மாயாபுரி அமிர்தா லக்சுரி ஹாலுக்குள் நுழைந்ததும் அத்தனை பெருமையாய் உணர்ந்தனர் நாகராஜ் அம்பிகா தம்பதியினர். ம்.. எத்தனை கோடீஸ்வரர்களின் கல்யாணத்திற்கெல்லாம் சென்றிருக்கிறார்கள்தான்.. ஆனால் இப்படி நட்சத்திர ஹோட்டலுக்குள் வந்ததே இல்லை.. சற்று கூச்சமாகக் கூட உணர்ந்தார்கள்..
நம்ம கல்யாணம் கூட மண்டபத்துல வச்சிதான் நடந்தது.. இந்த படிக்காத பக்கிகளுக்கு இப்படி ஹோட்டல் விருந்தா என மருகினாள் கீதா. இதில் தன் மகள் வேறு நிலாவை விட்டு விலகாமல் இருப்பது இன்னும் எரிச்சலை கொடுக்க.. மதுவிடம் சென்றவள்.. ‘இப்படி விருந்துல கலந்துக்க முடியாம நம்ம அப்பா காய்ச்சல்ல இருக்காரேன்னு கொஞ்சமாச்சம் உனக்கு வருத்தமிருக்கா.? இவளோட ஈசிட்டு திரியற..?” என்றாள் நிலாவை முறைத்தவாறு.
மது.. ‘மாமா கல்யாணத்துக்கு அழைக்க வந்த தாத்தாவை எதோ சின்ன பையனை அதட்டுற மாதிரி, யாரை கேட்டு கல்யாணம் வச்சிங்கன்னு கேட்டாங்களாம் ஆயா..‼ குளிச்சி வெளில வந்த நீயும் உக்கார கூட சொல்லாம நிக்க வச்சே பேசிட்டு.. பச்ச தண்ணி கூட கொடுக்காம அனுப்பி வச்சிருக்க.. அப்பாவும் வெளிலயே வரலன்னு வாத்தியார் தாத்தா ரொம்ப வருத்தத்தோட அம்மாயிகிட்ட சொன்னதை நான் அவங்களுக்கு தெரியாம கேட்டேன்..
தரணிக்கு ஃபோன் செய்து நீயாவது தாத்தா கவனிச்சிருக்கலாமில்னன்னு கேட்டேன்.. நான் தாத்தாவை உக்கார சொன்னேன்.. ஆனா தாத்தாகிட்ட நம்ம ஆயா மரியாதையில்லாம பேசினதால தாத்தாக்கு முகமே மாறிடுச்சி.. அதோட அம்மாவும் தாத்தாகிட்ட சண்டைதான் போட்டாங்க.. என்னால என்ன செய்ய முடியும்னான்..
அப்பாக்கு காய்ச்சலான்னு கேட்டேன்.. காய்ச்சல்லாம் இல்லை.. தாத்தா வரும்போது லேப் பார்த்துட்டு நல்லாத்தான் இருந்தார்.. தாத்தா போகும் வரை வேணும்னேதான் அப்பா வெளில வரலன்னும்.. தாத்தா கிளம்பினதுக்கப்புறம் மாமா கல்யாணத்துக்கு வர பிடிக்கலன்னு அப்பா சொன்னதாவும் தரணி சொன்னான்.. அதான் அப்பாவைப் பத்தி நான் கண்டுக்கல..” என்றாள்.
மதுமிதா சொன்னதை கேட்டிருந்த நிலவழகி.. பணம் பதவிக்காக பெற்ற தந்தையையே இப்படி அவமானம் செய்வார்களா என்ற அதிர்வோடு.. பாவம் மாமா என மயில்சாமியை பார்வையால் வருடினாள்.
தனது கல்யாணத்திற்கு லோகேஷ் வராததை பெரிதாய் எடுக்காத கலையரசனிற்கு, மொத்த குடும்பமும் தந்தையை அவமானப் படுத்தியதை சுலபமாய் விட முடியாமல் போக தீயாய் கீதாவை முறைக்க.. நிலாவின் முன்னே எங்கே மரியாதையின்மையாக பேசிடுவானோ என பயந்த கீதா.. ‘ப்ச்.. வாடி..” என அழைத்துப் போனாள்.
கீதா மதுவை இழுத்து வருவதும்.. கலையின் இறுகிய முகமும் நிலவழகியின் பார்வை தன் தந்தை மீதிருப்பதையும் கவனித்து கலையிடம் வந்த செல்வராணி.. ‘என்னடா இப்படி முகத்தை வச்சிருக்க..?” என அதட்டி.. ‘எல்லாரும் வரதுக்குள்ள ரெண்டு பேரும் சாப்பிட்டுருங்க..” என அழைக்க.. ‘ப்ச்.. மணி ஏழுதான் ஆகுதுக்கா.. என பசியில்ல..” என்றான் கடுப்பாக.
என்ன சொல்லி வச்சாளே என செல்வராணியின் முகம் சோர்ந்திட.. ‘கீதாக்கா பத்தி உனக்கு தெரியும்தான.? எதுக்கு அப்பாவை தனியா போக விட்ட.?” என செல்வியிடம் கோபத்தை காட்டினான்.
விசயம் புரிந்தவளாய்.. ‘இத்தனை வருசம் அவளுக்கு சப்போர்ட் செய்த மாதிரி இனி நான் செய்ய மாட்டேன்.. வீட்டுக்கு போனதும் கீதாவை திட்டிக்கோ.. என்ன வேணா செய்துக்கோ.. ஆனா இப்போ கல்யாணத்தை என்ஜாய் பண்ணு..” என தானும் அதட்டலோடே சொல்லி..
‘நேத்து நிச்சயத்துக்கும் வரல.. கோவிலுக்கு வந்தும் தாலி கட்டுற சமயம் தவிர மத்த நேரமெல்லாம் போனேதான் பேசிட்டிருந்த.. இப்பவும் உன் பொண்டாட்டி என்ன கலர் சாரி கட்டிட்டிருக்கான்னாச்சம் பார்த்தியா.? ஏண்டா இப்படி இருக்க.?” என்றாள் சலிப்பாக.
சின்ன சிரிப்போடும் அசடோடும் முகம் சுருக்கியவன்.. ‘சரி..சரி.. நீ போய் பசங்களை சாப்பிட வை.. இங்க நான் பார்த்துக்கிறேன்..” என்று நிலாவின் கைப்பிடிக்க.. சிரித்தவள்.. ‘முதல்ல சாப்பிட வாங்க.. இன்னும் ஒரு மணிநேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க..” என அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
‘ஸ்போர்ட்ஸ் உமன்னா வெக்கம் வராதா.?” என முறைத்து.. ‘உங்களை பார்க்க எதுக்கு வெக்கப் படனும்.? தூரத்துல இருந்து உங்களைத்தான் பார்த்திட்டிருந்தேன்..” என்றாள் நிமிர்வோடு.
‘ப்பா.. நீ என்னை பார்த்தன்னதும் செம்ம ஜில்லுன்னு இருக்கு..” என தன் மார்பை தடவியவன்..‘அப்போ தூரத்தில இருந்தாதான் பார்ப்பியா.? நான் பக்கத்தில இருந்தா வெக்கம் வந்திடுதா.? இவ்ளோ பக்கத்தில இருக்கேன்.. பார்க்கவே மாட்ற..” என்றான்.
‘வெக்கமும் இல்ல ஒன்னும் இல்ல.. நீங்க என்னைவிட ரொம்ப ஹைட்டா இருக்கிங்க.. நான் உங்கள பார்க்கனும்னா நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கு.. அப்படி பார்த்தா எல்லாருக்கும் தெரியிறதோட கழுத்தும் வலிக்கும்.. அதான் பார்க்கல..” என்றாள்.
‘ஆக.. கழுத்து வலிக்கும்ன்னுதான் நீ பார்க்கல.. ம்.. நான் கூட வெக்கமோ என்னவோன்னு நினைச்சிட்டேன்..” என ராகமாய் சொல்லி.. ‘இதை இப்படியே மெயின்ட்டைன் செய்துக்கோ.. நைட் எனக்கு வேலை சுலபமா முடியும்..” என கண்ணிமைத்து சொல்ல.. நிலவழகி விழிவிரிக்க..
’இதுக்கே இப்படி முழிச்சா எப்படி.? நான் உனக்கு தாலி கட்டும் முன்னமே நீ எனக்கு தாலி கட்டிட்ட.. காலாகாலமா ஆம்பிளை தாலிகட்டுவான்.. அப்புறம் புருசனான பின்ன பொண்டாட்டிகிட்ட அவனோட காதலையும் உரிமையையும் நைட்ல காட்டுவான்.. கொஞ்சம் திறமையானவனா இருந்தா பகல்ல கூட காட்டுவான்..” என கிறக்கத்தோடு சொல்லி..
‘ம்.. எப்போவும் இப்படித்தான் நடக்கனுமா என்ன.? நீ கொஞ்சம் மாத்தி யோசிச்ச பார்த்தியா.? அங்க நிக்கிற..” என மெச்சுதலாய் சொல்லி..
‘தாலி கட்டினதுக்கு லட்சணமா.. இன்னைக்கு நைட் நீதான் ஸ்டார்ட் செய்யிற.. உன் காதலையும் உரிமையையும் என்கிட்ட காட்டனும்.. ஓ.கே..” என்றான்.
தலைகுனிந்திருந்தபடி இவனின் பேச்சை கேட்டிருந்தவள்.. ‘ஆத்தீ.. எப்படி பேசுறான்..?” என முனுமுனுத்து முகம் சிவக்க.. ‘பேசுறா..னா..வா..?” அவன் இவன்ம்பியா.?” என மிரட்டும் பாவனை காட்டியவன்.. பின்னே சிரித்து.. ‘ம்.. தாலி வேற கட்டியிருக்க.. அந்த உரிமையை நீ காட்டும்போது இந்த உரிமையை நான் கொடுக்கத்தான் செய்யனும்..” என்றான் கண்ணிமைத்து.
தாள முடியாத வெக்கத்தோடு சிலிர்த்து சிவந்தவள்.. ‘வாய மூடுங்க..” என்க.. ‘கலை.. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க..” என செல்வராணி அழைக்க..
‘ம்.. உன் முகச்சிவப்பை கொஞ்சம் குறை.. இல்ல எங்கக்கா என்னை கிண்டல் செய்தே ஒரு வழியாக்கிடும்.. எதுனா நடந்து அகப்பட்டா கூட பரவாயில்ல.. ஒரு முத்தத்துக்கு கூட வழியில்லாத போது தேவையில்லாம கெட்ட பேர் வாங்க நான் தயாரா இல்ல..” என கைப்பிடித்து அழைத்து வந்தான்.
தாலி கட்டி ஒரு பொழுது முடியல.. என்னவோ பத்து வருசமா பிரிஞ்சிருக்க மாதிரி ஒரு முத்தத்துக்கு கூட வழியில்லன்னு எத்தனை ஏக்கமா சொல்றான்.. நேத்து நைட் கன்னத்துல கொடுத்தத்துக்கு பேர் என்னவாம்..? என நொடிப்பாய் நினைத்தாலும் தற்போது கலையரசன் பேசிய பேச்சினால் முன்புபோல் நினைத்ததை வெளியில் சொல்லும் தைரியம் வரவில்லை நிலவழகிக்கு.
அமைதியாய் கலையோடு சாப்பிட அமர.. குட்டீஸ் அனைவரும் சூழ்ந்துகொள்ள.. அரை மணிநேரம் கலகலப்பாக சென்றது.. பின்னே சொந்தங்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பிக்கவும் அவர்களோடு இனிமையாய் நேரம் செல்ல.. காவல்துறை உயர் அதிகாரிகளும் வரவே.. அனைவரிடமும் நிலா ஸ்டேட் லெவல் சிலம்பம் வீராங்கனை என்றும் மிக தைரியமான பெண் என்றும் பெருமையோடு எடுத்துரைத்துக் கொண்டிருந்தான்.
இவங்க எத்தனை பிரபலமான வீரர்.. தன்னைப் போய் இப்படி பெருமை பேசுறாங்களே.. அதுவும் இத்தனை பெரிய அதிகாரிகளிடம் என பிரம்மிப்பாய் நினைத்திருந்தாள் நிலவழகி.
நேரம் இனிமையாக செல்ல.. கலையரசனின் பயிற்சியாளர் ரணமன் வரவும்.. இத்தனை நேரமிருந்த உற்சாகத்தை விட இன்னும் பிரகாசமாய்.. ‘வாங்க.. வாங்க.. சார்..” என பலமான சத்தத்தோடு ரமணனை நெருங்கியவன் அவரின் பாதம் பணிந்து ஆசியும் பெற்றான்.
ரமணனிற்கு அதீத உற்சாகம் கொடுத்து அவரின் பாதம் பணியவும் நிலவழகியின் பெற்றோர் கலையரசனின் பெற்றோர் உயர் அதிகாரிகள் என அனைவரும் ரமணனை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்க.. ‘ம்.. என் கலையரசன் எத்தனை கோபக்காரன்.. கையை கிழிச்ச பொண்ணு கையை உடைக்காம எப்படி முத்தம் வாங்கிட்டு வந்தான்னு அன்னைக்கே எனக்கு சந்தேகம் வந்தது..” என ரமணன் சிரிக்க.. அனைவரின் பார்வையும் தன் மீதிருப்பதை உணர்ந்தவன்.. ‘சார்..” என்றான் தடுமாற்றமாக.
கையை கிழித்ததற்குத்தான் முத்தம் கேட்டாங்க என தங்கை தன்னிடம் சொல்லியிருக்க.. ‘கலை.. அன்னைக்கு சுவாதி வீட்ல நிலாகிட்ட..” என கதிரவன் அதிர்வோடு பார்க்க.. ‘ஓ.. அந்த விசயம் யாருக்கும் தெரியாதா..?” என சிரித்தார் ரமணன்.
நிலாவின் முகம் செவ்வானமாய் சிரிக்க.. தங்கையருகே வந்த கதிரவன்.. ‘அப்போ.. கலையோட கையை உடைக்கத்தான் சிலம்பம் கத்துக்க கேட்டியா..?” என்றான் சிரிப்போடு.
‘என்ன.?” என அதிர்வானவன்.. அன்று காரில் உங்களுக்கு குத்த தெரியும்ன்னா எனக்கு சுத்த தெரியும்ன்னு அதுக்குத்தான் சொன்னாளா..? என அன்றைய நாளை நினைத்து உள்ளுக்குள் சிரித்தான் கலையரசன்.
கலையின் சிரிப்பில் சந்தோசமடைந்த கதிரவன்.. ‘ம்.. இனி யாராவது தப்பா நடந்தா பயப்படாம.. தைரியமா சண்டை போடனும்னுதான் சிலம்பு கிளாஸ் போக கேட்டா.. நானும் சேர்த்து விட்டேன்..” என தன்னை போட்டு கொடுத்த அண்ணனை நிலவழகி முறைத்துப் பார்க்க..
‘அன்னைக்கு பார்த்தியோட ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்தப்ப கூட அது கலைதான்னு சொல்லவே இல்ல.. என்கிட்டயே உண்மையை மறைச்சிட்டல்ல.?” என்றான் தானும் முறைப்பாக.
அனைவரும் சூழ்ந்திருக்க வெக்கத்தில் தவித்தவள்.. ‘நான் கவிபாப்பாவையும் பார்த்தியையும் சாப்பிட வைக்க போறேன்..” என அவ்விடம் விட்டு நகர முயல.. ‘அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க ஏ.சி.பி. பொண்டாட்டி மேடம்..” என சிரிப்போடு சொன்ன குமார்.. அவனின் குழந்தைகளை சாப்பிட அழைத்துப் போனான்.
நாகராஜ் வேறொருவரோடு பேசிக்கொண்டிருக்கவும்.. ‘அத்தனை பெல்ட் அடி வாங்கியும் கலையை காட்டி கொடுக்கல.. ம்.. உன் லவ்வுக்கு முன்ன கலையோட லவ்வெல்லாம் சும்மா..” என சுவாதியும் நிலாவை கிண்டலடிக்க.. அதன்பின் விழா முடிந்து வீடு வரும்வரை நிலவழகி நிமிரவில்லை.
நாளை மாலை திருச்சி சென்றாக வேண்டும் என கலை திட்டவட்டமாய் சொல்லியிருந்ததால்.. லாக்டவுன் என்பதால் அலைச்சல் வேணாம் என்றும்.. இன்றிரவு சடங்கு முடித்து நாளை காலை புது மணமக்களை அழைத்து செல்லுங்கள் என மயில்சாமி சொல்லியிருக்க.. நாகராஜனும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
வீடு வந்ததும் பால் பழம் கொடுப்பதிலிருந்து அனைத்தும் செல்வியையே செய்ய பணிக்க.. இதெல்லாம் பொண்ணு வீட்ல நடக்க வேண்டிய சாங்கியம்.. அதையும் இவளே செய்யிறா.. என முறைப்போடு பார்த்திருந்தாள் கீதா.
தரம்வாய்ந்த பள்ளியில் படிக்க வைத்து நல்ல வேலையிலிருந்த போதும் ஐம்பது பவுன் நகை சீர் வரிசை என அனைத்தும் செய்தும்.. நம்ம கல்யாணத்துக்கு எல்லா செலவுலையும் அப்பா பாதி கொடுத்தார்.. இந்த ஒன்னுமில்லாதவங்க ஒத்த பைசா செலவில்லாம உதவி செய்த பாவத்துக்கு என் தங்கத் தம்பியை இப்படி வளைச்சி போட்டுட்டாங்களே என மருகியவள்.. பொண்ணுக்கு என்ன செய்திங்கன்னு வெளிப்படையா கேட்காம நாம ஏன் உள்ளுக்குள்ள நினைக்கனும்..?
எப்படிபட்ட லக்சுரி ஹால்.. எத்தனை வி.ஐ.பிக்கள் கலந்து கொண்டனர்.. படிக்காத நாட்டு புறத்துக்கு இப்படி மருமகனா.? அவங்க தராதரத்துக்கு தன் தம்பி அதிகம் என்ற உண்மையை உணர வைத்தே ஆகவேண்டும் என்ற வன்மத்தோடு அம்பிகாவிடம் பேசிக்கொண்டிருந்த அன்னையிடம் சென்றாள் கீதாராணி.