‘பரிச்சையில பதில் தெரியாம முழிக்கிற மாதிரி இதென்ன இப்படி ஒரு ரியாக்ஷன்.?” என சட்டென இடைவளைக்க.. ‘சித்தா எங்க.?” என பார்த்திபன் கேட்க.. ‘மாமா எங்க இருக்காங்க..?” என்ற மதுவின் குரலும் கேட்க.. ‘உன் சித்தாவை காக்கா தூக்கிட்டு போய்டுச்சி..” என்று சுவாதி சிரிக்கும் சத்தமும் கேட்க.. ‘அச்சோ குட்டிங்க..” என நிலவழகி திமிற.. கலையசரன் மேலும் சேர்த்தணைக்க.. ‘சித்தா..” என கதவை தட்டினான் பார்த்திபன்.
‘மானமே போச்சி.. எல்லார்கிட்டயும் சொல்வான்..” என நிலவழகி முறைக்க.. சின்ன சிரிப்போடு நிலாவை விடுவித்து கதவைத் திறந்தான் கலையசரன்.
‘சித்தா.. கூப்பிடறாங்க..” என பார்த்திபன் சொல்ல.. ‘அக்காவை பார்க்க வந்திங்களா.?” என மதுமிதா நக்கலோடு சிரிக்க.. ‘ஆமாம் மது.. நிச்சயத்துக்கு வர முடியாம போய்டுச்சேன்னு சாரி சொல்லலாம்னு வந்தா.. என்கிட்ட பேசமாட்டன்னு பாத்ரூம்க்குள்ள போய் கதவை சாத்திகிட்டா..” என கோபம் போல் சொல்ல..
மதுமிதா..‘ஆமாம் பின்ன.? சாரி சொன்னா சரியாகிடுமா..?” என நிலாவிற்கு சப்போர்ட் செய்ய.. ‘ஹப்பா நம்பிட்டா..” என நினைத்து குழந்தைகளோடு கீழிறங்கினான்.
‘எங்கடா போன.?” என செல்வராணி சிரிப்போடு முறைக்க.. ‘சும்மாக்கா.. நிலா தெரியுதான்னு பார்க்க போனேன்..” என்றான் சிரிப்போடு.
இன்முகத்தோடு.. ‘நெய் போடாமதான.?அது செய்துடலாம்..” என்றவர்.. ‘நிச்சயதார்த்துல வச்சி போடலாம்னு நினைச்சேன்.. உங்களுக்கு வர தோதில்லாம போய்டுச்சி.. இது போட்டுக்கோங்க..” என்று செயினை எடுத்தார்.
தம்மாத்துண்டு செயினை போடத்தான் இவ்வளோ பில்டப்பா.? என்பதுபோல் கீதா பார்த்தது நாகராஜிற்கு புரிய.. கீதாவை விடுத்து மயில்சாமியிடம்.. ‘லாக்டவுன்ங்கிறதால புதுசா எதுவும் வாங்க முடியல.. பசங்க சின்னவங்களா இருக்கும்போது ரொம்ப வெய்ட் இல்லாமலும் குத்தாமலும் இருக்கனும்ங்கிறதுக்காக மூனு பேருக்கும் இப்படி ப்ளைனா வாங்கினேன்..
இது நிலாவுக்குன்னு வாங்கினது.. இப்போதைக்கு இது போட்டுக்கோங்க.. கடை திறந்ததுக்கப்புறம் புதுசா வாங்கிடலாம்..” என நீட்டினார்.
‘புதுசெல்லாம் வேணாம் அங்கிள்.. என் பொண்டாட்டி சின்ன வயசுல போட்ட செயின்தான் எனக்கு ஸ்பெசல்..” என்று செயினை வாங்கியவன் அதனை போட முயல அது கலையின் தலைப்பகுதியிலிருந்து கீழிறங்க மறுக்க..
‘செல்விம்மா செயின் ஊக்கை பிரிச்சிட்டு போட்டு விடு..” என்றார் மயில்சாமி. காலையில் இங்கு வந்ததிலிருந்து அனைத்திற்கும் செல்வராணியையே அழைக்கும் தந்தையை அத்தனை கோபமாய் பார்த்திருந்தாள் கீதாராணி.
‘கொடு கலை..” என செயினை வாங்க.. ‘க்கா.. இது நிச்சயதார்த்த செயின்.. எதுனா பார்த்து செய்..” என்றான் சிரிப்போடு.
செல்லமாய் முறைத்தாலும்.. ‘மாமா.. நிலாவை வர சொல்லுங்க.. அவளே போட்டு விடட்டும்..” என்றாள் நாகராஜிடம்.
மறுக்க முடியாதவராய்.. ‘கவிம்மா.. போய் நிலாவை கூட்டிட்டு வாங்க..” என்க.. கவிப்பிரியாவோடு சிறுவர் படை அத்தனையும் கிளம்பியது.
‘அது சரி.. நிலா செயினை போட்டதுக்கப்புறம் நீ அவளுக்கு என்ன கொடுக்கப்போற..?” என்றாள் செல்வராணி.
அச்சோ இப்படி வேற ஒன்னு இருக்கா என முழித்தாலும்.. ‘அதெல்லாம் என் பொண்டாட்டிக்கு சீக்ரெட்டா செய்துக்குவேன்..” என்றான் கெத்தாக.
‘ம்க்கூம்.. ஒன்னும் வாங்கலைன்னாலும் சமாளிப்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல..” என்று செல்வராணி சிரிக்க.. உள்ளே சென்று வந்த கலா.. ‘இந்தா கலை.. இதை என் மருமகளுக்கு போட்டு விடு..” என்று இரட்டை வடம் செயினை கொடுக்க.. அது தம் அம்மாவிற்கு அவர்களின் அம்மா போட்டு விட்டது என்று தெரிந்த கீதாராணி..
‘அம்மா.. அது எங்களுக்கு சேர வேண்டியது.. அதையெப்படி உன் மருமகளுக்கு கொடுப்ப..?” என்றாள்.
கலா..‘இது பழைய மாடல் செயின்.. இதெல்லாம் யார் போடுவான்னு கேட்ப.. இப்போ என்ன.?” என முறைத்து.. ‘உங்க ரெண்டு பேருக்கும் என்ன செய்யனுமோ அதெல்லாமும் எங்க சக்திக்கு மேலயே செய்தாச்சு.. இந்த செயின் என் மருமகளுக்குத்தான்..” என்றார் முடிவாக.
‘அம்பிகா.. நீ போய் சொல்லி கூட்டிட்டு வா..” என்க.. ‘இருங்க ஆன்ட்டி..” என்று நிலாவிற்கு அழைத்தான் கலையரசன். புது நம்பராக இருக்கவே அழைப்பை ஏற்கவில்லை நிலவழகி.
நிலா அழைப்பை ஏற்கவில்லை எனப்புரிந்து.. ‘இருங்க நான் கூப்பிடறேன்..” என்று குமார் சுவாதிக்கு அழைத்து சொல்லவும்.. நிலாவை அழைத்து வந்தாள் சுவாதி.
‘இதை கலைக்கு போட்டு விடு நிலா..” என்று செல்வராணி செயினை நீட்ட.. ஆ…வென நிலா பார்க்க.. ‘உங்கப்பா கலைக்கு போட்டுக்க கொடுத்தார்.. அவனுக்கு நீதான் போட்டு விடனுமாம்..” என்க..
கலையரசன் சிரிக்கவும்.. மதுமிதா.. ‘எங்க மாமாவை பார்க்க முடியாதுன்னு பாத்ரூம்க்குள்ள போனிங்கள்ல.? எப்படி வரவச்சார் பார்த்திங்களா.?” என்றாள் சிரிப்போடு.
ஓ.. கொஞ்சம் முன்ன போன் செய்தது இவங்கதானா.? அப்போ நம்பரை வச்சிக்கிட்டேதான் ஒரு ஃபோன்கூட செய்யலயா என கடுப்பானவள்.. ‘அது உங்க நம்பர்ன்னு எனக்கெப்படி தெரியும்..?” என்றாள்.
அப்போ இருந்து இப்போ வரைக்கும் பதில் மட்டும் பட்டு பட்டுன்னு வந்திடும் என நினைத்தவன்.. ‘இனி தெரிஞ்சிக்கோ..” என்றான் முறைப்போடு.
‘இதென்னடா ஸ்டேசன்ல முறைக்கிற மாதிரியே இங்கையும் முறைச்சிட்டு..” என அதட்டிய செல்வராணி.. ‘செயினை போட்டு விடு நிலா..” என்றாள்.
‘நான் போட்டு விடனும்னா அதுக்கு சரியான நேரத்துக்கு இங்க வந்திருக்கனும்.. இப்போ அவங்களே போட்டுக்கட்டும்..” என்றாள்.
‘அப்படிபோடு அரிவாள..” என சிரித்தான் ஆனந்தன்.
‘என்ன பேச்சு நிலா இது.? மாப்பிள்ளை சூழ்நிலை தெரியாம பேசிக்கிட்டு.. செயினை வாங்கி போட்டு விடு..” என்று அதட்டினார் அம்பிகா.
சும்மாவே இவங்க பெருமை பேசுவாங்க.. இனி மாப்பிள்ளையாகிட்டார்.. கேக்கவா வேணும் என நினைத்து.. செல்வராணியிடம் செயினை வாங்க.. இவன் எழவும்.. ‘உக்காருங்க.. இல்ல எனக்கு எட்டாது..” என்றாள் சன்னக்குரலில்.
கலை அமரவும்.. செயினை அணிவித்து அதனின் ஊக்கை கைகளால் நெருக்க அது நெருங்க அடம்செய்ய.. ‘தாலி கட்டினதுக்கப்புறம் நாளைக்கு நைட்.. என கலை சற்று முன் மிரட்டியது நினைவு வர..அவனின் பின்னே சென்று குனிந்து தனது பல்லால் ஊக்கை நெருக்கியவள்.. ‘தாலி கட்டிட்டேன்..” என முனுமுனுத்து நிமிர்ந்தாள்.
சிறு அதிர்வோடு.. ‘அடிங்க..” என எழுந்து நின்றிட.. ‘என்ன சொன்ன நிலா..? இப்படி அதிர்ச்சி காட்டுறான்..” என செல்வராணி ஆச்சர்யத்தோடு கேட்க.. முகத்தில் சிறு புன்னகை தவழ.. ‘இது எப்பவும் கழட்ட வேணாம்னு சொன்னேன் சித்தி..” என்றாள்.
‘என்ன.? சித்தியா..?” என கீதா சத்தமாகவே கேட்டிட.. செல்வராணி.. ‘நான்தான் அப்படி கூப்பிட சொன்னேன் கீதா..” என அலட்டாமல் சொல்லி.. கலையிடம்.. ‘இல்லையே.. எதோ சார்ட்டா சொன்ன மாதிரியில்ல இருந்தது..?” என சந்தேகத்தோடு கேட்க.. ‘இந்த செயின் அவளுதுன்னு சொன்னாக்கா..” என சமாளித்தான்.
‘ம்.. நம்பிட்டேன்..” என சிரித்து.. ‘இதை போட்டு விடு..” என்று அன்னையின் செயினை கொடுக்க.. வாங்கி அணிவிக்கவே.. நாணம் மறந்து நிமிர்வாகவே போட்டுக்கொண்ட நிலாவைப் பார்த்த செல்வராணி.. ‘ம்.. உனக்கேத்த சரியானவளைத்தாண்டா செலக்ட் செய்திருக்க..” என்றாள் சந்தோசத்தோடு.
கலையரசன்.. ‘எதோ சின்ன பொண்ணாச்சேன்னு பார்க்கிறேன்க்கா..” என சிரித்தவன்.. ‘போய் தூங்கு.. நாளைக்கு சீக்கிரம் எழனும்..” என்றான் அக்கறையாக.
நிலவழகி கிளம்பியதும்.. சார்ட்ஸ் டீசர்ட்டோடு இருந்தவனைப் பார்த்த நாகராஜன்.. ‘உங்களுக்கு போட்டு பழக்கமிருக்கோ என்னவோ.? நாளைக்கொரு நாள் மட்டும் கொஞ்சம் சிரமமெடுத்து போட்டுக்கோங்க மாப்பிள்ளை..” என்று பட்டு வேஷ்டி சர்ட்டை கொடுத்தார்.
‘நீங்களே நெய்ததா அங்கிள்..” என சந்தோசமாகவே வாங்கிக்கொண்டான். இவனின் உயரம் தெரியாமல் ஒரு பட்டு வேஷ்டிக்கும் தம்மாத்துண்டு செயினுக்கும் இப்படி பல்லை காட்டுறானே என பொருமிக்கொண்டிருந்தாள் கீதா.
——- ——- ——– ——–
அதிகாலை ஐந்து மணி..
பட்டுப்புடவையில் ஜொலித்த நிலவழகியின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்த சுவாதி.. ‘ம்.. நேத்தெல்லாம் கலையில்லாம உன் முகத்தில் கலையே இல்ல.. இப்ப ஜொலிக்கிறதைப் பாரு..” என கிண்டலடித்தாள்.
‘அதெல்லாம் ஒன்னுமில்லக்கா.. பட்டு சாரி நகையெல்லாம் போட்டுருக்கிறதுனால உனக்கு அப்படி தெரியுது…” என முகம் சிவந்தாள் நிலவழகி.
தங்கையின் வெக்கத்தை ரசித்த சுவாதி..‘நேத்து என்ன சுடிதாரா போட்டிட்டிருந்த..?” என்றாள் சிரிப்போடு. ‘ப்ச்.. போக்கா..” என சிணுங்க.. ‘சுவாதி.. நிலாவ கூட்டிட்டு வா..” என்றான் கதிரவன்.
நடை சாத்தப்பட்டிருந்த கோவில் வளாகதத்தின் முன் பட்டுவேஷ்டியில் கம்பீரமாய் நின்றிருந்த கலையரசனை ஒரு நிமிடம் உள்வாங்கி பின்னே தலைகுனிந்த நிலவழகி மனதினுள் ரசித்தவாறே அவனருகில் நெருங்கினாள். பின்னே ஐயர் முன் இருவரும் அமரவைக்கப்பட மந்திரம் சடங்கென பதினைந்து நிமிடம் சென்றபின் நிலவழகியின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான் கலையரசன்.
நாத்தி பட்டம் கட்டுவதிலிருந்து ஒவ்வொரு செயலிற்கும் செல்வியையும் ஆனந்தையும் மட்டுமே முன் நிறுத்தும் தந்தை மீது அத்தனை கோபத்தோடு இருந்தாள் கீதாராணி.
ம்.. தன் கணவனுக்கு காய்ச்சல் சரியாகவில்லையென்றும் அதனால் திருமணத்திற்கு வர முடியாதென்றும் கீதா சொல்ல.. பரவால்லம்மா.. லோகேசை உடம்பை பார்த்துக்க சொல்லு.. என்று முடித்துக்கொண்டார் மயில்சாமி.
வீட்டின் முதல் மாப்பிள்ளையென்பதால் திருமணத்திற்கு வர கெஞ்சுவார் என நினைத்துதான் லோகேஷ் இவ்வாறு சொன்னது.. ஆனால் மயில்சாமி தன் கணவன் வராதது ஒரு பொருட்டே இல்லையென்பதுபோல் இருந்ததோடு.. மருமகனை காணோம் என கேட்போரிடம் அவருக்கு காய்ச்சல்.. ஹோம் குவாரன்டைய்ன்ல இருக்கார் என்கவும்.. கீதாவிற்கும் தொற்று இருக்குமோ என சந்தேகித்த சொந்தங்கள் அவளிடம் ஒட்டாமல் தள்ளியிருக்க நொந்து போனாள் கீதா.
‘அப்பா அவருக்கு சாதாரண காய்ச்சல்தான்.. ஹோம் குவாரன்டைய்ன்னு எதுக்கு சொன்னிங்க.?” என கேட்க.. ‘இல்லம்மா.. நான் பத்திரிக்கை வைக்க வரும்போது கூட வெளிலயே வரல.. அதான் தனிமையில இருக்கார்ன்னு நினைச்சி சொன்னேன்..” என உள்ளுக்குள் மருகியவாறு சொன்ன மயில்சாமி.. ‘சாதாரண காய்ச்சலுக்கா கல்யாணத்துக்கு வராம விட்டார்..?” என்றார் துளைக்கும் பார்வையோடு.
கீதா தடுமாற.. நிலாவிடம் இருந்தாலும் இவர்களை கவனித்திருந்த கலையரசன்.. ‘என்ன.? நீங்க போனப்ப வெளிலயே வரலயா.? இதுதான் உங்களுக்கான மரியாதையா.?” என எகிறான் தந்தையிடம்.
அங்கே வந்த ஆனந்தன்.. ‘கத்தாத கலை.. அவரைப் பத்தி நமக்கு தெரிஞ்சதுதான.? இந்த நிமிசம் தங்கச்சியோட சந்தோசமா இருக்க பாரு..”என்றவன்..
‘மாமா.. ரிசப்சனுக்கு கலையோட வேலை செய்யிறவங்க ஐம்பது பேர் வரை வராங்களாம்.. எல்லாரும் உயர் அதிகாரிகள்.. அவங்க வந்துட்டா கலைக்கு சாப்பிட கூட நேரமிருக்காது.. மாப்பிள்ளையோட சேர்த்து தங்கச்சியும் பட்னி கிடக்க வேண்டிவரும்.. இங்க வேலை முடிஞ்சது.. ரிசப்சன் ஹாலுக்கு போய் முதல்ல பொண்ணு மாப்பிள்ளையை சாப்பிட வச்சிடலாம்..” என்றான்.
‘நீங்க சொல்றதும் சரிதான் மாப்பிள்ளை கிளம்பலாம்..” என ஆனந்தன் சொல்வதை பின்பற்றினார் மயில்சாமி.