‘இத்தனை நாளா கலைன்னு சொல்லிட்டிருந்த என் பொண்ணு.. இப்போ மாமா மாமான்னு கூப்பிடுறா.. அவ மனசுல ஆசையில்லாமலா அப்படி கூப்பிடுவா.?”
‘வாய மூடு கீதா..” என அதட்டியவர்.. ‘ஆசையிருக்கிறவதான் என்னை கல்யாணம் செய்துக்காதிங்க மாமா.. நான் படிக்கனும்னு கலையோட காலை பிடிச்சி கெஞ்சி கதறுனாளா.? அங்க வந்தாலே சாணிநாத்தம் அடிக்குதுன்னு சொல்ற புள்ள.. இப்போ ஒரு மாசமா அங்க இருக்கான்னா கலையை கட்டிக்க சொல்லி எவ்வளோ டார்ச்சர் செய்திருப்ப..? தெளிஞ்ச நீரோடை போல இருக்க மதுக்குட்டியை தேவையில்லாம அசிங்கப்படுத்தாத..” என்றார் கோபமாக.
‘என் புருசன் இனி எதுக்கும் அங்க வரமாட்டாராம்.. உறவை அத்து விட்டுடுவாராம்..” என்றாள் கடைசி மிரட்டலாக.
‘கதிர் தம்பிக்கு நேத்து போன் செய்து அவங்க குடும்பத்தை தரக்குறைவா பேசினது கலைக்கு தெரிய வரும்போது யார் யாரு உறவை அத்துவிடறாங்கன்னு தெரியும்..” என அசால்ட்டாய் சொல்லி..
‘ஒரு தட்டு எடுத்துவா.. இங்க சொல்லிட்டு செல்வி வீட்டுக்கு போகனும்.. கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு.. நிறைய வேலையிருக்கு..” என்றார்.
அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிய.. எல்லாம் எடுத்துட்டு போங்க என கத்தும் ஆத்திரம் வந்ததுதான்.. ஆனால் பிறந்த வீட்டு உறவு இல்லையென்றானால் தனக்கு இங்கு மரியாதை இருக்காதே என மருகியவள்..
‘பரவால்லப்பா அப்படியே கொடுங்க..” என்கவும்.. பழம் நிறைந்த பையை கொடுத்து.. ‘மாப்பிள்ளையை அழைச்சிட்டு இரண்டு நாள் முன்னவே வீட்டுக்கு வந்திடு.. துணிமணிலாம் வாங்க கடையில்ல.. அதனால பணமா கொடுத்துடறேன்..” என இருபதாயிரம் பணத்தையும் கொடுத்து கிளம்பினார்.
——— ——— ——–
மூன்று நாளைக்காவது லீவ் போடு.. நலங்கு வைக்கனும் என எத்தனை கேட்டும் முடியாதென்றுவிட்டான் கலையசரன். விடிஞ்சா கல்யாணம்.. இன்னைக்காவது வாடா என்றிருந்தார் மயில்சாமி.. மதியம் வரேன் என்றவன் மாலை நான்காகியிருக்க இன்னும் காணவில்லை.
‘மதியத்திலிருந்து வந்துட்டிருக்கேன்றான் ஆனா இன்னும் காணோம்..” என புலம்ப ஆரம்பிக்க.. ‘கலைக்கும் இங்கதான்ப்பா நினைப்பிருக்கும்.. முக்கியமான வேலையில்லாம இப்படி இருக்கமாட்டான்.. டென்ஷனாகாதிங்கப்பா..” என்றாள் செல்வராணி.
‘இன்னைக்காவது நலங்காவது வைக்கலாம்ன்னா அவனை இன்னும் காணோம்.. எங்க மாப்பிள்ளையை காணோம்னு கேக்குறவங்களுக்கு பதில் சொல்லத்தான் சரியாயிருக்கு.. கல்யாண வீடுன்னு ஒரு கலகலப்பு இருக்கா.? இன்னைக்காவது சொந்த பந்தங்களோட இருக்கலாம்னு தோணுதா உன்தம்பிக்கு..? எப்பவும் அவன் நினைச்சதையேதான் செய்யிறான்..” என்றார் கோபமாக.
செல்வராணி கலையரசனிற்கு அழைக்க.. ‘அக்கா.. கொஞ்சம் சமாளிக்கா.. நான் வர நைட் ஆகிடும்..” என்றான் கெஞ்சலாக.
‘டேய்.. என்னடா சொல்ற..?” என அதிர்ந்த செல்வராணி.. ‘பொண்ணு வீட்ல கிளம்பிட்டாங்களாம் கலை.. ஏழு மணிக்கெல்லாம் இங்க வந்துடுவாங்க.. நீ இல்லாம எப்படி..? எதுனா செய்து கிளம்புடா ப்ளீஸ்..” என்றாள் கெஞ்சலாக.
‘மத்த எதுன்னாலும் வந்துடுவேன்க்கா.. இது ரேப் கேஸ்.. பனெண்டு வயசு பச்சை மண்ணை..” என்றவனின் கோபம் அவனின் குரலிலேயே புரிய.. என்ன சொன்னாலும் செய்ய வேண்டியதை முடிக்காமல் வரமாட்டான் என்றுணர்ந்த செல்வராணி.. ‘சரி.. சரி.. நான் சமாளிக்கிறேன்.. அதுக்காக காலைலதான தாலி கட்டுறோம்.. நாளைக்கு வரலாம்னு ப்ளான் போட்டுடாத.. நைட் எட்டு மணிக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கு.. ஊர் பெரியவங்கள்லாம் வருவாங்க.. நீ இல்லன்னா அது மரியாதையா இருக்காது… திரும்பவும் சொல்றேன்.. ஏழு மணிக்கு நிலா வரும்போது நீ இங்க இருந்தாகனும்.. சரியா.?” என்றாள் கட்டளையாக.
‘சரிக்கா..” என இணைப்பை துண்டித்ததும்.. ‘நைட் ஆகும்ன்னானா.? நீயும் அவனுக்கு ஒத்து ஊதுனியா..?” என்றார் முறைப்போடு.
கலையின் நிலையை விளக்கிய செல்வராணி.. ‘அவன் வேலையைப் பத்தி எல்லாருக்கும் தெரியும்தானப்பா.? யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.. ரொம்ப டென்சனா இருக்கான்.. நாமளும் படுத்த கூடாது…” என்றாள்.
‘சம்பந்தி வீட்ல ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவாங்க செல்வி..” என்றார் பதட்டமாக.
‘ம்..” என தலையசைத்தவர்.. ‘உங்கக்கா சாப்பிட்டாளா.? நாளைக்காவது உன் மாமாக்கு காய்ச்சல் சரியாகுமா.? இல்ல ஆகாதா.?” என்றார் அடுத்த கவலையாக.
கீதாவின் பார்வை தங்கள் மீதிருக்க.. ‘உண்மையை சொல்லப்போனா காய்ச்சல் சரியாகலன்னா மாமா ரெஸ்ட் எடுக்கிறதே பெஸ்ட்ப்பா.. அங்க கோவில்ல டெம்ப்ரேச்சர் செக் செய்து சாதரண காய்ச்சலை கொரோனா பேசன்ட்டோட அட்மிட் செய்திடப் போறாங்க..” என்றாள் உள்ளடக்கிய கோபத்தோடு.
இப்படி டென்சனோடே நேரம் கழிய.. ஏழு மணியாகியும் கலை வரவில்லை.. ஆனால் நாகராஜ் குடும்பத்தினர் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டோம் என தகவல் கொடுக்க.. ‘இதோ சின்ன மாப்பிள்ளை வருவார்..” என்று ஆனந்தனைப் பார்க்கவும்.. ‘நான் போய் கூட்டிட்டு வரேன் மாமா..” என ஆனந்தன் பைக்கை எடுக்கப் போனான்.
பூட்டிய கோவில் முன் குடும்பத்தோடு நின்றிருந்த நிலவழகியின் முகம் சோர்ந்திருக்க.. அவளிடம் பேசிக்கொண்டிருந்த சுவாதியின் கண்கள் கலையரசனைத் தேட.. இவர்களிடம் வந்த ஆனந்தன்.. ‘தப்பா நினைக்காதிங்க.. கலை இன்னும் ஊர்லயிருந்து வரல.. எதோ முக்கியமான கேசாம்..” என்றான்.
அருகிருந்த கதிரவன்.. ‘கலை என்கிட்டயும் சொன்னார்.. இப்போதான் கிளம்பினாராம்.. ஒன்பது மணி போல வந்திடுவாராம்..” என்றான்.
பின்னே மயில்சாமியும் கலாவும் வரவே.. சோர்ந்திருந்த நிலாவின் முகம் பார்த்த கலா.. ‘என்னடா கோவில் கதவு பூட்டியிருக்கேன்னு நினைக்காத மருமகளே.. கடவுள் எங்கும் நிறைஞ்சிருக்கார்.. யாருக்கும் அடங்காதவன் உனக்காவது அடங்கனும்னு நல்லா வேண்டிக்கோ..” என்றார் புன்னகை முகமாக.
கலையரசன் இல்லாதது பெருத்த ஏமாற்றததை தந்தாலும்.. மாமியாரின் இயல்பான பேச்சிற்கு வரவழைத்தை சிரிப்பை உதிர்த்து கை கூப்பி கண்மூடியதும்.. அன்று ஒரு பொண்ணை காப்பாற்றப் போய்தானே கையை உடைச்சிக்கிட்டாங்க என்பது நினைவு வர.. ‘நல்லபடியா சீக்கிரம் வாங்க..”என வேண்டினாள்.
பிறகு ஐந்து நிமிடப் பயணத்தில் வீட்டிற்கு வரவும்.. இன்முகத்தோடு ஆரத்தி எடுத்து செல்வி வரவேற்றாள். பதினொரு பேர் மட்டும்தான் வருகிறோம் என நாகராஜன் சொல்லியிருந்ததால் மண்டபமெல்லாம் பதிவு செய்யவில்லை.. மகள்கள் வந்து போனால் தங்கவென மாடியில் இரண்டு அறைகள் இருக்க.. இவர்களுக்கு அங்கேயே தங்க ஏற்பாடு செய்திருந்தார்.
‘இன்னும் கால் மணிநேரத்துல பெரியவங்கள்லாம் வந்திடுவாங்க.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் வீட்டுக்குள்ள வந்துக்கலாம்.. இப்போ மேல ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..” என்க.. பெண்கள் மேலேற.. நாகராஜ் கதிரவன் குமார் என அனைவரும் கீழேயே பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னே நிச்சயதார்த்த விழா ஆரம்பிக்க.. அது முடியும் வரையிலும் கலையரசன் வரவில்லை.. விழா முடிந்து வீட்டினுள் சென்று விளக்கேற்றி.. நல்ல நேரத்தில் கூரைப்பட்டு மாங்கல்யம் வைத்து பூஜை முடித்து.. அனைவரும் சாப்பிட்டு முடிக்க ஒன்பதரை மணி ஆகியிருக்க.. ‘அப்பா எனக்கு படுக்கனும்..” என்றாள் தந்தையிடம்.
நாகராஜ்.. ‘கலை வந்துட்டு இருக்காராம்.. ஒரு பத்து நிமிசம் இருடா..” என்க.. ‘நிறைய பூ வச்சி ரொம்ப தலைவலிக்குதுப்பா.. அதோட இந்த பட்டு சாரி வேற.. எனக்கு டிரெஸ் சேன்ஜ் செய்துட்டு படுக்கனும்..”என்றாள் பிடிவாதமாய்.
அங்கே வந்த கலையரசன்.. அடேங்கப்பா செம்ம காரமா இருப்பா போல என நினைத்தவாறு நிலவழகியை கண்களால் வருட.. ‘வாடா மாப்பிள்ளை..” என்ற செல்வியின் கோபக் குரலில் நிலாவிடமிருந்து பார்வையை விலக்கியதும்..
‘மாமா..” என ஆரவாரத்தோடு மதுமிதா பரணிதரன் வினோத் ஆகியோர் கலையிடம் நெருங்க.. ‘சித்தா..” என்று பார்த்திபனும் நெருங்க.. இரண்டடி பின்னே நகர்ந்தவன்.. ‘டேய்.. டேய்.. தொடாதிங்கடா.. குளிச்சிட்டு வந்திடறேன்..” என்று தனதறைக்குள் நுழைய.. அங்கே ஆனந்தன் கதிரவன் குமாரோடு பேசிக் கொண்டிருக்க..
குமாரிடம் நலம் விசாரித்து தாமதத்திற்காக கதிரிடம் மன்னிப்பு கேட்டு.. ஆனந்திடம் திட்டு வாங்கியபிறகு குளிக்க போனான். அன்று போல் இன்றும் குளித்து சீருடை முகக்கவசம் அனைத்தும் துவைத்து வெளியே வந்தவன்.. ‘அக்கா இதைக் கொஞ்சம் காயப் போட்டுடேன்..” என்று செல்வியிடம் கொடுத்து.. ‘அம்மா பசிக்குது..” என்றவனின் கண்கள் நிலாவைத் தேட..
‘மருமக கையால நாளைக்கு சாப்பிடலாம்.. இன்னைக்கு நான் வைக்கிறேன்..” என்று கலா பரிமாற.. அன்னை தன்னை கண்டுகொண்டதில் சிரித்தவன்.. உண்ணும்போதே அக்காள் பிள்ளைகள் சுவாதி பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து.. ‘மாமா போன் பேசிட்டு வந்திடறேன்..” என வெளியே வந்தவன் நான்கே எட்டாய் மேல் மாடியை அடைந்தான்.
ஒரு அறையை எட்டிப்பார்க்க.. அங்கே நாகராஜ் மற்றும் உறவினரோடு தந்தை பேசிக்கொண்டிருந்தனர். ஹப்பா.. நிலாவின் அம்மா கீழே அம்மாவோடும் அக்காவோடும் பேசிட்டிருக்காங்க.. என்ற நிம்மதியோடு பக்கத்து அறையின் கதவை லேசாய் தட்ட.. ‘வாம்மா.. திறந்துதான் இருக்கு..” என்ற சுவாதி குரலுக்கு உள்ளே நுழைந்தான் கலையரசன்.
‘வாங்க வாங்க..” என்ற சுவாதி.. ’நிலா பாத்ரூம்ல இருக்கா..” என்றாள் கலையின் மனதறிந்து.
‘கொஞ்சம் கருணை காட்டுவிங்களா.?” என்றான் கெஞ்சலாக.
‘ஹா..ஹா.. நான் காட்டுவேன்.. அங்க அது கிடைக்காது.. மேடம் செம்ம கோபத்துல இருக்கா..” என வெளியே வந்தாள்.
பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவள் கலையைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் மீண்டும் பாத்ரூமினுள்ளே போக எத்தணிக்க.. நிலாவின் கையைப்பிடித்தவன் அவளோடு நெருங்கி நின்று.. ‘என்னைத் தேடுனியா.?” என்றான் குறுகுறு பார்வையோடு.
‘ஒன்னும் இல்ல..” என்றாள் ரோசமாக.
‘அப்போ எதுக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்தது போதும்னு கதிர் மொபைலை பிடிங்கி வச்ச.?” என்று இன்னும் நெருங்கினான்.
இவனின் நெருக்கம் அவஸ்த்தையை கொடுத்த போதும்.. இதைகூட அண்ணன் சொல்லிட்டாங்களா.? என கதிரவன் மேல் கோபம் வர.. ‘கதிர் சொல்லல.. கதிர் மொபைலை பிடிங்கி பத்திரமா வச்சிருன்னு கவிகிட்ட கொடுத்திருக்க.. கவிப்பாப்பா என்னோட ஆள்ன்னு உனக்கு தெரியாதா..?” என கண்சிமிட்ட.. ‘ரொம்பத்தான் பெருமை..” என நொடித்து தலைகுனிந்தாள்.
‘ம்.. எத்தனை சரியான காரணமிருந்தாலும்.. நம்ம நிச்சயத்துக்கு வராம உன்னை ஏமாத்தினது தப்புதான்.. அதுக்கு சாரி..” என்று அவளின் கையில் முத்தமிட்டு.. ‘ஆனா உன் மனசுல நான் இருக்கேன்னு உணர்ந்த பின்னாடியும்.. கல்யாணத்துக்கு யோசிக்காம சாகத் துணிஞ்ச பாரு.. அதுக்கு இருக்கு நாளைக்கு நைட்டு..” என்று முறைக்க..
அச்சோ இவன் இதை விடமாட்டானா என நிலவழகி பதற.. ‘சின்ன பொண்ணாச்சேன்னு என் காதலைக் கூட வெளிப்படுத்தாம இரண்டு வருசத்துக்கு மேல பொறுமையா இருந்தவனை ஏமாத்திட்டு போக நினைச்சது எவ்ளோ பெரிய குற்றம்ன்னும்.. அதுக்கு எப்படி சாரி கேட்கனும்னும் நல்லா யோசிச்சிக்கோ..’’ என முறைத்தவன், ‘நீ மைனரா இருந்தப்ப தெரியாம என் கையை கிழிச்சதுக்கே முத்தம் கேட்டவன்.. நாளைக்கு தாலி கட்டினதுக்கப்புறம்..” என நிறுத்த.. நிலவழகி மலங்க விழித்தாள்.