அம்பிகாவும் கலாவும் பேசிக்கொண்டிருக்க தங்களிடம் நெருங்கும் கீதாவின் தோரணையிலேயே எதோ புதிதாய் இழுத்துவிட வருகிறாள் என மகளின் மனம் உணர்ந்து.. ‘என்ன கீதா.? மருமகனுக்கு ரொம்ப முடியலையாமா.? நீ கிளம்பனுமா.? இங்க பத்தி யோசிக்காத.. செல்வியை வச்சி நான் மேனேஜ் செய்துக்குவேன்.. நீ கிளம்பறதுன்னா கிளம்பு.. நீ பக்கத்தில இல்லன்னு மருமகன் கோவிக்க போறார்..” என்றார்.
தன்னை கிளம்பச் சொல்லும் அன்னையின் பேச்சில் பெரிதாய் அதிர்ந்தாலும்.. அவரின் உடல்நிலை வைத்து பேசும்போது எப்படி கோவிக்க முடியும் என.. ‘அவர் நல்லா இருக்கார்ம்மா..” எனும்போதே.. ‘அப்போ ஏன் கல்யாணத்துக்கு வரல.?” என்றார் கோபமாக.
‘காய்ச்சல் முழுசா சரியாகலம்மா.. முன்னைக்கு இப்போ கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றார்..” என சமாளித்து.. ‘என் நாத்தனாருக்கு நேர்ல சொல்லாம ஃபோன்ல சொன்னது அவருக்கு கொஞ்சம் வருத்தம்..” என அன்னை மீது குற்றம் சாட்ட..
‘என் தம்பி வீட்டுக்கும் உங்க ரெண்டு பேர் வீட்டுக்கு மட்டும்தான் நேர்ல சொன்னோம்.. அப்படிப் பார்த்தா சின்ன மாப்பிள்ளையோட அக்காக்கும் ஃபோன்லதான் சொன்னோம்.. அவங்க வந்திருந்தாங்கள்ல.?” என முறைக்க..
அங்கு வந்த மயில்சாமி..’விடு கலா.. அந்த பொண்ணு வராததுக்கு கீதா என்ன பண்ணும்.?” என கனிவாய் சொல்லி..’அவங்க பொண்ணுக்கும் இப்போ மாப்பிள்ளை பார்த்திட்டிருக்காங்கள்ல.? நாம வேண்ணா அவங்க கல்யாணத்துக்கு போகாம இருந்திடலாம்..” என்றார் அழுத்தமாக.
மதுமிதா விசேசத்தில் கலை தன் கணவனாலும் நாத்தனாராலும் அவமதிக்கப்பட்ட போதும் கூட.. சம்பந்தி வீட்டில் நல்லது கெட்டதற்கு செல்லவில்லையென்றால் மகளுக்கு மரியாதை இருக்காதென தனக்காக நாத்தனாரின் கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்கள்.. தற்போது பழி வாங்கும் தோரணையில் பேசியதில் வெகுவாய் அதிர்ந்தாள்.
இவர்களின் முக வாட்டத்தில் ஏதோ சரியில்லையென நினைத்த கலையரசன் இவர்களிடம் வர.. ‘கலை வரான்.. எல்லார் முன்னவும் அவன்கிட்ட எதுவும் வாங்கி கட்டிக்காத..” என அழுத்தமாய் அறிவுருத்தி..
சிரித்த அம்பிகா.. ‘இப்போ நாம ஒரு முப்பது பேர்வரை இருப்போமா..? அதெல்லாம் நிலா சமைச்சிடுவா..” என்றார்.
கலா அதிசயமாய் பார்க்கவும்.. ‘ஆயுத பூஜைக்கும்.. கறிநாளுக்கும் தறியில வேலை செய்யிறவங்களுக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு.. அப்போலாம் நானே செய்துடுவேன்.. இப்போ கொஞ்சம் முடியறதில்ல.. ஆட்களும் முன்னமாதிரி அதிகம் இல்லைங்கிறதால நிலாவே சமைச்சிடுவா.. அவளுக்கு நானும் அவரும் உதவிக்கு இருப்போம்..” என்றார் பெருமையாக.
சிறுவர்கள் பட்டாளத்தோட நிலா வரவும்.. ‘முப்பது பேருக்கு சமைக்க ஆள் சொல்லியிருந்தாங்களாம்..” என சிரித்த அம்பிகா.. ‘நான் கூடமாட செய்யிறேன்.. நீ சமைச்சிடு..” என்றார்.
அன்னையிடம்.. ‘நானும் அவரும் பார்த்துக்கிறோம்.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்கம்மா..” என தாவனியை வளைத்து சொருகி.. ‘அத்தை எனக்கு பொருள் மட்டும் எடுத்து கொடுத்திடுங்க..” என்று பணித்து.. கலையிடம்.. ‘போய் வேட்டிய மாத்திட்டு வாங்க..” என்றாள் அசால்ட்டாய்.
‘ஏய்.. எனக்கு சமைக்க தெரியாதுடி..” என்றான் அதிர்வாக.
‘மாமா சூப்பரா வெங்காயம் கட் செய்வாங்க.. அன்னைக்கு ஆயாக்கு செய்து கொடுத்ததை நான் பார்த்தேன்..” என்றாள் மதுமிதா.
கலை மதுவை முறைக்க.. ‘அவளை ஏன் முறைக்கிறிங்க.? அங்க திருச்சியில ஞாயித்து கிழமையானா நீங்களே சமைச்சி.. பார்த்தியும் நீங்களும் மட்டும் தனியா மொக்குவிங்கன்னு முன்னமே சுவாதிக்கா சொல்லிட்டாங்க..” என்றாள்.
செல்வராணி கலையை இளப்பமாய் பார்த்து சிரிக்க.. ஆனந்தன்.. ‘மாப்பிள்ள.. போய் ஒழுங்கா வெங்காயம் உரிச்சி கொடுத்திடு.. இல்ல உன் தோல் உரிஞ்சிடும்..” என்றான் சிரிப்போடு.
கலை.. ‘இதுதான் உங்க தங்கை குடும்பம் நடத்துற லட்சணமா மாமா.?” என ஆனந்தனை பொய்யாய் முறைக்கவும்.. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்.. ‘ஏய்.. எவ்வளோ தைரியம் இருந்தா எங்க முன்னாடியே என் தம்பியை சமைக்க கூப்பிடுவ..?” என கீதா முறைக்க..
‘அவ உன் தம்பியை கூப்பிடல.. அவ புருசனை கூப்பிடறா..” என முறைத்து தனதறைக்குள் புகுந்தவன் சாட்ஸ் டீசர்ட்டோடு வந்தான்.
‘அடுப்பு சமையல் சாமான்லாம் மாடியில இருக்கு..” என்றாள் செல்வராணி.
‘சரிங்க சித்தி.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என நிலா வெளியேற.. ‘அதெல்லாம் முடியாது.. இன்னைக்கு என் தம்பி சமைக்கிறதை பார்க்கப் போறேன்..” என செல்வியும் மாடி ஏற.. மகளுக்கு துணையாக அம்பிகாவும் சென்றார்.
பின்னோடே கலையரசனோடு மயில்சாமி கலா ஆனந்தன் என அனைவரும் வர.. அங்கிருந்த வெங்காயத்தை காண்பித்து.. ‘அது உரிங்க..” என கலையிடம் சொல்லி.. அரிசி கழுவ ஆரம்பித்தாள்.
‘நான் பார்த்துக்கிறேன் மாப்பிள்ளை..” என்ற அம்பிகா வெங்காயம் உரிக்க ஆரம்பிக்க.. ‘நானும் செய்யிறேன் ஆன்ட்டி..” என கலையும் செய்ய..
ஆனந்தன்.. ‘செல்வி என் மாப்பிள்ளை சேதாரமில்லாம பொழச்சிப்பான்.. தங்கச்சி சொல்லை தட்டாம செயிறான் பார்த்தியா..” என கிண்டல் செய்ய..
கலை.. ‘பாவம் சின்ன புள்ளைய மிரட்ட வேணாம்னு பார்க்கிறேன் மாமா..” என கோபம் போல் சொல்ல.. பருப்பு ஒரு அடுப்பிலும் சாதத்திற்கு உலை ஒரு அடுப்பிலும் வைத்து வந்தவள்.. ‘இன்னும் ஒன்னு கூட உரிக்கலையா.?” என கணவனை முறைத்து உரிக்க அமர்ந்தாள்.
இப்படியாக கலைக்கு வேலை சொல்வதோடு சரி.. பின்னே அவனை செய்ய விடாமல் தானே செய்வதையும்.. பருப்பு.. அரிசி வேவதற்குள்.. கூட்டிற்கு காய் நறுக்குவது.. ரசத்திற்கு புளி கரைப்பதென தோதாய் வேலை செய்யும் பாங்கை மயில்சாமி கலா செல்வராணி அனைவரும் ரசித்து பார்த்திருந்தனர்.
‘இங்க டேபிள் சேர் எதுவும் இல்லைங்களே மாப்பிள்ளை..” என மயில்சாமி சொல்ல.. ‘பத்து நிமிசத்துல சாப்பிட்டு முடிக்க போறோம்.. கீழயே உக்கார்ந்துக்கலாம்.. வேலை சுலபமா முடியும்..” என்றார் நாகராஜ்.
நிலா.. ‘கீழ போய் இலையாவது எடுத்து வாங்க..” என்றாள் கலையிடம்.
கலை.. ‘உனக்கு நான் வேலை பார்க்கனும்..” என முறைத்தாலும் கீழிறங்க.. ‘அவர் கழுவாம எடுத்து வந்திடு போறார்.. நான் போய் கழுவி எடுத்து வரேன்..” என்று கலை பின்னோடே சென்றாள் நிலா.
முதல் கழுவிய இரண்டு இலையையும் கலை கிழித்திட.. ‘இப்படித்தான் செய்விங்கன்னு தெரியும்.. நகருங்க..” என முறைத்து இலையை கழுவி.. ‘இதை நான் எடுத்து போறேன்.. நீங்க தண்ணி எடுத்து வாங்க..” என இரண்டடி சென்றவள்.. ‘பெரிய அண்டால எடுத்துட்டு வாங்க.. அப்படியே டம்ளரும்..” என்று மேலேற முயல.. அவளின் தாவனியை பிடித்தவன்.. ‘ரொம்பத்தான் அதிகாரம் தூள் பறக்குது..” என்றான் கிறக்கமாக.
‘அச்சோ..” என இவள் தாவனியை இழுக்க.. இவன் விட மறுக்க.. ‘மாமா..” என்ற வினோத்தின் குரல் கேட்கவும் அவளின் தாவனியை விடுவித்தவன்.. ‘இந்த பட்டு சாரி.. நிறைய நகைன்னு ஓவரா அலங்காரம் செய்துக்காம நைட்டுக்கும் இதே காஸ்டியூம்ல வந்திடு.. சிம்பிளாவும் இருக்கு, கிக்காவும் இருக்கு..” என கண்ணிமைத்து தண்ணீர் எடுக்க சென்றான்.
கல்யாணத்துக்கு முன்ன இரண்டு முறைதான் பேசியிருக்கார்.. அந்த ரெண்டு முறையும் நல்லா படிக்கனும்னுதான சொன்னார்.. இவங்களை கல்யாணம் செய்துகிட்டா நல்லா படிக்க வைப்பாங்கன்னுதான அண்ணாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்..
அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல கல்யாணத்துக்கு பேசும்போதும் நம்ம முகத்தை கூட பார்க்கல.. இவங்க மேல நான் சந்தேகப்பட்டேன்ற கோவத்துவலதான் கல்யாணத்துக்கு பேசுறாங்கன்னு நினைச்சா.. இன்னைக்கெல்லாம் இதையே பேசிட்டிருக்காங்களே.. என நிலவழகிக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.
தண்ணீரோடு வந்தவன்.. நிலா நின்றிருந்த தோரணையில்.. ‘அழகி.. அதுக்குள்ள நைட் நியாபகம் வந்துடுச்சா.?” என கிசுகிசுக்க.. ‘அச்சோ..” என பதறி வேகமாய் மேலேறினாள்.
பின்னே அனைவரும் உண்டு முடிக்கவும்.. ‘நிலா.. கீழ போய் கலை ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..” என்றார் கலா.
அச்சோ.. அவன் ரூமிலா.? என விதிர்த்தவள்.. ‘இங்க மேலயே படுக்கிறேன் அத்தை..” என இரவு தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தாள்.
செல்வராணியும் கலாவும் சாப்பிட்ட இடத்தினை சுத்தம் செய்ய ஆரம்பிக்கவே.. சுவாதி பாத்திரம் தேய்க்க அமர்ந்தாள். ‘சுவாதி.. நான் தேச்சிக்கிறேன் எழுந்துக்கோ..” என செல்வராணி சொல்ல.. ‘நிலா மாதிரி எனக்கு நிறைய பேருக்கு சமைக்க வராது.. ஆனா இந்த வேலையெல்லாம் செய்வேன்.. ஆளுக்கொரு வேலைசெய்தா சீக்கிரம் முடிச்சிடலாம்..” என தேய்க்க ஆரம்பிக்க.. மீண்டும் செல்வராணி மறுக்க..
‘விடும்மா செய்யட்டும்.. சொந்த பந்தங்களோட ரொம்ப வருசம் கழிச்சி இப்போதான் கலந்துக்கிறா..” என ஆனந்த கண்ணீர் வடித்தார் அம்பிகா.
இவர்களின் கவனம் சுத்தம் செய்வதில் இருக்க.. சிறுவர்கள் சாப்பிட்டதும் டி.வி பார்க்க கீழே சென்றிருக்க.. நிலா இருக்கும் அறைக்குள் நுழைந்தவன்.. ‘ஓய்..” என்றான்.
‘இ..இல்ல.. வேணாம்.. நான் இங்கயே படுக்கிறேன்..” என்றாள்.
குரல் திணறி இருக்கவும்.. ‘என்னாச்சு.?” என நிலாவின் அருகில் நெருங்க..
‘ஒ..ஒன்னுமில்ல.. நேத்தே அவ்வளோ லேட்டா வந்திங்க.. (Xanax) நீங்க ரெஸ்ட் எடுக்கனும்னுதான்.. நான் இங்கையே படுக்குறேன்..” என ஒருவாறாக திணறாமல் சொல்லி முடித்து விலகி நின்றாள்.
அங்கிருந்த சேரில் அமரவைத்து அதன் கைப்பிடியில் தன் கையை ஊன்றியவன்.. ‘எதுக்கு பொய் பேசுற.?” என்றான்.
நிலா.. ‘இல்ல.. நான் நிஜமாத்தான்..” என்க.. ‘எனக்கு உன்னை தெரியாதா.? நான் ரெஸ்ட் எடுக்கனும்னா அதை என்ன பார்த்து சொல்லுவ.. உன் தலை இப்படி குனிஞ்சிருக்காது..” என அவளின் தாடை தொட்டு நிமிர்த்த.. நிலவழகி தடுமாறினாள்.
‘அப்போ என்ன பிரச்சனை.? இப்போ கொஞ்சம் முன்ன வரைக்கும் நல்லாதான என்னோட வம்பளத்திட்டிருந்த..?” என்றான் விசாரணையாக.
நேற்று வரை நிலாவோடு அதிகம் பேசிக்கொண்டதில்லை என்றாலும்.. முதல் சந்திப்பில் திருடன் என நினைத்து தைரியமாக தன்னை அடித்தது.. தன்னை தண்டிப்பதற்காகவே சிலம்பு கற்றுக் கொண்டது.. காரில் வரும்போது அழகின்னு சொல்லி பிரண்டாகிடலாம்னு நினைச்சிடாதிங்க என தன்னையே எச்சரித்தது.. பெண் கேட்டு சென்றபோது தந்தையை இழிவு படுத்தியதும் தன்னோடு கோபமாய் பேசியது.. தற்போது இத்தனை பேர் முன்னிலையிலும் தன்னை அதிகாரம் செய்வதென.. கலையை பொருத்தவரை நிலவழகி மிக தைரியமான பெண்..
இப்படி இரவின் தனிமைக்கு பயப்படுவாள் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் போக.. ‘உடம்பேது சரியில்லையா.?” என்றான் அர்த்தமாக.
இவன் கேட்டதிலேயே அந்த நாட்களை குறித்துதான் கேட்கிறான் எனப்புரிந்தவளுக்கு.. இத்தனை நேரம் இரவின் மீதிருந்த பயம் போய்.. ‘இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என மல்லுக்கு நின்றாள் சந்தேகத்தோடு.
‘அவளின் நெற்றியில் முட்டியவன்.. நல்ல தாய் வயித்துல பிறந்த எல்லா ஆம்பிளைங்களுக்கும் பொண்ணுங்களோட சிரமம் தெரியும்.. தெரிஞ்சிருக்கனும்.. இரண்டு அக்காவோட பிறந்த எனக்கு தெரியாதா..?” என்றான் சிரிப்போடு.
முகம் சிவந்து தலைகுனிந்தவள்.. ‘எனக்கு படுக்கனும்.. நீங்க போங்க..” என்றாள்.
நிலாவின் கண்கள் சிவந்திருக்க இன்று அதிகாலை எழுந்ததன் காரணமாக தூக்கம்போல என நினைத்தவன்.. ‘ம்.. நீ வேற தினமும் ஒன்பதுக்கெல்லாம் தூங்கற ஆளு.. அதனால இப்பவே நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.. இல்ல.. ரூம்க்குள்ள வந்ததும் தூக்கம் வருதுன்னுவ..” என்று கள்ள சிரிப்போடு வெளியேறினான்.
முன்னல்லாம் நல்லா படிக்கனும்னு சொல்வாங்க.. இப்போ படிப்பை பத்தியே நினைக்க மாட்டுக்கிறாங்க என ஏமாற்றமாய் உணர்ந்தவளுக்கு கண்ணெரிச்சல் இருந்த போதும் மாலைவரை தூக்கம் என்பதேயில்லை..
ஐந்து மணிபோல் டீ குடிக்க அழைத்த போதும்.. வேணாம் என மறுத்து மேலேயே இருந்தாள். கவிப்பிரியாவிடம் டீ கொடுத்தனுப்பியிருந்தனர்.. தன் மாமனார் மாமியாரிடத்தில் கீதா வம்பளப்பாள் என கலையரசனும் கீழேயே இருந்தான்.
கலை இருக்கவும் வாய் திறக்கவில்லை கீதாராணி. மதியம் சமையலுக்கே தடுமாறினார்கள்.. மணி ஏழாகவும் இரவிற்கான டிபன் செய்யனுமே.. சுவாதிக்காக்கு இவ்வளோ பேருக்கு சமைக்க தெரியாது.. பெரியவங்களும் ரொம்ப டையர்டா இருப்பாங்க.. நாமளே கீழ போலாமா என யோசிக்கவும் சுவாதி வந்தாள்.
‘மதியம் நீ செய்த சாம்பார் இருந்தது.. அதோட காரசட்னியும் தேங்காய் சட்னியும் செய்து இட்லி ஊத்திட்டாங்க.. சீக்கிரம் சாப்பிடு.. எட்டு மணிக்கு நல்ல நேரமாம்.. அதுக்குள்ள உன்ன ரெடி பண்ண சொன்னாங்க..” என்றாள்.