மருமகளின் அக்கறையில் மகிழ்ந்து அவளின் முகச்சுழிப்பில் சிரித்தவர்.. ‘சாணி அள்ளுறது உனக்கு பழக்கமில்லன்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுது.. இதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீ போய் முடியை உணர்த்து..” என்றார்.
‘காபி போடட்டுங்களா மாமா.?” என்க.. ‘இந்த வேலையெல்லாம் முடிச்சிட்டுதான் எப்பவும் குடிப்பேன்.. உனக்கு காபி குடிக்கனும்னா பிரிட்ஜில பால் இருக்கும் பாரு..” என்றார்.
‘மணி அஞ்சிதான் ஆகுது.. அதுக்குள்ள எழுந்து குளிச்சிட்டியா நிலா..?” என்றார் கலா.
‘தூங்கட்டும்..” என்றவர்.. ‘நீ வாம்மா.. சாமி கும்பிடு..” என நிலாவை விளக்கேற்ற வைத்தவர்.. ‘காபியா.? டீயா.?” என்றார்.
நிலா.. ‘நான் போடுறேன்த்தை..” என சமையலறை செல்ல.. பின்னோடே வந்த கலா.. ‘அதெப்படி இவ்வளோ சின்ன வயசுல உனக்கு இவ்வளோ பேருக்கு சமைக்க தெரிஞ்சது.?” என்றார் ஆச்சர்யமாக.
‘இப்போ இரண்டு வருசமாத்தான் செய்ய கத்துக்கிட்டேன்.. எங்க தறில வேலை செய்யிறவங்களுக்கு கறிநாள்.. ஆயுதபூஜைன்னு.. வருசத்துல நாலஞ்சு முறையாவது நம்ம வீட்ல விருந்து வைப்பாங்க.. அப்போல்லாம் இருநூறு பேருக்கு மேல வருவாங்களாம்.. அம்மா ஒத்த ஆளாவே செய்திடுவாங்களாம்..
இப்போ எழுபது என்பது பேர் பக்கம்தான் வராங்க.. ஆனாலும் முன்ன மாதிரி அம்மாக்கு முடியறதில்ல.. மூனு வருசமா அம்மாக்கு ஹெல்ப் பண்ணப்போய் எனக்கும் சமையல் ஈசியா வந்திடுச்சி..” என்று பேசிக்கொண்டே பால் காய்ச்சி முடித்து காபி தூளிற்காக கலாவை பார்த்தாள்.
காபிதூள் எடுத்து கொடுத்த கலா.. ‘அப்போ காலைல சமைச்சிட்டிருந்தா சிலம்பு கிளாஸ்க்கு எப்போ போவ.?” என்றார் யோசனையாக.
இவர்களின் சத்தம் கேட்டு வந்த செல்வராணி.. ‘ப்ச்.. அம்மா.. முதன்முதல்ல எதாவது ஸ்வீட் செய்ய சொல்லாமில்ல.? எதுக்கு நிலாவை காபி போட சொன்ன.?” என்க.. ‘அச்சோ.. ஆமாம்ல.? எனக்கு தோணவேயில்ல செல்வி..” என்றார் பாவமாக.
‘சரிவிடு.. அதான் நேத்தே சமைச்சிட்டாளே..” என தேற்றி.. ‘அம்மா நேத்து சுவாதி ஒரு விசயம் சொன்னாங்க..” என அவள் பணம் கொடுத்ததை சொல்ல..
‘இது அவங்க விசயம் செல்வி.. இத்தனை வருசமாகியும் இன்னும் சம்பந்திக்கு கோபம் குறையலங்கும்போது நாம எதாவது சொல்லி சங்கடமாகிடப் போகுது..” என்றார் கலா.
‘ம்க்கூம்.. உன்கிட்ட ஹெல்ப் கேட்டேன் பாரு..” என நொடித்து.. ‘சுவாதிக்கு நான் வாக்கு கொடுத்திருக்கேன்.. எப்படியாவது அந்த பணத்தை குமார் கையாலயே கலைகிட்ட கொடுக்க வைக்கனும்..” என்றாள் முடிவாக.
‘சரி.. நம்ம கலை எழுந்திரிக்கட்டும்.. அவன்கிட்ட கேட்டு பார்க்கலாம்..” என்றார் கலா.
சரியென ஆமோதித்து நிலாவை ஆராய்ச்சி பார்வை பார்க்க.. முகம் சிவந்தவள்.. ‘நீங்க காபியா டீயா சித்தி..?” என்றாள்.
‘டீதான் குடிப்பேன்.. ஆனா நீ கஷ்டப்படாத.. நான் குளிச்சிட்டு வந்து எல்லாருக்குமா சேர்த்து வைக்கிறேன்..” என ஆதரவாக சொல்லி.. ‘ கல்யாணமான புதுசுல என்னால கூட புருசன் வீட்டோட இவ்வளவு சடர்னா ஒட்ட முடியல..
காலைல கல்யாணமாகி மதியமே எல்லாருக்கும் சமைச்சி.. இப்போ அம்மாவோட இவ்வளவு சகஜமா பேசுற..” என மெச்சுதலாய் சொல்லி.. ‘எந்த சங்கடமும் இல்லாம நம்ம வீட்டோட அழகா பொருந்திட்டதை நினைச்சா ரொம்ப சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு நிலா.. இப்ப போலவே எப்பவும் இரு..” என மனதாற வாழ்த்தி குளிக்க கிளம்பினாள்.
செல்வராணியின் பாராட்டுதலில் முகம் மலர்ந்தவள்..’என்ன டிபன் அத்தை செய்யலாம்..?” என்றாள் யோசனையாக.
‘நிறைய பேர்ன்றதால இட்லியே ஊத்திக்கலாமா.?”
‘நைட் இட்லிதான செய்தோம்..? வெண் பொங்கல் கொஞ்சம்.. கிச்சடி கொஞ்சம்.. செய்து ரெண்டுக்கும் சேர்த்து தேங்காய் சட்னி செய்து.. கொஞ்சமா கேசரி செய்துக்கலமாங்கத்தை.? சித்தி ஸ்வீட் செய்யனும்னு கேட்டாங்களே..”என்றாள்.
நேற்று கல்யாணம் அதோடு முதலிரவு என யோசித்து.. ‘கிச்சடிலாம் பக்கத்தில இருந்து கிண்டிட்டே இருக்கனும்.. எதாவது சிம்பிளா செய்துக்கலாமே..?”என்றார் கலா.
‘மேல ஒரு பெரிய இரும்பு வடசட்டி இருந்ததுத்த.. அதுல ஈசியா செய்திடலாம்.. இங்க குக்கர்ல பொங்கல்க்கு வச்சிட்டு போறேன்.. விசில் வந்ததும் நீங்க ஆப் செய்துடுங்க.. தேங்காய் சட்னிக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டனா அதை சுவாதிக்கா மிக்ஸில போட்டுடுவாங்க.. நான் மேலபோய் கிச்சடியும் கேசரியும் செய்துட்டு வந்து பொங்கலையும் சட்னியையும் தாளிச்சிடறேன்.. ஒரு மணிநேரத்தில வேலை முடிஞ்சிடும்..” என்றாள்.
சம்பந்தியும் இருப்பதால் வெறும் இட்லிக்கு நிலா சொல்வது சரியெனப் பட.. ‘செல்வியும் குளிச்சிட்டு வந்திடட்டும்..” என்றார்.
‘அவங்களும் நேத்து அவ்வளோ பாத்திரம் தேய்ச்சாங்க.. நானே பார்த்துப்பேன்த்த..” என்று சமைக்க தேவையான பொருள்களை கேட்டு வாங்கி சொன்னது போல் வேலைகளை துவக்கினாள்.
ஆறரை மணிக்கு ஆரம்பித்த வேலை எட்டு மணக்கு முடிய.. நிலாவிற்கு பசிக்க ஆரம்பித்தது. ஆனால் நேற்று அலைச்சல் காரணமாக சிறுவர்கள் ஒருவரும் எழாமல் அசந்து தூங்கிகொண்டிருக்க.. குளித்து வந்த அம்பிகா தற்போதுதான் அப்பா குளிச்சிட்டிருக்கார் என்றார்.
‘அக்கா மாமா எழுந்துட்டாரா பாரு..” என்க.. ‘குளிச்சிட்டிருக்கார்..” என்றாள். கட்டாந்தரை வேலை.. பால் கறப்பதென வழக்கமான வேலைகளை முடித்து மயில்சாமியும் தற்போதுதான் குளிக்கப் போக.. நிலாவிற்கு பசி வயிற்றை கிள்ள.. அச்சோ இவங்கள்லாம் எப்போ வந்து நாம எப்ப சாப்பிடறது.? என சோர்ந்தவள்.. ம்.. முடி சிக்கெடுத்து தலை பின்னலாம் அதில் சற்று பசி மறக்கும் என தனதறைக்கு சென்றாள்.
இன்னும் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் கலையின் மீது கோபம் வர அருகிருந்த தலையணையை எடுத்து அவன் மீது கோபமாய் போட.. அப்பொழுதும் அசராமல் தூங்கிக்கொண்டிருந்தான்.
சமைப்பதற்காக கொண்டையிட்டிருந்த முடி இன்னும் ஈரம் காயாமல் இருக்கவே பசிமீதிருந்த கோபத்தை முடிமீது காட்டவும்.. பின்னிருந்து அணைத்து.. ‘ம்.. ஹா..” என வாசம் பிடிக்கவும்.. ‘ம்..” என கோபமாய் உதறினாள்.
‘எட்டரை மணிக்கு உள்ள வந்தவ ஒன்பதரைக்கெல்லாம் தூங்கிட்டு விடிய விடிய என்னை டென்சன் பண்ணினதுக்கு நியாயமா எனக்குத்தான் கோபம் வரனும்.. நீ எதுக்கு கோபப்படுற..?” என நிலாவை தன் புறம் திருப்பினான்.
‘ஹே..”என டைம் பார்க்க.. எட்டேகால் என்றதும்.. அன்று காரில் வரும்போதே நிலா பசிதாங்கமாட்டாள் என கதிர் சொன்னதும்.. அடுத்த நாள் காலை ஆறரைக்கெல்லாம் பசிக்குதென கதிரவனை எழுப்பிக்கொண்டிருந்ததும் நினைவு வர.. பதறியவனாய்.. ‘இங்க வா..” என அமர வைத்து நேற்றிரவு இவர்களுக்காக வைத்த ஆப்பிளை எடுக்கவும்.. ‘அதெல்லாம் எனக்கு வேணாம்..” என்றாள்.
‘சரி ஸ்வீட் சாப்பிடறயா.?” என அக்கறையாக கேட்டவாறு அதனை எடுக்கவும்.. ‘அதுவும் வேணாம்..” என்றாள்.
‘ப்ச்.. நிலா.. இன்னும் சமையல் ரெடியாகிருக்காது.. இப்போதைக்கு இது சாப்பிடு..” என்றான் கெஞ்சலாக.
முறைத்தவள்.. ‘அதெல்லாம் நான் செய்துட்டேன்.. ஆனா இன்னும் யாரும் சாப்பிட வரல.. தனியா சாப்பிட கஷ்டமா இருக்கு.. நீங்க போய் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க..” என அவசரப்படுத்தினாள்.
‘நீ வா.. முதல்ல சாப்பிடு.. நான் அப்புறம் குளிச்சிக்கிறேன்..” என வெளியேற எத்தணிக்க.. ‘கலையின் கைப்பிடித்தவள்.. ‘குளிக்காம வெளில வரக்கூடாதுன்னு சுவாதிக்கா சொல்லியிருக்காங்க..” என்றாள் நாணத்தோடு.
நிலாவின் பசியறிந்தவனுக்கு அவளின் நாணமெல்லாம் தெரியவில்லை.. ‘ப்ச்.. உன்னை சொல்லியிருப்பாங்க.. நீதான் குளிச்சிட்டல்ல.. வா..” என மீண்டும் வெளியேற.. ‘அச்சோ..” என கலையின் கையை பிடித்திழுத்தவள்.. ‘நான் வேற நீங்க வேறயா.? இரண்டு பேருக்கும்தான் சொன்னாங்க..” என்றாள் சிவந்த முகத்தோடு.
பிறகுதான் அவள் சொல்வது புரிந்து மோகத்தோடு நிலாவின் முகம் நிமிர்த்த.. பிடிவாதமாய் அவனின் முகம் பார்க்க மறுத்து.. ‘சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க..” என குளியலறை நோக்கி கலையை தள்ள முற்பட.. அசையாத் தூணாய் நின்றிருந்தவனின் உடலிலுள்ள அத்தனை அணுக்களும் நிலா வேண்டும் என பிடிவாதம் செய்த போதும்.. அவளின் பசியறிந்து தன்னை நிலைப்படுத்தியவன்.. ‘இரண்டே நிமிசம்..” என குளியலறை புகுந்தான்.
அம்பிகாவும் நாகராஜனும் வராமல் இருக்கவும்.. செல்வராணி அவர்களை சாப்பிட அழைக்க போனாள். நிலா காலை எழுந்த நேரத்திற்கும் செய்த வேலைக்கும் பசியெடுத்திருக்கும் என உணர்ந்தபோதும்.. அனைத்து வேலையும் முடித்து தற்போதுதான் அறைக்குள் சென்ற மருமகளை அழைக்க சங்கடப்பட்டு அமைதிகாத்தார் கலா.
குளித்து வந்த மயில்சாமி.. ‘ம்ம்… வாசம் தூக்குது.. மருமக என்ன சமைச்சது.?” என்றார்.
நிலா செய்த பதார்த்தங்களை சொல்லி.. ‘எல்லாம் நல்ல டேஸ்டா இருக்குங்க.. சம்பந்தி வந்தா எல்லாரும் சாப்பிட உக்கார்ந்துக்கலாம்..” என்றார் கலா.
மருமகளின் பெருமை பேசியதையே தாளமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்த கீதாவிற்கு.. அவங்க வரவரைக்கும் நான் சாப்பிடாம இருக்கனுமா.? என்று கோபம் வர.. ‘ம்மா.. எனக்கு பசிக்குது..” என்றாள்.
‘இப்போதான எழுந்து காபி குடிச்ச கீதா.? எப்பவும் காபி குடிச்சி ஒரு மணிநேரம் கழிச்சிதான சாப்பிடுவ.? மருமகன் ஏது வர சொன்னாரா.? காய்ச்சல் பரவால்லையாமா.?” என அக்கறையோடுதான் கலா கேட்டார்.
மருமக வந்ததும் என்னை துரத்துறதிலயே குறியா இருக்கிங்களா என இன்னும் கோபம் வர.. குளித்து முடித்தவன் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் கணவனை காண நாணியவளாய் நிலா வெளியே வரவும்.. அவளின் முகச்சிவப்பையும் பூரிப்பையும் பார்த்து ஒன்னுமத்தவளுக்கு வந்த வாழ்வைப் பாரு என உள்ளுக்குள் பொங்கினாள்.
நாகராஜன் அம்பிகாவும் வரவே பின்னோடு குமார் சுவாதியும் வரவும்.. ‘சாப்பிடலாம் வாங்க..” என கலா உபசரிக்க.. ‘கலை எழுந்துட்டானா நிலா.?” என்றார் மயில்சாமி.
‘குளிச்சிட்டிருக்காங்க மாமா..” என்றதும்.. ‘ஓ.. பாத்ரூம்ல இருக்கானா என நினைத்த கீதா நாகராஜிடம்.. ‘ம்.. எப்படியோ இரண்டு பொண்ணு கல்யாணத்தையும் செலவில்லாம முடிச்சிட்டிங்க..” என்றாள் அத்தனை இளப்பமாக.