்டுக்கக்கா..” என சுவாதியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் நிலவழகி.
‘வேணாம் நிலா..” என்றவளுக்கு கண் கலங்கியது.. ம்.. கடந்த நான்கு நாட்களாக வீட்டில் விருந்து நடக்கிறது.. ஆனால் தன் கணவன் கலந்து கொள்ளவில்லை.. அம்பிகாவும் கதிரவனும் சென்று அழைத்தார்கள்தான்.. தன் வருகை மாமாக்கு பிடிக்காது.. இந்த கல்யாணத்தையாவது மகிழ்வோடு அனுபவிக்கட்டும் என மனதாற கூறி.. தன்மையாகவே மறுத்து விட்டான் குமார்.
மருமகன் அப்பாம்மா இல்லாத வளர்ந்த பிள்ளை.. எதோ அப்ப அப்படி செய்துட்டார்.. நிலா ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது உங்ககிட்ட மன்னிப்பும் கேட்டுட்டார்.. அவருக்கும் நம்மை விட்டா யாருமில்ல.. நாமும் இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கப் போறமோ.? போகும் போது எதை வாரிட்டு போகப்போறோம்.? ஒரே ஒருமுறை மருமகனை கூப்பிடலாம்.. என ஏதேதோ சொல்லி அம்பிகாவும் கெஞ்சிப் பார்த்துவிட்டார்.
இத்தனை கேட்டபிறகு சற்றே மனமிறங்கி உனக்கு வேணும்னா கூப்பிட்டுக்க நான் கூப்பிடமாட்டேன்.. என முடித்துக்கொண்டார் நாகராஜன். இதை சொல்லும்போது தந்தையின் முகத்திலிருந்த வேதனையை உணர்ந்த கதிரவன்.. மீண்டும் பேச வந்த அன்னையை தடுத்து.. அப்பாவை கம்ப்பல் செய்யாதிங்ம்மா.. நாம போய் கூப்பிடலாம் என்கவும்.. கணவன் இந்தளவிற்கு இறங்கி வந்ததே பெரிதென எண்ணி குமாரை முறைப்படி அழைத்தனர் கதிரவனும் அம்பிகாவும்.
அப்பாதான் உங்களை கூப்பிட சொன்னார்.. உங்களை எதுவும் சொல்லமாட்டார் என நலங்கிற்கு வரசொல்லி சுவாதி அழைக்க.. நிலாக்கு பக்கத்திலயிருந்து எல்லாம் பார்த்துக்கோ.. நான் கல்யாணத்திற்கு வருகிறேன் என்றுவிட்டான் குமார்.
கடந்த நான்கு நாட்களாக உங்கப்பா இன்னும் உன் புருசனை ஏத்துக்கலையா.? எங்கே அவரை காணோம் என சொந்தங்கள் கேட்கும்போது.. அவருக்கும் யாரிருக்கா.? அப்பா அழைத்திருந்தால் நிச்சயம் வந்திருப்பார் என்ற வேதனையில் இருந்தவளுக்கு.. மதியம் விருந்து முடித்ததும் அன்னையிடம் நகைகளை ஒப்படைத்து உன் பொண்ணுக்கும் என் பொண்ணுக்கும் கொடு..” என்றிருந்தார். அப்பொழுது கூட தன்னை பிரித்துதான் பேசுகிறார் என்ற வேதனையில்.. நிலாக்கு கொடுங்கம்மா எனக்கு வேண்டாம் என்றிருந்தாள்.
‘அப்பாவே கொடுக்கிறார் வேணாம் சொல்லி அவரை கஷ்டப்படுத்தாத.. எல்லாம் நிலா ரூம்ல வச்சிருக்கேன்.. நீயும் நிலாவும் கல்யாணத்துக்கானதை எடுத்து வைங்க..” என்றிருந்தார்.
தனதறைக்கு அழைத்துச் சென்ற நிலவழகி நகைகளை எடுத்து வைக்கவும்.. பரப்பி வைத்திருக்கும் நகைகள் கண்ணைப் பறித்தது.. நிலாவிற்கும் தனக்கும் சேர்த்து எத்தனை ஆசையாய் வாங்கியிருக்கிறார்.. எந்த நகையாகினும் அதில் இரண்டிருக்க.. இப்படித்தானே தனக்கும் திருமணம் செய்ய நினைத்திருப்பார்.. எத்தனை பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறோம்.? என்று காலம் கடந்து வருந்தினாள்.
‘எல்லாத்துலயும் இரண்டு இருக்கு.. கல்யாணத்துக்கு எது போட்டுக்கிறன்னு சொல்லு.. அப்போதான் எடுத்து வைக்க முடியும்..” என்றாள் ஆசையோடு.
‘எனக்கு வேணாம் நிலா.. இதெல்லாம் வாங்கிக்க எனக்கு எந்த தகுதியும் இல்ல..” என்று கண்கலங்கினாள்.
நிலா..‘அப்படில்லாம் சொல்லாதக்கா.. நமக்காகத்தான எல்லாம் இரண்டு இரண்டா வாங்கிருக்கார்.. அப்பா சொல்லியும் நீ வேணாம் சொன்னா ரொம்ப வருத்தப்படுவார்.. இந்த பிங்க் கலர் செட்டை நைட் போட்டுக்கிறியா.?” என்றாள் ஆவலாக.
இவள் போல் தன்னால் தந்தையின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற வேதனையில்..’நிலா..” என அணைத்தாள் தங்கையை.
வெளியிலிருந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த நாகராஜ்.. ‘நிலாம்மா..” என குரலோடு உள்ளே வர.. ‘இன்னும் பாக் பண்ணலையாம்மா.? டைம் ஆச்சுடா.. நாலு மணிக்காவது கிளம்பினாதான் ஏழு மணிக்குள்ள தஞ்சை போய் சேரமுடியும்..” என்றார்.
நிலா.. ‘சரிங்கப்பா..” என்க.. ‘அம்பிகா..” என்ற குரலுக்கு மனைவி வர.. ‘எப்போ எந்த நகை போட்டுக்கனும்னு நிலாக்கு சொல்லலையா.? பரப்பி வச்சி பார்த்துட்டிருந்தா வேலையாகுமா.?” என முறைக்க.. தந்தை சொல்வது தனக்குத்தான் எனப்புரிந்த சுவாதி.. ‘நீ சொன்ன பிங்க் செட்டையே போட்டுக்கிறேன் நிலா..” என்றுரைக்க.. ‘நிலா எனக்கு..?” என வந்தாள் கவிப்பிரியா.
‘கவிம்மா.. அங்க இருக்கிற நகைகள்லாம் உனக்கும் நிலாக்கும்தான்.. உனக்கு என்ன வேணுமோ போட்டுக்க..” என்ற தாத்தாவிற்கு முத்தத்தை பரிசாய் கொடுத்தாள் கவிப்பிரியா. மறு கன்னத்தில் பார்த்திபன் முத்தம் வைக்க..
‘நிலா குழந்தையா இருக்கிறப்போ ஒரு செயின் வாங்கினோமில்ல.? அதை எடுத்து வச்சிக்கோ அம்பிகா.. அதைதான் மாப்பிள்ளைக்கு போடனும்.. அதேபோல இன்னொரு செயின் இருக்கும்ல.? அதையும் எடுத்து வா அது நம்ம பார்த்தி குட்டிக்கு..” என்றார்.
அம்பிகா எடுத்து வர.. பேரனின் கழுத்தில் ஆசையாய் அணிவித்து.. ‘சந்தோசமாடா..” என்றார். பார்த்திபன் சந்தோசமாய் தலையசைக்க.. ம்.. தன் கணவனுக்கு சேர வேண்டிய செயின் என ஏமாற்றமாய் உணர்ந்தாலும் நம்மிடமும் புருசனிடமும் பேசவில்லையென்றாலும் குழந்தைகளிடமாவது அன்பு காட்டுகிறாரே என நிம்மதியடைந்த சுவாதி..
தான் செய்த தவறை நினைத்து மனப்பெண்ணின் சந்தோசத்தை கலைக்க வேண்டாம் என்பதையும் உணர்ந்து.. ‘அம்மா நிலாவை இன்னும் அரை மணி நேரத்துல ரெடி செய்திடறேன்.. நீ போய் மத்ததை பாரு..” என்றாள் சந்தோசமாக.
அம்பிகாவும் நாகராஜிம் அவ்விடம் விட்டு நகர.. ‘கவி குட்டி முகமெல்லாம் எண்ணை வழியுது.. ஒரு குளியல் போட்டுட்டு வா.. புது டிரெஸ் நகையெல்லாம் போட்டு விடறேன்..” என கவனமாக கவிப்பிரியாவை வெளியே அனுப்பி கதவை அடைத்தவள்.. ‘அக்கா..” என்றாள் சன்னக் குரலில்.
திடீர் கல்யாணம் என்பதால் நாளேது ஒத்து வரலையோ என.. ‘என்ன நிலா.. வயிறேது வலிக்குதா..?” என கவலையாய் கேட்க.. ‘ப்ச்.. அதெல்லாம் இல்லக்கா.. நல்லாத்தான் இருக்கேன்..” என இழுத்தாள்.
ஷப்பா.. என நிம்மதியடைந்தவள்.. ‘கலை ரொம்ப நல்லவர்ன்னு எத்தனை முறை சொல்றது நிலா.? எதுக்கு இப்படி சோர்ந்திருக்க..?” என்றாள் அதட்டலாக.
நிலா.. ‘ம்க்கூம்.. எனக்கது தெரியாதா.?” என சலிப்பாய் முகம் திருப்ப.. கலையரசனின் நல்ல மனதோடு அவனின் கோபமும் தெரிந்தவளாதலால்.. ‘வேற என்ன.? தூக்க மாத்திரை குடிச்சதுக்கேது திட்டினாப்லயா.?”என்றாள் சிறு கவலையோடு.
வேறொருவர் பெண்கேட்டு வந்த பின்னே தன் மனதை உணர்ந்ததிலிருந்து மனம் கலையரசனைத் தேட.. அவனோ கதிரிடமும் குழந்தைகளிடமும் பேசுவதோடு முடித்துக்கொள்வான். மருத்துவமனையில் திருமணம் முடிவான பின்னேயாவது தன்னிடம் பேசுவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச.. ‘திட்டறதுக்கு கூட எனக்கு போன் செய்யல..” என்றாள் ஏமாற்றமாக.
ஓ.. கதை அப்படி போகுதா என மனதில் சந்தோசித்தவள்.. ‘அவர் பண்ணலனா என்ன.? நீ பண்ணலாமில்ல.?” என்றாள்.
‘என்கிட்ட அவங்க நம்பர் இல்ல..”
சுவாதி..‘என்கிட்ட கேட்டிருக்கலாமில்ல.?”என பொய்யாய் அதட்டி.. ‘சரி இப்போ தரேன் பேசு..” என தனது மொபைலை எடுக்க.. ‘வேணாம்.. வேணாம்..” என அவசரமாய் மறுத்தாள் நிலவழகி.
சுவாதி முறைக்க.. ‘தினமும் நலங்கு வைக்கிறதை வீடியோ எடுத்து அண்ணா அவங்களுக்கு அனுப்புறாங்க.. இங்க நடக்குறதை மட்டும் பார்;க்கிறாங்க.. அதே போல அவங்களுக்கு நலங்கு வைக்கிறதை அனுப்பறதில்ல.. அன்னைக்கு அவங்க அக்கா பொண்ணு என்கிட்ட பேச ஆசைப்படுறான்னு கால் செய்தாங்க.. அப்ப கூட என்கிட்ட பேசல.. அப்போ நான் மட்டும் எதுக்கு பேசனும்..?” என்றாள் ரோசமாக.
‘அதுவும் சரிதான்.. நீ மட்டும் எதுக்கு பேசனும்.? அங்க போனாலும் பேசமாட்டல்ல..?” என்றாள் சின்ன சிரிப்போடு.
நிலா முறைக்கவும்.. ‘இப்பவே இவ்ளோ ஈகோ பார்த்தா எப்படியாகுறது.? நீ இப்படி நினைக்கிறன்னு கலைக்கு எப்படி தெரியும்..? அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல கலை உள்ள வந்ததும் முகத்தை திருப்பினதுமில்லாம.. மாத்திரை குடிச்சதை கேட்க நீங்க யாருன்னு கேட்டு மல்லுக்கு நிக்கிற.. அப்புறம் எப்படி உன்;கிட்ட பேசுவார்.?” என கலைக்காக நியாயம் பேச.. நிலா பாவமாய் முகம் சுருக்கினாள்.
சுவாதி.. ‘இப்படி சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் ஈகோ பார்த்து தப்பு கண்டுபிடிக்க கூடாது நிலா..” என அக்கறையாய் கண்டித்து.. ‘கவலைப்படாத அங்க போனதும் உன்னைத்தவிர கலை யாரையும் பார்க்கமாட்டார்..” என்று கண்ணிமைத்து சிரித்தாள்.
நிலா முகம் சிவக்கவும்.. ‘சாரிக்கேத்தாற் போல நகையெல்லாம் நான் எடுத்து வைக்கிறேன்.. கல்யாணம் முடிஞ்சி அங்க மாத்திக்க கொஞ்சம் டிரெஸ் எடுத்து வச்சிருக்கேன் அது ஓ.கேவான்னு பார்த்துட்டு ஜடையை பிரி.. இன்னும் அரை மணி நேரத்துல ரெடியாகலன்னா அப்பா திட்டுவார்..” என பரபரத்தாள்.
—— —— ——- ——-
கலைக்கும் கீதாவிற்கும் பிரச்சனை வந்த அடுத்தநாள் முதலில் தனது மச்சினன் மகன் வீட்டிற்கு சென்று கலையின் திருமண விசயம் கூறி.. பின்னே கீதாவின் வீட்டிற்கு சென்றார்.
மயில்சாமி உள்ளே வரவும்.. ‘நான் சொன்னா எங்கப்பா கேட்ப்பாங்கன்னு உங்க பொண்ணு அவ்வளவு உறுதியா சொல்லவும்தான் மதுகிட்ட கல்யாணத்தை பத்தி பேச்செடுத்தோம்.. இப்போ நீங்க பாட்டுக்கு வெளில பார்த்தா என்ன அர்த்தம்.? என கீதாவின் மாமியார் அதட்டும் தோரணையில் அலட்சியமாக கேட்கவும்.. மகனிற்கும் பேத்திக்கும் திருமணம் முடித்தாக வேண்டுமென கீதா மட்டுமல்ல மொத்த குடும்பமும் நினைக்கிறார்கள் என இங்கு வந்த பிறகுதான் மயில்சாமிக்கு தெரிய.. நல்ல காலம் மது அங்க இருக்கிறா என நிம்மதியடைந்து..
‘என் மகனுக்கு நம்ம பேத்தியை கட்டிக்கிறதுல விருப்பமில்லன்னு அர்த்தம்..” என்று அழுத்தமாய் சொல்லி.. ‘என் பொண்ணு சொன்னா நாங்க கேட்போம்தான்ங்க.. அதுக்காக பையன் கல்யாண விசயத்துலயும் அது முடியுங்களா.? நானே சொன்னாலும் அவன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைத்தான் செய்வான்.. அது உங்களுக்கும் தெரியும்.. தெரிஞ்சிருந்தும் என் மகன் கல்யாணத்துக்கு எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம மதுகிட்ட நீங்க பேசினதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்.?” என்றார் அதே அலட்சியத்தோடு.
கீதாவை கட்டிக்கொடுத்ததிலிருந்து ஒருநாளும் இப்படி அலட்சியம் காட்டியிராத மயில்சாமி இன்று இப்படி பேசவும் வாயடைத்து நின்றனர். மயில்சாமியின் பேச்சரவம் கேட்டு.. ‘தாத்தா..” என ஓடி வந்தான் தரணிதரன். ‘அப்பாம்மா வெளில போயிருக்காங்களா குட்டி..?” என்றார்.
மயில்சாமி.. ‘ம்..” என நின்றிருக்க.. ‘உக்காருங்க தாத்தா..” என்று தரணிதரன் கைப்பிடித்து இழுக்கவே.. ‘பரவால்லப்பா..” என்க.. ‘வாங்கப்பா..” என வந்தாள் கீதா.
‘மாப்பிள்ளையை கூப்பிடும்மா..” என்றார்.
‘அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லப்பா.. தூங்கிட்டிருக்கார்..” என்றாள்.
சின்னதாய் சிரித்தவர்.. ‘சம்பந்திம்மா.. வர வெள்ளி கிழமை என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கோம்.. லாக்டவுன்னால பத்திரிக்கைலாம் எதுவும் அடிக்கல.. நம்ம தஞ்சை பெரிய கோவில்ல வச்சி கல்யாணம் முடிச்சிட்டு.. ஒன்பது மணிக்கு மாயாபுரிஅமிர்தா ஹால்ல ரிசப்சன் வச்சிருக்கோம்..” என்றவர்.. ‘கீதா ஒரு தட்டு எடுத்துட்டு வா..” என்க.. ‘அப்பா நான் கொஞ்சம் பேசனும்..” என்றாள்.
‘சொல்லும்மா..” என்றார்.
‘தங்கமகன் தங்கமகன்னு இந்தியாவே போற்றிப் புகழறவன் என் தம்பி.. இப்போ இரண்டு வருசமா நேர்மையான அதிகாரின்னு காவல் துறையிலயும் நல்ல பேர் இருக்கு.. இப்படி பிரபலத்தை கண்டவளுக்கும் தாரை வார்க்கிறிங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்காப்பா.? எங்க சொந்த பந்தம் எல்லார்கிட்டயும் என் தம்பிக்குத்தான் மதுவை கொடுக்கிறேன்னு சொல்லிட்டேன்.. இப்போ அது இல்லன்னா எல்லாரும் கேவலமா நினைப்பாங்கப்பா..”
இடைமறித்தவர்.. ’கலை மனசுல நிலா இருக்கிறான்னு தெரிஞ்சிருந்தும் உன் சொந்த பந்தங்கள்ட்ட எதுக்கு கலைதான் உன் மருமகன்னு சொன்ன.? கல்யாணம்ங்கிறது விளையாட்டா.? அவனுக்கு விருப்பம் இருக்க வேணாமா.? இரண்டு வருசமா லவ் பண்ணிட்டிருக்க பொண்ணை விட்டுட்டு உன் பொண்ணுன்னு இல்ல.. வேற யாரையும் அவன் கல்யாணம் செய்துக்க மாட்டான்.. இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்க.. எத்தனை முறை இதையே திரும்ப திரும்ப பேசுவ..?” என்றார் கடுப்பாக.